நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 18, 2021

பூக்களின் புன்னகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிறன்று
எபி யில்
அன்பின் ஸ்ரீராம் அவர்கள்
புன்னகைப் பூக்களைப்
பதிவாக வழங்கியிருந்தார்..

அந்தப் பதிவின் வழியே
தோன்றியவை சில வரிகள்..

காலையிலேயே பதிவைப்
படித்து விட்டாலும்
இந்தக் கவிதையின் வரிகள்
தோண்றிய போது
மாலைப் பொழுதாகி விட்டது..

அவற்றைக் கருத்துரையில்
இட்ட போது
இரவாகி விட்டது...

அப்போதே நினைத்தேன்..
இதற்கு மேல் யார் வரக் கூடும்?..
- என்று..

ஆயினும்
கீதாக்கா வந்திருந்தார்கள்..

இருந்தாலும்,
எல்லாருக்கும் ஆகட்டும்!..
- என்று இன்றைய பதிவில்
அந்த வரிகள்...

அதற்கு முன்பாகத் தங்களுடன்
சில வார்த்தைகள்..

நாம் தொலைத்தோமோ?..
அல்லது அதுவாகத்
தொலைந்து விட்டதோ!..

இயற்கை தன்னை
ஒளித்துக் கொள்ளும்
காலமாகி விட்டது..

பால் என்று தெரியும்..
இன்றைய காலகட்டத்தில்
பால் எப்படி கிடைக்கிறது.. என்பது
வளரும் பிள்ளைகளுக்குத் தெரியாது..

மிஷினில் இருந்து!..
 என்று விடை கிடைத்தால்
பிள்ளைகளின் சாதுர்யம் என்று
கொண்டாடிக் கொள்ள
வேண்டியது தான்...

பணத்தைக் கொடுத்து விட்டு
முன் பதிவு செய்து கொண்டால்
வீட்டிற்கே வெளியக ஆட்கள் வந்து
பல் துலக்கி உணவூட்டி விட்டு
வாய் துடைத்து விடுகின்ற
காலம் இது...

அவரைக் காய்.. - என்றால்
அதுவும் சுவை தான்..
அதன் சொற்செறிவும்
சுவை தான்..

பெண் குழந்தைகளின்
வளர்ச்சியை
பீர்க்கங்காயின் வளர்ச்சிக்கு
ஒப்பிடுவார்கள்..

கண்டு பூ பூத்து
காணாமல் காய் காய்க்கும்..
என்ற விடுகதையின்
விடை எத்தனை பேருக்குத்
தெரியும்?..

இதை வைத்து
சென்ற ஆண்டில்
சில வரிகள் எழுதினேன்..

அவை
மின்நிலா வழங்கிய
பொங்கல் மலர் எனும்
கடலில் கரைந்து விட்டனக

இருக்கட்டும்..
இப்போது தமிழகத்தில்
கொரோனா பூ .. என்று
பூத்திருக்கின்றதாம்..


சில நாட்களுக்கு முன்
தினமலரிலும் தற்போது
தினமணியிலும்
செய்தியும் படங்களும்...

தமிழர்கள் மிகவும்
ஆச்சர்யமாகப் பார்க்கிறார்களாம்..


கந்த வேலன் கடம்பன்
கடம்பவன வாசினி
கடம்பவனேஸ்வரர்
என்றெல்லாம் பயின்று வரும்
இந்தத் தமிழ் மண்ணில் தான்
கடம்ப மலருக்கு
கொரோனா பூ - என்று
பெயர் சூட்டியிருக்கின்றனர்..

இனி
நீ குழாய் (யூ டியூப்) குழுவாளிகள்
இப்படிச் சொன்னாலும்
சொல்வார்கள்..

பின்னாலில் வரவிருப்பதை
முன்னாழேயே உணர்ந்து
முருகனுக்கு கொரானா பூ
சூட்டிய முன்னோர்கல்!..

கொரோனா பூ!..
யாரும் அரியாத்
ரகசியங்கள்..

கொரானா பூவைப் பற்றி
சித்தர்கலின் வாக்கு..

கொராணா பூவின்
படத்தை உடனடியாக
பகிறுங்கல்..
அதிஸ்டம் தேடி வரும்..!..

( குழாய் - குழுவாளிகளின்
தன்மைக்கேற்ப
எழுத்துப் பிழைகளுடன் சொல்லியிருக்கின்றேனே அன்றி
வேறொன்றும் இல்லை..)

இருந்தாலும், இதுவே
கடம்ப மலர்.. - என்றும்
இல்லையில்லை
அது வேறு.. - என்றும்
இருவேறு கருத்துகள்
இருக்கின்றன...

அதைப் பிறகு பார்க்கலாம்..
***

இனி  - இதோ
இன்றைய பதிவு...

திங்கள் / செவ்வாயில் இதனை
வெளியிடுவதற்கு முயன்றேன்..
இணையம் ஒத்துழைக்கவில்லை..

புடலைப் பூவும் புரியாது
கடலைப் பூவும் தெரியாது..
புல்லின் பூவும் கேட்டதில்லை
நெல்லின் பூவைப் பார்த்ததே இல்லை..

கடலைக் காட்டில் காய் பறித்து
காதல் வளர்த்ததும் ஒரு காலம்
பூவும் மடலும் மறந்த தெல்லாம்
கலியில் விளைந்த அலங் கோலம்..

தாமரை மலரில் மனதினை வைத்த
தமிழும் மறந்து போனதம்மா..
மடலாய் மலராய் மனதினில் விரிந்த
தடமும் மறைந்தே போனதம்மா..

தமிழே என்றிங்கு வரும் கூட்டம்
தமிழே என்றிங்கு பெருங் கூச்சல்
தமிழின் மலரும் தெரியாமல்
தமிழின் மணமும் புரியாமல்...

தமிழே தமிழே நீ வாழ்க!...
தமிழே அமிழ்தே நீ வாழ்க!...

***

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்

ஃஃஃ

28 கருத்துகள்:

  1. கடம்ப மலர் இங்கும் ஒரு வீட்டு முன் பூத்து இருந்தது. மலர்கள் எல்லாம் அழகு.
    மலர் கவிதை அருமை.
    புடலைப்பூ பார்க்கவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      என் அம்மா விடியலில் புடலைப் பூ கோலம் போடுவார்கள்.. இப்போது நினைவுக்கு வருகின்றது..

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

      நீக்கு
  2. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும் அது என்ன? என்று விடுகதை கேட்பார்கள் பெரியவர்கள் அது அத்தி மரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுகதைக்கு விடை சரிதான்..
      ஆனால் இன்னொன்றும் இருக்கின்றது..
      அடுத்த பதிவில் தருகின்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கடம்ப மலர் பற்றிய விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கடம்ப மலருக்குக் கொரோனா மலர் என்றே பெயர் மாற்றம் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. :( பூக்களின் அழகு மனதுக்கும், கண்களுக்கும் விருந்து. மலர்களைப் பற்றிய கவிதையும் அருமை. தொகுப்பும் அருமை. முக்கியமாய்ப் புடலைப் பூ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்ம்ப மலருக்கு கொரானாப் பூ என்று பெயர் மாற்றம் செய்தாலும் செய்வார்கள்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  6. நெல்லின் பூவுக்கு ஒரு வாசம், கதிருக்கு ஒரு வாசம், அறுவடைக்கு முன்னர் ஒரு வாசம், அறுவடை முடிந்த வயலில் இருந்து வரும் புது வைக்கோலின் வாசம் என மணத்துக் கொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.. அருமை...
      நெல்லின் வாசமே வாசம்... நல்ல சமயத்தில் நினைவூட்டி விட்டீர்கள்..
      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  7. படங்களும் தங்கள் எண்ணங்களும் சிறப்பு.

    கொரோனா மலர் - அடடா... வரும் காலத்தில் கடம்ப மலர் என்பதே மறந்து போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      வருங்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் மாறப் போகின்றதோ.. தெரியவில்லை..
      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய தங்கள் பதிவு அருமை.
    பூக்களின் படங்கள் அனைத்தும் அழகாக மனதை கவர்கிறது. தங்கள் எண்ணங்களின் சொன்ன வார்த்தைகள் கருத்தாழமிக்கது . உண்மையை சொல்லியுள்ளீர்கள். கடம்ப மலர் பற்றி அறிந்து கொண்டேன். அதுவும் கொரோனா மலராக மாறியது கொடுமைதான்.

    தாங்கள் மலர்களை குறித்து எழுதிய கவிதை மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. தமிழ் என்றும் வாழ்கவென தங்களுடன் நானும் மனதாற வேண்டிக் கொள்கிறேன். தாங்கள் அருமையான கவியும், அழகான மலர்களை பார்வையாகவும் தந்தமைக்கு மிக்க நன்றி.

    இன்று இப்போதுதான் வலைத்தளம் வருகிறேன். நேரம் தாழ்த்தி வருவதற்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கிராமத்தில் வாழ்ந்த வாழ்க்கையின் வெளிப்பாடு தான் இது.. நகர வாழ்க்கையினர் இவற்றை அறியவோ அனுபவிக்கவோ வாய்ப்புகள் இல்லை..

      தாமதமாக வருவதில் எவ்விதக் குற்றமும் இல்லை..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஸ்ரீராம் வெளியிட்டிருந்தாலும், அது ஸ்ரீராமின் பதிவல்ல, கேஜியின் பதிவு!  சொல்லப்போனால் கேஜிதான் வெளியிட்டிருந்திருப்பார்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      எது எப்படியோ...
      எபியில் வெளியான பதிவு..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. பழைய சொலவடைகள், புதிர்கள் அர்த்தங்கள் அப்போதே மாறித்தான் போயிருந்தன.  இப்போது தொலைந்தே போயின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள் பொதிந்த் பழமொழிகள் தொலைந்து போனால் அவற்றை மீட்டெடுக்க வேண்டாமா?..

      மீட்டெடுப்போம்...

      நீக்கு
  11. மலர்களில் பலநிறம் கண்டு திருமாளவன் வடிவத்தை அதில் கண்டனர் கவிஞர்கள்.  இப்போது கலிகாலத்தில் உச்சம்..  கொரோனா உருவத்தை அதில் காண்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரி..

      எல்லாம் காலக் கொடுமையன்றி வேறென்ன?..

      நீக்கு
  12. உண்மைதான்.  வாட்ஸாப் தமிழ்ப்போராளிகளின் தமிழ் கொடுமையாகத்தான் இருக்கும்.  கூடவே ஒரு பிளாக்மெயிலும் இருக்கும். 

    தமிழனாயிருந்தால் இதைப் பகிரவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடவே ஒரு மிரட்டல்.. ஏளனம்... இதுவும் ஒரு பிழைப்பு என்று வைத்துக் கொண்டிருக்கின்றனர்...

      // தமிழனாயிருந்தால்.. //
      ஆகா... இதை மறந்து விட்டேன்...

      நீக்கு
  13. உங்கள் கவிதை அபாரம் - வழக்கம்போல.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..