நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 18, 2020

திருப்புகழ் 4

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இங்கே கடந்த பத்தாம் தேதி மாலையிலிருந்து முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..

மருந்தகங்களைத் தவிர வேறெந்த கடைகளும் திறக்கப்படாத
நிலையில் மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை
சற்றே தளர்வு..

அட்டைப் பெட்டிக்குள் அடைந்து கிடக்கும் 
வாழ்க்கையிலிருந்து இரண்டு மணி நேரம் வெளிக்காற்றைச் 
சுவாசிக்கலாம்..

இதனிடையில் Net Package முடிந்து விட்டது...
Recharge செய்தவன் பணத்தை வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டான்..

முற்றாக மூன்று நாட்கள்
என்னிடம் இணையம் இல்லை...  

அங்குமிங்குமாக அலைந்து வேறொரு எண்ணுக்கு
இணைப்பு பெற்று தங்கள் முன் வந்திருக்கிறேன்...

இதற்கிடையில்
எனது தவறினால் சில நாட்களாக
கடும் காய்ச்சலும் நெஞ்சு சளியும்..

தனியாய் வந்தோர் துணிவைத் தவிரத்
துணையாய் வருவது யாரோ!?..
என்றபடிக்கு

துணிவும் நீயே!..
துணையும் நீயே!.. - என்று 
எல்லாம் வல்ல இறைவனை
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

சென்ற வாரத்தில் ஒருநாள் இணையம் நன்றாக இருந்தபோது
சில பதிவுகளைத் தயார் செய்து வைத்திருந்தேன்..

மற்றபடிக்கு தற்போதைய
சூழ்நிலையின் இறுக்கம் தளர்கின்ற வரைக்கும்
நாளொரு நல்ல வார்த்தை என்ற அளவில்
திருப்பதிகங்களை வழங்கி வருகின்றேன்..
அது தடைப்பட்டு விடக்கூடாது என்பதே பிரார்த்தனை..

முந்தைய பதிவில் அன்பின் திரு GMB ஐயா
அவர்கள் விசாரித்திருந்தாரகள்..

ஐஅயா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றி.. 
***

இன்றைய பதிவினில்
அருணகிரி நாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்

திருத்தலம் - திரு ஏரகம்
ஸ்வாமிமலை

வள்ளி மணவாளனின் நான்காம் படைவீடு..
கட்டுமலைத் திருக்கோயில்..


ஆலுக்கு அணிகலம் வெண்தலை மாலை அகிலம் உண்ட 
மாலுக்கு அணிகலம் தண்ணந்துழாய் மயிலேறும் ஐயன்
காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே.. 62 
-: கந்தர் அலங்காரம் :- 


குமர குருபர முருக சரவண
குகசண் முககரி - பிறகான

குழக சிவசுத சிவயநமவென
குரவ னருள்குரு - மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின - முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர - லறியாயோ..


திமிர எழுகடலுலக முறிபட
திசைகள் பொடிபட - வருசூரர்

சிகர முடியுடன் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு - மயில்வீரா

நமனை உயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் - குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் - பெருமாளே...

கொடிய வினைகளைக் களைந்திடுவாய் குமரா!..
- என அலைகடலைப் போல அடியவர் எழுப்பும்
அபயக் குரல் உனக்குக் கேட்கவில்லையா?..
என்று ஸ்வாமிகள் பெருமானிடம்
விண்ணப்பித்துக் கொள்கின்றார்.. 
***

சுப்ரமண்யோம்.. சுப்ரமண்யோம்..
ஹர ஹர சிவ சிவ சுப்ரமண்யோம்..

சுப்ரமண்யோம்.. சுப்ரமண்யோம்..
சிவ சிவ ஹர ஹர சுப்ரமண்யோம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. கந்தனும் அவன் அப்பனும் நம்மைக் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      ஹரஹர சிவசிவ சுப்ரமண்யோம்...

      நீக்கு
  2. பணத்தை இழந்ததும், அதைவிட உடல்நலம் பாதிக்கப் பட்டிருப்பதும் மனக் கஷ்டத்தைத் தருகிறது. உறவில்லா ஊரில் மனதைரியமும் இறையுமே துணை. குளிர்ச்சியாக ஏதும் சாப்பிட்டு விட்டீர்களா? அல்லது புழுக்கம் தாங்காமல் வேளை கெட்ட வேளையில் குளித்து விட்டீர்களா? சீக்கிரம் நலம் பெறுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...
      அன்றைக்கு மதியம் மோர் ஊற்றி சாப்பிட்டு விட்டு வாழைப் பழத்தையும் விடவில்லை...

      அவை தங்கள் வேலையைக் காட்டி விட்டன...

      இருப்பினும் இங்கு குளிரில் இருந்து கோடைக்கு மாறுகின்ற நேரம் இது...

      இரவு நேர உஷ்ணம் குறைவு...
      அரை வேக்காடுகள் AC யையும் அதிகமாக வைத்து விட்டார்கள்.. இதெல்லாம் தான் பிரச்னை..

      தங்கள் அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
  3. நீங்கள் படும் கஷ்டங்களில் இருந்து விரைவில் விடுதலை பெற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். பணம் போனால் போகட்டும், உடம்பு முக்கியம். தினந்தோறும் திருப்புகழை ஓதும் உங்களை அந்த முருகனே காப்பாற்றுவான்.

    பதிலளிநீக்கு
  4. அப்பனே... முருகா... நடுகல் தெய்வங்களுக்கு மூத்தவனே... அனைவரையும் காப்பாற்றுப்பா...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜி
    தங்களது உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  6. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சல், சளி இப்போது குணமா?
    ரசம் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.சுக்கு, மிளகு, மல்லி காபி குடியுங்கள்.
    முருகன் உங்களை காப்பார்.

    விறைவில் நலம் பெற வாழ்த்துக்கள்.

    மக்களின் அபயக்குரலை ஏற்று எல்லோருக்கும் நலம் அளிக்கவேண்டும் முருகன்.

    பதிலளிநீக்கு
  7. முடிந்தால் தினம் ஒரு முறை ஆவிபிடியுங்கள்தெளிவு கிடைக்கும்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..