நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 01, 2019

காளத்தி வைபவம்

அப்பர் பெருமான் சூலை நோய் நீங்கப் பெற்ற நிலையில் தமக்கையார் திலகவதியார் வழங்கிய உழவாரப் படையினைத் தாங்கியவராக

திரு அதிகையிலிருந்து புறப்பட்டு வழி நெடுக சிவாலயங்களைத் தரிசித்ததுடன் ஆங்காங்கே திருக்கோயில்களில் உழவாரப் பணி செய்தவாறு வந்து சேர்ந்த திருத்தலம் - சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினத்துக்கு முன்னதாக விளங்கும் சாய்க்காடு...

எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு வணங்கிய நிலையில் அப்பர் பெருமானின் திருவாக்கிலிருந்து திருப்பதிகம் விளைகின்றது..

பாடல் தோறும் ஈசனின் திருக்கருணையை விவரிக்கின்றது திருப்பதிகம்..

மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்தது
தேவர்களுக்காக கடலில் எழுந்த ஆலகாலத்தை உண்டது
வெண்நாவல் மரத்தில் வலை கட்டிய சிலந்திக்கு அருள் செய்தது
பார்த்தனுடன் மற்போர் செய்ததோடு அவனுக்கு பாசுபதம் வழங்கியது
தருக்கித் திரிந்த தக்கன் நடத்திய வேள்வியைத் தகர்த்து எறிந்தது
வழிபாட்டினைக் குலைத்த தந்தையைத் தண்டித்த மகனுக்கு அருளியது
பகீரதனுக்காக ஆயிரமா முகங்களோடு வந்த கங்கையைத் தாங்கியது

- என்ற பெருநிகழ்வுகளைக் குறித்த அப்பர் பெருமானின் திருவாக்கு -

நாளாறில் கண் இடந்து அப்பிய திண்ணப்பனின் அருஞ்செயலையும் குறித்தது...


இறைவன் - ஸ்ரீ திருக்காளத்திநாதர்
அம்பிகை - ஸ்ரீ ஞானப்பூங்கோதை நாயகி

தல விருட்சம் - மகிழம்
தீர்த்தம் - ஸ்வர்ணமுகி ஆறு..


குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கி தூய வாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங்கு அப்ப
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே..(4//65)
-: திருநாவுக்கரசர்:- 


திண்ணப்பர் தனது கண்ணை வழங்கிய நிகழ்வு -
எத்தனையோ காலங்களுக்குப் பின்

சாய்க்காடு திருக்கோயிலில் தரிசனம் செய்யும்
திருநாவுக்கரசரின் நெஞ்சகத்தில் நிழலாடியது - எனில்
அந்நிகழ்வின் தாக்கம் தான் என்னே!...

இறைவனால் கண்ணப்பா!.. - என்றழைக்கப்பட்ட
வேடர் பெருமகனை ஞான சம்பந்தப் பெருமானும்,
மாணிக்கவாசகப் பெருந்தகையும் பட்டினத்து அடிகளும் பாடினர் என்றால் திண்ணப்பருடைய பெருமை தான் என்னே!...

ஈசனுக்கு கண்ணிடந்து அப்பிய
கண்ணப்பருடைய திருவடிகள் பட்ட தலம் - திருக்காளத்தி...
திருக்காளத்தி பஞ்ச பூதத் திருத்தலங்களுள் வாயுவின் பகுப்பு..

ஸ்ரீமஹாசிவராத்திரி வெகு சிறப்பாக நிகழும் திருத்தலங்களுள் ஒன்று...



வேயனைய தோளுமையோர் பாகமதுவாக விடையேறி சடைமேல்
தூயமதி சூடிசுடுகாடின் நடமாடிமலை தன்னை வினவில்
வாய்கலச மாகவழிபாடு செய்யும் வேடன்மலராகு நயனம்
காய்கணையினால் இடந்து ஈசனடி கூடுகாளத்தி மலையே..(3/69)
-: திருஞான சம்பந்தர் :-


திருக்காளத்தியில் ஸ்ரீ மஹாசிவராத்திரி வைபவங்களுக்காக நேற்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது...

அந்த வைபவத்தின் படங்களுள் ஒரு சில இன்றைய பதிவில்...

படங்களை வழங்கியோ உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இதே படங்களை அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களும் அனுப்பியிருந்தார்..
அவருக்கும் மனமார்ந்த நன்றி...


நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான்காண்
புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான்காண்
தன்மைக் கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே..(6/08)
-: திருநாவுக்கரசர்:-



ஸ்ரீ மஹா சிவராத்திரியை முன்னிட்டு நேற்றைக்கு முன்தினம்
காளத்தி நாதரின் திருக்கோயிலுக்கு அருகிலுள்ள
கண்ணப்பர் மலை திருக்கோயிலிலும் கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது..


செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதன் என் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.. (7/26)
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்:-



கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாஎன்ற வான்கருணைச்
சுண்ணப் பொன் நீற்றர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ..
-: மாணிக்கவாசகப் பெருமான்:-


வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் தொண்டு செய்து
நாளாறில் கண் இடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே!..
-: பட்டினத்து அடிகளார்:-

கண்ணப்பர் போல அன்பில்லை... ஆயினும்
எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி!..
என - சிவராத்திரி நன்னாளில்
வேண்டி விரும்பி நிற்போம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ  

20 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    மஹாசிவராத்திரி சிறப்புப் பதிவு அருமை.

    படங்கள் மூலம் சிறப்பு தரிசனம்.

    பதிலளிநீக்கு
  2. // பகீரதனுக்காக ஆயிரமா முகங்களோடு வந்த கங்கையைத் தாங்கியது //

    அந்த கங்கை நதி பற்றிய பாடலைத்தான் இன்று பகிர்ந்திருக்கிறேன்!!!!

    ஹிஹிஹி....

    பதிலளிநீக்கு
  3. இனிய மகிழ்வான காலை வணக்கம் துரை அண்ணா..இதோ பதிவு பார்த்துட்டு வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. திருகாளஹத்தி ஒரே ஒரு முறை போயிருக்கிறேன் அண்ணா. ஆனால் கண்ணப்பர் மலை பற்றி இப்பத்தான் தெரிந்து கொண்டேன்.

    மஹாசிவராத்திரிக்கான பதிவு அருமை. கோயில் அலங்காரம் படங்கள் சிறப்பு. என்றால் அந்தக் கோபுரத்தின் படம் செம...அழகான ஆங்கிளில் எடுக்கப்பட்ட படம்...சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் சித்திரை முதல் நாளன்று அங்கு தான் தரிசனம்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. நான் ஒருமுறை சென்றிருக்கிறேன். கண்ணப்பர் மலை செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

    இடுகையைப் படித்ததும், பேட கண்ணப்பா படத்தில் நடித்துப் பெரும் புகழ் பெற்ற கன்னட நடிகர் ராஜ்குமார் நினைவில் வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      அடுத்த முறை தான் கண்ணப்பர் மலைக்குச் செல்ல வேண்டும்...

      சென்ற வாரம் தான் என் மைத்துனர் குடும்பத்துடன் என் மனைவியும் மகனும் திருமலை, காளஹஸ்தி தரிசனம் செய்து வந்திருக்கின்றனர்..

      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. திருக்காளத்தி 2,3 முறை போயிருந்தாலும் கண்ணப்பர் மலை போனதில்லை. எல்லாச் சிவன் கோயில்களும் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகளுக்குத் தயார் ஆகி வருகின்றன. அருமையான விபரங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி. சாய்க்காடு என்பது இப்போது சாயாவனம் என்று அழைக்கப்படும் ஊர் தானே? அல்லது இது வேறேயா?

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

    சாய்க்காடு தான் சாயாவனம் .. இந்தத் திருக்கோயிலில் வில்லேந்திய வேலவன் பிரசித்தம்...

    பதிலளிநீக்கு
  8. திருக்கொடியேற்றம் காட்சி காண எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அரிய காட்சிகள் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  10. சாயாவணம், காளஹத்தி எல்லாம் பல முறை போய் இருக்கிறோம்.

    கண்ணப்பர் மலை போனது இல்லை.
    திருவிழா படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. சிவராத்திரிக்கான பதிவு அருமை. திங்களன்று இல்லையா.

    படங்களும் சிறப்பு. திருக்காளஹத்தி சென்றிருக்கிறேன் ஒரு முறை. அடுத்து செல்ல நினைத்தும் நேரவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது தளத்தில் புலிக்காட் ஏரியும் பறவைக் கூட்டமுமாக அழகிய படங்கள் கண்டேன்.. கருத்துரைப் பெட்டி திறக்கவேயில்லை..

      இணைய வேகம் சரியில்லை போலிருக்கின்றது...

      மீண்டும் முயற்சிக்கிறேன்...

      வாழ்க நலம்...

      நீக்கு
  12. விழா ஏற்பாட்டினைப் பார்த்தபோது திருவண்ணாமலை தீப விழா நினைவிற்கு வந்தது. காளத்தியப்பனைப் பல முறை கண்டுள்ளேன். உங்களால் விழா பற்றிய செய்திகளை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அரிய விபரங்கள்! அருமையான புகைப்படங்கள்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..