நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 17, 2018

தேவி தரிசனம் 4

நாடெங்கும் நவராத்திரி கோலாகலம்...

ஸ்ரீசரஸ்வதி பூஜையினை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம்.. 

திருக்கோயில்கள் எங்கெங்கும் திருவிழாக் கோலம்...

மனமெலாம் பரவசத்தில் ஆழ்ந்திருக்கின்றது..

இன்றைய பதிவிலும் -
அம்பிகையின் அருட்கோலங்கள்...

திருக்கோலக் காட்சிகளை வழங்கியோர்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...


ஸ்ரீ உண்ணாமுலையாள்..
திருஅண்ணாமலை.. 
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.. (04)

ஸ்ரீ பாலகுஜாம்பிகை.,
திருக்கடம்பந்துறை (குளித்தலை).. 
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.. (10)

மாமதுரை மீனாள் 
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே?.. (13)

ஸ்ரீ பர்வதவர்த்தனி
திருஇராமேஸ்வரம்..
 
மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. (21)

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி 
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி.,
திருஐயாறு.. 
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.. (24)

ஸ்ரீ திரிபுரசுந்தரி.,
திருக்கழுக்குன்றம்.. 
ஸ்ரீ பிரஹந்நாயகி.,
திருப்பாதிரிப்புலியூர்..
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருஉடையானிடம் சேர்பவளே.. (37)

ஸ்ரீ கற்பகவல்லி.. 
ஸ்ரீ கற்பகவல்லி.,
திருமயிலை.. 
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. (69) 
***


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி..
அவள் திருவடிகளைப் பணிந்திருப்போம்!..

ஓம்
சக்தி சக்தி
ஓம் 
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. பகிர்ந்த படங்கள் எப்போதும்போல் மிகச் சிறப்பு. பாடல்களைப் படித்துப் பொருள் உணர்வதற்கு நேரமெடுக்கும். நல்ல பதிவு.

    இது சம்பந்தமாகத் துழாவிக்கொண்டு வரும்போது,

    பூத்தவளே, புவனம் பதினான்கையும் என்ற பாடலில்,
    கறை கண்டனுக்கு மூத்தவளே எனவும் முகுந்தனுக்கு இளையவளே என்றும் குறிப்பிடுகிறார். இதன் நேரடிப் பொருள், அபிராமீ நீ, சிவனுக்கும் மூத்தவள், திருமாலுக்கு இளையவள் என்பது. கொஞ்சம் அர்த்தம் சரியில்லையோ?

    அதற்கு பெரியவர்களின் பொருளாக (interpretation), அறிவு முதிர்ந்து, அடி முடி காணா இறைவனை அறிந்திருப்பதால், மூத்தவராகவும், திருமாலின் லீலைகளில் ஒன்றான, குழந்தைக் கண்ணனைப் போன்று மனதில் நிர்மலமாக இருப்பதால் இளையவளாகவும் அபிராமியை உருவகப்படுத்துகிறார்.

    இடுகை நன்றாக வந்துள்ளது. பிறகு நேரமிருக்கும்போது வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி விவாதங்கள் எல்லாம் நெல்லை, கீதா அக்கா, துரை செல்வராஜூ ஸார் போன்றோராலேயே முடிகிறது. வியப்பூட்டுகிறீர்கள் நெல்லை.

      நீக்கு
    2. "கொஞ்சம் அர்த்தம் சரியில்லையோ?" :)))) பின்னால் ஒரு சமயம் பார்க்கலாம்.

      நீக்கு
    3. https://tinyurl.com/y9o8scuc நெல்லைத் தமிழருக்கு இந்தச் சுட்டி. சில வருடங்கள் முன்னர் எழுதிய அபிராமி அந்தாதி உரை! மூலம் கி.வா.ஜகந்நாதன். மற்றும் தெய்வத்தின் குரல். இதில் தத்துவ ரீதியான விளக்கங்களைச் சொல்லவில்லை. அப்படிப் பார்க்கையில் "என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!" என்பதன் பொருள் நன்கு புரிந்து கொள்ளலாம். இங்கே பாலாம்பிகையைக் குறிப்பிடுகிறார் பட்டர். மேலும் முதலில் வெண்மையாக இருந்த மகாவிஷ்ணு ஆலகால விஷத்தால் கரிய நிறம் பெறுகிறார் என்பதும் தாங்கள் அறிந்திருக்கலாம். அப்படியும் அவர் மூப்பு எய்தாமல் இருந்ததால் என்றென்றும் இளமையாக இருப்பதால் "மூவா முகுந்தர்" அவர் தான் அமிர்த கDஏஸ்வரரைத் தனித்து புஜ்ஜை செய்யக் கூடாது என்பதால் தன் ஆபரணங்களால் அபிராமியை வடிவமைத்தார் என்பது புராணக்குறிப்புகள். அதனாலும் முகுந்தற்கு இளையவளே என்கிறார். இன்னும் தத்துவ ரீதியாகப் பின்னால் ஒரு சமயம் பார்ப்போம்.

      நீக்கு
    4. பாற்கடலைக் கடைந்தபோது முதலில் தோன்றியவள் ஜேஷ்டா தேவி. இவளையும் மூத்தவளே எனச் சொல்லி இருக்கலாம். மகாலக்ஷ்மி பின்னர் தான் தோன்றினாள். மூத்த தேவி என அழைக்கப்பட்டு அநேகமாய்ப் பழங்காலச் சிவன் கோயில்களில் எல்லாம் தனியான முதலிடம் பெற்று இருந்த ஜேஷ்டாதேவி இன்று மூதேவி என அழைக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டு விட்டாள். ஆனால் திருக்கடையூரில் ஜேஷ்டாதேவி பிரதிஷ்டை இருக்கிறது.

      நீக்கு
  2. இன்றைய தரிசனம் மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.
    பாடல் பகிர்வும் அருமை.
    அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துக் கோயில்களுக்கும் சென்றுள்ளேன். தேவியரை ஒரே இடத்தில் உங்கள் பதிவு மூலமாகக் கண்டேன், இன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்கள். சுகதரிசனம்.

    பதிலளிநீக்கு
  5. கைக்கே அணிவது என்ற பாடலில்,

    விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்

    முதலில் பைக்கே அணிவது என்றவுடன் என்ன அர்த்தம் இருக்கும் என்று யோசித்தேன். படம் எடுக்கும் பாம்பை பின்பக்கமாக இருந்து பார்த்தால் அதன் தலை எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட இடையினை உடையவள் அபிராமி. அந்த இடையில் பல மணிகளால் ஆன நகைகளும் பட்டும் உடுத்தியிருக்கிறாள் என்பது அர்த்தம். எவ்வளவு கற்பனை வளமும் பக்தியும் மனக்கண்ணால் அபிராமியைத் தரிசிக்கும் முனைப்பும் இருந்தால் இந்த மாதிரி கவிதை மனத்தில் ஊறியிருக்கும்?

    பதிலளிநீக்கு
  6. விதம் விதமான அம்மன் படங்கள்.. அத்தனையும் அழகு. உண்மைதான் துரை அண்ணன் நவராத்திரி முழுநாளும் விரதம் பிடித்து தேவாரம் பாடி , தினமும் விதம் விதமாகப் படைத்து.. இப்போ வீட்டுப்பூசை வரப்போகிறது நிறையச் செய்து படைத்து மகிழும்போது பல பழைய சின்ன வயசு நினைவுகளும் வந்து போகிறது..

    நாங்கள் வீட்டுப் பூஜை அன்று, படத்தின் முன்னால் சமையல் பதார்த்தங்களோடு படிக்கும் பொருட்கள்[புத்தகம், கொப்பி] மற்றும் திறப்பு, வேலை செய்யும் உபகரணம் இப்படி எல்லாம் வைத்துக் கும்பிடுவோம்.. இப்படித்தான் அங்குமோ தெரியவில்லை.. பிள்ளைகளுக்கும் அது ஒரு த்றில்லாகவும் பரபரப்பாகவும்.. கொஞ்சம் பக்தி.. பயமாகவும் இருப்பினம் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிள்ளைகளெல்லாம் கொஞ்சம் பக்தி பயமாகவும், திரில்லாகவும்// - சும்மா கதை சொல்லவேண்டாம். நாங்களும் கொண்டாடுவோம். காரணம், புத்தகங்களை எல்லாம் சரஸ்வதி பூசையின்போது மேடையில் வைத்துவிட்டு அன்றைக்கு படிக்கச் சொல்லமாட்டார்கள், நாங்கள் விளையாடுவோம், ஊர் சுற்றுவோம்... வெகு ஜாலிதான். மறு நாள், ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் ஒரு பத்தி படிப்போம். சரஸ்வதி பூசை கொண்டாட்டத்துக்குக் காரணம், லீவு, வீட்டிலுள்ளவர்கள் அன்று எங்களைப் படி படி என்று சொல்லமாட்டார்கள். ஹாஹா.

      நீக்கு
  7. அழகான படங்கள். அருமையாக அம்மன் தரிசனம் கிடைத்தது. மீனாக்ஷியாகத் தெரிகிறாளே என நினைத்துக் கொண்டே பார்த்தால்! அவளே தான்! அந்தக் காலங்களில் தினம் இருமுறை மீனாக்ஷி தரிசனத்துக்குப் போன நினைவுகள் மலர்ந்தன! நினைத்தால் ஓடிப் போய்ப் பார்த்துட்டு வருவோம். சுண்டல் கடையெல்லாம் எட்டு மணியோடு முடிஞ்சுடும். ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டியாச்சுன்னா ரொம்பவே நியமங்கள் கடைப்பிடிக்கிறவங்க வெற்றிலை, பாக்கு எடுத்துக்க வர மாட்டாங்க! ஆகவே எட்டரை வரைக்கும் பார்த்துட்டு ஆரத்தி எடுப்போம். பின்னர் ஒவ்வொரு கோயிலாகக்கிளம்பினால் கடைசியில் வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வந்து முடியும். மீனாக்ஷியைப் பார்த்துக் கொண்டு, மதனகோபால சுவாமியைப் பார்த்துப் பின்னர் பிரசன்ன வெங்கடேசர், அதன் பின்னர் கூடலழகர், அங்கிருந்து வடக்குக் கிருஷ்ணன் கோயில், ராமாயணச் சாவடி! வீட்டுக்கு வரச்சே ராத்திரி பதினோரு மணி ஆகும். என்றாலும் பயமில்லாமல் சென்று வந்த காலம் அது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..