நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 10, 2018

தேவி தரிசனம் 1

அம்பிகைக்குரிய வைபவங்களுள் மிக முக்கியமானது நவராத்திரி விழா.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பினை உடையது.

சூரியன் கன்னி ராசியில் திகழும் புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி திதியுடன் நிறைவு பெறுவது நவராத்திரி விழா.


சாரதா நவராத்திரி எனப்படும் - இதுவே 
வீடுகள் தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது.

ஆயினும் - 
தை மாதம் ஸ்யாமளா நவராத்திரி
பங்குனியில் வசந்த நவராத்திரி
ஆடியில் ஆஷாட நவராத்திரி 
- என, மேலும் மூன்று நவராத்திரி வைபவங்கள் 
ஆங்காங்கே - பிரசித்தி பெற்ற ஆலயங்களில் 
தொன்று தொட்டு அனுசரிக்கப்படுகின்றன.  

பொதுவாக நவராத்திரி பூஜைகள் சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் - 
முன்னிரவு நேரத்தில் செய்யப்படும்.

சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்பட வேண்டியது
என்றாலும் விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம்...

தனிச் சிறப்புடைய நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. 
என்றாலும் - நவராத்திரி வழிபாட்டில் எல்லாரும் ஈடுபடலாம். 

இதனால் அனைவரும் பெறுவது - 
மனமகிழ்ச்சியும் பரிபூரண திருப்தியுமே!..

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
பட்டீஸ்வரம் - கும்பகோணம் (அருகில்) 
ஈசனை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி எனில் 
ஈஸ்வரியை வழிபட நவராத்திரி.  

நவம் -  என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் 
புதியது என்றும் பொருள். 

ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் விழாவிற்குப் 
பின் பத்தாம் நாள் விஜய தசமி.

நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில்-

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி வழிபாடு மூன்று நாட்கள்.. 
ஸ்ரீமஹா லக்ஷ்மி வழிபாடு மூன்று மூன்று நாட்கள்..

ஸ்ரீஞான சரஸ்வதி வழிபாடு மூன்று மூன்று நாட்கள்..


விஜய தசமி எனும் பத்தாம் நாள்
அம்பிகை வெற்றி கொண்ட நாள்.. 
மகிஷாசுரனை
காலடியில் போட்டு மிதித்த நாள். 

ஸ்ரீதுர்கா பூஜை செய்த பின்னரே, 
ஸ்ரீராமபிரான் - இராவணனுடன் போர் தொடுத்தார் - என்பர் ஆன்றோர்..

வீரர்களின் இதயக்கோயிலில் உறைபவள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி.  

ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ ஞானசரஸ்வதி எனும் திவ்ய ஸ்வரூபங்களைத் - தன்னுள் கொண்டு முப்பெரும் சக்தியாக இலங்குபவளும் அவளே...

இத்தகைய பராசக்தி -
மேலும் மும்மூன்று அம்சங்கள் கொண்டு  -

மகேஸ்வரி, கெளமாரி , வராகி, 
மகாலெக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி,
சரஸ்வதி, நரஸிம்ஹி, சாமுண்டி -

 - என, ஒன்பது தேவியர்களாகப் பொலிகின்றாள்...


நவராத்திரியில் கன்யா பூஜை என்பது ஒரு மரபு...  

இல்லங்களில் சக்தி ஸ்வரூபம் அமைத்து 
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் 
புஷ்பாஞ்சலியுடன் தூப தீப ஆராதனைகள் செய்து 
தினமும் ஒவ்வொரு விதமான நிவேத்யம் படைத்து 
உள்ளன்புடன் வணங்க வேண்டும்... 

அத்துடன் - 
ஏழைகளுக்கு - குறிப்பாக
இளஞ்சிறுமியர்க்கும் கன்னியர்க்கும்
தானம் செய்தல் வேண்டும்...

ஒன்பது நாளும் இயன்ற அளவில்  
சுண்டலும் சித்ரான்னமும் பழவகைகளும் 
அம்பிகைக்கு நிவேத்யம் செய்வது 
அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்... 

ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது...

அன்பின் வழி நின்று கொலு அமைத்து
அதை அழகுற அலங்கரித்த வேளையில் -

அந்தக் கொலுவினைக் காண்பதற்கு 
அம்பிகை எந்த ரூபத்திலும் வந்தருள்வாள்... 

அன்புக்கு வசப்படுவள் அம்பிகை....

ஆயினும் -
அவள் ஆடம்பரங்களை வெறுப்பவள்!..

இல்லார்க்கும் எளியார்க்கும் இரங்குதலே
அம்பிகையை வழிபடுதலின் நோக்கம்.. 




வீட்டில் அழகாக கொலு வைக்கலாம்... அதுவும் இயன்றால் தான்... 

ஒன்பது படிகளைகளைக் கொண்ட மேடையில்
கீழ்ப்படியில் ஓரறிவுடைய தாவரங்களின் அம்சங்கள்..

மேலே செல்லச் செல்ல சிற்றுயிர்கள் பறவைகள் விலங்குகள்  
மனிதர்கள் ஞானியர் தேவர்கள் என அமைத்து -

மேல்படியில் முழுமுதற்பொருளான 
ஸ்வாமி அம்பாள்  ஸ்வரூபத்தினையும் 
பூரண கும்பத்தினையும் நிறுவ வேண்டும்.

இவ்விதமாக கொலு அமைக்கும்
ஒவ்வொரு வீடும் ஒருகோயிலாக ஆகின்றது.

இத்துடன் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் 
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்!.. 
-  என, கொலு மண்டபத்தில் ஆராதனைகளைச் செய்து, 

அருகில் உள்ளவர்களையும் 
உற்றார் உறவினர் நண்பர்களையும் அழைத்து 
மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். 

தீப ஆராதனைக்குப் பிறகு 
நிவேதன பிரசாதத்துடன் மங்கலப் பொருட்களை 
மகிழ்ச்சியுடன் கொடுத்து உபசரித்தல் மரபு. 

ஒருவருக்கொருவர் 
அன்பின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம்...


ஏற்ற தாழ்வின்றி கொள்வதும் கொடுப்பதும் நவராத்திரியின் மாண்பு!..

புல் பூண்டுகள் எனத் தொடங்கி 
பூரண கும்பம் எனும் நிலையில் நிறைவுறும்..

இந்த கொலு அமைப்பினை உற்று நோக்கினாலே 
கொலு அமைப்பதன் அர்த்தம் விளங்கி விடும். 

நவராத்திரி கொலு என்பது ஒரு அருட்குறிப்பு. 

புல் பூண்டுகள் எனத் தொடங்கும் 
ஒவ்வொருவருடைய வாழ்வும் பூரண கும்பம் 
எனப் பொலிவுற வேண்டும். அதுவே நமது வேண்டுதல்!..


நவராத்திரி - அம்பாள் மகிஷனுடன் நிகழ்த்திய நாடகம்!..
அதன் மறைபொருள் - பெண்மையின் வெற்றி என்பது தான்!.. 

சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!..{8}
-: அபிராமி அந்தாதி :-

ஓம் 
சக்தி சக்தி சக்தி
ஓம் 
***

17 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு ஐயா...
    படடங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. எத்தனை நவ ராத்திரிகள் பகிர்வுகள் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி
    அழகிய புகைப்படங்களுடன் நவராத்திரியின் சிறப்பு அறியத்தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள் அருமை. இடுகையில் ஒன்றிப் படிக்க இப்போது இயலவில்லை. நைவேத்யம், அன்பின் வெளிப்பாடாக இருக்கவேண்டும், படாடோபத்தைக் காட்டுவதாக இருக்கக்கூடாது (என்பது மறை பொருள்) என்று சொல்லியிருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான பதிவு.
    படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு

  6. சிறப்பான தகவல்கள். நாங்கள் கொலு வைக்கும் பழக்கத்தை எடுத்துக் கொள்ளவில்லை. நான் சுண்டல் சாப்பிடும் பழக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      >>> நான் சுண்டல் சாப்பிடும் பழக்கத்தை மட்டும்.. <<<

      சுண்டல் என்றால் என்ன?.. நவராத்திரி என்றால் என்ன?..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. உங்கள் வரிகளைப் படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்த அருமையான, மிக அருமையான பாடல்...

    https://www.youtube.com/watch?v=vTFUC3yfuE8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடல் சீர்காழியின் குரல் எனில் சொல்லவோ வேண்டும்.. எனக்கு சூலமங்கல சகோதரிகளின் பாடலும் ரொம்பவும் பிடிக்கும்..

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..

      தாங்கள் இணைத்துள்ள காணொளியை கூகிள் குரோமில் காண முடியாது.. இணைப்பில் ஏதோ கோளாறு..

      மொஸில்லாவுக்குப் போக வேண்டும்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நான் பொதுவாக சமய போஸ்ட்கள் உள் நுழைந்து-அதாவது மனதுள் எடுத்துப் படிப்பது குறைவு.. பொதுப்படையா வாசிப்பேன், ஆனா இன்று அப்படியே உள் நுழைந்து படிச்சேன்.. அழகாக சொல்லியிருக்கிறீங்க.

    இன்றுதானே முதல் நாள், சிலர் இல்லை நேற்று எனக் குழப்புகிறார்கள் என்னை .. கனடாவில் இருந்தும் சொன்னார்கள் நேற்று என.. அது எதுவா இருந்தாலும் கலண்டரின் இன்றுதான் எங்களுக்குப் போட்டிருக்குது என நாம் இன்றுதான் ஆரம்பிச்சோம்ம்.. இப்போ பார்த்தால் நீங்க சொல்லியிருக்கும் பிரதமை எங்களுக்கு இன்றுதான்[புதன்].

    நானும் டெய்லி ஒவ்வொரு பதார்த்தமாக செய்து படைச்சு, பிள்ளைகளையும் தேவாரம் சொல்ல வச்சுக் கும்பிடுவோம்... இதுவும் வீட்டில் ஒரு குதூகலமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா அவர்களுக்கு நல்வரவு..

      தாங்கள் சொல்லியபடியே எனக்கும் குழப்பம்...
      சில கோயில்களில் அமாவாசையை அடுத்து விசேஷங்கள் தொடங்கி விட்டன..

      மதுரையில் நேற்று தான் .. தஞ்சாவூரிலும் நேற்றுதான் தொடக்கம்..

      பிள்ளைகள் தேவாரம் பாடி வணங்குவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..