நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 03, 2018

திருமலை தரிசனம் 4

இந்த அளவில் மலைப் பாதையில் நடந்து
ஸ்ரீ வேங்கடாத்ரியை அடைந்து விட்டோம்...

3550 படிகளைக் கடந்தோம் என்பதை நம்பவே முடியவில்லை!...

புறப்பட்டபோது எத்தனை மலைப்பாக இருந்தது!..

எப்படியோ -
ஆறு மலைகளையும் கடந்து விட்டோம் என்பதே இனிப்பாக இருந்தது....

ஏழாவதான -
ஸ்ரீ வேங்கடாத்ரி மலையில்
முதல் தரிசனம் நம்ம ஊர்ப் பொண்ணு!..

கோதை நாச்சியார் எனும் செந்தமிழ்க் கண்ணு!..

மிகவும் சந்தோஷமாக இருந்தது...

மலையேறி வரும்போது தசாவதார மண்டபங்கள் முடிந்து
ஆழ்வார் திரு மண்டபங்கள் தொடர்ந்தன என்று கண்டோம்...

ஆழ்வார் மண்டபங்கள் -
ஆண்டாள் மண்டபத்துடன் நிறைவு பெறுகின்றன...


வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட 
விமலன் எனக்கு உரு காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் 
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் 
களித்து இசை பாடுங்குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் 
வேங்கடவன் வரக் கூவாய்!..(0546)
-: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்:-

வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புகுந்திட விரும்பிய பூவையாயிற்றே!..

வேங்கடவன் வரக் கூவாய்!. - என்று கூவிய குயிலாயிற்றே!..

இதோ வந்தாயிற்று -
பொருள் பாதுகாப்பு மையத்திற்கு...

அடிவாரத்தில் பைகளை ஒப்படைத்த போது
இங்கே தான் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்...

மகன் சென்று கொடுத்த பொருள்களை திரும்ப வாங்கி வந்தான்...

அப்படியே கொஞ்ச தூரம் நடந்தால் - அதோ தெரிகின்றது
மாதவ கல்யாண கட்டம்...

மாதவ கல்யாண கட்டம்.. நன்றி - கூகிள்..
மாதவ கட்டத்திற்கு எதிரிலுள்ள கடைகள்.. நன்றி - கூகிள்.
இந்த மாதவ கல்யாண கட்டத்திற்கு
சற்று முன்னால் சிறிய அளவில்
ஸ்ரீ கங்கம்மா திருக்கோயில்....

ஸ்ரீ கங்கம்மாவை வணங்கிக் கொண்டு மேலே நடந்தோம்...

மாதவ கல்யாண கட்டம்...
மலையேறி வருபவர்களுக்கான தங்குமிடம்...

மாதவ கல்யாண கட்டத்திற்கு
எதிர்புறம் நாற்சந்திப்பை அடுத்து பேருந்து நிலையம்

மாதவ கல்யாண கட்டத்தில் எவ்வித கட்டணமும் இன்றி
பக்தர்கள் ஒருநாளைக்குத் தங்கிக் கொள்ளலாம்..

தங்குமிடத்தின் முகப்பினிலேயே அலுவலர்கள்..

நமது ஆதார் அட்டையும்
காலி கோபுரத்தில் கொடுக்கப்பட்ட திவ்ய தரிசன சீட்டும் 
சரிபார்க்கப்படுகின்றன....

எங்களுக்கு மூன்றாவது தளத்தில் இரண்டு லாக்கர்கள் கிடைத்தன...
பூட்டும் சாவியும் கொடுத்தார்கள்...

மேலே சென்று பொருள்களை வைத்து விட்டு வரட்டும் - என்று
இங்கே முடி இறக்குவதற்காக காத்திருந்த வரிசையில் நின்றேன்...

கூட வந்த நண்பரும் முடி காணிக்கைக்காக சேர்ந்து கொண்டார்..

மிக நீண்ட வரிசை... இருந்தாலும் வழக்கம்போல, 
கூண்டுக்குள் நின்ற மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்...

நான்கு மணிக்குத் தான் திறக்கப்படும் என்று பேசிக் கொண்டார்கள்...
ஆனாலும் - மூன்றரைக்கே கதவு திறக்கப்பட்டது..

கோவிந்தா.. கோவிந்தா!.. - என்று பெருஞ்சத்தம்..
மக்களின் தள்ளுமுள்ளு அதிகமாகியது....

வரிசையில் சென்று சீட்டு வாங்கிக் கொண்டேன்...
21 என்று வந்திருந்தது...

விஷயம் என்னெவென்றால்
முடி காணிக்கைக்கு வந்தவர்கள் வெகு சிலரே...

அது ஒரு சடங்காக இருந்ததால்
ஒவ்வொருவர் கூடவும் பெருங்கூட்டம்!..

இப்படியிருக்க -
சந்தனமும் அரை பிளேடும் 
தேவஸ்தானத்தின் சார்பில் வழங்கப்படும்!..
என்று - தென்னகத்து மொழிகளில்
ஆங்காங்கே அறிவிப்புகள்..

ஆனால் - அனைவருக்கும்
அரை பிளேடு மட்டுமே கிடைத்தது...

பெரிய அளவில் எழுதப்பட்டிருந்த எண்களுக்குக் கீழாக
நாவிதர்கள் அமர்ந்திருந்தார்கள்...

யாருக்கும் எதற்கும் காசு கொடுக்க வேண்டாம் என்று
எழுதிப் போட்டிருந்தார்கள்...

எனக்கான எண்ணின் அருகில் சென்று நின்றேன்....

அந்த காலத்தில் நாவிதர்கள் பலதும் கற்றவர்களாக இருந்தனர்...
முக்கியமாக கை வைத்தியத்தில் தேர்ந்தவர்கள்..

இவர்களும் பல மொழிகளைக் கற்றவர்களாக இருக்கின்றார்கள்..

என்னைப் பார்த்ததும்-
தமிழா!.. - என்றார்...

ம்!..

நல்லா தண்ணி போட்டு தேய்ச்சிட்டு வா!..

சரி!..

தண்ணி போட்டுட்டு வருவதற்குள் இருக்கை காலியாக இருந்தது...

சுவர் ஓரமாக அவர் அமர்ந்திருக்க -
எதிரில் சிறு மேடை...  கிராமத்தின் நினைவுகள் வந்தன...

கீழே அமர்ந்து கொண்டேன்..
எங்களுக்கு நடுவில் சிறிய இடைவெளியில்
தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது... 

கோவிந்தா.. சொல்லு!..

கோவிந்தா.. கோவிந்தா!..
கோவிந்தா.. கோவிந்தா!..

ஐந்து நிமிடத்தில் முடி இறக்கியாயிற்று...
முடி இறக்கும் கூடத்திற்கு அருகிலேயே குளியலறைகள்...

குளித்து விட்டு புது வேட்டி அணிந்து கொண்டேன்...
எல்லாருமாக கீழே வந்தோம்...

அந்த விடியற்காலைப் பொழுதில்
காஃபி, டீ.. - என்று பல பாஷைகளிலும் சத்தம் கேட்டது..

ஆனால், எல்லா கடைகளிலும்
மெழுகுப் பூச்சு ( Wax Cups) குவளைகள்...

சாமீ.. இக்கட வா!...

கிளாஸ் இருக்கா!..

வா.. நைனா.. இக்கட வா!...

நாலு காஃபி!..
கும்மோணத்து டிகிரியை விட நல்லாத்தான் இருந்தது...

அடுத்து எங்கே!..

கோயிலுக்குத் தான்!..

வழி கேட்டுக் கொண்டே நடந்தோம்...

வீதியெல்லாம் சுத்தம் .. படுசுத்தம்!...
பெண்களும் ஆண்களுமாக துப்புரவுப் பணியில்!...

பெரும்பாலும் மரத்தின் இலைகள் தான்...
அத்தனையும் வாரி வண்டிகளில் ஏற்றப்பட்டன...

ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்..
தீர்த்தப் பிரசாதம் - என்ற சிறப்புடன்...

அந்த குடிநீர் நிலையங்களும்
உடனுக்குடன் சிரத்தையுடன் சுத்தம் செய்யப்படுகின்றன..

நடந்து நடந்து திவ்ய தர்சன காம்ப்ளெக்ஸ் வந்தடைந்தோம்...

பரந்த புல்வெளி... வேலிக்கு அந்தப் பக்கமாக இருந்தபடி
சர்க்கரைப் பொங்கல், மிளகுப் பொங்கல் இவற்றுடன் பாலும் வழங்கப்பட்டது..

ஒன்பது மணி...
திவ்ய தரிசனத்திற்குக் கதவு திறக்கப்பட்டது..

அவ்வளவு தான் -
திவ்ய தர்சன காம்ப்ளெக்ஸுக்குள் -
திடு..திடு.. - என, ஓடி உட்புகுந்தார்கள் - ஜனங்கள்...

அப்படியும் இப்படியுமாக நகர்ந்து
வைகுந்தம் காம்ப்ளெக்ஸுக்குள் வந்தாயிற்று..

வரும் வழியில் கூடுதல் லட்டுகளுக்கான சீட்டுகள்..
அங்கேயும் தள்ளு முள்ளு... கூச்சல்.. குழப்பம்!..
என்ன ஆனந்தமோ - இப்படி நெருக்கியடிப்பதில்!...

வைகுந்தம் காம்ப்ளெக்ஸுக்குள் தான் இரண்டரை மணி நேரம்....

மலையேறி வருபவர்கள் காத்திருப்பு இல்லாமல்
விரைவாக ஸ்வாமி தரிசனம் செய்யலாம் என்றார்களே!..

எங்கே குழப்பம் ஏற்பட்டது?.. தெரியவில்லை...
விவரம் கேட்டு ஏதும் ஆகப் போவதில்லை!..

ஆனாலும் கேட்கலாம் - என்றால்
சுற்றிலும் வடநாட்டுப் பயணிகள்!..

ஒருகட்டத்தில் பொறுமையிழந்து
அங்கிருந்த பணியாளரிடம் சத்தமாகக் கேட்டேன்!...

எப்போ திறந்து விடுவீங்க?..

ஸ்வாமீ.. இக்கட அன்னம் உண்டு.. தண்ணி உண்டு!..

அதெல்லாம் இருக்கட்டும்..
நான் பெருமாளைப் பார்க்கணும்!..

அவர் அங்கிருந்து சென்றார்..

திரும்பி வந்தபோது
அவருடன் ஒரு காவல் துறை அதிகாரி!...

ரெண்டு பேரும் தெலுங்கில் பேசிக் கொள்ள ஏதும் புரியவில்லை...

இந்த கூடத்தையும் அடுத்ததையும் திறந்து விட்டார்!...

அப்போதே விமோசனம் - என்ற மாதிரி
குறுகிய வாசல் வழியாக வெள்ளமென ஜனங்கள் வெளியேறினார்கள்...

கம்பித் தடுப்புகளின் ஊடாக நடத்தப்பட்டோம்...
பின்னால் வந்தவர்கள் தள்ளிக் கொண்டு போனார்கள்...

இதோ வந்தாயிற்று...
தெற்குத் திருமதிலை ஒட்டியவாறு நடை...

வடக்காகத் திரும்பியதும் ராஜகோபுர வாசல்!...

மேனியெல்லாம் சிலிர்த்தது....
ராஜகோபுர வாசலைத் தொட்டு வணங்கியவாறு உட்புகுந்தோம்...

துபஜஸ்தம்பம் அருகில் சற்று நெரிசல்.. ஆனாலும் பரவசம்!...

ஸ்ரீ வேங்கடேச சரணம்..
ஸ்ரீ வேங்கடேச சரணம்!..
- என்று மனம் அரற்றியது..

அலங்காரமாய்த் திகழ்ந்த கருடாழ்வாரைத் தரிசித்து விட்டு
அப்படியே மேற்காகத் திரும்பினால் -

என்னென்று சொல்வது?.. ஏதென்று சொல்வது?...


நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எழுந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே!..{1040}
-: திருமங்கையாழ்வார் :-

கோவிந்தோ.. கோவிந்த!...
கோவிந்தோ.. கோவிந்த!...

ஐம்புலன்களும் ஒடுங்க - கண்கள் பனித்தன...

எவ்வித கஷ்டமும் இன்றி
எம்பெருமானைத் தரிசனம் செய்தாயிற்று...

மடைப்பள்ளி அருகில் ஸ்ரீமதி வகுளாதேவி... ஸ்ரீவிஷ்வக்சேனர்..
அடுத்து தீர்த்தப் பிரசாதம் சடாரி... 

ஸ்ரீ விமான வேங்கடேசர்., நன்றி - கூகிள்..
வடக்கு திருச்சுற்றில் ஸ்ரீ விமான வேங்கடேசர் தரிசனம்...
மற்றும் ஸ்ரீ உடையவர், ஸ்ரீ யோக நரசிம்மர் சந்நிதிகள்...

காணிக்கை செலுத்தி விட்டு வணங்கினோம்..

இந்தப் பக்கம் புளியோதரை பிரசாதம் வழங்கினார்கள்...

பெருங்கூட்டமாகத் திரண்டிருந்த 
வட மாநிலத்தவர்க்கு புளியோதரை பிடித்ததோ இல்லையோ..

நமக்கு திவ்யமாக இருந்தது...

மீண்டும் பெருமானை மனதார வணங்கி
அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டோம்....


வந்தாய் என்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்
நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ
சிந்தா மணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனியான் உன்னை விடேனே..{1046}
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய..
ஃஃஃ

42 கருத்துகள்:

  1. நாம ஊர்ப்பொண்ணு
    செந்தமிழ்க் கண்ணு!

    ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அன்னையல்லவா ஆண்டாள்!..
      தங்களுக்கு நல்வரவு...

      நீக்கு
  2. அரைபிளேடு ஆந்திரா! ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நான் கூட இப்படி நினைக்கவில்லை....

      நீக்கு
  3. முடி இறக்கலுக்கு காசு கேட்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சாரை நான் சரியாகப் புரிந்திருந்தால், முடி இறக்குபவர் காசு கேட்டிருப்பார், இவர் கொடுத்திருப்பார், ஆனால் குறையாக மென்ஷன் செய்ய மாட்டார். அதனால்தான் அரை பிளேடு மட்டும் ஃப்ரீ என்பதோடு முடித்துக்கொண்டார்.

      நீக்கு
    2. அன்பின் நெ.த., மிகச் சரியாக
      கணித்துள்ளார்கள்..

      முடி இறக்குதலுக்கு காசு கேட்டார்கள்..

      ஆனால் நடந்தது - சுவாரஸ்யம்...
      அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

      நீக்கு
  4. //காஃபி... கும்மோணத்து டிகிரியை விட நல்லாத்தான் இருந்தது!//

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  5. திவ்ய தரிசன காம்ப்ளெசுக்குள் திடு திடு என ஓடி... இது இதுதான் எனக்கு அலர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை அகலமான கூண்டாக இருந்தாலும் -

      நம் மக்களுக்கு தள்ளு முள்ளு இல்லாவிட்டால் நிம்மதி இருக்காது..

      நீக்கு
    2. ஹையோ ஸ்ரீராம் எனக்கும் இந்தத் தள்ளு முள்ளுதான் ரொம்பவே அலர்ஜிதான் அதனாலேயே செல்லத் தயக்கம் ஏற்படும்...மலை ஏறுதல் மலையைச் சுற்றுதல் பிடிக்கும்...ஆஞ்சுவை ரசித்தல் எல்லாம்...

      கீதா

      நீக்கு
    3. // தள்ளு முள்ளு தான் ரொம்பவே அலர்ஜி..//

      தள்ளுமுள்ளு இல்லாவிட்டால்
      அவர்களுக்கு தூக்கம் வராது...

      நீக்கு
  6. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் பெருமாளின் தரிசனம் கிடைக்கும்போது கண்கள் பனிப்பதை தவிர்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்...
      சந்நிதியில் மனம் நெகிழ்ந்து விடுகின்றது...

      நீக்கு
  7. ஆ... புளியோதரை.

    நான் பெருமாள் கோவிலோ, ஆஞ்சி கோவிலோ செல்லும்போதெல்லாம் பெரும்பாலும் வெண்பொங்கலும், எப்போதாவது சர்க்கரைப் பொங்கலுமே வாய்க்கின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒப்பிலியப்பன் கோவிலிலுமா (சமீபத்தைய பயணத்தில்) கிடைக்கவில்லை?

      நீக்கு
    2. கிடைத்தது. உப்பில்லாமல்!

      நீக்கு
    3. பொங்கல், புளியோதரை, லட்டு - என, திருமலையில் பிரசாதம் பெற்றுள்ளோம்...

      ஒப்பிலியப்பன் கோயிலில்
      உப்பில்லா நிவேதனம் தானே...

      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்பின் ஜி
    உங்களையும்கூட பொறுமை இழந்து கோபபட வைத்ததே... இதுதான் திருப்பதி 1983-லேயே இதை நான் உணர்ந்தேன்.

    தரிசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      அப்போதைக்கு கோபப்பட்டாலும் - அப்புறமாக,
      என்ன இது தேவையில்லாமல்!.. - என்று மனம் வெட்கப்பட்டது

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. தரிசனம்அருமை. உணவு பால் அபூர்வம். அதிக லட்டுகளுக்கு எங்கு கூப்பன் தருவார்கள் என்பதில் குழப்பம்.

    லாக்கரில் பொருட்கள் வைத்துவிட்டு அங்கேயே குளித்தீர்கள் என நினைக்கிறேன். விமான வெங்கடேசுவரர்,வரதராஜன், யோக நரசிம்மர் சன்னிதியை சேவித்தீர்களா?

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'குளித்தீர்கள்' - முடி இறக்காதவர் தவிர மற்றவர்கள்.

      நீக்கு
    2. அன்பின் நெ.த.,

      திவ்ய தரிசனத்திற்காக கூடியிருந்தபோது பாலும் பொங்கலும் அடுத்தடுத்து வழங்கினார்கள்..

      நானே இருமுறை வாங்கினேன்...

      அதிக லட்டுகளுக்கான கூப்பன்கள் -
      வைகுந்தம் காம்ப்ளக்ஸுக்குள் நுழைவதற்கு முன்னாலுள்ள பெரிய கூடத்தில் வழங்கப்படுகின்றன...

      லாக்கரில் பொருட்களை வைத்து விட்டு
      முடி இறக்கிய பின் அங்கேயே குளித்தேன்...

      திருக்கோயிலுக்குள் நுழைந்ததும் கயிறுகளால் தடுத்து கருட மண்டபத்துக்குள் அனுப்பி விடுகின்றார்கள்...

      ஸ்நபன மண்டபத்தில் இருந்தபடி ஸ்வாமி தரிசனம் ஆனதும்
      மடைப்பள்ளி பிரவேசம் தான்...

      வரதராஜர் சந்நிதி பக்கம் செல்ல முடியவில்லை...
      மற்றபடி - விமான வேங்கடேசர்,உடையவர், யோக நரசிம்மர் தரிசனம் இனிதே நிகழ்ந்தது..

      நீக்கு
    3. அன்பின் நெ.த.,

      நானும் எங்களுடன் வந்த நண்பரும் தான் முடி காணிக்கை..
      தராளமாக தண்ணீர் வசதியுடன் குளியலறை...

      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. நெத இப்போது அங்கு பொங்கல், காபி சர்க்கரைப் பொங்கல் என்று எந்த தரிசமானாலும் அங்கே கொடுக்கிறார்கள். உள்ளே நுழையும் முன். அப்புறம் உள்ளே நுழைந்த பின் கூட்டத்துடன் சேரும் முன்னும் கூடக் கொடுக்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
  11. மிக மகிழ்ச்சி...எங்களுக்கும்...

    ஓம் நமோ நாராயணா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. எவ்வளவு கஷ்டபட்டாலும் கோவிந்தனை சேவித்து விட்டால் அவை எல்லாம் மறந்து போகும்.
    உங்கள் கூடவே அழைத்து சென்ற உணர்வு.
    ஓம் நமோ நாராயணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  13. பொருமையை சோதித்து விட்டுத்தான் காட்சி தருவார். அப்புறம் தான் நமக்கு திருப்தி. ஓம் நமோ நாராயணா

    பதிலளிநீக்கு
  14. நல்ல தரிசனம். எங்க பையர் நடந்து செல்பவர்கள் தனி வரிசையில் செல்லலாம் எனக் கூறுவார். ஆனால் இம்முறை பட்டுக் குஞ்சுலு இருந்ததாலோ என்னமோ சுதர்சன தரிசனச் சீட்டு (300ரூ) வாங்கிச் சென்றதாய்க் கூறினார். நாங்க போனப்போவும் திருமலையில் புளியோதரை தான் தந்தாங்கனு நினைக்கிறேன். கூண்டில் காத்திருக்கையில் காஃபி, வெண்பொங்கல், பால்! வரிசையில் நிற்கையில் காஃபி! நல்ல காஃபியாகவே கொடுத்தாங்க! பசுக்கள் கறந்து கொடுத்த பாலில் தான்போடுவாங்கனு அங்கே உள்ளவங்க பேசிக் கொண்டார்கள்! பொதுவாகப்பெருமாள் கோயில்களிலே பிரசாதம் இல்லாமல் இருக்காது. இங்கே ஶ்ரீரங்கத்தைத் தவிர்த்து! இங்கே வாங்கித் தான் சாப்பிடணும்! :( ஒரே ஒரு முறை அப்பம் (சூடாக) ஒரு முறை லட்டு(சின்னதாய்) கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கோயில் தரிசனம் முடித்த பின் தரப்படும் பிரசாதம் புளியோதரை சாப்பிட்டிருக்கேன், மிளகோரை, சர்க்கரைப் பொங்கல் என்று சாப்பிட்டிருக்கேன். அதே போல கீழே அலமேலு தாயார் கோயிலிலும்
      கீதா

      நீக்கு
  15. வேங்கடவனைத் தரிசிக்கையில் மட்டுமில்லை, எந்தக் கோயிலுக்குப் போனாலும் கண்கள் பனித்து மனம் அப்படியே நெகிழ்ந்து விடுகிறது! இது எப்போவும் நடக்கும் விஷயம்! ஆண்டாள் எழிலாகக் காட்சி தருகிறாள்.

    பதிலளிநீக்கு
  16. அன்னை ஆண்டாள் தரிசனம் அருமை. நீங்கள்
    திருவேங்கடம் நீங்கள் சென்றீர்களா
    நாங்கள் சென்றோமா என்று புரியாத மன் நிலையில் இருக்கிறேன்.
    வேங்கடவனைக் கண்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன.

    உங்களைப் போலப் பொறுமையாக நினைக்க முடியவில்லை.
    திருமலை ஒன்றில் தான் பார்த்த மாத்திரத்தில் கண் நிறைந்து விடும்.
    உங்கள் நிறை குணத்துக்கு நிறை தரிசனம் கொடுத்திருக்கிறான்.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  17. அஹா திருப்பதி திருமலை தரிசனம் வெகு அருமை சார் !!!

    பதிலளிநீக்கு
  18. துளசி: நல்ல தரிசனம் கிடைத்ததே அத்தனை கூட்டத்திலும். அருமை!

    கீதா: நல்ல விவரணம் அண்ணா. எனக்கு பாதையோரத்தில் இருக்கும் ஏழை சாமிகளை ரொம்பப் பிடிக்கும். யாரும் இருக்கமாட்டார்கள். ஓரிருவர் கண்டு கொள்வர் அவ்வளவே. கண்ணார நெடு நேரம் கண்டு களிக்கலாம். தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா...

    பதிலளிநீக்கு
  19. தள்ளு முள்ளு - நம் மக்கள் அதற்குப் பெயர் போனவர்களாயிற்றே....

    அரை பிளேடு ஆந்திரா! ஹாஹா.... பாதியில் விட்டுச் சென்றாரா? பாதியில் விட்டு வேறு ஆளுக்கு மொட்டை அடிக்கப் போய்விடுவார் என்று சொல்வதுண்டே.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    அருமையாக ஏழுமலையான் தரிசனம் தங்கள் பதிவின் மூலம் கிடைத்தது. தங்களுடைய அற்புதமான எழுத்து நடையுடன், படிகள் ஏறி நடை பயணமாக தங்களுடைனேயே பயணித்ததில் கண்கள் பனிக்க, மெய் சிலிர்க்க வேங்கடவனின் ஆனந்த தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றேன். பக்திப் பரவசமான பாடல்களுடன், நினைத்தாலும் உடனே கிடைக்காத பக்தி தரிசனம். மிக்க நன்றி.
    கோவிந்தா, கோவிந்தா எனும் நாம ஸ்மரணம் காதுகளில் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..