நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 05, 2017

மார்கழிப் பூக்கள் 21

தமிழமுதம்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு..(212)
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- கல்வி - 
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.. (131)  
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ சௌந்தர்யவல்லி உடனாகிய சௌந்தரராஜன், நாகை..
அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்துஅவனி கொண்டாய் படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து..(2186)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

மூன்றாவது திருத்தலம்
மணிபூரகம்

திருநாகைக்காரோணம்


இறைவன் - ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ நீலாயதாக்ஷி, கருந்தடங்கண்ணி
தீர்த்தம் - தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்
தலவிருட்சம் - மா

சுந்தர விடங்கர் - வீசி நடனம்..
பராவதரங்க நடனம் என்றும் சொல்வர்..
கடலில் அலைகள் பயில்வது போன்ற நடனம்

சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று..

ஸ்ரீ நீலாயதாட்சி
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி எனும் வரிசையில்
நாகை நீலாயதாட்சி
மிக்க புகழுக்குரியவள்..

கருந்தடங்கண்ணி - என்று 
அப்பர் ஸ்வாமிகள் போற்றுகின்றார்..

ஆதிசேஷன் வழிபட்ட திருத்தலம்..
மகா சிவராத்திரியின் நான்காம் காலத்துக்குரிய
திருத்தலம்..


மீனவப் பெருங்குலத்தவராயினும்
அறநெறி தவறாமல் சிவபக்தி கொண்டு
அதிபத்த நாயனார் வாழ்ந்து நிறைந்த திருத்தலம்..

அதிபத்தரை எம்பெருமான் ஆட்கொண்டநாள்
ஆவணி மாதத்தின் ஆயில்யம்..



அன்றைய நாளில்
அதிபத்த நாயனாரின் பொருட்டு
காயாரோகணர் நீலாயதாட்சியுடன்
கடற்கரைக்கு எழுந்தருள்கின்றார்...



அதிபத்தர் வலைவீசி
தங்க மீன் பிடிக்கும் வைபவமும்
அதன்பின் அதிபத்தர்க்கு முக்தி நலம் அருளும்
வைபவமும் நிகழ்கின்றது..

விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..
என்று, சுந்தரர் திருத்தொண்டத்தொகையில்
புகழ்ந்துரைக்கின்றார்..

ஈசனிடம் - சுந்தரர்
பொன் பெற்ற திருத்தலங்களுள்
நாகையும் ஒன்று..

எண்ணற்ற சிறப்புகளைத் 
தனனகத்தே உடையது கடல் நாகை..

108 திவ்ய தேசங்களுள் கடல் நாகையும்
ஒன்றாக விளங்குகின்றது..

இன்றைய நாளில் நாகை என்றும்
நாகப்பட்டினம் என்றும் அழைக்கப்படுகின்றது.. 

- திருப்பதிகம் அருளியோர் -
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் தலைசூடி
வினையில் அடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனியுங் கடல்நாகைக் காரோ ணத்தானே..(1/84) 
- ஞானசம்பந்தப் பெருமான் -
***
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்

பாரார் பரவும் பழனத் தானைப்
பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப்பானைத்
திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேராயிரம் உடைய பெம்மான் தன்னைப்
பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரோணத் தெஞ்ஞான்றுங் காணலாமே!..(6/22) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(07 - 08)


அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!..

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!.
***

தேவி தரிசனம்
ஸ்ரீ விசாலாட்சி - காசியம்பதி



நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!..(61) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

5 கருத்துகள்:

  1. கருத்திட ஏதும் தெரியவில்லை இருந்தாலும் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நான்காம் காலத்துக்குரிய திருத்தலம் பற்றிய சிறப்புகள் அறிந்தேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  3. மார்கழிப் பூக்கம் தொடர்ந்து மணம் வீசுகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா05 ஜனவரி, 2017 20:31

    அருமை ஜி வாழ்க நலம்
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  5. அருமை.... தகவல்கள், படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..