நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 03, 2017

மார்கழிப் பூக்கள் 19

தமிழமுதம்

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை..(036) 
***
ஔவையார் அருளிய
நல்வழி

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்..
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை

திருப்பாடல் - 19


குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனைப் போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ கமலவல்லியுடன் நம்பெருமாள்  -  உறையூர்
நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு..(2169)

ஓம் ஹரி ஓம்
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

எவராலும் உளி கொண்டு
செதுக்கப்படாத
வடிக்கப்படாத சிறப்புடையவை
விடங்கத் திருமேனிகள்..

இவ்வாறு குறிப்பிடப்படுபவை ஏழு திருமேனிகள்..

இவை தேவேந்திரனிடமிருந்து
சோழர்களின் ஆதி அரசன் ஆக விளங்கிய
முசுகுந்த சக்ரவர்த்தியால் பெறப்பட்டவை..

முசுகுந்த சக்ரவர்த்தி ஈசனிடம் குரங்கு முகத்தினை
வேண்டிப் பெற்றவர்..
நீதி நிறி தவறாமல் ஆட்சி செய்தவர்..

ஒருசமயம் - வலன் என்னும் அசுரனை வெல்வதற்கு
இவரிடம் உதவி கேட்டு நின்றான் - தேவேந்திரன்..

வலாசுரனுக்கு எதிராக நடத்திய போரில் தேவேந்திரனுக்கு
மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தார் - முசுகுந்த சக்ரவர்த்தி..

அதன் விளைவாக தேவேந்திரனிடமிருந்த
சோமாஸ்கந்த மூர்த்தியையும் அதனுடன்
மேலும் ஆறு விக்ரகங்களையும் பெற்றுக் கொண்டு
மண்ணுலகிற்கு வந்தார்..

மூல மூர்த்தியை திரு ஆரூரிலும்
மற்ற விக்ரகங்களை
 திருக்காறாயில், திருநாகை, திருநள்ளாறு,
திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு
ஆகிய திருத்தலங்களிலும் பிரதிஷ்டை செய்தார்..

விடங்கத் திருமேனிகள்  விளங்கும்
ஏழு தலங்களும் பெருஞ்சிறப்பினை உடையவை..

சிறப்புறும் மார்கழி நாட்களில் இன்று முதல்
விடங்கத் திருத்தலங்களைத் தரிசிப்போம்..
***

முதலாவது திருத்தலம்
திருஆரூர்

மூலாதாரம்



இறைவன் - ஸ்ரீ வன்மீகநாதர், தியாகேசர்
அம்பிகை - அல்லியங்கோதை

வீதி விடங்கர் - அஜபா நடனம்
மூச்சு விடுதல் போன்ற நடனம்

தீர்த்தம் - கமலாலயம்
தலவிருட்சம் - பாதிரி
சக்தி பீடங்களுள் திருஆரூரும் ஒன்று..

திருமூலத்தானன் என்று
எம்பெருமானைச் சிறப்பிக்கின்றார்
அப்பர் ஸ்வாமிகள்..

எம்பெருமான் புற்றுருவாக விளங்குகின்றார்...
எனவே அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை..
புனுகு சாத்துதல் மட்டுமே..

ஒவ்வொருநாளும் வீதி விடங்கரின் சந்நிதியில்
அந்தி வேளையில் வெகு சிறப்பாக ஆராதனை நிகழும்..

விடங்கப் பெருமானைப் பிரிந்த இந்திரன்
அமரர் புடைசூழ இங்கே தரிசனம் செய்வதாக திருக்குறிப்பு..

அதனால் நந்தியம்பெருமான் நின்ற வண்ணம்
சேவை சாதிக்கின்றார்..



மனுநீதிச் சோழன் நீதி செலுத்திய திருத்தலம்..

எம்பெருமான் இங்கு தான்
சுந்தரர் பொருட்டு பரவை நாச்சியார் மனைக்குத்
தூது நடந்தனன்...


ஐம்பூதத் தலங்களுள்
திருஆரூரும் நிலத்துக்குரிய தலம் 
என்று சிறப்பிக்கப்படுகின்றது..


ஆழித் தேர் எனும் பிரம்மாண்டம்..
கோயில் ஐவேலி குளமும் ஐவேலி
என்பதுடன் எண்ணரும் சிறப்பினை உடையது..

- பாடிப் பரவியோர் -
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர், மாணிக்க வாசகர், பட்டினத்தார்..

ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிய தேவாரம்


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
ம்ற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி!..(6/32)  
 ***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(03 - 04)


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!..

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில்துயிலேலோர் எம்பாவாய்!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ கமலாம்பிகா - திருஆரூர்

ஸ்ரீ கமலாம்பிகை - திருஆரூர்
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்ச்ல் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே..(054)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

2 கருத்துகள்:

  1. சப்தவிடங்கத்தலங்கள் அனைத்திற்கும் சென்றுள்ளேன். இன்று தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் சென்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சப்தவிடங்கத் திருமேனி தலங்கள் பற்றிய விவரங்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..