நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 31, 2016

பாடும் வானம்பாடி

அக்கா.. அக்கா..வ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. எப்படியிருக்கீங்க?.. பார்த்துப் பல நாளாச்சே!..

என்னம்மா.. மறந்துட்டியா?.. மகளிர் தினத்தன்னைக்கு பார்த்தோம்.. அதுக்கு அப்புறம் ஒருநாள் வடபத்ர காளி கோயில்ல பார்த்தோம்!.. பார்த்துப் பல நாளாச்சு..ங்கிறியே!..

ஆமாங்க்கா!.. இருந்தாலும் பல நாள் ஆன மாதிரி மனசு பரிதவிக்குதுக்கா!..

அடடே!.. மனசு... ன்னதும் நினைவுக்கு வருது!..

என்னக்கா?..

நேசம் சுமந்த வானம்பாடி!..

இவங்க தான் - தாமரை
நேசம் சுமந்த வானம்பாடியா.. ஏதோ கவிதை மாதிரி...ல்ல இருக்கு!..

கவிதை தான்.. ஆனா, கதை!..

என்னக்கா.. சொல்றீங்க!..

ஒரு கதைய கவிதை மாதிரி... இல்லை.. இல்லை.. கலைச்சித்திரம் மாதிரி தீட்டியிருக்கார் ஒருத்தர்!..

எந்த இதழ்..ல வந்திருக்கு அக்கா!..

இது எந்த இதழ்..லயும் வரலை.. அதுக்கெல்லாம் அப்பாற்பட்டது இது.. தன்னோட படைப்பு...ன்னு இணைய தள கதைப் போட்டிக்கு அனுப்பி இருக்கார்.. 

யார்!?..

அதை அப்புறமா சொல்றேன்.. அங்கே - வாசகர்கள் அளிக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில முதலிடத்துக்கு தேர்வாகும் ..அப்படின்னு விதிமுறை.. அந்த தளத்தில இந்த கதைக்கு போதுமான மதிப்பெண்கள் கிடைக்கலே..

அடடா!..

போட்டி முடிவு எல்லாம் வெளியானதும் தன்னோட கதையை தன்னோட தளத்தில வெளியிட்டு இருக்காரு!..

வலைத் தளத்தில வந்த கதையாமா?..

ஆமா!.. நானும் கேக்கணும்..னு நெனைச்சேன்.. நீ இப்பெல்லாம் வலைப்பூ பக்கம் போறதில்லையா?..

அதையேங்கேக்கிறீங்க அக்கா!.. மறுபடியும் வைரஸ் வந்து அடிச்சிடுச்சி... இழு..இழு..ன்னு இழுத்துக்கிட்டு இருந்த இணைப்பும் காசு சரியாப் போச்சு.... ன்னு கமுக்கமா ஆயிடிச்சு.. இனிமே.. டார்லிங் பணம் அனுப்புனதும் தான் எல்லாத்தையும் சரி பார்க்கணும்!..

அதுதானா விஷயம்!..  சரி.. இந்தக் கதையை யாரு எழுதுனதுன்னு தெரியுமா?..

தெரியலையே!..

அதான்.. நம்ம.. மனசு!..

அட.. மனசு..ன்னா குமார் அண்ணா!.. அவரோட கதைக்கா பரிசு கிடைக்கலே!.. என்னக்கா.. இது.. மனசு உருகுற மாதிரி எழுதுவாரே!.. அப்பா.. அப்பத்தா.. மாமா.. மாப்பிள்ளை..ன்னு உறவையெல்லாம் ஒண்ணா வெச்சி வீட்டுக்குள்ள களை கட்டுவாரே!.. அவரு கதை..ன்னா எனக்கு ரொம்பவும் இஷ்டம்..க்கா!...

அதே மாதிரி தான்.. இந்தக் கதையும் .. வா.. அவரோட வலைத்தளத்துல அந்தக் கதைய படிப்போம்!..

இல்லே.. வேணாங்க்கா.. நீங்களே.. அதை கதையாச் சொல்லுங்க.. அப்பத்தான் ரசனை!..

சரிதான்.. இந்தக் கதையெல்லாம் மனசும் மனசும் வெச்ச மாதிரி படிக்கணும்..  படிச்சு படிச்சு ரசிக்கணும்.. இருந்தாலும் சொல்றேன்..


“என்னங்க!.. உங்கப்பாக்கிட்ட  இது வேணுமான்னு கேளுங்க.. சும்மா பரண்ல தூக்கிப் போட்டு வச்சி என்னத்துக்கு இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது...” 

சுந்தரியோட கேள்விதான் கதைக்கு ஆரம்பம்.. 

“..என்னது?... ரேடியோதானே... அவரு ஆசையா வச்சிருக்காரு... 

கிடந்துட்டுப் போகுது போ!...” 

அலுப்பாகச் சொல்பவன் சுதாகர்..

அது ஒரு இனிய குடும்பம்.. பெரியவர் ராகவன்.. அவரோட மகன் சுதாகர். மருமகள் சுந்தரி.. அன்புக்கு அடையாளமாக பேரன்..

மாமனார் பழசு பட்டையெல்லாம் சேத்து வெச்சிருக்கிறார் - ன்னு, 
மருமகளுக்குக் குறை.. ஆனாலும் தங்கமான மருமகள் சுந்தரி..

இத்தனைக்கும் பழைய பேப்பரையெல்லாம் சேர்த்து வைக்கிறவன் - சுதாகர்..

ஆனா, அவங்களுக்குத் தெரியாது மாமனாரோட ரேடியோவுக்குள்ள ஒரு கதை இருக்கிறது!..

ஓஹோ!..

சின்ன வயசில அவங்க அப்பா வாங்கிக் கொடுத்த நேஷனல் ரேடியோ அது!.. அவருக்கு அதை தலைமாட்டுல வெச்சிக்கிட்டு ஒரு படப்பாட்டு.. விவித பாரதியின் வர்த்தக சேவை ..ன்னு பாடல்கள் கேட்பதில் பிரியம்.. அவங்க அப்பாவுக்கோ நாட்டு நடப்பும் வயலும் வாழ்வும் கேட்பதில் இஷ்டம்.. இதையெல்லாம் விட..


இதையெல்லாம் விட!?..

அதில ஒலிச்சித்திரம் கேட்க வரும் அத்தை மக.. கமலம்.. தான் ராகவனுக்கு இஷ்டம்...

ஐ!.. இப்பதான் கதை சூடு பிடிக்குது!..



ரேடியோ.. அதுக்கு அடுத்தபடியா கமலம் தான் ராகவனுக்கு உயிர்... கமலம் கருப்பா இருந்தாலும் ராகவனுக்கு விருப்பா இருந்தா.. ராகவனும் கமலமும் ஒற்றைத் தலகாணியில் அங்கிட்டும் இங்கிட்டுமாக படுத்துக் கிடந்தாலும் நடுவில பாடிக்கிட்டு இருக்குமாம் ரேடியோ.. அத்தனை நாகரிகமான நளினமான பிரியமாம் அவங்களோடது..

ம்ம்!..

ஆனா.. அந்த அன்பை வெளியே சொல்லாமலே கமலம் சுந்தரத்தை கட்டிக்கிது.. பிரிவைத் தாங்க முடியாம தாங்கிக்கிறார் ராகவன்.. அப்பாவுக்காக 
வசந்தாவை கை பிடிக்கிறார்...

என்னக்கா.. இப்படியாயிடிச்சு!..  இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. எதையும் காலத்தில சொல்றதேயில்லை!..


இவங்க தான் அக்கா - தமிழ்ச்செல்வி
அப்படியில்ல.. தாமரை!.. அந்த காலகட்டத்தில இந்த அளவுக்கு சுதந்திரம் இருந்ததே மிகப் பெரிய விஷயம்.. அதுவும் அத்தை பெண்ணுங்கறதால!...

உங்க அத்தான்.. என்னை சுத்தி சுத்தி வந்தாலும் - நான் அவர்கிட்ட மனந்திறந்து பேசினதே இல்லை!.. அங்கிட்டு இங்கிட்டு தோட்டத்தில தோப்புல உங்க அத்தானைப் பார்த்துட்டா.. ஒரு பயம்.. பதற்றம்... கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுடும்... பேச்சே வராது!... வெறுங்காத்து மட்டுந்தான்!.. கல்யாணம் ஆகி பத்து நாளாகியும் அவரு முகத்தைப் பார்க்க தைரியம் வரலை..

ஹா..ஹா..ஹா!..

நீ என்னம்மா.. இன்னைக்கு சிரிக்கிறே!.. அன்பு.. பிரியம்.. பாசம்.. நேசம்.. இதெல்லாம் புன்னகையா பூத்து கண்ணுக்குள்ள பொங்கி வர்றப்ப - உலகம் அறியாத பொண்ணு அதை நேருக்கு நேரா பாக்குறது எத்தனை பெரிய கஷ்டம் தெரியுமா?.. இந்தக் காலத்துல ஆணுக்கும் பொண்ணுக்கும் எல்லாமே சர்வ சாதாரணமா போச்சு!..

உண்மைதா..ங்க்கா!.. இந்தக் காலத்து ஆணுக்கும் பொண்ணுக்கும் எல்லாமே சர்வ சாதாரணமா போச்சு!.. அதனால எவ்வளவு பிரச்னைங்க!..

பிரியத்தைச் சொல்லாமலே.. இளஞ்ஜோடி ரெண்டும் பிரிந்து போயிடறாங்க.. அப்பா காலமானதுக்குப் பிறகு ராகவன் அந்த ரேடியோவை பொக்கிஷமா வெச்சிருக்கிறார்.. அந்த ரேடியோவைப் பார்க்கிறப்ப எல்லாம் அப்பாவோட முகம்.. கமலாவோட முகம்!.. எதையும் மறக்க விடாம காலம் அவரை வாட்டி  எடுக்குது...

பாவம்..க்கா!.. வயசான காலத்தில இப்படி வேதனையும் கூடவரும்.. இல்லே!..

ஆனா.. ராகவனும் ஒரு தப்பு பண்ணிடறார்..

என்னது?..

சுதாகர்..கிட்ட இல்லாட்டியும், மருமக.. கிட்டயாவது சொல்லி இருக்கலாம்.. அம்மா... இந்த ரேடியோ பெட்டிக்குள்ள இப்படி ஒரு கதை இருக்கு... நீ உன் மனசுக்குள்ள வெச்சிக்கோ.. யார்கிட்டயும் சொல்லிடாதே!.. அப்படியின்னு.. 

அதுக்கப்புறம் அந்த சேதி பக்குவமா மகனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கும்... ரேடியோ பெட்டிக்கும் ஒரு மரியாதை கிடைத்திருக்கும்!..

அதானே!.. ஆனா - பெரியவர் மனசுக்குள்ளே அதைச் சொல்லியிருந்தா தன்னை எப்படி நினைப்பாங்களோ.. ன்னு ஒரு கலவரமும் இருந்திருக்கலாம்.. அல்லவா?..

இருந்திருக்கலாம்.. ஆனா, அங்கே தானே கதாசிரியரின் கற்பனை கொடிகட்டிப் பறக்குது!... அதைச் சொல்லாம மறைக்கிறதால தானே கதை முடியிறப்போ   
கண்ணு கலங்குது!...

சொல்லுங்க..க்கா!.. சொல்லுங்க!..

கால ஓட்டத்தில் வீட்டுக்குள் இருந்த -

கறுப்பு வெள்ளை டீவி போனது.. கலர் டீவி வந்தது.. 



ஆனா, புதுசாக ரேடியோ பெட்டி எதுவும் வரவில்லை..

பெரியவரோட ரேடியோவும் அதோட மூச்சை நிறுத்திக் கொண்டது.

அதுக்கப்புறம் அதோட இருப்பிடம் சாக்கு மூட்டைக்குள் என்றானது...

காதோட கேட்ட பாட்டெல்லாம் கண்ணுக்கு முன்னால வந்ததும் 
மத்த ஜனங்களைப் போல அவங்களும் ரேடியோவை மறந்தே போனாங்க...

ஆனா, பெரியவர் மட்டும் ரேடியோ பெட்டியவே நினைப்பில் வெச்சிருந்தார்.. நேரங்கிடைக்கிறப்ப சாக்கு மூட்டையில இருக்கிறதை ஆசை தீர பார்த்துக் கொள்வார்.. ஆனாலும் ஆசை தீர்ந்து போற விஷயமா!.. 

சோகமும் ஒரு சுகம்..ன்னு - தனக்குள்ளேயே எல்லாத்தையும் தாங்கிக்கிட்ட பெரியவர் - போதுமடா.. சாமீ..போதும்... ன்னு ஒருநாள் போய்ச் சேர்ந்துடறார்..

.......... .......... .......... !?..

அடுத்தடுத்து எல்லாம் நடந்து முடிஞ்சுடுது...

வீடு வெறிச்.. ந்னு ஆகிப் போச்சு...

ஆனாலும் - காலம் தான் ஓடிக்கிட்டு இருக்கே...

மறுபடி ஒருநாள் .. பரணியை சுத்தம் பண்ணிய வேளையில் - 


எதுக்கு மாமா... அந்த ஓட்டை ரேடியோ.. பழைய சாமான்காரனுக்கிட்ட தூக்கிக் கொடுக்கலாம்ல்ல?... 

சாதாரணமாக - தான் கேட்டது சுந்தரியின் நினைவுக்கு வந்தது.. 

அது என்ன பண்ணுது... அது பாட்டுக்கு இருக்கட்டும்... என்னோட உசுரு அது.. 

அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. அதுக்குள்ள நான் வாழ நினைச்ச வாழ்க்கை இருக்கும்மா.. அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்!.. 

பெரியவர் - அன்று சொன்ன வார்த்தைகள் 
காதுகள்ல இருந்தாலும் கவனத்துல இல்லாததால - 

சொல்லப்படாத நேசம் சுமந்த ரேடியோ பெட்டி பரணியில இருந்து இறங்குது..

அடுத்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - 
விதியின் வலிமையால் வீதியில் பழைய சாமான்காரனின் குரல்..

அவனுடைய சைக்கிளின் பின்னால் இரும்புப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது.. அதற்கு வேறெதும் நேர்ந்து விடாதபடிக்கு - ஒரு பக்கமாக கட்டப்பட்டது..

அடுத்த சில விநாடிகளில் -  

நினைவுகளைச் சுமந்தபடி - நேசம் சுமந்த வானம்பாடியாக
எங்கோ சென்று கொண்டிருந்தது - ரேடியோ...

.......... .......... .......... !..

எப்படி..ம்மா இருக்கு?..

மனசெல்லாம் பாரமா இருக்கு அக்கா!.. 

சரி.. விடு.. கற்பனைக் கதை தானே!.

இல்லை.. இது வெறும் கற்பனை மாதிரி இல்லை!.. குமார் அண்ணாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை சொல்லணும்!..

நம்ம ஒவ்வொருத்தர் மனசிலயும் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கிற உண்மை!.. உண்மை ஒருநாளும் உறங்காது.. ஒருத்தரையும் உறங்கவும் விடாது!...

ஆமாம்.. தாமரை!.. நேத்து இந்தக் கதையை உங்க அத்தானுக்கு வாசித்து காட்டினேன்... உடனே என்ன செஞ்சார் தெரியுமா!..

என்னக்கா செய்தார்.. அத்தான்?..

அவங்க தம்பி வீட்டுக்குப் போயி - அங்கேயிருந்த அலாரம் கடிகாரத்தை தூக்கிக்கிட்டு வந்துட்டார்!..



ஏன்!?..

அது எங்க மாமனார் வெச்சிருந்ததாம்.. அதுக்குள்ள ஏதாவது கதை இருக்கும் .. இனிமே இது இங்கேயே அப்பா நினைவா இருக்கட்டும்..ன்னு சொல்லிட்டார்...

நிஜந்தான் அக்கா!.. அந்த ரேடியோவுக்குள்ளயும் கடிகாரத்துக்குள்ளயும் கதை இருக்கோ இல்லையோ..

இனிமே நம்ம பிள்ளைங்க பார்க்கப்போறது இல்லை.. அதுக்காகவாவது அதை எல்லாம் முடிஞ்ச வரைக்கும் பாதுகாத்து வைப்போமே!.. அக்கா நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்!..

என்னது?..

எங்க அம்மா எனக்கு ஒரு அம்மி கொடுத்தாங்க.. அது எங்க ஆச்சி அரைச்ச அம்மியாம்.. நான் அதை அப்படியே போட்டு வெச்சிருக்கேன்.. இனிமே அதை பத்திரமா பார்த்துக்கப் போறேன்!..

அதை அப்படியே பார்த்துகிறதை விட, தினசரி சட்னி மசாலா..ன்னு அரைச்சு பழகு.. அது தான் நல்லது..

எப்படி?..

அம்மியில குழவி பிடிச்சி அரைக்கிறதனாலே தோள்பட்டை, மார்பு, இடுப்பு இங்கெல்லாம் தேவையில்லாத கொழுப்பு எல்லாம் கரைஞ்சி...

கொழுப்பு எல்லாம் கரைஞ்சி?..

குண்டாட்டம் உடம்பு எல்லாம் செண்டாட்டம் ஆகிடும்!..
மார்பகப் புற்று நோயெல்லாம் ஊரை விட்டே ஓடிப் போய்டும்!..

அக்கா..ன்னா அக்கா தான்!.. சரி.. நான் கிளம்புகிறேன்!..

இரும்மா.. வரகரிசி கஞ்சி ஒருவாய் குடித்துப் பார்!..

வரகரிசி கஞ்சியா?..

ஆமாம்.. வரகரிசி கஞ்சி தான்!.. பட்டுக்கோட்டை நாடியம்பாள் பங்குனியில் வரகரிசி மாலை போட்டுக்கிறாள் என்றால் சும்மாவா!..

அப்படியா?.. எனக்குத் தெரியாதே!..

தாமரை.. பட்டுக்கோட்டையில் வரகரிசி திருவிழா நடக்கிறது.. போகலாமா!...

போகலாமே!... அப்போ.. அடுத்த சந்திப்பு பட்டுக்கோட்டையிலா!..

ஆமாம்.. பட்டுக்கோட்டை வரகரிசி திருவிழாவில் சந்திப்போம்!..

வாழ்க நலம்!.. 
* * *

20 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    நேசம் சுமந்த வானம்பாடி தாங்கள் பாடி மீண்டும் கேட்டேன் அருமையான உரையாடல் வழக்கம் போல் தங்களது பாணியை ரசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நேசம் சுமந்த வானம் பாடி...அழகாய் பாட கேட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா... என் கதைக்குள் இப்படி இன்னொரு அழகான கதை...
    ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க ஐயா...
    சில இடங்களில் வசனங்களை ரசித்துச் சிரித்தேன்....
    சூப்பர்... கலக்கல்... அருமை... அட்டகாசம்...

    நேசம் சுமந்த வானம்பாடி உங்கள் நேசத்தில் என்னை மகிழ வைத்து விட்டது...
    இது போதுமய்யா... இன்னும் நூறு கதைகள் படைக்க....

    நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்களுடைய கதையின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பாடும் வானம்பாடி அருமை நண்பரே
    மிகவும் ரசித்தோம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையாக குமாரின் கதைக்கு விமர்சனம், பாராட்டு, வாழ்த்துக்களை சொல்லிவிட்டீர்கள். குமார் மீண்டு உற்சாகத்தோடு இன்னும் பல கதைகள் எழுதுவார்.
    அக்கா அழகாய் உறவுகளின் மேன்மையை கூறுவது அருமை.
    கடிகாரம் வைத்துக்கூட குமாரும் நீங்களும் கதை எழுதலாம்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..


      எழுத்தாளனை சிறப்பிக்க வேண்டும்.. அதிலும் குமார் போன்றவர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும்..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. குமார் பதிவுக்குச் சென்று கதையை வாசித்தேன். நன்றாக எழுதியிருக்கிறார். மனதைத் தொட்டது. ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் இது போல் ஏதாவதொரு பொருளின் மேல் அலாதியான பாசம் இருக்கும். அடுத்த தலைமுறைக்கு அந்தப்பாசம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியும். அவர் வாழ்வு முடிந்தவுடன் அதற்கும் முடிவு வந்துவிடும். கதையை உரையாடல் மூலம் அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கூறுவது போல ஏதேனும் ஒரு பொருள் அனைவரது வாழ்விலும் ஒளிந்து கொண்டிருக்கின்றது..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆஹா வடப்பத்தரக் காளி கோவிலில் நான் பார்க்கலையே,,
    குமார் அவர்களின் கதையையும் வாசித்தேன்,,, அருமை அருமை,, ஆம் உண்மைதான் நான் என் தந்தையாரின் மையுற்றி எழுதும் பேனாவை நீண்டநாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். இப்போ இல்லை,, ஆனால் மனம் வருத்தமாக இருக்கும் சமயங்களில்,,,
    பதிவு பாடிய வானம்பாடி,,,
    அருமை அருமை,, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..


      தாங்கள் சொவது போல என் தந்தை பயன்படுத்திய பொருட்களும் இப்போது என்னிடத்தில் இல்லை..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வித்தியாசமான பதிவினைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. வாசகர்கள் தேர்வு என்று நினைக்க வில்லை. எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் எத்தனை பேர் கருத்துக் கூறுகிறார்கள் என்பதும் கணக்கெடுக்கப் படுகிறது பிரதிலிபியில் கதை வரும்போது வரும் வாசகர்களைவிட அதிக நட்புகளைப் படிக்க வைக்க வேண்டும் அங்குதான் சிக்கல் மேலும் அவரவர் படைப்புக்கு அவரவரே தேர்வாளராக இருக்க முடியாது. பரிவை சே குமார் சோர்ந்து விடக் கூடாது, நிறையப்பேர் படிக்க வேண்டும் என்பது தான் குறியாக இருக்க வேண்டும் பரிசெல்லாம் இரண்டாம் பட்சம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      குமார் அவர்கள் சோர்ந்து விடக்கூடாது.. அதற்காகவே இந்த பதிவு..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான பதிவு ஐயா! மிக அழகாக வித்தியாசமாகப் படைத்துள்ளீர்கள்.

    எங்களுக்கும் அவரது கதைக்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தோன்றியது. ஆனால், எங்களுக்கு ப்ர்திலிபியின் தேர்வு முறை சரி அதை விடுங்கள்..பலரையும் அழைத்துப் படிக்க வைக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. இது மத்திய அரசு வழங்கும் விருதகளுக்கு லாபியிங்க் பண்ணுவது போல்...நடுவர்கள் இருந்து வாசித்து அவர்கள் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினால் நன்றாக இருக்கும். அதை விடுவோம். நாம் எல்லோரும் குமாரின் கதையை ரசித்துப் பாராட்டியுள்ளொம் அதிகம் பேர் வாசித்திருப்பார்கள். அது போதும்...அவர் நிச்சயமாக நமது கருத்துகளில் மகிழ்ந்திருப்பார். உங்கள் பதிவே போதும் ஐயா அதற்கு சாட்சி!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குமார் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்..
      அதற்காகவே இந்த பதிவு..

      வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..