நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 18, 2015

வேலும் மயிலும் துணை

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக.. வருக..
வாசவன் மருகா வருக.. வருக..
நேசக்குறமகள் நினைவோன் வருக..


முருகன் வரவேண்டும்..

அதுவும், நம்முடன் -
நாம் பயணிக்கும் தொலைவுக்கெல்லாம் துணையாக வரவேண்டும்..

அப்படி  துணைக்கு வரும் முருகன் எப்படி வரவேண்டும்?..

பாதம் இரண்டிலும் சலங்கைகளுடன் வரவேண்டும்..

அந்தச் சலங்கைகளில் உள்ள பன்மணிகளும் கீதம் பாடவேண்டும்.. அதற்கேற்ப - அரையணியாய் இலங்கும் கிண்கிணிகளும் ஆடவேண்டும்..

அது மட்டுமா!..

மையல் கொண்டு நடனமிடும் மயிலின் மீது திருக்கரத்தில் வேலினை ஏந்தியவனாக வரவேண்டும்..

எத்தகைய பேறு!..

இத்தகைய தரிசனத்தைக் கண்டாலும் - மனம் திருப்தி அடைகின்றதா!?..

மேலும் மேலும் - அவனது திருக்கோலங்களைக் காண்பதற்கல்லவா துடிக்கின்றது!..

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்         
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்         
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண..

என - சோதிப் பிழம்பாகத் திருமுருகன் வரவேண்டும்..

கோலாகலமாக வந்தருளும் திருக்குமரனுடன் - 
நாமும் நம் மனமும் எந்நேரமும் இருந்திட வேண்டும்...

அந்த நிலையை எய்திய அருளாளர்களும் ஆன்றோர்களும் ஆயிரம்.. ஆயிரம்..

அத்தகையோர் - தாம் பெற்ற இன்பத்தை நமக்கும் அருளிச் செய்துள்ளனர்..

நலமருளும் ஞான வாக்கியங்களைத் தலைமேற்கொண்டு -
நாம் நடக்கையில் - நடக்கும் வழி எங்கும் நல்வேல் துணைக்கு வருகின்றது..

துணைக்கு வரும் வேல் தான்  - அஞ்ஞான இருளைத் தொலைத்தது..
அறுமுகனின் அடியவர் நெஞ்சில் ஒளியாக நிலைத்தது..

வென்றாக வேண்டியது அஞ்ஞானம் எனும் பகையை..

அதற்காகவே -

வெல்!.. - என்று சொல்லி - வேலினைக் கொடுத்தாள் வேல்நெடுங்கண்ணி..

சிக்கலில் வேல் வாங்கிய திருக்குமரன் - செந்தூரில் போர் முடித்தான்..

நேற்று கந்த சஷ்டியின் ஆறாவது நாள். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்..

கந்த சஷ்டியின் ஐந்தாம் நாளாகிய திங்கட் கிழமையன்று (16/11) திருச்செந்தூர் செல்லும் பெரும் பேறு வாய்த்தது..

திருஆரூர் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளில் இருந்தே மழை..

தீபாவளிக்குப் பிறகும் விடவில்லை..

சனிக்கிழமை மதியம் தஞ்சையிலிருந்து - திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் புறப்பட்டபோதில் இருந்து மழையும் எங்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தது..



ஆங்காங்கே தாமதித்த ரயில் - கொட்டும் மழையில் இரவு 8.30 மணியளவில் சாத்தூரை அடைந்தது.. அங்கிருந்து சிவகாசிக்குப் பயணித்து - அங்கே ஏழுகோயில் அண்ணாமலையார் சங்கத்தின் அடியார் மண்டபத்தில் ஓய்வு..

மறுநாள் காலையில், சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் அம்மன் தரிசனம்..

சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில்
அடுத்து, ஸ்ரீ மாலைஅம்மன் பெரியாண்டவர் சந்நிதியில் பேத்திக்கு காதணி விழா..

பொழுது விடிவதற்கு சற்று முன்பாக - 3.00 மணியளவில் மீண்டும் சாத்தூருக்குப் பயணம்.. 45 நிமிடங்கள் தாமதமாக வந்து கொண்டிருந்தது - திருச்செந்தூர் விரைவு வண்டி..

மழைச் சாரலில் கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி நிலையங்களைக் கடந்து -
காலை 6. 45 மணியளவில் திருநெல்வேலிக்குச் சென்றடைந்தோம்..

தாமிரபரணி
அடுத்த ஒரு மணிநேரத்தில் திருச்செந்தூர்..

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை வருவதற்கான அறிகுறி ஏதும் இல்லை..

ஆயிரம் ஆயிரமாய் பக்தர்கள் - கவலையெல்லாம் மறந்த மனத்தினராக, கந்தன் காலடியைத் துதித்தவாறு - சூர சங்காரத்திற்காக காத்திருந்தனர்..

ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலில் நீராடி எழுவதற்கு சூழல் சரியில்லை..
எனவே, அலைகளில் கால் நனைத்துக் கொண்டோம்..

திருக்கோபுரத்தை - திருக்கோயிலை நெஞ்சாரத் துதித்து -
செந்தில் நாதனாகிய ஜயந்தி நாதனின் சந்நிதி வாசலில் நின்று வணங்கினோம்..

செந்தூரில் எடுக்கப்பட்ட படங்களுள் சிலவற்றை இன்றைய பதிவில் காணலாம்..








காணும் திசை எங்கும் மக்கள் வெள்ளம்..

மறுநாள், சூர சம்ஹாரம் காண்பதற்கென -
பல ஊர்களில் இருந்தும் அலை அலையாய் வந்து கொண்டிருந்தனர்..

மதிய உணவுக்குப் பின் - உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலை நோக்கிப் பயணம் தொடர்ந்தது..



மாலை நான்கு மணிக்கு நடை திறந்ததும் -
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமியையும் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்பிகையையும்
ஸ்ரீ கன்னிமூலை கணபதி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீமாடஸ்வாமி,
ஸ்ரீ இசக்கி அம்மன், ஸ்ரீ முன்னோடியார்,
வன்னியடி ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ கல்யாண சாஸ்தா - மற்றுமுள்ள பரிவார மூத்திகளையும் வணங்கி வலம் வந்தோம்..

சிவாச்சார்யார் - அபிஷேக சந்தனத்துடன் நிவேத்ய பிரசாதங்கள் வழங்கினார்..

உவரி திருக்கோயிலில்  - முன் புறம் இருந்த மண்டபம் தகர்க்கப்பட்டு
ராஜ கோபுரத் திருப்பணி தொடங்கியுள்ளது..

குலதெய்வத்தின் சந்நிதியில் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது..

வரம் பல தருக.. வழித்துணை வருக!.. - என வேண்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 6.30 மணியளவில் திருச்செந்தூரை அடைந்தோம்..

அங்கிருந்து 6.50 மணிக்குப் புறப்பட்ட சென்னை விரைவு ரயில் அதிகாலை 4.15 அளவில் தஞ்சைக்கு வந்து சேர்ந்தது..

வழியில் மதுரையில் மட்டுமே கனமழை..

எவ்வித இடையூறுமின்றி நலமுடன் இல்லம் திரும்பினோம்..

சூர சம்ஹாரம்
சஷ்டி விழாவின் ஏழாம் நாளாகிய இன்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் குமர விடங்கப் பெருமானும் தெய்வயானையும் தனித்தனியே எழுந்தருள்கின்றனர்..

சம்பிரதாய நிகழ்வுகளாக - தாம்பூலம் மாற்றிக் கொண்டபின் மாலை மாற்றுதல் நடைபெறும்.. அதன்பின்,

முன்னிரவுப் பொழுதில் - மேலைக் கோபுர வாலிலில் உள்ள திருமண மன்றத்தில் -
திருமுருகனுக்கும் தெய்வயானை அம்பிகைக்கும் மணவிழா நிகழ்கின்றது..

எட்டாம் நாள் மணமக்கள் திருவீதி எழுந்தருளல்..
அதன்பின் மூன்று நாட்கள் ஊஞ்சல் உற்சவம்..
பன்னிரண்டாம் நாள் மஞ்சள் நீராட்டுடன் சஷ்டி விழா இனிதே நிறைவுறுகின்றது..
* * *

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே - செந்திநகர்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை..

முருகன் திருவருள்
முன் நின்று காக்க..
* * *

17 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் ஜி அழகான புகைப்படங்கள் நன்று தங்களது பயணம் இன்னும் வரும் என ஆவலுடன் இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அபுதாபி சுற்றுலா படங்களும் பதிவுக்குக் காத்திருக்கின்றன..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சஷ்டித் திருநாளைப் பற்றிய அழகான விவரணங்களுடன் புகைப்படங்களும் அழகாய் அமைந்திருக்கின்றது தங்களது பயணம் என்பது அறிகின்றோம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. தங்களின் இடையூறு இல்லா பயணம்
    அறிந்து மகிழ்ந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. தங்களுடன் பயணித்த உணர்வு. தாங்கள் கூறிய சில கோயில்களுக்கு மட்டுமே நான் சென்றுள்ளேன். மற்றவற்றை வாய்ப்பு கிடைக்கும்போது பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. நாங்களும் பயணித்த உணர்வு, பயணம் இனிதாக அமைந்தது மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்,
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பயணமும் படங்களும்....
    எப்பவும் போல் அழகிய எழுத்தோடு அழகான படங்களும்...
    ஊருக்குப் போனபோது திருச்செந்தூர் சென்று வந்தோம்...
    ஆனந்த தரிசனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. இனிமையான பயணம். படங்கள் மூலம் நாங்களும் கண்டு கொண்டோம்... நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமையான் தரிசனம். சிவகாசி பத்திரகாளி அம்மன் தரிசனம் பல ஆண்டுகளுக்கு பின் உங்கள் பதிவின் மூலம் கிடைத்தது. அடிக்கடி போவோம் பத்திரகாளி அம்மன் கோவில். இயற்கை சூழ்ந்து இருக்கும் அப்போது மயில் நடனமிடும். இப்போது எப்படி இருக்கிறது? தம்பி மகளுக்கு அந்த ஊர் தான் புகுந்த வீடு, மறுவீடு சமயம் சிவகாசி போவோம், அப்போது முடிந்தால் அம்மன் தரிசனம் கண்டிப்பாய் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சிவகாசி பத்ரகாளியம்மன் திருக்கோயில் - இயற்கை சூழ்ந்து இலங்குகின்றது.. அங்குள்ள் நந்தவனத்தில் மயில்கள் இருக்கின்றன.. ஒரு மயிலைப் படமும் பிடித்தேன்.. பதிவில் நீளம் கருதி விரிவாக எழுதவில்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..