நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 17, 2015

வாழ நினைத்தால்..

இன்று மே மாதத்தின் பதினேழாம் நாள்!..



அப்பு : ஒரு பாட்டு பாடேன்!..

சுப்பு : காதல் பாட்டா.. தத்துவப் பாட்டா?..

அப்பு : தத்துவப் பாட்டு!..

சுப்பு : எழுதுனது - கண்ணதாசனா.. வாலியா

அப்பு : கண்ணதாசன்!..

சுப்பு : இசை - மகாதேவனா.. விஸ்வநாதனா?..

அப்பு : விஸ்வநாதன்!..

சுப்பு : பாடினது - சீர்காழியா.. சௌந்தரராஜனா..?..

அப்புவுக்கு மண்டை சூடேறுகின்றது.. ஆனாலும், விடாமல்  - 

அப்பு : T.M.S..

சுப்பு : எம்ஜியாருக்குப் பாடியதா.. சிவாஜிக்குப் பாடியதா?..

அப்புவின் மண்டை காய்ந்தே விட்டது!..
(ஏண்டா.. ஒரு பாட்டு கேட்டது குத்தமாடா!?..)
ஆனாலும், மனம் தளராமல் -

அப்பு : நடிகர் திலகம்!.. 

சுப்பு : சந்தோஷ பாட்டா.. சரக்கடித்த பாட்டா?..

அப்பு : டேய்!... உன்னயப் பாடச் சொன்னேன் பாரு!.. என் புத்திய...

சுப்பு : அதால அடிக்கணுமா.. இதால அடிக்கணுமா!..

அப்புவின் உச்சி மண்டைக்கு இரத்தம் பாய்கின்றது!..


இன்று - உலக இரத்த அழுத்த தினம்!..

எரிச்சல்.. கோபம்!.. 

நம்மைத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு -
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இரட்டைப் பிறவிகள்!..

இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மை - 
வெகு விரைவாக காலனிடம் அழைத்துச் செல்லும் காரணிகள்!..

அம்மா - அப்பா, சகோதர சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர்கள்,   அடுத்த வீடு எதிர்த்த வீடு , போவோர் வருவோர் - என அனைவராலும் நமக்கு ஏற்படுவது!.. 

அதேபோல - அனைவருக்கும் நாம் ஏற்படுத்துவது!..

இதிலிருந்து மீண்டு விட்டால் - ஆரோக்கியம் ஆனந்தம்தான்!..

உயர் ரத்த அழுத்தம் - அப்பா அம்மாவுக்கு இருந்தால் - நமக்கும் பரம்பரையாக வருகின்றது.

வீட்டிலும் அலுவலகத்திலும் - கடுவன் பூனைகள் நிறைந்த சூழ்நிலை எனில் கண்டிப்பாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

நட்பு வட்டம் சரியாக அமையவில்லை. புகை, மது - இவையும் வழித்துணை எனில் வேறு வினையே வேண்டாம்.

உடல் பருமன், குருதியில் கொழுப்பு, சர்க்கரை குறைபாடு - இவையும் உயர் ரத்த அழுத்தத்தினை அழைத்து வருகின்றன.

இதனால் தான் - 
இன்றைய சூழலில் முப்பது வயதிற்கு மேல் கண்டிப்பாக மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தினை சோதித்துக் கொள்ளும்படி கூறுகின்றனர்.

சராசரியாக ஒருவரின் ரத்த அழுத்தம் என்பது 120/80 mmHg. 

ஆனால் - இது பொதுவானதே!.. ஆளுக்கு ஆள் நேரத்துக்கு நேரம் மாறுபடும்.


ஆகையினால் தான் - ஆரோக்கியமான ஒருவருக்கு 110/70 mmHg முதல் 140/90 mmHg என்ற அளவினை சரியான ரத்த அழுத்தம் என உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ளது. 

140/90 mmHg என்ற அளவினைத் தாண்டும் போது ஆபத்தான உயர் ரத்த அழுத்தம் என குறிக்கப்படுகின்றது.

ஒவ்வொருவருக்கும் அவரது சூழலைப் பொறுத்து -

பாரம்பரியம், வயது, அதிக எடை,  உணவுப் பழக்கம், உழைப்பு அல்லது உடற் பயிற்சி இல்லாதது, புகை மற்றும் மதுப் பழக்கம், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை குறைபாடு எல்லாவற்றுக்கும் மேலாக - 

மன உளைச்சல் - மன அழுத்தம் - இவையெல்லாம் காரணிகள்..

பாரம்பரியம் - வயது இவற்றை ஒருபுறம் வைத்து விட்டு - சீரான உணவுப் பழக்கத்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கொழுப்பு நிறைந்த துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட செயற்கையான உணவுகள் , இரசாயனம் மிகுந்த குளிர்பானங்கள் - இவை உடலின் எடை கூடுவதற்கான காரணங்கள்.

பசித்த பின் சாப்பிடுவதே சாலச் சிறந்தது. எளிமையான சரிவிகித உணவும் நல்ல தண்ணீரும் நம்மை நல்வாழ்விற்கு அழைத்துச் செல்வன.

அறுசுவை உணவு என முன்னோர்கள் வகுத்து வைத்ததை மறந்து விட்டோம்.

இன்றைய சூழலில் - மிதமிஞ்சிய புலால் உணவுகள் ஆரோக்கிய வாழ்வின் எதிரிகளாகி விட்டன.

உப்பில்லா பண்டம் குப்பையிலே!.. - என்று சிறப்பிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது.

மிகுந்த உப்புடன் விளங்கும் ஊறுகாய் வகைகள், கருவாடு - போன்றவற்றைத் தவிர்ப்பதும் குறைப்பதும் நலம்.



முக்கியமாக - ஜீனி (White Sugar) தவிர்க்கப்பட வேண்டியது.

பாரம்பர்ய சர்க்கரை, வெல்லம், பனங்கருப்பட்டி - என்பன சிறப்பானவை. 

தேங்காய் எண்ணெய், செம்பனை எண்ணெய் (Palm Oil) மற்றும் Refined Oil ஆகியன தவிர்க்கப்பட வேண்டியவை.

நல்லெண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது.

கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இரண்டாம் பட்சம்.

மேலும் - 

கொழுப்பு மிகுந்துள்ள இறைச்சி, முட்டை, தயிர், வெண்ணெய், நெய், பாலாடை, ஐஸ்கிரீம் போன்றவற்றையும்

எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட வறுவல் பொரியல் மற்றும் பூரி, அப்பளம், வடை, சமோசா, பஜ்ஜி,  போன்றவைகளையும் முற்றாக தவிர்க்கச் சொல்கின்றனர்.

நமது வாழ்க்கைச் சூழலில் முற்றாகத் தவிர்க்க இயலவில்லை எனில் - 
குறைத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து மிகுந்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.




கேழ்வரகு, கோதுமை, கம்பு, வரகு, சோளம் பச்சைப்பயறு போன்ற தானியங்கள். 

காரட், முள்ளங்கி, பீட்ருட், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவை. 
புதினா கொத்தமல்லி மற்றும் பசுமை நிறைந்த கீரைகள்.

மாம்பழம்,கொய்யா, தர்பூசணி, மாதுளை ஆகிய பழங்கள்

இவையெல்லாம் நார்ச்சத்து மிகுந்தவையாக குறிப்பிடப்படுகின்றன.

இயன்றவரை தினசரி உணவில் இடம்பெற வேண்டியவை.

ரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும் எனில் - உடலின் எடையைப் பராமரிப்பது அவசியம்.


தினசரி உடற்பயிற்சியும் நடைப் பயிற்சியும் உடல் நலம் அளிப்பவை.

புகையும் மதுவும் அவசியமற்றவை. என்றுமே ஆபத்தானவை.

இரவில் கண் விழிப்பது கூடாது. நல்ல தூக்கம் அவசியம். 
ஆரோக்கியத்திற்கு ஆறு மணி நேர தூக்கம் மிக மிக அவசியம்.

ஓய்வு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும்!..

மனதை அங்குமிங்கும் அலைய விடாமல் - எண்ணங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

அதனால் நாம் அடையும் பலன்கள் சொல்லி முடியாததது. 


தியானம்!..

மனிதனை - மேல்நிலைக்கு ஏற்றுவது.. 

பள்ளி செல்லும் குழந்தையிலிருந்து முதியோர்கள் வரை அனைவரையும் அழுத்துவது மன உளைச்சல்!..

அதை வெல்லுவது - எளிது!..

ரத்த அழுத்தத்தை நாம் கவனிக்காவிட்டால் - அது நம் வாழ்வை முடித்து வைத்து விடும்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!.. 

- என்றார் ஔவையார்.

எனில் கிடைத்தற்கரியது மானிடப்பிறவி என்பதை உணரமுடிகின்றது.


நம் வாழ்வு நம் கையில் உள்ளது.

வீட்டிலும் வெளியிலும் பரபரப்பைக் குறைத்துக் கொள்வது அவசியம்.

கோபத்தால் ஆகப் போவது ஒன்றுமே இல்லை..

சினம் சேர்ந்தாரைக் கொல்வது - என்கின்றார் வள்ளுவப்பெருமான்.

உணவு மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி உடல் நலனைக் காப்போம்.

வளமுடன் வாழ்வதிலும் நலமுடன் வாழ்வது சிறந்தது. 
வாழ்வாங்கு வையத்தில் வாழ்வோம்!..

வாழ்க வையகம்..
வாழ்க மானுடம்!..
* * *

23 கருத்துகள்:

  1. எண்ணங்களை ஒருங்கிணைத்தால் அனைத்தும் இனிமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பயனுள்ள, அனைவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய பதிவு. பதிவினைப் படிக்க ஆரம்பித்ததும் கில்லர்ஜி பதிவிற்கு வந்துவிட்டோமோ என்ற ஐயம் எழுந்தது. ஆரம்பப் பத்திகள் அவருடைய நடையை ஒத்ததுபோலிருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவருக்கு இதுபோல பதிவு வேண்டுமோ....

      நீக்கு
    2. அன்பின் முனைவர் ஐயா மற்றும் அன்பின் ஜி..
      வலைப்பதிவில் ஜாம்பவான்கள்!..
      இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நல்ல..பயனுள்ள விஷயங்கள். ஐயா....நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. Salt,Sugarஆகாதா ,S சில் ஆரம்பமாவதற்கு yes சொல்லக் கூடாதா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இந்த S எப்பவுமே இப்படித்தான்..
      அதுவா - இதுவா என குழப்பி விடும்!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எத்துனை அழகாக,,,,,,,,,,, காதல் ஆரம்பித்தவுடன் என்னடா என் நினைத்தேன் மே 17 காதலர் தினமா? என்று. அதைவிட வாழவைக்கும் தினம் என்று எத்துனை அருமையாக,,,,,,,,,,,,
    நன்றி என்ற ஒற்றை வார்த்தையே,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      காதல் வாழ வைக்கும் . ஆனால் காதலர்கள் தான் வாழ்வதில்லை!..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தொடக்கம் உண்மையிலேயே மண்டை காய்ந்து விட்டது நண்பர... அழகாக நகர்த்திக் கொண்டு போனவிதம் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இது கல்லூரியில் படித்தபோது நடத்திய கலாட்டா!..
      இதில் வேறொன்றும் கூட இருக்கின்றது.
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. உலகில் மனமும் உடலும் வேண்டுவதைத் தவிர்த்தால் நீடூழி வாழலாம் என்று தோன்றுகிறது பயந்து வாழ்வதில் என்ன இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தாங்கள் கூறுவதும் உண்மையே..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அன்புள்ள...

    மிகவும் பயனுள்ள பதிவு. வெகு எளிமையாகச் சொல்லிப் போகிறீர்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பணிச்சுமைகளுக்கிடையேயும் -
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. பயனுள்ள தகவல்களுடன் பதிவு அதுவும் நகைச்சுவையான உரையாடலின் தொடக்கத்துடன்....அருமை! நகைச்சுவையை ரசித்தோம்....அப்புறம் என்ன பிபி?!!! சொல்லுங்கள்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அதானே.. மனம் மகிழ்ச்சியானால் - அப்புறம் என்ன பிபி!?..
      தங்கள் வருகையும் கருத்துரையும்கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. உங்களுடைய பதிவின் மூலம் நல்ல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  11. இரத்த அழுத்தம், மன அழுத்தம் பற்றிய மிக பயனுள்ள பதிவு. சேர்க்கவேண்டிய மற்றும் விலக்க வேண்டிய உணவுப்பண்டங்கள் குறித்த பட்டியலும் சேர்த்துக் கொடுத்தது மிகவும் நன்று. இன்றைக்கு எல்லோருக்குமே மிக அவசியமான ஒரு பதிவு. தெரிந்ததும் தெரியாததுமான ஒரு பதிவுக்கு மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உடல் நலம் காத்து வளம் பெறுவோம்..
      தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..