நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 22, 2014

வனமும் வளமும்

இயற்கை எனும் இளைய கன்னி..
ஏங்குகின்றாள் - துணையை எண்ணி!..

இயற்கை இளைய கன்னியாக இருந்தது தான் - 
இத்தனை அவலங்களுக்கும் காரணமா?..

இயற்கை இளைய கன்னி - என்பதால் தான், 
அவள் மீது - இத்தனை வன்கொடுமைகளா?.. 


நீரின்றி அமையாது உலகு!..  - என்றார் ,வள்ளுவப்பெருந்தகை. 

வான் மழை போற்றுதும்!.. வான் மழை போற்றுதும்!.. 

- என்று வணங்கினார் இளங்கோவடிகள். 

நீருக்குத்தான் - பூவுலகில் எத்தனை எத்தனை பெருமை!..

கடல், மழை, அருவி, நதி, ஏரி, குளம், கிணறு!..

இயற்கையோடு இணைந்து இனியதொரு வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர். 

ஆற்றங்கரைகளில் தான் ஆதி  நாகரிகம் தோன்றியதாக அறியப்படுகின்றது.   

நம் முன்னோர்கள் மிகவும் அருமையாகத் திட்டமிட்டு - தமது வாழிடத்தை நிர்மாணம் செய்தார்கள்.

ஆனால் நாம் அவற்றைப் பாழிடம் ஆக்கி விட்டோம்!..

தாழ்வான பகுதிகளில் ஏரி கண்மாய் குளங்கள் அமைக்கப்பட்டதால் - நிலத்தடி நீர் வளம் பெருகிற்று. நீர் ஆதாரங்களைச் சூழ்ந்ததாக குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.



நீரையும் அதனோடு இணைந்த தாவர சங்கமங்களையும் காக்கும் பொருட்டே, 

குளக்கரைகளில் அரசும் வேம்பும் வளர்க்கப்பட்டு - அங்கே விநாயகப் பெருமான் அமர்ந்தார். - காவல் நாயகனாக!..

கடலும் கிணறும்,  புனிதமாகின - இராமேஸ்வரத்திலும் திருச்செந்தூரிலும்.

அருவியும் பலாவும்,   புனிதமாகின - திருக்குற்றாலத்தில்.

பொற்றாமரைத் தடாகமும் கடம்ப மரமும் புனிதமாகின - மாமதுரையில்.

காவிரியும் வில்வமும் புனிதமாகின - திருஐயாறு முதலான திருத் தலங்களில்.
  

காவிரியை மேம்படுத்தி - கல்லணை அமைத்ததாலேயே இன்னமும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் - கரிகால் பெருவளத்தான்!..

ஆனால் இன்றைய நிலை!?..  

ஏரிகளும்  குளங்களும் வயல் வெளிகளுமாக இருந்த இடங்கள்  வசந்தம் நகர் - என வறட்டு மனைகளாக ஆக்கப்படுகின்றன. 

ஏரி குளங்களை அழித்து விட்டு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் - அமைப்பதை நாமே விரும்புகின்றோம். சோறு போட்ட வயற் காடுகளை அழித்து விட்டு புறவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலைகள்  அமைக்கப் போராடுகின்றோம்.  

கடைசியில் மழைநீர் சேமிக்கச் சொல்லி கூச்சல் போடுகிறோம். 

தொழிற்சாலைகளின் கரிப் புகைகளினால் -    காற்று மண்டலம் கழிவு மண்டலம் ஆனது.  வானமும் வீழ்ந்தது - ஓசோன் படலமும் கிழிந்தது.

நாம் செய்கிற காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி விட்டன.  ஒரு சமயம் இது தெரியவில்லை. 

விவரங்கள் புரிந்தபின் - நமது செயல்கள் நமக்கே துன்பங்களை கொடுக்கும் என்று தெரிந்தும் சுற்றுச் சூழலுக்குக்  கேடு செய்வதில் இருந்து நாம் மீள வில்லை. 

தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்

வனங்களை  அழித்து விட்டு  - யானைக் கூட்டத்தை விரட்டுங்கள் என்று சாலை மறியல். 

நீர்ப் பிடிப்பு பகுதிகளை அழித்து விட்டு - வெறுங்குடங்களுடன்  - வீதிகளில் போராட்டம்!..


இயற்கைச் சூழல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பு!.. இதன் சிதைவு வெவ்வேறு விதங்களில் உயிரினங்களின்   சீரழிவாக ஆகின்றது.

அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதனைக் காப்பதற்கா?.. அழிப்பதற்கா?.. 

எங்கும் சுயநலம் மிஞ்சிக் கிடப்பதால்-

பல உயிர்கள் இன்புற்று வாழ வேண்டிய பூமி பலவிதமாக இன்றைய சூழலில் மாசுபடுத்தப்படுகின்றது. 

ஆற்றை,  ஆற்று நீரை மட்டுமல்லாமல்,  கடலையும் கூட  -  விட்டு வைக்க வில்லை.

அணுக் கழிவுகளையும் வேதிக் கழிவுகளையும் கொட்டி அலைகடலைச் சீரழித்தது நவீன அறிவியல்!..  


சல.. சலக்கும் நீரலைகளுடன் ஆறுகளும் குளங்களும்..

காற்றோடு சேர்ந்தாடும் கதிர் விளைந்த வயல்களும்....  நீண்டு நெடிதுயர்ந்து பரந்து விரிந்த மரங்களும்.... அவற்றில் பின்னிப் பிணைந்த கொடிகளும்..  புன்னகைக் கோலமாய் பூத்துக் குலுங்கும் செடிகளும்.. - என,   

பச்சைப் பசேலென்று பட்டாடை போர்த்தியவளாக விளங்கியவள் இயற்கை அன்னை..

இத்தனையும் அழிக்கப்பட்டு  - விளைநிலங்கள் யாவும் வீட்டு மனைகள் ஆகின்றன. புதிதாக நகர்கள் என வீட்டு மனைகள் உருவாகும் போது வயல் வெளிகளில் காலகாலமாக இருந்த நீர்வழிகள் அடைக்கப்படுகின்றன.  அதற்கு அப்பால் இருக்கும் வயல்களின் நீர் ஆதாரம் அழிக்கப்படுகின்றன. 

கழனிகள் எல்லாம் - கண் எதிரே -  கான்கிரீட் கட்டடங்களால் நிரப்பப் படுகின்றன. காடுகள் அழிந்து வீடுகளாய் மாறுகின்றன. பறவைகள் அடைவதற்கும் அமர்வதற்கும் என தழைத்திருந்த மரங்கள் வேரோடு வீழ்த்தப் படுகின்றன. 


ஒரு காலத்தில் -   வாழையும் கமுகும் தென்னையும் பனையும் - நெடிதுயர்ந்து காணக் கிடைக்காத காட்சிகளாய் விரிந்திருந்தன.

இன்று உண்மையில் அவை காணக் கிடைக்காதவைகளாகி விட்டன. 

எங்கெங்கும் - கிளை அற்ற நெடுமரங்களாக  செல்லுலார் கோபுரங்கள்  

இயற்கையின் மீது  அனைத்து உயிர்களுக்கும் உரிமை உள்ளது.  


இயற்கையை அழித்துவிட்டோமானால் எல்லாம் அற்றுப் போய் விடும் என்பதை உணர வில்லை. 

பிளாஸ்டிக் , வேதியியல் கழிவு இவற்றால்  நிலங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக உலகின் வெப்பம் அதிகரித்து பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன.பனிப் பிரதேசங்கள் காணாமல் போகின்றன.  பனிப் பிரதேசங்கள் உருகி - பல பகுதிகள் கடலுக்குள் அமிழத் தொடங்கி விட்டன. இயற்கை நிலை சிதைந்து வருகின்றது!.. 

- என அறிவியலாளர்   எச்சரிக்கின்றனர்.  

ஆனால் - அது செவியிலும் விழவில்லை. சிந்தையிலும் ஏறவில்லை!..

எதையும் எதிர்க்க இயலாதபடி -  நல்லோர் மனம் மட்டும் நிற்கின்றது  சாட்சியாய்!..  



நம்மை வளர்த்த பூமி - நம் கண் முன்னே வாடுகின்றது.. காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பஞ்ச பூத தலங்கள் - என்று தேடித் தேடி வலம் வந்து வணங்குகின்றோம். 

ஆனால், நம்மை வாழவைக்கும் பஞ்ச பூதங்களுக்கும் நாம் எதுவும் செய்தோமில்லை. 

இனியும் இயற்கைக்கு ஆதரவாக நாம் செய்யப் போவது எதுவும் இல்லை - எனில், 

இயற்கை எனும் இளைய கன்னி..
ஏங்குகின்றாள் - துணையை எண்ணி!..

இனியதொரு துணையை எண்ணி 
இன்னமும் ஏங்குகின்றாள்!..
மீதமுள்ள உயிர் மூச்சை விட்டு
விடாமல் தாங்குகின்றாள்!..

அழகு ஆயிரம் அவளிடம் - அத்துடன்
கூரிய நகங்களும் உண்டு!..
கொடுங்குணம் ஒருநாள் கொண்டு
பகை முடிப்பாள்  - மனிதரை உண்டு!..

மார்ச் -22 - உலக தண்ணீர் தினம்.
நீரின்றி அமையாது உலகு!..

வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்!..

16 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  2. ஒவ்வொரு வரியும் உண்மை ஐயா,
    இயற்கை வாழ்ந்தால் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் என்பதை மறந்துவிட்டோம்.
    உணரும்பொழுது, நேரம் கடந்திருக்கும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் சொல்வது உண்மையே..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  3. பெயரில்லா22 மார்ச், 2014 07:23

    வணக்கம் அய்யா .....

    நல்லக் கருத்து ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கலை.
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. பெயரில்லா22 மார்ச், 2014 07:25

    யாருங்க அய்யா கேக்குறா இப்போலாம் ..எங்க இடம் விக்குறாங்க ன்னு பார்க்குறாங்க ...

    நீங்க போட்ட படம் சூப்பர் ..அதுவும் பிள்ளையார் செம கலக்கல் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கலை..
      வயல் எல்லாம் வீடு ஆகி விட்டால்.. வீடெல்லாம் - காடாகி விடும்!..
      எங்கெங்கு சுத்தி இடம் வாங்கினாலும் நிரந்தரம் ஒரே இடம் .. ந்னு ஆகிவிடும்.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  5. காவிரியை மேம்படுத்தி - கல்லணை அமைத்ததாலேயே இன்னமும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் - கரிகால் பெருவளத்தான்!..

    பச்சைப்பட்டாடை போர்த்திய பசுமையான வளமான வயல்வெளியைப்போல
    செறிவான கருத்துகள் நிறைந்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..
      தாங்களும் இன்று தங்களுடைய தளத்தில் சிறப்பாக பதிவு செய்திருக்கின்றீர்கள்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. வாழிடத்தை பாழிடம் ஆக்கிவிட்டோம். அருமையாகச் சொன்னீர்கள்.....

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நமக்கு பூமியைத் தவிர போக்கிடம் என்று வேறிடம் ஏதும் இல்லையே..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  7. செவியிலும் விழவில்லை சிந்தையிலும் விழவில்லை என்ன செய்வது உண்ணும் உணவில் இருந்து சுவாசிக்கும் காற்று குடிக்கும் நீர் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கிறது வெப்பமும் கூடி வாழ்வையும் வளத்தையும் அழிக்கப் போகிறது எனும் ஆதங்கம் நிறைந்த விழிப்புணர்வு கொண்ட பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  8. அருமையான பதிவு.
    மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..