நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புள்ளிருக்கு வேளூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புள்ளிருக்கு வேளூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

பேராயிரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை



இன்று
புள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)
 திருப்பதிகப் பாடல்
**

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-


ஆயிரம் திருப் பெயர்களைப் புகழ்ந்து தேவர்கள் துதிக்கின்ற பெருமானாகவும்

தன்னை விட்டு நீங்காத அடியவர்களுக்கு  வீடுபேறு எனும் செல்வத்தை வழங்குபவனாகவும்

மந்திரங்களும் அவற்றின்  முறைகளும் மருந்துகளும்  தானேயாகி - தீராத நோய்களைத் தீர்த்தருள வல்ல வைத்திய நாதனாகவும் 

திரிபுரங்கள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகுமாறு வலிமையான வில்லைக் கையில் கொண்டு போரிட முனைபவனாகவும் விளங்குகின்ற -

புள்ளிருக்கு வேளூர் பெருமானைப் போற்றி வணங்காமல்  நாட்களைப் போக்கி விட்டேனே!..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், செப்டம்பர் 09, 2025

புள்ளிருக்கு வேளூர்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தரிசனம்.. 

வெளித் திருச்சுற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..












பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், பிப்ரவரி 08, 2024

புள்ளிருக்கு

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
தை 18
வியாழக்கிழமை


திரு புள்ளிருக்கு வேளூர்


இறைவன்
ஸ்ரீ வைத்ய நாதர்
அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 13


இத்திருப்பதிகத்தில்
2, 4, 6, 8, 9, 10 திருப்பாடல்களில் ஜடாயுவும் 
3, 5, 7 ஆகியவற்றில் சம்பாதியும்  
சொல்லப்பட்டுள்ளதாக 
ஆன்றோர்தம் திருக்குறிப்பு..

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார்
உறையுமிடம்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.. 1

தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய்சொல்லா துயிர் போனான் புள்ளிருக்கு வேளூரே..2

வாசநலஞ் செய்து இமையோர் நாடோறு மலர்தூவ
ஈசன் எம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.. 3


மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 4

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.. 5


திறங்கொண்ட அடியார்மேற் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 6

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற 
வைத்து கந்தான் புள்ளிருக்கு வேளூரே.. 7

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 8

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 9


கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாமினிதாய்  உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 10


செடியாய உடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.. 11
**

ஞானசம்பந்தப் பெருமான் தமது 
திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும்

எட்டாவது திருப்பாடலில்
இராவணன் திருக்கயிலை மாமலையின் கீழ் 
சிக்கிக் கொண்ட நிகழ்வையும்

ஒன்பதாவது திருப்பாடலில்
ஒளிப் பிழம்பாக நின்ற ஈசன் எம்பெருமானின் 
அடிமுடி அறிய இயலாத தன்மையையும்

பத்தாவது திருப்பாடலில் 
சைவத்தைப் புறங்கூறும்
புத்த சமண சமயங்களைப் 
பற்றியும் அருளிச் செய்வார்..

இத்திருப்பதிகத்தில் முழுமையாக 
சம்பாதியும் ஜடாயுவும் புகழப்பட்டுள்ளனர்..

மாறுபட்ட திருப்பதிகம்  
என்பது குறிப்பிடத்தக்கது..
**

-: நன்றி :-
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

அன்பும் வீரமும்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 23
செவ்வாய்க்கிழமை

புள்ளிருக்கு வேளூர்
சம்பாதி ஜடாயு


நடுப்பகலுக்கு முந்தைய பொழுது.. சூரியன் தகித்துக் கொண்டிருந்தான்..

பசுமையாக விரிந்திருந்த கொன்றை மரத்தின் உச்சியில் அமர்ந்து சுற்றிலும் கவனித்துக் கொண்டிருந்தார் ஜடாயு..

கருடனின் தம்பியான அருணனின் மகன் தான் ஜடாயு.. இவரது சகோதரன் சம்பாதி.. ஸ்ரீராம பிரானின் தந்தையான தசரத மன்னருக்கு நெருங்கிய நண்பர்..

இங்கே வெண்மணலைத் திரட்டி சிவலிங்கமாக ஆக்கினர் சம்பாதியும் ஜடாயுவும்..

இங்கிருந்து ஒரு யோஜனை தூரத்தில் நந்தவனம் அமைத்து அங்கிருந்து ஒவ்வொரு நாளும் சிவபூஜைக்கென பூக்களைக் கொணர்கின்றார் சம்பாதி..

உயர்ந்த மலர்களைக் கொண்டு இருவரும் சிவவழிபாடு செய்து வந்த போது ஒருநாள் - விளையாட்டுத் தனமாக சூரியனை நெருங்கிப் பறக்க -  ஆதவனின் அளவு கடந்த வெப்பத்தினால் ஜடாயுவின் சிறகுகள் கருகின..

தம்பியைக் காப்பதற்காக சம்பாதி ஜடாயுவிற்கு மேலாக சிறகு விரித்துப் பறக்க சம்பாதியின் இறகுகள் கருகின..

சூரியன் இதைக் கண்டு இரக்கம் கொள்ள உயிர் பிழைத்த சம்பாதி மகேந்திர மலையில் விழுந்தார்.. 

அதற்குப் பின் அண்ணனை ஜடாயு பார்க்கவேயில்லை..

அண்ணனின் நலம் வேண்டி ஈசனை வணங்குவதே வேலையாயிற்று ஜடாயுவுக்கு..

சரி.. சம்பாதி என்ன ஆனார்?..

சூரியனை நெருங்கியபோது
கருகிய இறகுகள் ராம நாமத்தைக் கேட்கும் போது திரும்பவும் வளரும் என்ற வரம் கிடைத்தது..

மகேந்திர மலையின் குகைக்குள் இருந்தார் அவர்..

அதன் பின் 
சீதையைத் தேடிக் கொண்டு அனுமன் ஜாம்பவானுடன் வானர சேனை தென் திசைக்கு வந்தபோது அவர்களது ராம நாம பாராயணத்தால் சம்பாதியின் இறகுகள் மீண்டும் வளர்ந்தன.. 

குகையில் இருந்து வெளியே வந்த சம்பாதி - மேல் விவரங்களை அறிந்து இலங்கையைக் காட்டி விட்டு பரம்பொருளுடன் கலந்தார்..

இந்நிலையில்
அங்கே அயோத்தியில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தவைகளைக் குறித்து ஜடாயுவின் மனதில் உளைச்சல்..

ஏன் இப்படி ஆயிற்று?..
- தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் ஜடாயு..

அப்போது -
வட திசையில் மேகங்களின் ஊடாக புள்ளியாக ஏதோ ஒன்று.. 

மனம் ஏனோ பரபரப்படைந்தது.. விழிகள் கூர்மையாகின... 

தொலைவில் தெரிந்த அது ஏதோ ஒரு புள்ளியல்ல எனபது புரிந்தது..

ஆகாயத்தேர்.. 

அதில் வருகின்றவன் தென்னிலங்கைக்கு அதிபதியான தசமுக இராவணன் என்பதும் புரிந்தது..

இராவணன் தனது சகோதரனாகிய குபேரனை வஞ்சித்து அவனிடமிருந்து  ஆகாயத்தேரைக் 
கைப்பற்றிக் கொண்டவன்..

இந்த அரக்கன் ஆகாயத் தேரில் பயணிக்கும் போதுதான் - கயிலாய மாமலையை இடையூறாகக் கருதி அதைப் பெயர்த்து எடுக்க முயன்றவன்.. 

அப்போது 
அவனைத் தடுத்து அறிவுரை கூறிய நந்தியம்பெருமானை குரங்கு முகத்தவன் என்று இழித்ததால் - "குரங்கு ஒன்றினால் நீயும் உன் நாடும் அழியக் கடவது..- என நந்தியம்பெருமானிடம் சாபம் பெற்றவன்.. 

அதையும் மீறி மாமலையைப் பெயர்க்க முயன்ற போது ஈசன் தனது விரலை அழுத்தியதால் மலைக்குக் கீழ் நசுங்கிக் கூழ் ஆனவன்.. 

அப்போது வாகீச முனிவரின் யோசனையினால் சாம கானம் பாடி  உயிர் தப்பித்தவன்.. 

ஆனாலும், 
இந்த அரக்கன் சாம கானம் பாடிக் கதறியதால் அவனுக்கு முக்கோடி  ஆண்டுகள் வாழும் நாளையும் , எவராலும் வெல்ல முடியாத சந்திர ஹாசம் எனும் வீர வாளையும் ஈசன் தந்து மகிழ்ந்தான்.. 

அப்படியான அரக்கன் இதோ கண் எதிரில்!..

ஆகாய ரதத்தில் அவனோடு யார்?..

திடுக்கிட்டார் ஜடாயு..

அவள் ஜனகனின் புத்ரியும் தசரதரின் மருமகளும் ஸ்ரீராம சந்திரனின் தேவியுமான ஜானகி அல்லவா?..

' இதென்ன கொடுமை?..
அடே ராவணா.. மூளை கெட்டு விட்டதா உனக்கு... விட்டில் பூச்சியாக விளக்கில் விழுந்தவனே!.. கோடி மாதவங்கள் செய்தும் மதி குன்றியவனே.. குணம் கெட்டவனாக கொடூரத்தைச் செய்து விட்டவனே.. '

கோபம் கொந்தளித்தது அவருக்குள்.. 

" அடே.. அரக்கனே.. நில்லடா.. என் கண் மணியையா கடத்திச் செல்கின்றாய்?.. "

ஜடாயுவைக் கண்டதும் மைதிலியின் முகத்தில் மகிழ்ச்சி..

" அட.. அற்பக் கழுகே.. அடங்கிக் கிட!.. "

ராவணன் கொக்கரித்தான்..

மின்னலென தேர்ச்சாரதியைத் தாக்கிய ஜடாயு இராவணனின் மீது பாய்ந்து மணிமுடியைத் தள்ளி விட்டதோடு மார்பிலும் முகத்திலும் கூரிய நகங்களால் கீறிக் கிழித்தார்..

தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்று தருக்கியிருந்த இராவணன் பறவை ஒன்றின் தாக்குதலால் நிலை குலைந்தான்..

மறங்கொண்டங்கு ராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயு.. 
- என்றும்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்து..
- என்றும் 
புகழ்கின்றார் திருஞானசம்பந்தர்..

பர்ண்சாலையில் தனித்திருந்த ஜானகியிடம் மாயம் காட்டி வஞ்சித்ததால்
 மெய்சொல்லா இராவணன் - என்கின்றார் சம்பந்தப் பெருமான்..

எண்ணின்றி முக்கோடி வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்.. 

- என்பதுவும்

விடைத்து வரும் இலங்கைக் கோன் 
மலங்கச் சென்று ராமற்கா
புடைத்தவனைப் பொருதழித்தான்.. 

-- என்பதுவும்

திருஞானசம்பந்தரின் புகழ் மொழிகள்..

வெறி பிடித்து வந்த ராவணன் -  தனக்கு இப்படியும் ஒரு எதிரியா!.. என்று - திகைக்கும்படியாக, ஸ்ரீராமபிரானுக்காக ராவணனுடன் போரிட்டுப் புடைத்து அவனது செருக்கினை அழித்தார் ஜடாயு.. என்பது தேவாரம் சூட்டுகின்ற புகழாரம்..

இதற்கு மேல் பொறுமை இழந்த ராவணன் ஈசன் அளித்த வாளை ஏந்தினான்.. 


அதனை ஒருமுறை தான் பிரயோகம் செய்யமுடியும் என்பது தெரிந்திருந்தும் ஜடாயுவை சந்திரஹாச வாளால் தாக்கினான்.. ஜடாயுவின் சிறகுகளுள் ஒன்று வீழ்ந்தது..

சந்திரஹாச வாளும் அதற்குமேல் அங்கிருக்காமல் திருக்கயிலையைச் சென்றடைந்தது..

நிலை குலைந்தார் ஜடாயு.. வைதேகி கண்ணீர் வழியக் கதறினாள்..

மேகத் திரளின் ஊடாக நின்று போரிட்ட ஜடாயு வலுவிழந்து மண்ணில் விழுந்தார்..

எக்காளமிட்டபடி ராவணன் தென் திசையை நோக்கிச் சென்றான்..

" கண்மணி ராமன் நிச்சயம் வருவான்.. அவனிடம் நடந்ததைச் சொல்வேன் .. " - என்ற உறுதியுடன்  ஜடாயு காத்திருக்க - ராமனும் வந்தான்  தம்பியுடன்..


கண்ணீருடன் அவர்களிடம் நடந்ததை விவரித்து விட்டு ஸ்ரீராமனின் மடியிலேயே முக்தியடைந்தார் ஜடாயு..

இதனை ஞானசம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்க - திருப்பதிகத்தைப் படிக்கும் போது கண்ணீர் பெருகுகின்றது..
 
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய் சொல்லாதுயிர் போனான் புள்ளிருக்கு வேளூரே.. 

(திருப்பதிகம் வேறொரு பதிவில் வெளியாகும்)

ஸ்ரீ சம்பாதி போற்றி
ஸ்ரீ ஜடாயு போற்றி போற்றி..

ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்

சிவாய திருச்சிற்றம்பலம்
***

வியாழன், பிப்ரவரி 01, 2024

புள்ளிருக்கு வேளூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 18
வியாழக்கிழமை

புள்ளிருக்கு வேளூர்


தேன் ததும்பும் அழகிய கொன்றையுடன்  ஊமத்தை மலர், நிலவு எனும்  இவை அமைந்து விளங்குகின்ற சடையினனும், தள்ளத்தகாத பறவைப் பிறப்படைந்த சம்பாதி சடாயு எனும் இருவர் வழிபட அவர்கட்கு அரசன் என்றானவனும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற தலம் - புள்ளிருக்கு வேளூர்..

இதன் பெருமைகள் யாதெனில்,

தையல் நாயகியைத் திரு மேனியின் ஒரு பாதியிலும் கங்கையாளை திருச் சடையின் மேலும் கொண்டு   
ஆன்மாக்களின் ஆணவத்தை பிச்சையாக ஏற்கின்ற அந்தண் அறவோன் ஆகிய எம்பெருமான் - வீற்றிருக்கின்ற திருத்தலம்..

தேவர்கள்  இங்கே 
தங்கியிருந்து  நாள்தோறும் நீராடி நறுமலர் தூவி வழிபடப் பெற்ற இறைவன் இங்கே விளங்குகின்றான்..

பெரியதொரு யானையினை உரித்து அதன் தோலை தனது திருமேனியின் மேல் ஆடையாகப் போர்த்து மகிழ்ந்தவனும், எரியில் நின்று ஆடுபவனும் ஆகிய ஈசனின் திருவூர்.. 

கீதங்களைப் பாடி வணங்குகின்ற அடியவர்கள் திருவடிகளைத் தொழுமாறு பரஞ்சோதி என இரைவன் விளங்கி நிற்பதும் இங்கு தான்..

சைவத்திறம் மேற்கொண்ட அடியவர் மீது தீவினைத்  துன்பங்கள் வாராமல் காப்பவனும், சிவ தர்மங்களாகிய அறநெறிகளை ஆலின் கீழ் இருந்து அருளியவனும் ஆகிய இறைவன் இங்கே தான் உறைகின்றனன்.

யானையின் தோலால் தன்னுடலை மூடிக் கொண்டு கையில் அழகாக அனலை ஏந்தி,  பலியேற்று பித்தரைப் போலத் திரிகின்ற பெருமானின் திருத்தலம் இதுவே..

பண்ணிசை பாடி வழிபடுகின்ற அடியவர்களின் குடியாக இருந்து வழிபட உலகியல் இன்பங்களை மட்டுமல்லாமல் விண்ணுலக இன்பங்களையும் அருளும் நீலமணி கண்டன் விளங்குகின்ற திருத்தலம் இது..

பேதமுற்றுத் திரிந்த அசுரர்களின் முப்புரங்களையும் கொடுங் கணையால் வெந்து அவியுமாறு செய்த வில்லாளியும், கருணை மிகு கண்களை உடையனும் ஆகிய ஈசனின் திருவூர் இது..

சினங்கொண்டு வேகத்துடன் பெருகி வந்த கங்கையை நறு மணம் கமழும் தனது சடைக்குள் அடைத்துத்  தடுத்துத் தாங்கியவராகிய எம்பெருமான் உறைகின்ற திருத்தலம் இது தான்..
 

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதாய்  உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச் சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.. 10

இங்கு உறைகின்ற சிவபெருமானைத் தான்  
ஆதித்தனின் தேர்ச்சாரதி அருணனின் பிள்ளைகளாகிய சம்பாதியும் ஜடாயுவும் வழிபட்டிருந்தனர்..

புள்ளிருக்கு வேளூர் ஈசன் - நாள்தோறும் தவறாமல் யோசனை தூரம் சென்று மலர் பறித்து வந்த   சம்பாதியால் வணங்கப்பட்டவன்..

(யோஜனா என்பது தொலைவினைக் குறித்த வேத கால அலகாகும்..

ஒரு யோஜனா என்பது வேத கால அளவின்படி
12.2 கிமீ ஆகும்.. 

இதனை 8 கிமீ என- நாட்டைப் பிடித்த வெள்ளையர்கள் - தமது வசதிக்காக மாற்றியமைத்துக் கொண்டனர்..


இப்படியான -
புள்ளிருக்கு வேளூர் இறைவனைத் தான் -
சீதையைக் கடத்தி வந்த ராவணனை
ஸ்ரீராமபிரானுக்காகத் தாக்கிப் புடைத்து ராவணனின் செருக்கை அழித்த ஜடாயு வழிபட்டிருந்தான்..

பிறக்கும் பிறப்பை நீக்கி அருள்பவனும், தீவினை காரணமாக வருகின்ற நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள் புரிபவனும், மெய்யெலாம் வெண்ணீறு விளங்குகின்ற திருமேனியனும் ஆகிய சிவபெருமானுக்கு அடித் தொண்டு பூண்டிருக்கும் -  மணங்கமழ் பூம் பொழில் சூழ்ந்த காழிப் பதியுள் தோன்றிய கவுணியர் கோன் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிக மாலையைச் சோம்பியிராமல் சொல்லி வழிபட வல்லவர்கட்கு மறு பிறப்பு இல்லை என்பதாக நூற்பயன்.. 

 -: தொகுப்பில் துணை :-
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

திருஞான சம்பந்தர்
அருளிச் செய்த
திருப்பதிகம்
அடுத்தொரு பதிவில்..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***



செவ்வாய், ஜனவரி 30, 2024

ஸ்ரீ வைத்ய நாதம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 16
செவ்வாய்க்கிழமை


இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்


அம்பிகை
ஸ்ரீ தையல்நாயகி


தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 

சம்பாதி, ஜடாயு, என்ற கழுகரசர் இருவரும் ரிக் வேதமும்  முருகப்பெருமானும், சூரியனும் அங்காரகனும் காமதேனுவும் வழிபட்ட  திருத்தலம்.. 

தண்டக வனத்தில் இருந்து சீதையை வஞ்சத்தால் இராவணன் கடத்திச் சென்ற போது கழுகு அரசனான ஜடாயு இடைமறித்து அவனைத் தாக்கினான்..

இராவணனின் எதிர்த் தாக்குதலுக்கு உள்ளாகிய ஜடாயு சந்திரஹாசம் எனும் வாளால் வெட்டப்பட்டு - தன் சிறகை இழந்து பூமியில் விழுந்தான்.. 

பெரிய பெருமாளும்  சிறிய பெருமாளும் சீதையைத் தேடிக் கொண்டு வந்தபோது அவர்களிடம் நடந்ததைச் சொல்லி விட்டு ஸ்ரீராமபிரானின் மடியில் உயிர் துறந்தான்..

ஜடாயுவிற்காக கண்ணீர் வடித்த ஸ்ரீராமபிரான் தம்பியுடன் சேர்ந்து ஜடாயுவிற்கு இங்கே தகன க்ரியைகளைச் செய்ததாக தலபுராணம்..   

சித்தாமிர்த திருக்குளத்தின் வடகரையில் (கோயிலின் உட்பிரகாரம்)   ஜடாயுவிற்கு தீ மூட்டப்பட்ட  குண்டம் உள்ளது.. 

மனித குலத்தை எல்லாப் பிணிகளில் இருந்தும் காப்பதற்காக இறைவன் இங்கு வீற்றிருப்பதால் - 
வைத்தீஸ்வரன்..
வைத்தியலிங்கம்..
வைத்தியநாதன்..


அம்பிகை ஸ்ரீ தையல் நாயகி. சர்வ ரோக நிவாரணி.. தைலப் பாத்திரத்துடனும்,  வில்வ மரத்தின் வேரடி மண்ணுடனும் ஐயனுடன் எழுந்தருளியிருக்கின்றாள்..

தல விருட்சமாக
கிருத யுகத்தில் கொன்றை.
திரேதா யுகத்தில் அரசு.
துவாபர யுகத்தில் வில்வம்.
கலி யுகத்தில் வேம்பு..

மேற்கு முகமான திருக்கோயில்..

தீர்த்தம் சித்தாமிர்தம்..
நடுவில் நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம்..
இந்தக் குளக்கரையில் கற்பக விநாயகர்..

கருவறைக்குப்  பின்னால் கிழக்குத் திருச்சுற்றில்  நவக்கிரகங்கள்.. இத்தலத்தில் இறைவனின் ஆணைப்படி - ஆளுக்கொரு திசை என்றில்லாமல்   வக்கிரமின்றி
பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.. அருகில் தன்வந்த்ரி.. ஐயனார்..

தெற்கு திருச்சுற்றில் அறுபத்து மூன்று நாயன்மார்கள்.. இங்குதான் ஜடாயு குண்டம்.. ஸ்ரீராம லக்ஷ்மணர் திருமேனிகள்..

நேர் எதிரில் தக்ஷிணாமூர்த்தி.. நேர் மேலாக மாடத்தில் ஸ்ரீ சட்டநாத ஸ்வாமி..

சூரனுடன் போர் புரிவதற்குக் கிளம்புமுன் தேவசேனாதிபதியாக முருகன் இங்கே அம்மை அப்பனை வணங்கியதாக ஐதீகம்..

இத் தலத்தில் முருகப்பெருமான்  - செல்வ முத்துகுமார ஸ்வாமி.. இவரது சந்நிதி மூலஸ்தான வாசலுக்கு இடப்புறம்.. உற்சவ மூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் அலங்காரத் திருக்கோலம்.. 

இங்கு இவர் செல்லப் பிள்ளை ஆனதால் நித்ய அனுஷ்டானங்கள் இவருக்குப் பிறகு தான் அப்பனுக்கும் அம்மைக்கும்..

கிழக்கு வாசலின் எதிரில் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்..

கிழக்குக் கோபுரத்தின் அருகில் ஸ்ரீ பைரவர்
வெளிப் பிரகார வட புறத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் சந்நிதி.. கீழைக் கோபுரத்தின் அருகில் தண்டாயுதபாணி சந்நிதி..  வெளியில் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி சந்நிதி..

எதிரில் கலி யுகத்தின் ஸ்தல விருட்சமாகிய வேம்பு..

தென்புறம் தனியாக அங்காரகனின் சந்நிதி..

மனுக்குலத்தின் 
நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளையும் தீர்ப்பதற்குத் திருவுளம் கொண்டு இறைவன் அருள் பாலிக்கின்ற திருத்தலம் இது..

ஞானசம்பந்தப் பெருமானும் நாவுக்கரசரும் திருப்பதிகம் பாடிவழிபட்ட திருத்தலம்..


பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்  
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்  
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலைக் கொண்ட  
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***