நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பால்குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பால்குடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 19, 2018

பால்குட வைபவம்

இன்றைய பதிவில் -
கடந்த பங்குனி மாதத்தின்
கடைசிச் செவ்வாய் (10/4 ) அன்று -
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் நிகழ்ந்த பால்குட வைபவம்....

முன்னதாக தஞ்சை ஸ்ரீ சங்கர மடத்தில் பூர்வாங்க பூஜைகளுடன் வைபவம் தொடங்கியது...

செவ்வாய் அன்று காலையில்
தஞ்சையிலிருந்து புறப்பட்ட பால்குடங்கள் முற்பகலில் மாரியம்மன் கோயிலை அடைந்தன...

ஸ்ரீ முத்து மாரியம்மன்
சிறப்பான அபிஷேக அலங்காரங்களுக்குப் பின் மகா தீப ஆராதனை நடைபெற்றது..

உற்சவ மூர்த்தி அம்பாள் எழுந்தருளினாள்..







பல வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பிராமணர் அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பெற்றது....

விழா நிகழ்வுகளை வழங்கிய தஞ்சை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
ஃஃஃ

வியாழன், மே 22, 2014

பால்குட திருவிழா

அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும், ஆங்காங்கே - அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் மங்கலகரமாகத் தொடங்கியுள்ளன.
 
மக்களின் மனங்களுடன் சங்கமித்திருப்பவை - மாரியம்மன் கோயில்களும் காளியம்மன் கோயில்களும்!..


அத்தகைய  திருக்கோயிலின் திருவிழாவினை இன்று தரிசிப்போம்.


கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்!..

- என்பது மாணிக்க வாசகப்பெருமானின் அருளுரை.

காளியோடு ஆடிய - நடனமே தில்லையில் நிகழ்த்தப்படுகின்றது- என்பது திருக்குறிப்பு.
 

சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும் ஏற்பட்ட  போட்டியில், பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திகைத்து நின்றாள் - சக்தி.

தான் - வஞ்சிக்கப்பட்டதாக அதிர்ந்தாள். வெகுண்டாள்.  அம்பிகையின் கோபம் எல்லை மீறி - ஸ்ரீபத்ரகாளி என வெளிப்பட்டது.

இது நிகழ்ந்தது - திருஆலங்காடு எனும் திருத்தலத்தில்!.
ஈசன் - நடனமாடிய பஞ்ச சபைகளில் இது - ரத்னசபை.

ஒரு கட்டத்தில் - ஐயன் அம்பிகையை நெருங்கி சாந்தப்படுத்தினார். அந்த அளவில்  தில்லை வனமாகத் திகழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தின் வடதிசையின் எல்லையில்  அமர்ந்தாள்.

அம்பிகையின் கோபம் காளி என உருக்கொண்டு நின்ற போது நான்முகன் அவளை துதி செய்து வணங்கினார். பிரம்மனின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த அம்பிகை - சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள்.

பிரம்ம சாமுண்டீஸ்வரி என  - அங்கே கோயில் கொண்டாள். அதன் பின்,


தீவினைகளைத் தீர்க்க - திருஉளங்கொண்டு, ஊர்கள் தோறும் - பத்ரகாளி என எழுந்தருளினள் - அம்பிகை.  

அப்படி ஒரு நாள் - மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில் எம்மை ஆண்டு கொண்டவள் - அவளே!..

அன்று முதல் - அவளுக்குப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு, அவள் தானே - மகவாக ஆயினாள்.

அவ்வண்ணம் குடிகொண்டவள் -  ஸ்ரீவீரமாகாளி!..  தலம் - நாககுடி.

உக்ர ஸ்வரூபிணியான பத்ரகாளி. ஆயினும், அவள் - பொங்கிப் பெருகும் கருணை வெள்ளம். வற்றாது சுரக்கும் அன்பின் ஊற்று.

வலது திருக்கரத்தினில் சூலம். இடது திருக்கரத்தினில் கபாலம். மேல் திருக் கரங்களில் உடுக்கையும் நாகபாசமும். ஜடாமகுடத்தில் அக்னி ஜ்வாலைகள்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் - இடப்புறம்  ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் பரிவார மூர்த்திகள். கோயிலின் கிழக்குப் புறம்  - ஸ்ரீ வலம்புரி விநாயகர். அருகினில் வேம்பு நிழலில் - நாக ப்ரதிஷ்டையும் புற்றும்.

வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். திருக்கோயிலின் பின்புறம் பழவாறு எனப்படும் சிற்றோடை.

மூன்று புறமும் மயானங்கள் சூழ்ந்திருக்க - திரிகோண மத்ய ஸ்தானம் என   திருக்கோயில் கொண்டு அகமகிழ்வுடன் அருளாட்சி புரிகின்றனள்.

வருடாந்திர பால்குட திருவிழா - அக்னி நட்சத்திரம் முடிந்த - மறு வெள்ளிக் கிழமை தொடங்கி மூன்று நாட்கள் நிகழும். இதன்படி - 

வெள்ளிக்கிழமை (மே/23  -  வைகாசி/9) முதலாம் திருநாள். 

சுவாமிமலையில் - காவிரி வடகரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பெற்று அம்பிகைக்கு மங்கல நீராட்டு.

அம்பிகைக்கும் பரிவார மூர்த்திகளுக்கும்  கோயில் பிள்ளைகளுக்கும் காப்பு கட்டுதல் . 


முதலாம் திருநாள்
அன்று - முன்னிரவு நேரத்தில்,  கிராம தேவதா ப்ரீதியுடன் - பூத பலி.
அக்னி கொப்பரையும் கருப்ப ஸ்வாமியின் வேலும் உடன் வர -
சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தவளாய் - புஷ்ப ரதத்தில் - திருவீதியுலா.

விடியற்காலையில் உக்ரத்துடன் யதாஸ்தானம் திரும்பும் அன்னைக்கு, தயிர் பள்ளயம் நிவேதனம் செய்யப்படும்.

சனிக்கிழமை (மே/24  - வைகாசி/10) இரண்டாம் திருநாள்.  

இரண்டாம் திருநாள்

இரண்டாம் திருநாள் மகாதீபாராதனை
சனிக்கிழமை மாலையில் மகாஅபிஷேகமும் மகாதீபாராதனையும் நிகழும். அதன் பின் அன்னதானம்.

ஞாயிறு (மே/25-வைகாசி/11) மூன்றாம் திருநாள்.

காலையில், கிராம தேவதா ப்ரீதி. பிரத்யேக பூஜையுடன் அருள் வாக்கு பெற்று -  வெகு விமரிசையுடன் - பூங்கரகம் புறப்படும். 

நேர்ந்து கொண்டவர்கள் - மஞ்சளாடையுடன் பால் குடம் எடுப்பர்.

மூன்றாம் திருநாள்
அரிவாளின் மேல் ஸ்ரீகருப்பசாமியின் அருள்வாக்கு
இடது ஓரத்தில் என் மகன்

சக்தி கரகத்துடன் சகோதரர்
சீர்வரிசை தட்டுடன் என்மகள்


அன்பில் திகழும் அம்பிகைக்கு - இளங்கன்னியரும் பெண்களும் - சீர்வரிசை எடுத்து வீதிவலம் வந்து , பகல் உச்சிப் பொழுதில்  - 

ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் உளங்குளிர பாலாபிஷேகம் நிகழும். அதன்பின்
பட்டு வஸ்திரம் சாற்றி - மஹாதீபாராதனை. 

பக்தர்களுக்கு கற்பூர தரிசனம் ஆனதும் - கூழ் வார்த்தல், மாவிளக்கு, நீர்மோர், பானகம், துள்ளுமாவு வழங்குதல் என சிறப்பாக நிகழும். 

திருக்கோயில் திட்டத்துடன் உபயதாரர்களின் கைங்கர்யமும் உண்டு.

ஞாயிறு மாலை - அன்னைக்கு சந்தனக்காப்பு. பழவகைகளுடன் சித்ரான்ன நிவேத்யம். மகாதீபாராதனை. அதன்பின் அன்னதானம்.

பின்னிரவில் திருக்காப்பு கழற்றி,  செவ்வாய் அன்று பூங்கரகம் விசர்ஜனம். 

சுவாமிமலையிலிருந்து வடக்கே - 2 கி.மீ. தொலைவில் உள்ளது நாககுடி. ஊர் எல்லையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்.

கும்பகோணம் - திருவைகாவூர்  நகரப்பேருந்துகள் இவ்வூர் வழி செல்கின்றன.


இங்கே - பதிவில் உள்ள படங்கள் - கடந்த வருடம் சித்திரையில்  நிகழ்ந்த பாற்குட திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.

ஸ்ரீவீரமாகாளி அம்பிகை என்னையும் - தன் பணிக்கு என ஆட்கொண்டவள். நெஞ்சில் நினைத்ததும் எதிர்நிற்பவள். அவளுடைய ஆலயத் திருப்பணியில் என்னையும் இணைத்து மகிழ்ந்தவள்.

அவளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்யும் பேற்றினையும், அபிஷேக அலங்காரம் செய்யும் மகாபாக்யத்தையும் அடியேனுக்கு வழங்கியவள்.

அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - ஏழு வயதுடைய குழந்தையை நீராட்டுவது போல இருக்கும்!.. அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது.

திருவிழா காலத்தில் - நான் கடல் கடந்து இருந்தாலும்
என் உள்ளம் அவள் காலடியில் கிடக்கின்றது.

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய 
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!..

ஓம் சக்தி ஓம்!..
* * *

வியாழன், மே 23, 2013

ஸ்ரீ வீரமாகாளி

அன்னை ஆதிபராசக்தி - சகல லோகங்களையும் பெற்றெடுத்த தாய்.

ஆனாலும் அவள் நித்ய கன்னி. இப்படித்தான் சாத்திரங்கள் சொல்லுகின்றன.


பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரயம்பகி எழில்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ர தள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே
நான் உச்சரிக்க வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே 
பின்னையுங் கன்னிஎன மறைபேசும்
ஆனந்தரூபமயிலே
வாரணியும் இரு கொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரைராசனுக்கிரு கண்மணியாய் உதித்த மலை
வளர்காதலிப்பெண் உமையே!...

என்று தாயுமான சுவாமிகள் விவரிக்கும் - அம்பிகையைத்தான்

பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும்
திகிரி மாயவனையும் அரையில்
புலியாடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்
பழைமை முறைமை தெரியாத நின்னை-
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்வாய்?

என்றும்,

நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்
உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்

என்றும் - அபிராபிபட்டர்  பக்திப் பரவசமாய் பாடி -  உருகுகின்றார். 

இப்படி அன்னையாய் பின்னையும் கன்னியாய் விளங்கும் பராசக்தி - சின்னஞ்சிறு பெண்ணாக வந்து எதிர் நின்றால் - எப்படியிருக்கும்!...

வாருங்கள் செல்வோம் - அப்படி சின்னஞ்சிறு பெண்ணாக வந்து ஆட்கொண்ட அன்னையின் ஆலயம் அமைந்துள்ள நாககுடி கிராமத்திற்கு.. 

நாககுடி -  தஞ்சை மாவட்டத்தில் - ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள சுவாமிமலைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது. ஊரினுள் நுழையுமுன்பாகவே அன்னையின் திருக்கோயில்.


காலகாலமாக  வீற்றிருந்த தலமாக, அன்னை வடதிசை நோக்கியவளாக கொலு வீற்றிருக்கின்றாள்.. 

அன்னையின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சந்நிதியும் வேம்பும் நாகம் குடியிருக்கும் புற்றும் நாகர் திருமேனி பிரதிஷ்டைகளும் அமைந்துள்ளன. கோயிலின் தென்புறம்  பழவாறு எனும் நீரோடை. 

திருக்கோயிலினுள் அன்னையின் இருபுறமும் ஸ்ரீ மதுரை வீரனும், ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் விளங்குகின்றனர். அன்னையின் எதிரில் சிம்ம வாகனமும் பலிபீடமும் திரிசூலமும் இலங்குகின்றன.

சந்நிதியினுள் ''..யான் இருக்க உனக்கு என்ன குறை!..'' எனும் அருட் பார்வையினளாக அன்பரின் குறைகளை எல்லாம் தவிடு பொடியாக்கித் தகர்க்கும் தயாபரியாக வீற்றிருக்கின்றாள் அன்னை. 

அவளைக் கண்ட மாத்திரத்தில் நம் அல்லல் எல்லாம் அனல் பட்ட மெழுகாக உருகி ஓடுகின்றன. 

என்ன சொல்வது!... எப்படிச் சொல்வது!... என் சிந்தை எல்லாம் அவளேயாக ஆகி நிற்கும் அற்புதத்தினை விவரிக்க ஒரு வார்த்தையும் கிடையாது!... எனக்கு இன்னொரு தாயாகி நிற்பவள். எனக்கு மட்டுமல்ல... 

இவளைத் தரிசிக்கும் எல்லாருக்கும் அப்படியே!... இவளுடைய சந்நிதியில் சஞ்சலங்களுக்கும் சலனங்களுக்கும் வேலையே இல்லை. குறை என்று சொல்லி ஒருவர் வாசற்படியேறி விட்டாலே போதும்!.. வசந்தம் தான் அவர்தம் வாழ்வில்... கண்கூடாகக் காணும் உண்மை இது!..


இங்கே அவள் திருப்பெயர் - ஸ்ரீ வீரமாகாளியம்மன். 

அன்னைக்கு வருடந்தோறும் பற்பல விசேஷங்கள். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி பூஜைகள். ஆடிப்பூரம் மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள். தைமாதம் திருவாதிரையில் காவிரியில் நீரெடுத்து வந்து கலசபூஜையும் சம்வஸ்த்ராபிஷேகமும் வெகு சிறப்பாக நிகழ்வுறும். 

சித்திரையில் அக்னி நட்சத்திர காலம் நிறைவுறும் வேளையில் - அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி, அன்றிரவு புஷ்ப ரதத்தில் திருவீதியுலா நடைபெறும். சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை வைபவம் நமது உபயமாக நடைபெறும். 

மூன்றாம் நாளாகிய ஞாயிறன்று காலையில், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து ''சக்தி கரகம்'' ஸ்தாபனம் செய்து அதில் அம்பாள் ஆவாஹனத்துடன்  பிரம்பு ஏந்தியபடி பிரதானமாக முன்வர - அக்கினி கொப்பரையும், சக்தி சூலமும் கருப்பசாமி வேலும் ஆரவாரித்து உடன் வருவர். 

தொடர்ந்து நூற்றுக்கணக்காக பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மதியம் பெரிய அளவில் அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.  அச்சமயம் அன்னதானமும் கஞ்சி வார்த்தலும் வெகு சிறப்பாக நடைபெறும். 

நிறைவாக,  மாலையில்  - அன்னைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும்  மகாதீப ஆராதனையும் நிகழ்வுறும். 

ஐந்தாம் நாள் செவ்வாய் அன்று மஞ்சள் நீராட்டு. காப்பு அவிழ்த்து கரக விசர்ஜனம் - என விடையாற்றியுடன் வருடாந்திரத் திருவிழா நிறைவுறும். 

அன்னையின் சந்நிதியில் எப்போதெல்லாம் - 

கலச பூஜையுடன் மகா அபிஷேகம் நடைபெறுகின்றதோ - அப்போதெல்லாம் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யம் அடியேனுடையது.  சென்னியில் சேவடி வைத்து  என்னையும் ஒருவன் ஆக்கிய - அன்னை - தீர்த்த கைங்கர்யத்தினை தலைமுறைக்குமாகப் பிரசாதித்தது அருளினள். 

தற்சமயம் கடல் கடந்து இருப்பதால் -  என் மகன், சிவஸ்ரீகாந்த் - காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யத்தினை உவப்புடன் நிறைவேற்றுகின்றான். 

அன்னை வீரமாகாளியின் அருள் - பெருமை அளவிடற்கரியது. பெரிதாகத் தவம் ஏதும் செய்ததில்லை. ஆயினும் நானும் ஒரு பிள்ளையாய் அவள் சந்நிதியினுள்  நின்று - அவள் எனக்கு இட்ட கட்டளையாய், அவளுக்கு செய்யும் அபிஷேக அலங்கார ஆராதனைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவள்...


அபிஷேகநேரத்தில் நிதர்சனமாக ''வாலை'' என,  சின்னஞ்சிறு பெண்ணாகவே அவள் தோன்றுவாள்!..

அவளுக்கு நானும் ஒரு பிள்ளை. எங்கள் குடும்பத்தில் அவளும் ஒரு பிள்ளை.

திருக்கோயில்,  சீரிய முறையில்  திரு.வெ.பன்னீர்செல்வம் அவர்களாலும் ஆலய நிர்வாகக் குழுவினராலும் நிர்வகிக்கப்படுகின்றது.

திரு. பன்னீர்செல்வம் - என் மனைவியின் அக்காள் கணவர். இவரே விரதம் இருந்து சக்தி கரகம் ஏந்தி வருவார்.

அன்னை ஸ்ரீ வீரமாகாளியின் சித்திரைப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (24-5) தொடங்குகின்றது. அன்று இரவு புஷ்ப ரதம். ஞாயிறு அன்று காலை சக்தி கரகத்துடன் பால்குட வீதியுலாவும், மாலையில் சந்தனக்காப்பும் நடைபெறும்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் எல்லாருக்கும் துணையிருப்பாள். வேண்டியனவற்றை நிறைவேற்றித் தருவாள்..

அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்!...