நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பரிதி நியமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிதி நியமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 26, 2019

பரிதியப்பர் தரிசனம் 3

தஞ்சையை அடுத்துள்ள
ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயிலைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றோம்...

மிகப் பழைமையான கிழக்கு நோக்கிய கோயில்...

திருக்கோயிலின் எதிரில் மூன்று ஆலமரங்கள்...
அவற்றைக் கடந்து தேரடி.. அருகில் அழகான தேரடிப் பிள்ளையார்..






ஐந்து நிலைகளையுடையது முதல் ராஜகோபுரம்..

ராஜகோபுரம் 
திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம். வசந்த மண்டபத்திற்கு பக்கத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி.



உள்பிரகாரம் வெளிப் பிரகாரம் என இரண்டு உள்ளன...

மூன்று நிலைகளையுடைய இரண்டாம் ராஜகோபுர வாயிலை அடுத்து -
உள் பிரகாரத்தில் வழக்கமான சந்நிதிகள்...

கோட்டங்களில் தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, நான்முகப் பிரம்மன்...



சந்நிதிகளில் விநாயகர், முருகன், கஜலட்சுமி திருமேனிகளைத் தரிசிக்கலாம்..


பிரகாரத்தில் சண்டிகேசருக்கு மூன்று திருமேனிகள் உள்ளன..


அம்பாள் மூலஸ்தானம் 
சிவகாமசுந்தரி அம்பிகையுடன் நடராஜ சபை உள்ளது...
அருகில் ஸ்ரீபைரவர், சூரியன், சந்திரன்..

நவக்கிரக மண்டலமும் உண்டு..

ஸ்வாமி மூலஸ்தானம் 
துவார விநாயகரையும் துவார பாலகர்களையும் தொழுது உட்சென்றால் கருணையே வடிவான மூலவரைக் கண் குளிரத் தரிசிக்கலாம்..

ஸ்ரீ பரிதியப்பருக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ சூர்ய மூர்த்தி...

ஞாயிற்றுக் கிழமைகளில் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து,
அருள்தரும் பரிதியப்பரை வணங்கினால் கண் குறைபாடுகள் நீங்கும் என்பர்..

நூற்றெட்டு தாமரை மலர்கள் என்றால் இன்னும் சிறப்பு..

வருடம் தோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் சுயம்பு லிங்கமாகிய பரிதியப்பருக்கு விசேஷ அபிஷேக அலங்காரங்களுடன் சூரிய பூஜை நிகழும்..

காலை 6.30 மணியளவில் உதித்தெழுகின்ற

சூரியனின் கதிர்கள் கருவறையில் படர்கின்றன..

இத்திருக்காட்சியினைக் காண்பதற்குத் தவம் செய்திருக்கவேண்டும்..
வரும் பங்குனியில் வாய்ப்புள்ளோர் அவசியம் தரிசனம் செய்க.. 

சிவலிங்கத்திற்கு எதிரில் சூரியன் 
சிவபெருமானின் எதிரில் - சூரியன் நின்ற வண்ணம் வணங்கும் திருக்கோலத்தினை வேறு எங்கும் காண இயலாது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறந்து விளங்கும் இத்தலம் -
பிதுர் தோஷத்தினை நீக்கும்  பரிகார தலமாகவும்  
குறைவற்ற கண்ணொளி வழங்கும் தலமாகவும்  சிறந்து விளங்குகிறது. 

எந்தத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான தொல்லைகளும் தீர்வதற்காக,
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்...


ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் 
ஸ்ரீ இடும்பன் கோயில் 
திருக்கோயிலுக்குத் தென்புறம் பிடாரியம்மனுக்கும்,
திருக்கோயிலருகில் இடும்பனும் சந்நிதி கொண்டுள்ளனர்...

திருக்கோயிலின் முன்புறத்தில் சூரிய தீர்த்தம்,  பின்புறத்தில் சந்திர தீர்த்தம் ..

சென்ற பதிவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற இருந்த அறிவிப்பைச் சொல்லியிருந்தேன்..

உள்பிரகாரம் சுற்றி வரும் போது சந்நிதி விமானங்களுடன்
ராஜகோபுரமும் சேர்ந்து விளங்கிய காட்சியைத் தவிர வேறெதுவும் எடுக்கவில்லை...

பதிவிலுள்ள படங்கள் அனைத்தும் வெளிப்பிரகாரத்தில் எடுக்கப்பட்டவை... 

நண்பர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லியிருந்தார்கள்...

படம் எடுக்கக்கூடாது - என்றால், கொடிமரத்தைக் கடந்து மூலஸ்தானத்தை எடுக்கக் கூடாது என்பதாகத் தான் அர்த்தம்...

எவருக்கும் அனுமதி இல்லையென்றால்
மேலே காணும் சூரியனின் படம் Fb ல் வந்தது எப்படி?...

கோயில் பணியாளர்கள் எவர் துணையும் இல்லாமல்
சிவலிங்கத்தையும் மூலஸ்தானத்துக்கு முன்னாலும் படம் எடுக்க இயலுமா!...

சில வினாக்களுக்கு விடை காண்பது கடினம்...


கோயிலின் எதிலுள்ள ஆலமரங்கள் 
இந்தத் திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையிலுள்ள  உழூர் கிராமத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பரிதியப்பர் கோயில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..

இருந்தாலும் கோயில் வழியாகச் செல்லும் பேருந்துகள்
மணிக்கு ஒருதரம் தான்...

பழைய பேருந்து நிலையத்திலிருந்து
ஒரத்தநாடு செல்லும் நகரப் பேருந்துகளும்


புதிய பேருந்து நிலையத்திலிருந்து
பட்டுக்கோட்டை செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
உழூர் வழியாகத் தான் செல்கின்றன...

ஆனாலும் -

உழூரில் இருந்து பரிதியப்பர் கோயிலுக்குச் செல்ல ஆட்டோக்கள் அரிது...



ராஜகோபுரத்தின் தென்புற நாசித்தலை 
ஏதோ காரணத்தால் சிதைந்துள்ளது..

நுணுக்கமான வேலைப்பாடுகள் சுதை சிற்பங்களில் காணப்படுகின்றது...
திருக்கோயில் திருப்பணியை நோக்கியுள்ளது - நிதர்சனம்...

கூடிய விரைவில் -  திருப்பணிகள் தொடங்குவதற்குப்
பிரார்த்தனை செய்து கொள்வோம்...

கூடுதலாக ஒரு செய்தி - இத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழியில் உருவான சிறுகதை தான் - மறுபடியும் அம்மா.. (டீச்சர் - கல்பனா)



நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண்மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் நீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார்புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதிந் நியமமே.. (3/104)
-: திருஞானசம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

செவ்வாய், ஜூன் 25, 2019

பரிதியப்பர் தரிசனம் 2

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி...

சிவபெருமானை வழிபட்டு சூரியன் பழி நீங்கப்பெற்றதால்,
சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரை பருத்தியப்பர் என்றும் சொல்கிறார்கள்... 


அழகின் வடிவாகிய அம்பிகை
மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

பங்குனி உத்திரத்தன்று நூற்றுக்கணக்கான
பால் குடங்கள் பால் காவடிகள் - என, பெருந்திருவிழா நிகழ்கின்றது..

அன்றைய தினம் வரப்பிரசாத மூர்த்தியாக எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுக்கு, குளிரக் குளிர அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகின்றது..


ஸ்வாமி, அம்பாள், முருகன் என மூவரும் சிறப்புற்று விளங்குவதனால் இத்திருத்தலம் சோமாஸ்கந்த ஷேத்திரம் என்றும் புகழப்படுகின்றது.

தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சூரிய புஷ்கரணியில் நீராடி - பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப்பெருமான், சூரியன் ஆகியோரை வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் நீங்குகின்றது. 



கோயிலுக்குள் நுழைந்ததுமே பெரிய எழுத்துக்களால்
எழுதிக் கிடக்கின்றது - புகைப்படம் எடுக்காதீர்கள் என்று...

அதைப் பார்த்ததும் நமக்கே ஒரு மாதிரி ஆகி விடுகின்றது...
கோயில் பணியாளர்கள் பல வேலைகளாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கின்றனர்...






கோயில் வளாகத்தில் விளங்கும் கொன்றை  

இருந்தும் -
அப்படி இப்படி எடுத்த படங்கள் இன்றைய பதிவில்!... 

முருகன் சந்நிதி விமானத்தின் பின் அழகு  
ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடி வழிபட்டத் திருத்தலம். 
திருநாவுக்கரசர் திருவூர்த் திருத்தொகையுள் போற்றிப் பாடுகின்றனர்...


பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பரிதிந் நியமமே!.. (3/104) 
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூன் 23, 2019

பரிதியப்பர் தரிசனம் 1

தன் மகள் தாட்சாயணியைக் கவர்ந்து சென்று விட்டான்
- என்ற கடுங்கோபம் தட்சனுக்கு...

அதனால் சிவபெருமானை மட்டும் ஒதுக்கி விட்டு
தட்சன் யாகம் ஒன்றினை நடத்தினான்...

ஈசனை அவமதித்துச் செய்யப்படும்
யாகம் என்பதனைத் தெரிந்து கொண்ட பிறகும்
ஈசன் எம்பெருமானுக்குப் பெண்ணைக் கொடுத்தவன்
என்று வாளா இருந்த தேவர்கள் அவிர் பாகமும் பெற்றனர்... 

இதனால் சிவ நிந்தை  செய்த தோஷம் ஏற்பட்டது.  

சிவபெருமானின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ வீரபத்ரமூர்த்தி -
யாகத்திற்குச் சென்றவர்களையெல்லாம் வெளுத்துக் கட்டினார்..

அவர்களுள் சூரியனும் ஒருவன்..
தண்டத்தால் அடிபட்டதில் முன்பற்கள் உதிர்ந்து போயின..
சூரியனது பேரொளியும் குன்றிப் போனது..

தட்சனைப் பெரியவன் என்று எண்ணியதற்காக சூரியன் வருந்தினான்..
குற்றம் நீங்க வேண்டி சிவத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிபாடு செய்தான். 

அப்படி வழிபாடு செய்த தலங்களுள் இந்தத் திருத்தலமும் ஒன்று...

சூரியனின் வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட -
எம்பெருமான் அவனை மன்னித்தருளினன்..

சூரியனும் தன் முக அழகையும் பேரொளியையும் திரும்பப் பெற்றான்..

இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியன் நன்றிக்கடனாக -
இன்றளவும் சந்நிதியிலேயே நேருக்கு நேர் நின்று  
சிவ பெருமானை - வழிபட்டுக் கொண்டிருக்கின்றான்.

மேலும் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் 18,19,20  
ஆகிய மூன்று நாட்களில் உதிக்கும் வேளையில் 
செங்கதிர்களால் எம்பெருமானைத் தழுவி வணங்குகின்றான். 

இன்றும் நந்தி, பலிபீடம் - அடுத்து மூலவருக்கு எதிரில் நின்று வழிபடும்  சூரியனின் திருமேனியினைக் காணலாம்.

இந்தத் திருத்தலத்தில் சூரியனுக்கு தோஷ நிவர்த்தி ஆனதால், 
இத்தலம் பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது..

இத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - பரிதிநியமம். 

பரிதியப்பர் கோயில் என்று இந்நாளில் வழங்கப்படுகின்றது..

திருக்கோயிலின் பெயரும் இதுவே... திருத்தலத்தின் பெயரும் இதுவே... 

திருத்தலம்
திருப்பரிதிநியமம்


இறைவன் - அருள்மிகு பரிதியப்பர்
அம்பிகை - அருள்தரு மங்கல நாயகி


தலவிருட்சம் - அரச மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், வேத தீர்த்தம்..

சூரியனின் திருப்பெயர்களுள் ஒன்று பரிதி...

சிவபெருமானை வழிபட்டு சூரியன்பழி நீங்கப்பெற்றதால்,
சுயம்பு மூர்த்தியான சுவாமிக்கு பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் திருப்பெயர்கள். 

பரிதியப்பர் - என்ற பெயரை பருத்தியப்பர் என்றும் சொல்கிறார்கள்... 

அழகின் வடிவாகிய மங்கலநாயகி பெண்களுக்கு
மாங்கல்ய பாக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் அருளுகின்றாள்.  

இன்று ஞாயிற்றுக் கிழமை...
சூரியன் வழிபட்டு நிற்கும் ஸ்ரீ பரிதியப்பர் திருக்கோயில் தரிசனம்...

திருக்கோயிலுக்குச் செல்லும் முன்
வழியில் காணும் பசுமை அழகு தங்களுக்காக...

கொடுக்காப்புளி மரம் 



தூக்கணாங்குருவிக் கூடுகள் 
கூந்தல் பனை 
பூத்திருக்கும் புரசு
தஞ்சை பட்டுக்கோட்டை சாலையில் 12 கி.மீ.,  தொலைவில் உழூர் கிராமம்.. அங்கிருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவிலுள்ளது பரிதியப்பர் திருக்கோயில்..

கோபுர தரிசனம் 

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில் வெண்ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலோடு ஏர்கவர்ந்த கள்வர்க்கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந்நியமமே.. (3/104) 
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***