நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 10, 2021

கணபதி தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..

***

தேவேந்திரன் செய்வதறியாது திகைத்து நின்றான்...

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அருகில் இருந்த எவருக்கும் தெரியவில்லை..

இத்தனை களேபரத்தினூடாக விஷயம் மெல்லக் கசிந்தது..

" இவன் அமுதக் கலசத்தை எங்கோ ஒளித்து வைத்து விட்டு நாடகம் ஆடுகின்றான்!.. "

" எனக்கு அப்பொழுதே தெரியும்!.. இவன் இப்படிச் செய்வான் என்று!.. "

திரண்டிருந்த அசுரர் கூட்டத்தினுள்ளிருந்து கலகக் குரல்கள் எழுந்தன...

மீண்டும் ஆயுதங்களைத் தூக்குவதற்குத் தயாராகினர்

வீண் பிரச்னை ஏற்படுவதை விரும்பாத நல்லோர் சிலர் -
இந்திரனை இழுத்துக் கொண்டு வந்து நான்முகனின் எதிரில் நிறுத்தினர்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமற் போயிற்றே!.. எத்தனை எத்தனை ப்ரயத்தனம் செய்து கடலைக் கடைந்து அமுதத்தினைப் பெற்றோம்!.. 

இப்போது அமுதக் கலசத்தைக்  காண வில்லையே.. மாயமாக மறைந்தது எப்படி!?..

பேசுதற்கு ஒரு வார்த்தையும்் இன்றி விக்கித்து  நின்றான் தேவேந்திரன்..


" நானே அனைத்தும் அறிவேன்.. என்ற ஆணவம் தான் உனக்கு அதிகம்.. ஆனால், எதைச் செய்ய வேண்டும்.. எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறியவே மாட்டாய்.. உன்னால் விளைந்த விபரீதங்களே அதிகம் என்பதை உணர்வாயாக!... "

நான்முகனின் திருமுன் தலைகவிழ்ந்து நின்றிருந்தான் - தேவேந்திரன்...

" இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.. வழி காட்ட வேண்டும்.. தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு ஓர் உபாயம் அருளல் வேண்டும்.. "

" தடைகளைக் கடந்து காரிய சித்தி எய்துதற்கு வழி ஒன்றைக் கேட்கின்றாய்.. வழி எங்கும் வீற்றிருந்து தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளையினை நீ அறிந்திலையோ!.. "

" தடைகளைக் கடத்தும் தலைப்பிள்ளை!.. யார் அது?.. "

" மனம் போன போக்கில் சென்று போகங்களில் திளைத்துக் கொண்டிருக்கும் தேவேந்திரனே!..  எல்லாம் மறந்தனையோ!.. ஆதியில் திருக்கயிலை மாமலையில் எம்பெருமானும் அம்பிகையும் தத்தமது பீஜாட்சர மந்திரங்களால் மகாகணபதிப் பெருமானை அருளியபோது நமக்கெல்லாம் என்ன கூறினார்கள்!.. "

" ஆம்... ஆம்!.. நினைவுக்கு வருகின்றது!.. "

அமுதம் வேண்டுமெனப் புறப்பட்ட போது ஐங்கரனை நீ நினைத்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" மந்தர மலை கடலுள் வீழ்ந்து மூழ்கிய போதும் கவலைப்பட்டு கணபதியை சிந்தித்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" அதன்பிறகு ஆலகாலம் எழுந்து வந்து அனைவரையும் துரத்தியடித்ததே!.. அப்போதாவது அந்த ஆனைமுகனை வந்தித்ததுண்டா?.. "

...... ......  ......  ......

" அலறியடித்துக் கொண்டு கயிலைமாமலையை நோக்கி ஓடி - அதனுள் உட்புகுந்தபோது - ஆங்கே வேலவனோடு விளையாடிக் கொண்டிருந்த விநாயக மூர்த்தியை ஒரு கணம் கண்டு கைகூப்பியது உண்டா?... "

...... ......  ......  ......

" நான் முன்பு  ஒருசமயம் இளைய பிள்ளையை எதிர்நோக்காமல் சென்றதால் - அவன் கையால் குட்டுப் பட்டதுடன் - படாத பாடு பட்டிருக்கின்றேன்.. நீயோ.. மூத்த பிள்ளையை மதிக்காமல் சென்று  -  வினையை நீயாக சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்!.. "

...... ......  ......  ......

" இதற்கிடையில் - தடைகளைக் கடத்து
ம் தலைப்பிள்ளை.. யார் அது?.. என்று கேள்வி வேறு கேட்கின்றாய்!.. "

..... ......  ......  ......

" தடைகளைக் கண்முன் முன்னே காட்டி நடத்துபவனும் அவன் தான்.. தாள் பணிந்து நிற்பவரை - தடைகளைத் தாண்டி கடத்துபவனும் அவன் தான்!.. "

..... ......  ......  ......

" சென்று - செல்வக் கணபதியின் பாதம் பணிவாய்!.. உன் புத்தியை நல் வழியில் செலுத்து.. எடுத்த செயல்களில் சித்தியைக் காண்பாய்!.. "  

நான்முகன் அறிவுரை கூறவும்,

" தாங்களும் உடன் வந்தருள வேண்டும்!.. "

தேவேந்திரன் பணிவுடன்  வேண்டிக்  கொண்டான்..

" எதற்கு?.. "

" உடன் வந்து நலங் காட்டவேண்டும்.. விநாயகப் பெருமானை வணங்கி வழிபடும் வகையறியேன்!.. "

" பிள்ளை.. யார் என்று கேட்டாயே.. அந்தப் பிள்ளையின் வழிபாடு எளிமை.. இருப்பினும் இப்போதைக்கு அருகம் புல்லையும் தும்பைப் பூக்களையும் கருப்பஞ்சாற்றையும் இனிப்பு மோதகத்தையும் எடுத்துக் கொள்.. இவற்றை நிவேதனம் செய்து தான் அகத்திய மகரிஷியின் மனையாள் லோபாமுத்திரை நற்பயன் எய்தினாள்.. "

நான்முகனின் தலைமையை ஏற்று அசுரர்களும் தேவர்களுமாக மீண்டும் திருக்கயிலாய மாமலையை நோக்கி நடையைக் கட்டினர்...

வழியில் வைகுந்தத்திற்குச் சென்றனர்..

அமுதம் திரள்வதற்குக் காரணன் - ஜகன் மோகனன் -     ஸ்ரீ ஹரி பரந்தாமன்  தானும் அவர்களுடன் எழுந்தருளினான்..


அங்கே -
திருக்கயிலாயத்தில் - மேற்கு முகமாக விளங்கிய சிவலிங்கத் திருமேனியை வழிபாட்டுக் கொண்டிருந்தார் விநாயக மூர்த்தி..

அருகாமையில் பொற்பிரம்புடன் அதிகார நந்தீஸ்வரர்...

நந்தீசனைக் கண்டதுமே தேவேந்திரனின் அடிவயிறு கலங்கியது...

" என்ன விஷயம்?.. "

-  பார்வையினாலேயே வினவினார் நந்தியம்பெருமான்..

" மஹாகணபதியைத் தரிசிக்க வந்திருக்கின்றோம்!.. "

கைகட்டி வாய் பொத்தி நின்றான் - தேவேந்திரன்..

" இப்பொழுது கணேச மூர்த்தி சிவபூஜை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றாரே!.. தெரியவில்லையா?.. "

மறுபடியும் பிரச்னையா!.. +
இந்திரனின் மனம் தவித்தது..

" ஆயிரங்கண்ணிருந்தும் அந்தகனாகிப் போனேன்!.. மன்னித்தருள வேண்டும்.. ஸ்வாமி.. "

" சற்றே பொறுத்திருங்கள்!.. "
நந்தியம் பெருமான் விடையிறுத்தார்..

" தங்கள் சித்தம்!.. "

சிறிது நேரத்தில் விநாயகப் பெருமான் - திருக்கண் மலர்ந்தார்..

தனக்கு முன் திரண்டு நிற்கும் பெருங்கூட்டத்தை ஏறெடுத்து நோக்கினார்...

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விக்ஷாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்..

ஸர்வ விக்னகரம் தேவம் ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸித்தி ப்ரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்..

அறுகம் புல்லையும் தும்பைப் பூக்களையும்
மோதகங்களையும் கருப்பஞ் சாற்றையும்
பணிவுடன் சமர்ப்பித்து நின்றான் - தேவேந்திரன்..

விசாலமான காது மடல்கள் அப்படியும் இப்படியுமாக ஆடி அசைந்தன...

சின்னஞ்சிறு விழிகளால் தேவேந்திரனை உற்று நோக்கினார் - விநாயகப் பெருமான்..

அந்த அளவில் தேவேந்திரனின் அகங்காரம் உடைந்து சிதறியது..

ஆற்றாமையால் கண்ணீர் பெருக்கெடுத்தது.

" சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவினுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தில் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயகா விரை கழல் சரணே.. சரணே!.. "

நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர் - அனைவரும்..

விநாயகப் பெருமான் முகமலர்ந்து புன்னகைத்தார்..

சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டியருளிய எம்பெருமான்
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டியருளினார்..

நான்முகனுக்கும் தேவேந்திரனுக்கும் சித்தத்தினுள் சிவலிங்கம் தோன்றியது..

ஆனால் - என்னென்று கேட்கத் தோன்றவில்லை..

விநாயகப் பெருமான் உணர்த்தியருளினார்..

பிஞ்சிலம் எனப்படும் தேவமல்லிகை வனத்தினுள் தேஜோமயமாகத் திகழும் சிவலிங்கம்.. அங்கே சென்றால் அடுத்த விளக்கம் கிடைக்கும்..

மின்னலென விரைந்து வந்தனர் - அனைவரும்...


காவிரிக்குத் தென்கரை... 

மல்லிகை வனமாகிய இத்திருத்தலத்தில் நான் முன்பே சிவவழிபாடு செய்திருக்கின்றேனே!..

நான்முகனின் திருமுகத்தில் புன்னகை அரும்பியது..

அங்குமிங்கும் நோக்கினர் அனைவரும்..

ஆங்கே - அவர்களுக்கு முன்னதாகவே கணபதி வீற்றிருந்தார்..

மீண்டும் அவரைப் பணிந்தனர்...

திருக்கரத்தினால் எம்பெருமான் சுட்டிக் காட்டிய திசையில்...

சத்யோ ஜாதம் எனும் மேற்கு முகமாக ஒளிமிகும் சிவலிங்கம் விளங்கிற்று..

மீண்டும் திகைத்தனர்.. வேண்டி வந்தது அமுதக் கலசம்.. 

ஆனால், பிள்ளையார் மறுபடியும் சிவலிங்கத்தைக் காட்டியருள்கின்றாரே!..

திகைப்பினின்று விடுபட்ட
ஸ்ரீ ஹரிபரந்தாமன் - தனது ஆபரணங்களையெல்லாம் கழற்றி சிவலிங்கத் திருமேனியில் சாற்றினார்..

மீண்டும் பேரொளி வெளிப்பட்டது.. அந்தப் பிழம்பினுள்ளிருந்து,

அம்பிகையாகிய பராசக்தி அழகுக்கு எவரும் ஒவ்வாத வண்ணமாக
அபிராமவல்லி எனத் திருப்பெயர் கொண்டு வெளிப்பட்டனள்...

" தாயே!.. பராசக்தி!.. " - விண்ணதிர எழுந்தது ஜயகோஷம்!..

புன்னகைத்து நின்ற பொற்கிளியாள் - 
தனது செல்வத் திருக்குமரனைக் கனிவுடன் நோக்கினாள்...

தாயையும் தந்தையையும் வலம் செய்து வணங்கினார் விநாயகப் பெருமான்..

அந்த அளவில் சிவலிங்கத்தின் உள்ளிருந்து அமுதக் கலசம் வெளிப்பட்டது..

தாழ்ந்து பணிந்து அதனைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டான் தேவேந்திரன்...

" தேவேந்திரா!.. உனக்கு இன்னுமா விளங்க வைத்தல்வில்லை!..  சித்தத்தினுள் சிவலிங்கம் காட்டிய கணபதி சிவமும் அமுதமும் வேறுவேறு அல்ல என்ற ஞானத்தை அருளியிருக்கின்றார்.. சிவமே அமுதம்.. அமுதமே சிவம்!.. "

" இனி இத்தலத்தில் எம்பெருமானுக்கு எந்நாளும் அமுதீசர், அமுதகடேசர், அமிர்த லிங்கம் எனவும் திருப்பெயர்கள் வழங்குவதாக!.. "

ஸ்ரீ ஹரிபரந்தாமன் திருவாய் மலர்ந்தருளினான்..

" அத்துடன், அமுத கலசத்தை ஒளித்து வைத்து விளையாடிய தங்கள் அன்பு மருகனுக்கும் கள்ள வாரணன் என்ற திருப்பெயர் விளங்குவதாக!.. "

நான்முகன் கூறியவுடன் -

திருமேனி குலுங்க புன்னகைத்தார் - விநாயகப்பெருமான்..

அமுதக் கடம் வெளிப்பட்டதால் திருத்தலம் - திருக்கடவூர் என்றானது..


துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய் நின்கருணையினால்
விதியே புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே!..
-: அபிராமி பட்டர் :-


இறைவன் அமிர்தகடேஸ்வரர்
அம்பிகை - அபிராமவல்லி
தல விநாயகர்
கள்ள வாரணப் பெருமான்

தல விருட்சம் - பிஞ்சிலம் எனப்படும் மல்லிகை
தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்

திருக்கடவூர் திருக்கோயிலில் இறைவனுக்கு முன்பாக சங்கு மண்டபத்தின் தென்புறமாக கள்ளவாரணன் எனப்படும் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்துள்ளது..

அந்தாதி பாடிய அபிராமி பட்டர் கள்ள வாரணப் பெருமானின் மீது பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்..

கருணை வேண்டி நிற்கும் எவர்க்கும் நல்லருள் புரியும் நாயகன்..
நம்மைக் கலங்காமல் காத்தருள்வான்..

எளிமைக்கு எளிமையானவர் விநாயகப் பெருமான்..

திருப்புன்கூரில் நந்தனார் ஸ்வாமிகளின் பொருட்டு - திருக்குளம் அமைத்துக் கொடுத்த ஞானமூர்த்தி...

திருநாரையூரில் நம்பிக்கு எல்லாமும் தானே உரைத்து ஆளாக்கி வைத்தார்.

தில்லையில் ராஜராஜசோழனுக்கு தேவாரத் திருமுறைகளைக் காட்டியருளினார்..

திருஆரூரில் - சுந்தரருக்காக பொன்னை உரசி மாற்றுரைத்தார்..

உப்பூரில் - அடியவருக்காக வெயிலுகந்து விளங்குகின்றார்..

அகத்திய மாமுனிவரின் கமண்டலத்தினுள் சிறைப்பட்டுக் கிடந்த
காவிரி மீள்வதற்குக் காரணம் காக்கை வடிவாகிய கணபதியே!..


இன்று ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி..
ஸ்ரீ விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாள்..

அன்று போல் இன்றும் 
சிறைப்பட்டுக் கிடக்கும் காவிரியை மீட்டளித்து
சோழ தேசத்தின் துயர் தீர்க்க வேண்டி நிற்போம்..

அனைவருக்கும்
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்..

ஓம்
கம் கணபதயே நம: 
***

9 கருத்துகள்:

  1. அருமையான புராணம்.  அப்டித்து மகிழ்ந்தேன்.  விநாயகரைத் தொழுவோம்.  வினைகளெல்லாம் தீர்ந்து நன்மைகள் பிறக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      மூன்று நாட்களாக இணையம் இழுத்துக் கொண்டு இருக்கிறது.. Blogger ல் தட்டச்சு செய்ய இயலவில்லை..

      இணைய வேகத்திற்காக நள்ளிரவு ஒரு மணிக்கு விழித்து இந்தப் பதிவை ஒழுங்கு செய்திருக்கின்றேன்..

      சென்ற பதிவுகளின் கருத்துரைகளுக்கு இன்று தான் பதில் சொல்ல வேண்டும்...

      ஓம் கம் கணபதயே நம:

      நீக்கு
  2. விநாயகர் புராணம் நன்று.
    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. உப்பூர் கோயில் சென்றதில்லை. மற்ற கோயில்களுக்குச் சென்றுள்ளேன். மனம் நிறைந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  4. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் துரை அண்ணா.

    புராணம் மிக அழகாக உங்கள் நடையில் அழகு தமிழில் சொல்லியிருப்பதை மிகவும் ரசித்து வாசித்தேன்!

    அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  5. விநாயகர் புராணம் படித்து விட்டோம். பிள்ளையார் தரிசனம் ஆச்சு.
    சிறப்பான தொகுப்பு. அருமையாக சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. திருக்கடையூர் - கள்ளப் பிள்ளையார் சமீபத்தில் பார்த்தேன். பதிவில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..