நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 05, 2021

திகழொளி ஞாயிறு - 3

 நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..


ஆவணி மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக் கிழமையாகிய
இன்று
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன்
திருவடிகளில்
இச்சிறு கவிமாலையை
பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன்..


ஊர் காக்க உள்ளங்கொண்டு
உண்ணா நோன்பு இருப்பவளே
சீர் காக்கும் மக்கள் மனதில்
செம்மை நலனை அருள்பவளே
ஆத்தாளே அருளின் சுடரே
சமய புரத்தின் மாரியம்மா!..

கத்தியுடன் காபாலம்
கவலை தீர்க்கும் கரங்களிலே..
அக்கினியும் தள தளக்க
ஐந்தலையான் குடை பிடிக்க
முக்தி தரும் திருவடிகள்
முண்ட மாலை மேனியிலே..

முந்தி வரும் முத்தழகி
முறுவல் காட்டும் பொட்டழகி
வேப்பிலையில் காப்பருளி
கடுந்துயரைத் தீர்ப்பவளே..
மஞ்சள் இளங் குங்குமத்தில்
வைத்தியம் உந்தன் கோயிலிலே..


எட்டான திருக்கரங்கள்
கஷ்டம் எல்லாம் தீர்த்திடுமே..
ஈரவிழிப் பார்வையது
இஷ்டம் எல்லாம் சேர்த்திடுமே..
என் அன்னை இருக்கையிலே
ஏது எனக்கு மனக் கவலை..

செம்பட்டுச் சேலையம்மா
செவ்விளநீர் தீர்த்தமம்மா..
செந்தூரம் ஜோதியம்மா
சிறுநகையே நீதியம்மா..
எலுமிச்சை மாலையம்மா
மடிப்பிச்சை தாருமம்மா..

கண்பட்டு பிணிகள் எல்லாம்
கணப் போதில் தீருமம்மா..
கும்பிட்டு எழுவாருக்கு
கோடிநலம் சேருமம்மா..
மாவிளக்கு ஜோதியிலே
மங்கலமே தாருமம்மா..


அம்மா உன் சந்நிதியில்
ஆயிரமாய் சுடர் விளக்கு
அண்டி வரும் அடியனுக்கு
வழி காட்டும் திரு விளக்கு
ஆயிரமாய் குறை என்னெஞ்சில்
அத்தனையும் நீ விலக்கு...

அன்னை உந்தன் சந்நிதியில்
சாம்பிராணி வாசம் அம்மா..
சண்பகமும் மல்லிகையும்
உன புகழைப் பேசும் அம்மா..
சந்ததமும் காணக் காண
சந்ததியும் வாழும் அம்மா..


என் பாட்டைத் தாயும் கேட்டு
பொன் முகத்தை நீயும் காட்டு..
வேப்பிலையைத் தானும் வீசி
வலி அதனை நீயும் ஓட்டு..
இன்னும் பல நானும் பாட
நாவினிலே தமிழைக் கூட்டு..

மஞ்சள் முக நெற்றியிலே
மணம் வீசும் திருநீறு..
மங்கலமே நீயாக
வந்து சேரும் பெரும் பேறு..
அஞ்சாதே எந்தன் மனமே
அன்னை இருக்க குறையேது!..
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. ஆயிரம் குறைகளை ஆயிரம் கண்ணுடையாள் தீர்த்து வைப்பாள்.
    கவிதை பாட வரம் அளித்து இருக்கிறாள் மகனுக்கு. நாவினிக்க கவிதை பாட வரம் அருள்வாள் மேலும்.
    மனக்கவலையை போக்குவாள்.
    படங்களும், அருமை.
    கவிதை மிக அருமை.
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு அன்பின் நல்வரவு..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  2. அன்னை அவள் அனைவரையும் காக்கட்டும் 
    நம்மையெலாம் கரை சேர்க்கட்டும் 
    துன்பமெல்லாம் நீங்கிடவே 
    இன்பமெல்லாம் பொங்கிடவே 
    இனியென்றும் அவள் துணையிருக்கட்டும் 
    அழகு தமிழ் பா மாலை கட்டி 
    அன்னைக்கே சாற்றி விட்டீர் 
    அந்த அமுது தன்னை நாங்கள் 
    அனுதினமும் பருகிடவே என்றும்
    அன்னை அருள்  செய்யட்டும்.

    சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  3. மாரியம்மன் தாலாட்டு நினைவில் வந்தது. அன்னை சக்தி அனைவரையும் காத்து அருள்வாள். அனைவர் துன்பங்களும் அடியோடு ஒழியட்டும். ஓம் சக்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      தங்கள் பிரார்த்தனையின்படியே துன்பங்கள் அகலட்டும்...

      நன்றியக்கா...

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  4. நேற்றே படித்து விட்டேன், இன்றுதான் பதில் எழுதுகிறேன். ஆவணி ஞாயிறன்று சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வைத்ததற்கு நன்றி. 

    பதிலளிநீக்கு
  5. சமயபுரம் மாரியம்மனின் தரிசனம் - நன்றி. பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..