நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 08, 2019

விஜயதசமி


அன்பின் இனிய
விஜய தசமி நல்வாழ்த்துகள்!..

மங்கலகரமாகிய நவராத்திரி வைபவத்தில் -

வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும் 
செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ ஆனந்த லக்ஷ்மியையும் 
கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஞான சரஸ்வதியையும்

- நெஞ்சார வணங்கி மகிழ்ந்தோம்.

இன்று விஜயதசமி.
ஸ்ரீ துர்காம்பிகை - பட்டீஸ்வரம்
அநீதியை எதிர்த்து  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி -
மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்தாள்.
ஒன்பதாம் நாளன்று மகிஷன் வீழ்ந்தான்.

அத்துடன் ஆணவமும் அகந்தையும் அடியோடு அழிந்தன...

அன்னை போர்க்கோலத்தில் இருந்து மீண்டாள்.. 
சாந்த ஸ்வரூபிணியாக மங்களத் திருக்கோலம் கொண்டருளினாள்.

மறுநாள் தேவர்களும் முனிவர்களும் சகல உயிர்களும்
அன்னை ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 

ஊர்க்கும் உண்டு உடையானின் சிறப்பு என்பது சிவநெறி.

அதுபோல அம்பிகை தனது திருக்கரங்களில் ஏந்தியருளிய 
ஆயுதங்களுக்கும் சிறப்பு உண்டு!..


அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்த்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே.. 


என்று, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியையும்
அவள் தாங்கி நின்ற ஆயுதங்களையும்  வணங்கி மகிழ்ந்தனர்.

விமலையின் வெற்றியைக் கொண்டாடியபடியால் - விஜய தசமி.

சிறார்களுக்கான கல்வி பயிற்றுவிப்பதற்கும்
இல்லத்தில் நல்லனவற்றை மேற்கொள்வதற்கும்
புதிய வணிகம் தொடங்குவதற்கும் உகந்த நாளாக -
இந்நாள் விளங்குகின்றது. 


ஸ்ரீராமபிரான்  - ராவணனை வெற்றி கண்ட நாள் என்றும்,

பஞ்சபாண்டவர்கள் தங்களது அஞ்ஞாத வாசம் முடிந்தபின் -
வன்னி மரத்தில் ஒளித்து வைத்திருந்த ஆயுதங்களை மீண்டும் 
எடுத்துக் கொண்டு - ஸ்ரீதுர்கா தேவியை வழிபட்ட  நாள் என்றும் 

- விஜயதசமி குறிக்கப்படுகின்றது..

என்றாலும் -


விரதம் இருந்து மகிஷனை வென்ற மகேஸ்வரி - 
வெற்றிக் களிப்புடன் சிவபெருமானின் திருமார்பில் சாய்ந்து 
பேருவகை கொண்ட நாள் - விஜயதசமி!..
* * * 


நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் 
நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்!.. 

மக்களிடையே தனது அருள்மொழிகளால் நல்லுறவை வளர்த்தவர்
மகான் ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

அவதார புருஷராகிய ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மகாசமாதி அடைந்த நாள் விஜயதசமி (15 அக்டோபர் 1918) நாளாகும்.

மேலும்,


மதுரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் சித்தி ஆனதும் (1932) விஜய தசமி நாளில் தான்!.. 

ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவசமாதி மதுரை அரசரடியில் உள்ளது.

ஆக, உத்தம புருஷர்களை சிந்திக்கவும் வந்திக்கவும் உகந்த நாள்.

எல்லாவற்றையும் விட இன்னொரு சிறப்பு!..

ஒன்பது நாட்களும் ஒருமித்த சிந்தையுடன் - 
அன்புடனும் தன்னை வழிபட்டவர்களின் இல்லங்களைத் தேடி, விஜயதசமியன்று அன்னை பராசக்தி வருகின்றாள்...

அம்பிகை நம்மைத் தேடி வருகின்றாள் என்பது எத்தனை மகத்தானது!.. 

அவளை மகிழ்வுடன் நாம் வரவேற்போம்!.. 
அவள் திருவடிகளைப் போற்றி வணங்குவோம்!.. 


எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி 
ஏழுகடல் அவள் வண்ணமடா!.. - அங்கு
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து 
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?.. - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கே நடம் புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீளஇடை யின்றி நீநினைத்தால் - அம்மை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..
- : பாவேந்தர் பாரதிதாசன் :-


யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீநிறைந்தாய்
தீது நன்மையெல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை
போதும் இங்கு மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கை எல்லாம்
ஆதிசக்தி தாயே என்மீதருள் புரிந்து காப்பாய்!..
- : மகாகவி பாரதியார் :-


உனக்கே வெற்றி!.. உந்தனுக்கே வெற்றி!.. 
உன் திருவடிகளைப் போற்றுகின்றேன்!..
மஹிஷனை வென்றவளே!.. 
மண்ணுலகைக் காத்தவளே!..
ஏலவார்குழலீ!.. எங்கள் அன்னையே!..
நின் திருவடிகள் சரணம்!.. சரணம்!..




நன்றி - ஸ்ரீ கேசவ் ஜி 
விஜய தசமி எனும் நன்நாள்
பொலிவு கொண்ட பெண்மை போரிட்டு வென்ற நாள்!..
பேர் கொண்ட பெண்மை பெருமை கொண்ட நாள்!..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி: ப்ரசோதயாத்:

ஓம் சக்தி!.. ஓம் சக்தி!..
ஓம் சக்தி!..
 * * *

14 கருத்துகள்:

  1. அழகான விளக்கவுரை ஜி
    இனிய விஜய தசமி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. விஜய தசமி சிறப்பு பகிர்வு அருமை.
    பாடல்கள், படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு பகிர்வு ஐயா...
    விளக்கங்கள், படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. பாரதியார், பாவேந்தர் பாடல்களுடன் பதிவை சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள்.  

    விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. விஜயதசமி சிறப்புப்பதிவு அருமையாக உள்ளது. கேஷவின் ஓவியங்களோடு கூடிய சிறப்பான பதிவு. அன்னையின் சிறப்பை விவரித்த விதமும் அழகு! பாரதி, அவரின் தாசர் ஆகியோரின் பாடல்கள் பாடுகையிலேயே மனதில் வீரம் மேலோங்கும். புனிதமான இந்த விஜயதசமி நன்னாள் அனைவருக்கும் எல்லாச் சிறப்புக்களையும் வாரி வழங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. விஜய தசமி அன்று விஜயம் செய்ய நேரிட்டது.

    நல்பதிவு. பாரதியின் பாடலையும், தம் குருநாதன் முன்னே சமர்ப்பித்த பாரதிதாசனின் முதற்பாடலையும் தரிசித்தேன்.

    படங்கள் வழக்கம்போல் கண்கவர்வன. இரண்டாவது படம் அழகில் மிளிர்வது. கொண்டயராஜுவின் கைவண்ணமோ எனத் தோன்றுகிறது.

    கடைசியில் கேஷவ்! கேஷவின் ‘ஹிண்டு’ கேலிச்சித்திரங்கள் அசட்டுத்தனமானவை என்று நினைப்பவன் நான் (மற்ற தேர்ந்த கார்ட்டூனிஸ்ட்டுகளோடு ஒப்பிடுகையில்). அவர் இங்கே தன் தூரிகையால் தாயின் உருவைத் தீட்டியிருக்கும் விதம்.. ஆ.. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஷவ் தி ஹிந்துவை விட்டு வெளியே வந்துட்டார்னு கேள்விப் பட்டேன். அவர் கார்ட்டூன்களை நான் அதிகம் பார்த்தது இல்லை. ஆனால் அவருடைய இம்மாதிரிப் படங்கள்! அதிலும் அம்பிகையின் மூலத்தத்துவத்தையும் கிருஷ்ணாவதாரத்தின் உள்ளடங்கிய பொருளையும் ஓவியங்களாகக் கொண்டு வருவதில் அவருக்கு ஈடு, இணை இல்லை. இதற்கெனப் பிறந்தவரைப் போய்க் கார்ட்டூன் போடச் சொன்னால் எப்படி? நம் உள்ளே இருக்கும் இறைத்தன்மையை நாமே புரிந்து கொள்ள முடியும் ஓவியங்கள்! அழியாத வண்ணக்கலவைகள்!

      நீக்கு
    2. Keshav, the cartoonist எங்கே போனார் என்று கவலைப்படவேண்டாம். கேஷவ் எனும் ஓவியரைக் கவனிப்போம்!

      நீக்கு
  7. விஜயதசமி இடுகை அருமை. படங்கள் கவர்ந்தன

    பதிலளிநீக்கு
  8. நன்னாளில் அருமையான பதிவு. திரு கேசவ் ஓவியங்களை இணைத்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. பதிவு தெளிவு விவரங்களிலும் சொல்லிப்போன விதத்திலும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. விஜயதசமிக்கான விளக்கங்களும் தகவல்களும் சிறப்பு. கேஷவ்ஜி ஓவியங்கள் வெகு சிறப்பு. அசத்துகிறார் அவர். அவரது கிருஷ்ணா ஓவியங்கள் ஒவ்வொன்றும் பிடிக்கும்.

    அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள். நலமே விளையட்டும்.

    தமிழகத்தில் இருந்ததால் பதிவுகள் பல படிக்க இயலவில்லை. தில்லி திரும்பிய பின்னர் தான் ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. விஜயதசமிபற்றிச் சொன்னீங்க.. என் கேதாரகெளரி பற்றிச் சொல்லல்லியே..

    ஆஆஆ சீரடி பாபா.. கனடாவில் நின்றபோது பெரும்பாலும் வியாழக்கிழமைகளில் இவரிடம் போகாமல் விட்டதில்லை...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..