நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

திருநாவலூரர்

குண்டையூர்!..

திருஆரூருக்கு தெற்கே  திருக்கோளிலி (திருக்குவளை) என்னும் தலத்திற்கு அருகில் உள்ளது... 

குண்டையூரில்
வேளாண் குடியில் பிறந்த பெருஞ்செல்வர். குண்டையூர்க் கிழார்..
மிகப் பெரிய மனம் படைத்தவர்...

ஸ்ரீ சுந்தரர்
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்
திருநாவலூரில் தோன்றி - திரு ஆரூரன் எனப்பட்ட
சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் பேரன்பு கொண்டவர்... 

சுந்தரரின் சுந்தரத் தமிழில் மனம் பறி கொடுத்தவர்...  

சுந்தரர் திருஅமுது செய்தற்கு என - நெல், பருப்பு, காய்கனிகள் - முதலியவற்றை  பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல்
அனுப்பி வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்... 

அப்படி வழங்கிய பொருட்கள் -
சுந்தரர் செய்யும் அறச்செயல்களுக்கும் உகந்ததாக இருந்தது...

ஒருசமயம் மழையின்மையால் நீர் வளம் குறைய -  நிலவளமும் குன்றியது

விளைபொருள்கள் குறைந்தன. சுந்தரர்க்கு அனுப்பும் வழக்கத்திற்கு ஊறு நேர்ந்து விடுமோ என அஞ்சிய  - குண்டையூர்க் கிழார் மனக்கவலையுடன்  உணவும்  உட்கொள்ளாதவராகத்  துயின்றார்... 

அவரிடம் கருணை கொண்ட சிவபெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குக் கொடையளிக்க உனக்குப் படி அளந்தோம்!.. என்றருளிச் செய்தார்... 

ஈசனின் ஆணைப்படி - குபேரன்  குண்டையூர் முழுதும் நெல் மலையை விளைத்தான்...


காலையில் எழுந்த குண்டையூர்க் கிழார் நெல்மலையைக் கண்டு வியந்தார்... 

சுந்தரரும் பரவை நாச்சியாரும்
திருஆரூருக்கு ஓடோடிச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றை விவரித்தார்...  

அந்த நெல்மலை மனிதர்களால் எடுக்கக் கூடியதன்று. ஆயினும் அதனைத்  தாங்கள் எவ்விதமேனும்  ஏற்றருள வேண்டும்!..  - என்று கேட்டுக் கொண்டார்.. 

அதைக் கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளினார்... 

அங்கே விளைந்திருந்த நெல்மலையைக் கண்டு வியந்தார்...  

நெல்மலையை எடுத்துச் செல்ல ஆட்களைத் தரும்படி வேண்டிக் கொண்டு,

நீள நினைந்தடியேன் உனைநித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே,.(7/20)


எனத் திருப்பதிகம் பாடினார் . அவ்வேளையில் -

''இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் ஆரூர் முழுதும் நெல்லைக் கொண்டுவந்து குவிக்கும்!..'' என அருள்வாக்கு வானில் எழுந்தது... 

அதைக் கேட்டு மகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றியபடி -
குண்டையூர்க் கிழாரிடம் விடை பெற்று - திருஆரூரை அடைந்தார்... 

அன்பு மனையாளாகிய பரவை நாச்சியாரிடமும்
நடந்ததைக் கூறி மகிழ்ந்திருந்தார்...


ஈசன் அருளியவாறே - அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டு வந்து திருஆரூரில் பரவையார் மாளிகையிலும் மற்ற திருவீதிகளிலும் நிரப்பின. 

காலையில் நெற்குவியலைக் கண்டு வியந்து மகிழ்ந்த பரவையார் - அவரவர் வீட்டு முகப்பில் குவிந்திருக்கும் நெல்லை அவர்களே எடுத்து கொள்க!.. - எனப் பறையறைவித்தார். 

ஆரூர் வாழ் மக்களனைவரும் நெல் பெற்றுச் சுந்தரரைப் போற்றி வாழ்த்தினர். 


இந்த வைபவம் திருஆரூரில் இன்றும் கொண்டாடப்படுகின்றது. 

திருஆரூர் வீதிகளில் மாசி உத்திரத்தன்று  ஈசன் நந்தி வாகனத்தில் எழுந்தருள பூத கணங்களைப் போல வேடம் அணிந்தோரும் உடன் வருவர். 

அப்போது அவர்களிடம் நெல் கோட்டைகளைக் கொடுத்து வாங்கிக் கொள்வர். இதனால் தான்ய விருத்தியாகும் என்பது நம்பிக்கை. 


திருக்கயிலாய மாமலையில் - 
அம்பிகையின் சேடிப் பெண்களாகிய அநிந்திதை, கமலினி என்னும் மங்கையரை - ஒரு நொடியிலும் நொடியாக நோக்கியதற்காக -
அவர்களுடன் வாழ்ந்து வருமாறு பணிக்கப்பட்டவர் சுந்தரர். 

அதன்படி - திருநாவலூரில் பிறந்து வளர்ந்து -  பதினாறாம் வயதில் சடங்கவி சிவாச்சார்யார் தம் அன்பு மகள் சுகுணவதியை மணம் செய்யுங்கால் ஈசனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டார். 


தடுத்து ஆட்கொள்ளப்பட்ட தலம் - திருவெண்ணெய்நல்லூர்.

இறைவனைப் பித்தன் என்று பேசிய பெருமைக்கு உரியவர்..

தேவாரம் அருளிய மூவருள் சுந்தரர்க்கு பல தலங்களிலும் பொன்னும் பொருளும் அருளப்பட்டிருக்கின்றது . 

இப்படிப் பொன்னும் மணியும் அருளப்பட்டது
சுந்தர்ர் இல்லறவாசி என்பதலா!..

சுந்தரர் ஏழை எளியோரிடம் அன்பு கொண்டு
தான தர்மங்களைச் செய்தார் - என்பதற்காக!.. 

பரவை நாச்சியார் வாடுகின்றாள்!..
- என நேரடியாகவே பதிகம் பாடி கேட்டிருப்பினும்
- தான் பெற்ற அளவற்ற செல்வங்களை அனைவருக்கும்
வாரிக் கொடுத்த வள்ளலாகவே சுந்தரர் காணப்படுகின்றார். 

முன்னோர்களான திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோரைப் போன்றே - மனிதநேயம் மிக்கவராகவே திகழ்கின்றார்.

இதற்கு ஒரு சான்று!..


திருஆரூரில் சுந்தரர் வாழ்ந்த நாட்களில் சோழ மன்னனின் சேனைத் தலைவர் என விளங்கியவர் கோட்புலி என்பவர். வேளாளர் குடியில் பிறந்தவர்.


இவர் திருக்கோயில் திருவமுதுக்குத் தேவையான நெல்லைச் சேகரித்துத் தந்த திருத்தொண்டினால் நாயனார் ஆனவர்.  

கோட்புலி நாயனார் - தம் ஊராகிய திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளும் படி சுந்தரரை வேண்டிக் கொண்டார். 


அதற்கிசைந்த சுந்தரர் திருநாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளினார். 


கோட்புலியாரும் அன்புடன் வரவேற்றுத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று திருவமுது செய்வித்தார். அத்தோடு நில்லாமல் -  

தம் அன்பு மகள்களாகிய சிங்கடி, வனப்பகை என்னும் கன்னியரை - மணம் புரிந்து ஏற்றுக் கொண்டருளுமாறு வேண்டினார். ஆனால் சுந்தரரோ - 

சிங்கடி, வனப்பகை எனும் இரு கன்னியரையும் தம் மக்களாக ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் - 

சேடார் பூங்குழற் சிங்கடி அப்பன்
திருஆரூரன் உரைத்த.. (7/15)


வஞ்சி யும்வளர் நாவ லூரன்
வனப்பகை அவளப்பன் வன்றொண்டன்.. (7/87)


- என்று பல பதிகங்களிலும் இதனைக் குறிப்பிட்டு பரவுகின்றார் எனில் - சுந்தரின் மாண்பு போற்றத்தக்கது அல்லவோ!..

சங்கிலியார் - பரவையார்
கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி எனும் தலத்தில் 
இறைவனைத் தரிசிக்குபோது
எம்பெருமான் சுந்தரர்க்கு.பொன்னும் மணியும் வழங்குகின்றான்...

அதனை எடுத்துக் கொண்டு சுந்தரர் ஆரூர் நோக்கி நடந்த வேளையில்
ஈசனின் ஆணைப்படி பூதகணங்கள் கள்வர் வேடங்கொண்டு
சுந்தரர் வசமிருந்த பொருள்களைக் கவர்ந்து சென்று விடுகின்றன...

இதனால் வருத்தமுற்ற சுந்தரர் -

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங்கிருந் தீர்எம் பிரானீரே.. (7/49)

நாட்டில் அக்கிரமமும் அநீதியும்  மலிந்து கிடக்கும் வேளையில் அவற்றைத் தடுப்பதற்கில்லாமல் - நீர் எதற்காக இங்கிருக்கின்றீர்?.. 

கொடுமைகள் நடக்கும் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லை...
அதுவும் நீர் அறிந்ததே!. அப்படியானால் -
இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்?..

- என்று ஈசனிடமே நீதி கேட்டு, திருப்பதிகம் பாடி தான் இழந்த பொன் பொருளினைத் திரும்பப் பெற்றிருக்கின்றார்....

நம் பக்கம் நியாயம் இருக்குமேயானால் - நாமும் இவ்வாறே - கேட்கலாம்!... 


தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அரசன் முதல் ஆண்டி வரை சிவனடியார்களைத் தொகுத்துக் கூறும் திருத்தொண்டத் தொகையினை அருளியவர்...

வாழும் காலத்தில் வள்ளல் மனத்தினராக - வாழ்வாங்கு வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் - கேரள தேசத்தின் திருஅஞ்சைக் களத்திலிருந்து திருக்கயிலை செல்ல விழைந்தார்... 

அந்த அளவில் அவரை அழைத்துச் செல்ல வெள்ளை யானை வந்து நின்றது...
அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனாரும் உடன் சென்றார்... 

அந்த நாள்,  ஆடி மாதம் - சுவாதி நட்சத்திரம்!..


இந்திரன் முதலான தேவரெல்லாம் எதிர்கொண்டழைத்தனர்... 

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே!.. (7/100)

அம்மையப்பன் திருவடிகளை வீழ்ந்து வணங்கினார் சுந்தரர்...
மீண்டும் - இறைவனின் அனுக்கத் தொண்டராகி அருகிருந்தார்...

இன்று ஆடி சுவாதி... சுந்தரர் திருக்கயிலை மலைக்கு ஏகிய நாள். 
சகல சிவாலயங்களிலும் சுந்தரர் குருபூஜை நிகழ்கின்றது..

சமயாச்சார்யார்கள் நால்வருள் வன்தொண்டர் எனப்பட்டவர்...

அன்னவர் திருவடிகள் தலைமேற்கொண்டு
ஏழை எளியவர்க்கு நம்மால் இயன்றதைச் செய்து மகிழ்ந்திருப்போம்...


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்திடைச் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுஇருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே..(7/29)
-: சுந்தரர் :-

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

18 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    திருநாவலூர் சென்ற மாதிரியும் இருக்கிறது. இல்லைமாதிரியும் இருக்கிறது! சரியாய் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு... வாழ்க நலம்..

      நீக்கு
  2. கண்டேன். படித்தேன். மகிழ்ந்தேன். நனறி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. திருநாவலூர் போனதில்லை. பரவை நாச்சியாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் சிலை பிரதிஷ்டை உள்ளதையும் இப்போதே அறிந்தேன். திருவெண்ணெய்நல்லூருக்கும் போக ஆசை தான்! ஆனால் இங்கெல்லாம் போக முடியவில்லை. சுந்தரர் கதையை அருமையாகவும் சுருக்கமாகவும் எளிமையான வார்த்தைகளால் சொல்லி இருப்பதற்கு நன்றி. இழந்த பொன்னை மட்டுமா திரும்பப் பெற்றார்? இழந்த கண்களையும் அல்லவோ திரும்பப் பெற்றார். இறைவனை அதிகாரம் செய்து தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளும் சுந்தரர் மற்றவர்களில் இருந்து தனிச் சிறப்புப் பெற்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      ஈசனிடம் சக மார்க்கம் கொண்டவர் என்பர் ஆன்றோர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. //குண்டையூர்க் கிழார்.. மிகப் பெரிய மனம் படைத்தவர்...//

    இன்றைய மனிதர்களை மிகப் பெரிய பணம் படைத்தவர் என்று சொல்லும் நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      அன்றைக்கு அப்படியெல்லாம் மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. ஆடி சுவாதி நாளுக்கான சிறப்பை அறிந்தேன்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. சிறப்பான தகவல்கள். சுந்தரர் பற்றிய தகவல்கள் பல தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. சுந்தரர் வரலாற்றை மிக அருமையாக சொல்லியதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.
    கோவில்கள் சென்று இருக்கிறேன், விழாக்கள் பார்த்தது இல்லை.
    அதையும் நேரில் பார்த்த உணர்வு உங்கள் பதிவுகளின் மூலம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. அறிந்திராத பல விஷயங்கள் அறிய முடிந்தது துரை அண்ணா. சுந்தரர் பற்றியும், பெரிய மனம் படைத்த குண்டையூர் கிழார் பற்றியும் கதையும் அறிந்தேன்.

    படங்கள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. அற்புதமான தகவல்கள் ....மிக அருமை

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..