நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 16, 2019

கல்யாண வைபவம்

ஸ்ரீ நந்திகேஸ்வரர்  - ஸ்ரீ சுயம்பிரகாக்ஷினி தேவி
திருக்கல்யாணம்.

இன்று சனிக்கிழமை. (மார்ச்/16)
பங்குனி வளர்பிறை - தசமி திதியும்
புனர்பூசமும் கூடிய நன்னாள்,
முன்னிரவு 7.30 மணியளவில்
திருமழபாடி திருக்கோயிலில்!..

அனைவரும் வருக!..
திருவருள் பெறுக!..
***

சிவாலயங்களில் முதல் வணக்கம்  - விநாயகப் பெருமானுக்கு!..

சில திருக்கோயில்களில் - வெளியே தீர்த்தக் கரை விநாயகராக இருப்பார். அல்லது ஸ்தல விநாயகராக மூலஸ்தானத்தில் விளங்கும் சிவபெருமானை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார்...

அல்லது ஆலயத்தின் தலைவாயிலில் -
ராஜகோபுர கணபதியாக கிழக்கு முகமாக காட்சி தருவார்.

 

விநாயக மூர்த்தியை வணங்கி ராஜகோபுரத்தைக் கடந்தபின் நாம் கண்டு வணங்குவது அதிகார நந்தி எனும் நந்தியம் பெருமானைத்தான்!.. 

இவருடைய அனுமதியுடன் தான் நாம் சிவதரிசனம் செய்கின்றோம் என்பது மரபு. அத்தனை பெருமை இவருக்கு!..

இன்னும் சொல்லப்போனால் - நமக்கு சிவதரிசனம் செய்விப்பதே
ஸ்ரீ நந்தியம் பெருமான் தான்!..

அதனால் தானே - எல்லாம் வல்ல எம்பெருமானே -
முன் நின்று இவரது திருமணத்தை நடத்தி வைத்தார்!..

திருக்கயிலை மாமலை!.. அந்தி மயங்கும் மாலை நேரம்!..


திருமாமலையை  கதிரவன் தன் திருக்கதிர்களால் அலங்கரிக்க - அமரர்களும் மகரிஷிகளும் கூடி வந்து எம்பெருமானையும் அம்பிகையையும்  தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பொற்பிரம்புடன் சேவை செய்து கொண்டிருந்த நந்தியம் பெருமான் மனதில்,

தாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன!.. - என்று ஒரு ஆவல் தோன்றியது.

அருகிருக்கும் நந்தியின் ஆவலை உள்ளுணர்ந்த ஈசனும் அம்பிகையும் - அவ்வாறே ஆகுக!..  - என்று அருள் புரிந்தனர்.

இதைக் கேட்டுப் பதற்றமடைந்த நந்தி,

ஐயனே!. சர்வசதாகாலமும் தங்கள் திருவடித் தாமரைகளின் அருகிலேயே காத்துக் கிடக்கும் அடியேன் மனதில் இப்படியான எண்ணம் எப்படித் தோன்றியது!.. ஏன் தோன்றியது?.. பூவுலகில் எனக்கு யாரைத் தெரியும்?.. தங்களைப் பிரிந்து நான் எப்படிச் செல்வேன்?.. எங்கு செல்வேன்?.. என்னைப் பொறுத்தருளுங்கள்!.. - என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்.

அதைக் கண்டு உளம் நெகிழ்ந்த அம்மையும் அப்பனும் - 

அஞ்சற்க!.. நீ தர்மத்தின் மறு வடிவம் அல்லவோ!.. தர்மத்தைப் புத்திரனாகப் பெற வேண்டி -  கங்கையினும் மேலான காவிரிக் கரையில் தவம் இயற்றும் சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் வந்து ஆட்கொள்வோம்!..  

- என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இதன்படி, திருஐயாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர் செய்த தவம் நிறைவேறும் புண்ணிய வேளையும் வந்தது.

சிலாத முனிவரே!.. நீர் இதுகாறும் செய்த தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!.. - என அறிவிக்கப்பட்டது...

பெருமகிழ்ச்சியடைந்த சிலாத முனிவர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாக பூமியை உழுதிட - பூமிக்குள்ளிருந்து பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது.

ஆவலுடன் முனிவர் பெட்டகத்தைத் திறந்திட - அதனுள், ரிஷப திருமுகமும் நெற்றிக் கண்ணும் நான்கு திருக்கரங்களும் கொண்டவராக - கோடி சூர்ய ப்ரகாசம் என நந்தீசன்  தோன்றினார்.

அப்போது பூமி எங்கும் சுகந்த மணம் வீசியது. பன்னீர் மழையாகப் பெய்தது. தேவ துந்துபிகள் முழங்கின...

ஒருகணம் முனிவர் மருண்டார்.  மறுகணம் அவரது மருட்சி மாறிட, மழலையாகத் தவழ்ந்து - பாலகனாக - முனிவரின் திருமகனாக எழுந்தார் - நந்தீசன்.

சிலாதரின் மருட்சி அகலும் வண்ணம் - மறைபொருளாக தேவ ரகஸ்யங்களை ஐயாறப்பர் அசரீரியாக உணர்த்தி அருளினார்.

நந்தீசனின் திரு நட்சத்திரம் பங்குனி - திருவாதிரை. அன்றே நந்தீசனுக்குச் சிவாகமச் செல்வனாக அபிஷேகம் செய்து வைத்தார்  - ஐயாறப்பர்.

இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட சிலாதர் மனம் கலங்கினார். காரணம் - இறைவன் ஆணைப்படி நந்தீசனின் ஆயுள் பதினாறு வருடங்கள் தான்!..

மனம் கலங்கி வருந்திய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்த நந்தீசன், தவத்தைச் செய்து சிவத்தை அடைய விரும்பினார். தந்தையாகிய சிலாதரிடம் அனுமதி பெற்று கடும் விரதங்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டார்.

திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்றபடி எண்ணாயிரங் கோடி முறை சிவ பஞ்சாட்சர மகா மந்திரத்தை உச்சரித்து, சிவசக்தி தரிசனம் பெற்றதுடன் ஜபேசன் எனத் திருப்பெயரும் சூட்டப்பட்டார்.

மந்திர ஜபம் செய்த போது கழுத்தளவு நீரில் நின்றிருந்ததால் - மீன்களால் அரிக்கப் பட்டு, எலும்புக்கூடாக இருந்த நந்தீசனின் மேனியைக் கண்டு உமையம்மை உளம் உருகினாள். 

அன்னையின் மனம் கசிந்திட நந்தீசனை வாரி அணைத்துக் கொண்டாள்.

அவ்வேளையில் - அம்பிகையில் திருத்தனபாரங்களில் இருந்து சுரந்த பால் நந்தீசனின் உடலை நனைக்க - நந்தீசன் முன்னை விட பேரழகுப் பிரகாசமான திருமேனியைப் பெற்றனர்.

அம்மையப்பனுடன் நந்தியம்பெருமான்  
சிவகணங்களின் தலைவன் என, நந்தீசனுக்குப்
பட்டாபிஷேகம் செய்து வைத்தார்- எம்பெருமான்  - .
சகல தேவர்களும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்.

பொற்பிரம்பினையும் மான் மழுவையும் சந்திர கலையையும் வழங்கினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும்  - அதிகார நந்தி எனும் பெரும் பதவியினையும் அருளி, நந்தீசன் மீது பொன் மாரி பொழிந்தார்.

அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார் - நந்தீசன்.

இந்த வேளையில் சிலாத முனிவர் - சிவபெருமானைப் பணிந்து -
ஐயனே!.. என்மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன்.
அருள் புரிய வேணும்.. ஸ்வாமி!.. - என்று, தன் ஆவலை வெளியிட்டார்.

உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது...
பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!..

எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்!..
- என்று சிவபெருமானுக்கும் மகிழ்ச்சி!..

காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் -
என் அன்பன் வியாக்ரபாதனின் மகள் சுயம்பிரகாஷினியை மணம் பேசுக!.. யாம் ஐயாற்றிலிருந்து வந்து மணவிழாவினை நிகழ்த்துவோம்!..

- என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அம்பிகைக்கு ஆனந்தம்...
வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ இருக்கின்றது என்று!..

அப்புறம் என்ன!.. 

திருமழபாடி முழுதும் கோலாகலம் தான்!.. கொண்டாட்டம் தான்!..

அதன்படி, இன்று - பங்குனி புனர்பூசம்.

 ஸ்ரீ நந்தீசன் 
திருஐயாற்றிலிருந்து, அம்பிகையும் ஐயாறப்பரும் பொற்பல்லக்கில் எழுந்தருள -

நந்தீசன் - கிரீடமும் பொற்பிரம்பும் தாங்கியவராக வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து உடன் வர, சிலாத முனிவருடன் மற்ற முனிவர்களும் வேத மந்த்ர கோஷங்களுடனும்  சீர்வரிசைப் பொருட்களுடனும் -

இதோ புறப்பட்டு விட்டனர்- திருமழபாடியினை நோக்கி!..

திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன் பேட்டை - வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி வடகரை - திருமழபாடிக்கு வந்து சேரும் அனைவரையும் அன்புடனும் ஆதுரத்துடனும் வரவேற்க -

ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானும்  - ஊர்மக்களும் திரண்டு வந்து காத்திருக்கின்றனர்.

இன்று - முன்னிரவு 7.30 மணியளவில் திருமாங்கல்யதாரணம்!..

அனைவரும் வருக!.. அருளமுதம் பெறுக!..
வளம் பல பெருக - வருக!.. வருக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

24 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.
    நந்திபெருமானின் பூவுலகம் வருகை, அவர் பக்தி, அவர் திருமண நடைப்பெறபோவது அனைத்தும் அழகான விவரிப்பு.
    படங்கள் எல்லாம் அழகு.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.
    திருமண வைபவம் நாளை வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு....
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      சென்ற ஆண்டு நந்தி திருக் கல்யாண தரிசனம் கிடைத்தது....
      ஊரில் இருந்தேன்....

      சப்த ஸ்தான தரிசனமும் செய்தேன் இந்த ஆண்டு இங்கே....

      சில கோயில்களில் படமெடுக்க கெடுபிடிகள் என்கிறார்கள்....

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.,

      நீக்கு
  2. ந்ந்தியெம்பெருமான் விளக்கம் அருமை.

    திருமழபாடி-பதிவர் தமிழ் இளங்கோ மனதில் வந்து போனார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த.,
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    இன்று புனர்பூசமா? அடடே... நான் அந்த நட்சத்திரம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்..
      நீங்கள் புனர்பூச நட்சத்திரமா!...

      வாழ்க நலம்...

      நீக்கு
  4. அருமை.. அருமை.. புராணக்கதையை படிப்படியாக அழகாக எடுத்துரைத்தீர்கள். நந்தீசருக்குத் திருமணமா? வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருமழபாடி... தமிழ் இளங்கோ ஸாரின் ஊர் இல்லை இது? ஓ... நெல்லையும் சொல்லி இருக்கிறார்...

    அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஆம்.. திரு . தமிழ் இளங்கோ அவர்களின் ஊர் இதுதான்...

      நீக்கு
  6. திருமழம்பாடி என்றது நண்பர் திரு.தி.தமிழ் இளங்கோ அவர்களின் நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தமிழ் இளங்கோ அவர்கள் தனது தளத்துக்கு வருவதில்லை...
      தங்கது வருகைக்கு மகிழ்ச்சி...

      நீக்கு
  7. அருமையான நாளில் சிறப்பான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. திருமழபாடி - ஊர் பெயர் படித்தவுடன் எனக்கும் தமிழ் இளங்கோ அவர்கள் தான் மனதில் வந்தார்.

    நல்லதொரு பகிர்வு. நந்தியம்பெருமான் பற்றிய சிறப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  9. அருமையான பதிவு! ஏற்கனவே அறிந்த கதை தான் என்றாலும் தங்களின் தீந்தமிழில் மிகச் சிறப்புடையதாக புத்துண‌ர்வை அடைந்து விட்டது!

    தஞ்சை இருப்பிடமாக இருந்தாலும் இதுவரை திருமழபாடி சென்றதில்லை. என்றைக்கேனும் போய் வர வேன்டுமென்ற ஆவல் உள்ளது. சகோதரர் தமிழ் இள்ங்கோ திருமழபாடி பற்றி எழுதியிருப்பது கூடவே நினைவுக்கு வந்து மனதை வேதனைப்படுத்தியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும்
      கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் துரை அண்ணா.

    நந்தியெம்பெருமானின் திருக்கல்யாணம்...திருமழப்பாடிக்குச் சென்றது திருமணம் பற்றி முன்பு இதே நாளில் நீங்க விரிவா ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லி பதிவு போட்டிருந்த நினைவு.

    படங்களும் அருமையான உங்கள் செந்தமிழில் நந்தியெம்பெருமானைக் குறித்த விஷயங்களும் கதையும் சிறப்பு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..

      வருடந்தோறும் நந்தி திருக்கல்யாண பதிவு வழங்குகின்றேன்..
      அதை விட வேறு வேலையும் உண்டா?...

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  11. மிக நல்ல பதிவு. நந்தியெம் பெருமானை பற்றிய தகவல்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். சப்தஸ்தான பல்லக்கு விவரங்களும், நந்தி பகவானின் திருமணத்திற்கு எந்தெந்த ஊரிலிருந்து என்னென்ன சீர்கள் வந்தன என்றும் குறிப்பிட்டிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சப்த ஸ்தான தலங்களில் அளிக்கப்பட்ட சீர்வரிசைகள் இன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன்...

      மகிழ்ச்சி... நன்றி.

      நீக்கு
  12. நந்தியெம்பெருமானின் திருக்கல்யாணம் விவரணங்கள் படங்கள் எல்லாம் அருமை. தரிசனமும் பெற்றோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..