நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 21, 2019

விருந்தினர் பக்கம் 06

நெல்லைத்தமிழனின்
பயணக்குறிப்புகள்....
ஃஃஃ

பஞ்சவன் மாதேவி பள்ளிப் படை 

சென்னை திரும்பியபிறகு, பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை எங்க இருக்கிறது என்று தேடி குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் (பிறகு எப்போவாவது உபயோகப்படும் என்று). நினைக்கவே இல்லை, 4 வாரத்துக்குள்  மீண்டும் கும்பகோணம் செல்வேன் என்று. மனைவியோடு செல்லும்போது, இடையில் சிவன் கோவில்லாம் தரிசிக்கணும்னா கொஞ்சம் கஷ்டம்தான்.  இருந்தும், வைணவக் கோவில்கள் எதுவும் மிஸ் ஆகிடாதுன்னு சொல்லியிருந்தேன்.

இந்த முறை சென்றிருந்தபோது, நாதன் கோவில் விசுவரூப தரிசனம் முடிந்தவுடன், ஆட்டோ காரரிடம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை போகணும் என்று சொன்னேன். அவரும் கீழ்ப்பழையாறை கோவிலை தூரத்திலிருந்து காண்பித்தபோதே, நான் அவருக்கு பட்டீச்வரம் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டு ஒரு பாதை போகுமே அது வழியாப் போகணும் என்று சொன்னேன்.  நான் இடத்தின் அடையாளங்களை எல்லாம் சொன்ன பிறகு, அது எனக்குத் தெரிந்த இடம்தான் என்று சொல்லிக் கூட்டிச் சென்றார்.

பழையாறை முழுவதும் சோழர்களின் தலைநகராகவும், ராஜராஜ சோழன் காலத்தில் அரண்மணையும் அதைச் சார்ந்த பெண்டிரும் இருந்த இடமாக இருந்திருக்கிறது. சோழ சாம்ராஜ்யம் நிறுவப்படுவதற்கு முன்னால், (விஜயாலய சோழன் 8ம் நூற்றாண்டு), பழையாறைதான் அதன் முன்னோர்களின் இருப்பிடமாக இருந்திருக்கவேண்டும்.

இங்குதான் நாம் `பொன்னியின் செல்வன்` என்ற கல்கி அவர்களின் நாவலில் படித்த சரித்திர மாந்தர்கள் குந்தவைப் பிராட்டியார், அவருடைய தம்பி ராஜராஜன் தங்கள் சிறுவயதில் வாழ்ந்திருக்கின்றனர். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் இங்குதான் ஓடி விளையாடியிருப்பான்.  கீழ்ப்பழையாறையைப் பார்த்தாலே, அதன் பழைமை தெரிகிறது.

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை இப்போது பாதையெல்லாம் போடப்பட்டு எல்லோரும் அந்த இடத்துக்குப் போகும்படி இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பு, அதனைச் சுற்றியுள்ள இடம் எல்லாம் வயல்காடாக இருந்ததாம். இப்போது அந்தக் கோவிலை மட்டும் விட்டுவிட்டு, மற்ற இடங்களில் வாழை பயிரிட்டிருக்கிறார்கள்.


பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை
மற்றும் சூழ்ந்திருக்கும் வாழை, கரும்புத் தோட்டங்கள்

இந்தப் பள்ளிப்படையின் முக்கியத்துவம் என்ன?  சரித்திரச் சான்று இருக்கிற, தாயின் சடலத்தின் மீது (பள்ளிப்படுத்திய) எழுப்பப்பட்ட முதல் கோவில். ஆயிரம் வருடப் பழமையானது. தாஜ்மஹால் என்பது தன் மனைவியின் நினைவாக 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதி.  இது ஆயிரம் வருடப் பழமை. அதுதான் இதன் சிறப்பு.

ராஜேந்திர சோழன், இதனைக் கட்டியபோது, சோழ தேசத்தின் மன்னன். இந்தக் கோவில் எக்காலத்திலும் நன்றாக பராமரிக்கப்படவேண்டும், மூன்றுகால பூசைகள் நடைபெற வேண்டும் என்று இந்தக் கோவிலுக்கு நிவந்தங்கள் (நிலங்கள் அதன்மூலம் வருவாய் என்று) கொடுத்தது மட்டுமல்லாமல், கோவிலுக்கு ஓதுவார், பூசை செய்யும் பிராமணர், கணக்காளர், காவலர் என்று ஒரு குழுவையே ஒதுக்கியிருக்கிறான்.  காலங்கள் உருண்டோடி, சோழ சாம்ராஜ்யம் சரிந்ததும், கோவில் மெதுவாக கவனிப்பாரற்றுப் போயிருக்கவேண்டும். நிலங்களை எல்லோரும் ஆக்கிரமித்திருக்கவேண்டும்.

அந்த ஆட்டோ டிரைவர், இந்த இடங்களில் வசித்தவராம். அவருடைய சிறுவயதில் இந்த இடத்துக்குப் போவதற்கு வழியில்லாமல் இருந்தது. பாலகுமாரனின் `உடையார்` நாவலுக்குப் பிறகுதான், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் சிறு பகுதியை மீட்டு வழிப்பாதை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.


பள்ளிப்படை கோவிலின் தோற்றம்

கோவிலில் அந்த அதிகாலையில் திருப்பாவை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.  உள்ளே சென்று அந்தப் பள்ளிப்படை வெளிப்புறத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அப்போது கோவிலின் உள்ளிருந்து பூசை செய்பவர் வந்தார். அவர் நான் நாதன் கோவிலில் பார்த்தவர்தான்.  அவருக்கு மிக்க மகிழ்ச்சி. ஆர்வத்தோடு அந்த இடத்தைக் காண்பித்தார். பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை என்று அதனைக் காட்டும் கல்வெட்டையும் காண்பித்தார். இதனை `பஞ்சவன் மஹாதீச்வரம்` என்று வழங்கியிருக்கின்றனர்.


கோவிலில், நந்திதேவர் பக்கத்தில் இருக்கும் லிங்கம் போன்ற தூண்..
இது பழுவேட்டரையர்களின் அடையாளம்.


கோவிலுள் இருக்கும் தெய்வச் சிலைகள். 


கோவிலுள் இருக்கும் தெய்வச் சிலைகள் – பல்லவர் காலத்தது

கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் பெயர், `பஞ்சவன் மாதேச்வரத்து மஹா தேவர்`.  மற்ற தெய்வ உருவங்களையும் படமெடுத்துக் கொண்டேன்.  சிவலிங்கம் தற்போது `இராமலிங்க சுவாமி` என்றும் அம்பாள், `விமலநாயகி` என்றும் அழைக்கப்படுகின்றனர். கோவிலையே `இராமனாதன் கோவில்` என்று சொன்னால்தான் தெரிகிறது.


மஹாதேவர் மற்றும் அம்பாளின் சன்னிதி

ராஜேந்திர சோழன் தன் ஆட்சிக்காலத்தில் 20க்கும் அதிகமான கோவில்களை எழுப்பியிருக்கிறான், புதுப்பித்திருக்கிறான்.  இணையத்தில், அவன், இலங்கை பொலனருவாவில், அவனது தாய் வானமாதேவியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வானவன் மாதேவீச்வரம் என்ற கோவிலைக் கட்டினானாம்.  பொலனருவா இலங்கையில் எங்க இருக்கு, அங்கெல்லாம் போயிருக்கீங்களா என்ற கேள்வியை இங்கு வரும் ஒருவரிடம் கேட்டால் `நான் தமிள்ள தான் டி` என்று சொல்லித் தப்பித்துக்கொள்வாரோ?


கோவில் தூணில் இருந்த அழகிய பிள்ளையார்



கோவில் சுற்றுச் சுவர்கள் முழுவதும் கல்வெட்டு.
இதில்தான் இந்தப் பள்ளிப்படையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிலைப் பார்த்துக்கொள்ளும் அடியார், எனக்கு `பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை` என்று குறிப்பிட்டுள்ள கல்வெட்டு எங்கே இருக்கிறது என்று காட்டினார்.  அதிலும் `பள்ளிப்படை` என்று குறிப்பிட்டுள்ள பகுதியை யாரோ அழிக்க நினைத்திருக்கின்றனர்.


கோவில் சுற்றுச் சுவர்கள் சிற்பங்கள், அவற்றின் கீழ் கல்வெட்டு 

இந்தக் கோவிலில், பல்லவர் காலத்து சிலைகள் சில இருக்கின்றன. அவை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அற்புதமாக இருக்கின்றன.

நான் இவற்றைப் பார்த்து வியந்தது, கோவில்களிலேயே என்ன என்ன நிலங்கள் கோவிலுக்கானவை, யார் யார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரங்களை கல்வெட்டுகளாகச் செதுக்கி வைத்துள்ளது.  `என்ன சார்… தெரியலையே… லெட்ஜரைப் பார்க்கணும்,  உள்ள எங்கேயோ இருக்கும் சார், பூட்டு ஹெட் ஆபீஸ்லதான் கேட்கணும்` என்று தற்காலத்தில் அரசு அலுவலக நடைமுறை பிறகு எங்கிருந்து வந்திருக்கும்? 

என்னுடைய பார்வையில், ஆஹா ஓஹோ என்று புகழத்தக்க அளவில் கோவில் சுற்றுச் சுவர்களில் சிற்பங்கள் இல்லை.  இருந்த சிற்பங்கள் நன்றாக இருக்கின்றன.

ஆனால் இன்னும் பல கோவில்களில் ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும் மிக அருமையான சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் சரித்திரத்தின் சாட்சி என்ற அளவில் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை, நாம் பார்க்கவேண்டிய இடங்களுள் ஒன்று..

மீண்டும் அடுத்தொரு பதிவில் சந்திக்கலாம்...






சோழ தேசத்துப் பெருந்தச்சர்களின்
சிற்றுளி ஓசையெல்லாம்
காதுக்குள்ள கேக்கற மாதிரி இருக்கு!...

வாய்ப்பும் வசதியும் கிடைக்கிறப்போ 
கண்டிப்பா இந்த அழகையெல்லாம்
பார்த்து மகிழவேணும்...
***

வாழ்க நலம்
ஃஃஃ  

69 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    // "இடையில் சிவன் கோவிலாம் தரிசிக்கனும்னா கொஞ்சம் கஷ்டம்தான்" //

    ஏன்? நேரமின்மைதானே காரணம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா,ஹா,ஹா, ஸ்ரீராம் நெ.த.வின் ஹஸ்பண்ட் தீவிர வைணவர்னு நினைக்கிறேன். 2,3 முறை நெ.த.மனைவி சிவன் கோயிலுக்கு வர மறுப்பார் என இதைச் சொல்லி இருக்கார். :)))))))))அதனால் என் யூகம் தான் இது! ஆனால் எனக்குத் தெரிந்து பல வைணவர்கள் சிவன் கோயில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். சிவன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை, மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தல்னு செய்யறாங்க. ஆகவே அவங்க வேறே ஏதோ காரணத்துக்காகக் கூடச் சொல்லி இருக்கலாம். :))))

      நீக்கு
    2. வாங்க ஸ்ரீராம்...

      காலைல 6 மணிக்கு ஆரம்பித்தால், நாதன் கோவிலில் ஆரம்பித்து தஞ்சை பெரிய கோவிலில் நுழையும்போது 12.30 மணிக்குள் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த வரிசையில் எல்லா வைணவ திவ்யதேசக் கோவில்களையும் கவர் பண்ண முடியும். (பொதுவா 8.30 மணிக்கு ஆரம்பித்தாலே ஓகே.. ஆனால் மார்கழி என்பதால் கோவில்கள் சீக்கிரமாகத் திறந்து 11-12 மணிக்குள்ளேயே நடை சாத்திடுவாங்க.

      இத்தனைக்கும் நான், ஐயாறப்பர் கோவிலுக்கும், தியாகராஜர் அதிஷ்டானத்துக்கும் செல்லவில்லை. 15-20 நிமிடங்கள் 'ஆண்டவர் அல்வா ஹவுஸ்'ல் ஆகிப்போனது. தஞ்சை மாமணிக் கோவில்களில் (மூன்று) ஒன்றைச் சேவிக்க முடியவில்லை.

      நீக்கு
    3. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... என் மனைவி தீவிர வைணவம்தான். ஆனால் நான் போகும்போது என்னுடன் வருவாள் (இல்லைனா எனக்குக் கோபம் வந்துவிடும்). ஆனால் அன்று நான் சிவன் கோவில்களையெல்லாம் கவர் பண்ண நினைத்தால் திவ்யதேசக் கோவில் தரிசனம் கிடைக்காமல் போய்விட்டால் அவளது மூன்றாவது கண்ணை என்னால் தாங்க முடியாது..ஹாஹா.

      நாங்க ஜம்புகேஸ்வரர் கோவில், நெல்லைல சில 'நவ கைலாச கோவில்'லாம் போயிருக்கோம். ஆனா, 'தாங்க்ஸ்ங்க' என்று அவள் சொன்னால், அவளை அன்று திருப்தியாக வைணவக் கோவில்களுக்கு அழைத்துச் சென்ற தினங்களில்தான்... ஹாஹா.

      நீக்கு
  2. //ராஜராஜன், ராஜேந்திரன் இங்குதான் ஓடியாடி விளையாடி, வாழ்ந்திருப்பார்கள் //

    இன்று எங்கள் பதிவில் ஒரு படம் பகிர்வதாக இருந்து பகிரவில்லை. தாராசுரம் கோவில் சன்னதியின் படம். நான் கிட்டத்தட்ட இதையேதான் முகநூலில் அப்போது எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தஞ்சை இராஜராஜேஸ்வரத்தில், ராஜராஜ சோழன் நுழைவாயிலில் இப்படித் தோன்றியது...

      இவ்வளவு பெரிய கோவில்னா (அதாவது கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல கோவில்கள்) எவ்வளவு ஜனம் அந்தக் கோவிலைச் சுற்றி இருந்திருக்கணும்? எப்படி சிறப்புடன் அந்த ஊர்கள் இருந்திருக்கணும்? அரசர்கள் கட்டிய அந்தக் கோவிலே அதற்கு முன்பு வழிவழியாகச் சிறப்புப் பெற்றிருந்தால்தான், அதனை மீண்டும் பெரியதாகக் கட்டுவதோ அல்லது புனரமைப்பதோ சாத்தியமாக இருந்திருக்கும்.

      இதனை மனதில் வைத்துத்தான் நாம கோவில்களின் புராணக் கதையைப் படிக்கணும்.

      நீக்கு
  3. நெல்லையார் சொல்லிச்செல்லும் விதம் ரசிக்க வைத்தது.
    விடுபட்ட பதிவுகளையும் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இன்னும் ஓரிரு வாரங்களாவது நீங்க பிஸியா (கல்யாணத்துக்குப் பிந்தைய வேலைகளில்) இருப்பீங்க. பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படிங்க.

      நீக்கு
  4. பள்ளிப்படை வகையறாக்களின் முதலாவதே பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைத்தானா? ஆச்சர்யமான தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன்பே திருப்புறம்பியம் பள்ளிப் படை உண்டு... மிகப்பெரிய போர் நடந்த இடம்.. 96 விழுப்புண் சுமந்த விஜயாலய சோழர் வரலாற்றில் வரும் என நினைக்கிறேன்... ஆனால் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது.... தமிழன் தமிழன் வீரம் என்று கூச்சல் இடுபவர்கள் கூட சென்று பார்த்திருக்க மாட்டார்கள்... இந்த ஊரில் தான் சாட்சி நாதர் கோயிலும் அந்தக் கோயிலில் தேன் குடிக்கும் பிள்ளையாரும்....

      இந்தக் கோயிலில் தான் மணியடித்து இந்தி பேசி வடிவேலு நடித்திருப்பார்...

      நீக்கு
    2. திருப்புறம்பியம் பள்ளிப் படையில் நள்ளிரவில் கூடித்தான் ரவிதாசன் குழுவினர் நரித்தனம் செய்வர்.. பொன்னியின் செல்வன் கதையில் இந்தப் பள்ளிப் படையைப் பற்றி கல்கி சொல்லியிருக்கிறார்...

      நீக்கு
    3. ஆமாம் துரை செல்வராஜு சார்.. நீங்க சொல்லியிருப்பது யானை மீது துஞ்சிய தேவர் தானே..

      இந்தக் கோவில் எங்க இருக்குன்னு தேடிப் பார்க்கணும். கண்டிப்பா அடுத்த முறை தரிசனம் செய்யணும்.

      ஓ... இங்கதான் 'வடிவேலு' நடித்ததா? (காட்சிகள் மனதில் விரிவடைகின்றன. எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை. வரிகளும் நினைவுக்கு வருகின்றன)

      நீக்கு
    4. ஓ... தகவலுக்கு நன்றி துரை ஸார்.

      நீக்கு
    5. திருப்புறம்பியம் நாங்க போயிருக்கோம். பள்ளிப்படை குறித்து யாருக்கும் தெரியலை. கோயிலிலும் விசாரித்துப் பார்த்தோம். அங்கேயும் ஒண்ணும் தகவல் கிடைக்கவில்லை. பொன்னியின் செல்வனைப் படிச்சுட்டு இதெல்லாம் தேட முடியாது என்பது நம்மவரின் கருத்து! ஆகவே அதிகம் முயலவில்லை.

      நீக்கு
    6. ஆனை மீது துஞ்சிய தேவர்" முதலாம் பராந்தகனின் மகனான ராஜாதித்தன் இல்லையோ? தக்கோலப் போரில் இறப்பான் இல்லையா? அவன் தான் ஆனை மீது துஞ்சிய தேவர் என்னும் பட்டம் பெற்றது! விஜயாலயர் இல்லை. அவர் 96 விழுப்புண்கள் சுமந்து கால்களை இழந்து பின்னரும் போரிட்டார். விஜயாலயர் காலத்தில் இருந்து பிற்காலச் சோழர்கள் தொடர்ந்து ஆண்டனர். பின்னர் சடையவர்மன் காலத்தில் வந்ததே பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம், அதைத் தொடர்ந்து வந்த அந்நியப் படையெடுப்பு எல்லாமும்.
      https://tinyurl.com/y2eqm3r3

      நீக்கு
    7. திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகருக்குத் தேன் அபிஷேகம்!

      நீக்கு
    8. கீதா சாம்பசிவம் மேடம்.... 'ஆனை மீது துஞ்சிய' ராசாதித்தன், முதலாம் பராந்தகனுடைய குமாரன் தான். நீங்கள் எழுதியது சரிதான்.

      திருப்புறம்பியம் போரில்தான், தன் மகன் (படைத் தலைவனாக) முதலாம் ஆதித்தன் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அதன் வேகம் குறைவு, தோல்வியுறுவோம் என்று தெரிந்து, கால்களை இழந்திருந்த, 96 விழுப்புண்களைப் பெற்றிருந்த விஜயாலயச் சோழன், இரு வீரர்கள் தன்னைத் தூக்கிக்கொள்ள தீரத்தோடு போரிட்டு, படைவீரர்களுக்கும் உத்வேகம் கொடுத்து அந்தப் போரை வென்றான் (அப்போது அவன் வயது 85+). இவன் காலம் கிட்டத்தட்ட ராஜராஜசோழன் காலத்துக்கு 100 ஆண்டுகள் முந்தையது.

      நீக்கு
  5. இப்போது என் (ஒன்றுவிட்ட)மாமாக்களில் இருவர் உட்பட்ட உறவினர் சிலர் விளங்கி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த பஞ்சவன் மாதேவீஸ்வரம் பற்றிக் கேட்டுப்பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளங்கி-கிளம்பி? எனக்கும் பயணத்தில் செல்பவர்களோடு சேர்ந்துகொள்ளவேணும் என்று ரொம்ப ஆசை (ஜம்புலிங்கம் சார், மற்றவர்கள் பழைய கோவில்களைத் தரிசிப்பதற்காகச் செல்லும் பயணங்கள் மாதிரி)

      நீக்கு
    2. மன்னிக்கவும்... இலங்கைச் சுற்றுப்பயணம் அது.

      நீக்கு
    3. நெல்லைத் தமிழரே, நீங்க பத்ரி சேஷாத்ரியைத் தொடர்பு கொள்ளுங்கள். அவங்க நடத்தும் ஹெரிடேஜ் ட்ரஸ்ட் மூலம் சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள்/கோயில்கள் செல்லலாம். சரித்திர ஆய்வாளர் ஒருத்தரே கூட வந்து விளக்கங்கள் தருகிறார். எனக்குத் தெரிந்து இதுவரை பல ஊர்கள், மாநிலங்கள் சென்று விட்டனர். சமீபத்தில் மத்தியப்பிரதேசம் போனாங்கனு நினைக்கிறேன். தமிழ் ஹெரிடேஜ் குழுமத்தில் உறுப்பினராகச் சேரணும்னு நினைக்கிறேன். எனக்கும் ஆசை இருக்கு தாசில் பண்ண! ஆனால் அதிர்ஷ்டம் நேர் மாறாக அல்லவோ இருக்கு! அப்படி எல்லாம் லேசில் கிளம்ப முடியாது! அவசரம் அவசரமாகவே பல கோயில்களுக்கும் தரிசனம் செய்யும்படி இருக்கும்! :(

      நீக்கு
    4. http://aanmiga-payanam.blogspot.com/2010/02/5.html திருப்புறம்பியம்

      நீக்கு
    5. கீசா மேடம்... நிறைய அருமையான இடுகைகள் இருக்கே... கோவில் பயணங்கள் பற்றி... அதுலயும் கும்பகோணம்லாம்.... நிச்சயமா படிக்கிறேன்.

      நீக்கு
  6. நல்ல சுவாரஸ்யமான கட்டுரை. அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்... துரை செல்வராஜு சார் சொல்லலைனா எழுதியிருந்திருக்க மாட்டேன்.

      நீக்கு
  7. நல்லதொரு கட்டுரை. அழகிய படங்கள். விபரங்கள் சொன்னதும் அருமை. சரித்திர காலத்து இடங்களை மிதிக்கும்போதே மெய் சிலிர்க்கும். அந்த உணர்வு இந்தப் பதிவைப் படிக்கும்போதும் வருகிறது. அது சரி, ராஜராஜ சோழனுக்குப் பின்னர் கட்டிய கோயிலில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் வந்தது எப்படி? அதான் புரியலை! ராஜேந்திரன் காலத்தில் பெயருக்குக் கூடப் பல்லவர் இருந்ததாய்த் தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதைத்தான் கேட்டேன்... பிற்காலத்தில் எங்கிருந்தாவது தூக்கிக்கொண்டு வந்து - இதுவும் இருக்கட்டும் என்று யாராவது வைத்திருக்கலாம்...

      நீக்கு
    2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். சோழர்கள் காலத்திலும் பல்லவர்கள் காலப் பழைய கோவில்கள் சிதிலமடைந்து இருந்திருக்கலாம். அங்கு இருந்த சிற்பங்களை இந்தக் கோவிலில் கொண்டுவந்து வைத்திருக்கலாம். இல்லைனா, பிற்காலத்தில் (அதாவது கட்டிய 200-300 ஆண்டுகளுக்குப் பிறகு) மற்றவர்களும் சிதிலமடைந்த இடங்களிலிருந்து சிலைகளை இங்கு கொண்டுவந்து வைத்திருக்கலாம். ஆனால் காலத்தால் முற்பட்டது என்பதே இந்தச் சிலைகளின் சிறப்பு.

      நீக்கு
  8. பஞ்சவன்மாதேவி பள்ளிப் படைக்குச் சென்றிருக்கிறேன்
    இக்கோயிலின் பிரகாரத்தில் குந்தவைக்கும் சமாதி இருந்ததாகவும், அண்மையில் செய்யப்பெற்றப் புணரமைப்புப் பணியின்போதுஇச் சமாதி இடிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிந்து வேதனைப் பட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமது பெருமையைத் தாமே அழித்து ஒழிப்பதில் தமிழர்கள் வல்லவர்கள் ஆயிற்றே...

      நீக்கு
    2. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்...

      குந்தவைக்கான பள்ளிப்படை வேறு ஒரு கோவிலில் இருக்கலாம் என்றுதான் எனக்குச் சொன்னவர் சொன்னார். பஞ்சவன் மாதேவீச்வரத்தில் இருந்தது ஒரு சிதிலமடைந்த மண்டபம். அதைத்தான் பாதுகாப்புக்காக முழுவதுமாக இடித்துவிட்டார்கள்.

      பொதுவா நாம 'தமிழர் பெருமை'னுலாம் பேசினாலும், சுயநலம் காரணமாக நமது பாரம்பர்யத்தைப் பேணுவதற்கு ஈடுபாடு கொள்வதில்லை.

      நான் பயணித்த வெளிநாடுகளில் சாதாரண விஷயத்தையே அவர்கள் 'பாரம்பர்யம்' என்று சொல்லி அப்படியே பாதுகாக்கிறார்கள். உதாரணமா பாரிசில் ஒரு கடையில் உள்ளே, தடியான ஒரு சுவரை அப்படியே கடையின் நடுவில் வைத்திருக்கிறார்கள். அது ஒரு காலத்தில் பாரிசின் கோட்டைச் சுவரின் ஒரு பகுதியாம். (400 வருடங்களுக்கு முந்தையது).

      நம்மிடம் இருப்பது 1000 வருடங்களுக்கும் பழமையான கலைச் செல்வங்கள். நாம தமிழர்களாச்சே... 'நல்லதோர் வீணை செய்து அதனை நலம் கெடப் புழுதியில் எறிபவர்களில்' நாமதானே முதன்மை.

      நீக்கு
  9. என்னைக் காண வரும் நண்பர்களையும், உறவினர்களையும் இவ்விடத்திற்கு அவசியம் செல்லக் கூறி வருகிறேன். பலரை அழைத்துச் சென்றுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜம்புலிங்கம் சார்.. திருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும் ஒரு பகுதி மிகச் சிறப்பானது என்று சொன்னாங்க. நான் இன்னும் அங்கு செல்லவில்லை.

      முக்கியமான இடங்களுக்குத் தொடர்ந்து சென்றுவந்தால்தான் அந்த அந்த இடங்கள் பாதுகாக்கப்படும். அதன் சிறப்பு எல்லோருக்கும் தெரியவரும்.

      நீக்கு
  10. கட்டுரை படங்களுடன் தெளிவாக சிறப்பாக உள்ளது. போனேன் வந்தேன் என்பது போன்று இல்லாமல் பெயர், இடம் சுட்டி பொருள் விளக்கி எழுதப்பட்டு சீரான நடையில் உள்ளது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்...

      அந்த இடத்தைக் கண்டுபிடித்து (ஆட்டோ டிரைவர் கொஞ்சம் சாக்குப் போக்கு சொன்னார்... அவருடைய கடமை அவருக்கு. நாங்கள் அவரிடம் எந்த வைணவக் கோவில் தரிசனமும் கிடைக்காமல் இருந்துவிடக் கூடாது என ஆரம்பத்திலேயே கண்டிஷனாகச் சொல்லியிருந்தோம்) நான் சென்றபோது, எனக்கு அவ்வளவு மனநிறைவு (மனைவிக்கு.. என்ன இது கோவிலுக்குப் போகாமல் ஏதோ ஒரு இடத்தில் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற அதிருப்தியான முகம் ஹாஹா)

      நீக்கு
  11. ஆஆஆஆஆ விருந்தினர் பக்கம் இன்னமும் போய்க் கொண்டிருக்கோ.. அவ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன அநியாயமா இருக்கு உங்க கருத்து....

      நீக்கு
    2. இறையருள் துணை கொண்டு விருந்தினர் பக்கம் தொடர்ந்து வெளியாகும்...

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஆவ்வ்வ் நான் சொல்ல வந்தது என்னவெனில், நெல்லைத்தமிழன் போய் வந்த இடங்கள் இன்னும் தொடருதோ[முடியாமல் இருக்கோ] என, மற்றும்படி போய் வர வர இன்னும் போடுவீங்கள் விருந்தினர் பக்கம் எனத் தெரியுமே எனக்கு...

      நீக்கு
    4. நான் நிறைய பயணம் (கடந்த 8 மாதங்களாக கோவில்களுக்கு) செய்கிறேன். மனதில் தோன்றினால்தான் எழுதுகிறேன். நான் டைரி மாதிரி எழுதுவதில்லை. எனக்கு கல்வெட்டு பற்றியும் எழுதணும்னு தோணுது. எவ்எளவு இன்டெரெஸ்டிங் ஆக இருக்கும்னு தோணாததுனால எழுதலை.

      சிலவற்றிர்க்கு ஒத்த ஆர்வம் உடையவர்கள் மிக மிக்க் குறைவு என்பது என் அனுமானம்

      மற்றபடி நீங்கள் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டேன்

      நீக்கு
  12. ஓ பொன்னியின் செல்வனில் வருவோர் வாழ்ந்த இடமோ.. ஆஆ கதையைப் படிச்சபின்னர் நீங்க அங்கு போயிருப்பதால் மனதுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.

    ///ராஜராஜ சோளனின் மகன் இங்குதான் ஓடி விளையாடியிருப்பான்//

    ஹா ஹா ஹா என்ன ஒரு கற்பனை.. இல்லை உண்மையில், அவர்கள் வாழ்ந்த இடம் எனும்போது நமக்கு அந்த ஃபீலிங் வரும். இப்படித்தான் எனக்கும், ஊருக்குப் போனால் பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிடும் எனும் பயத்திலேயே போகாமல் இருக்கிறேன்.. ஏனெனில் முன்பு இருந்தோர் பலர் இன்றில்லை:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... நான் இதுமாதிரி, சிறிய வயதில் இருந்த இடங்களுக்கு இப்போது நாம போகும்போது, நம் துணையோடு போனால் நமக்கு உள்ள அந்த ஃபீலிங் அவங்களுக்கு வராது. ஆனா நாம சின்ன வயதில் ஓடி விளையாடிய இடங்கள் எல்லாம் பார்க்க பரவசமாக இருக்கும்.

      ஆமாம்... முன்பு இருந்தவர்கள் இப்போது இருக்க மாட்டார்கள். இப்போது இருப்பவர்கள் பலருக்கு நம்மைத் தெரியாது...

      நீக்கு
  13. வாழை கரும்பு போட்டிருப்பது நல்ல முறை. ஏன் படம் டார்க்காக இருக்கு? இருட்டி விட்ட்தோ நீங்க போனபோது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் காலை நேரம். வேகமாக எடுத்தேன். பிறகு உள்ளே படங்களை டக்குப் பக்குன்னு எடுத்துட்டு அடுத்த இடங்களுக்குப் போகணும் என்பதால்

      நீக்கு
  14. இந்தப் பள்ளிப்படை மிகவும் பழமையானதுபோலும், கீசாக்கா போனது கொஞ்சம் புதுசுபோல தெரிஞ்சுது.

    போட்டோவில் பெயர் போடும்போது, நடுவில் போடோணும் நெல்லைத்தமிழன், ஓரமாக/மேலே/கீழே போட்டால், பெயரை ஈசியாகக் கட் பண்ணிப்போட்டு படத்தை எடுக்கலாம்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவங்க களவெடுப்பார்கள் என்பதற்காக இல்லை... இவை நான் எடுத்த படங்கள் என்று சொல்வதற்காகத்தான்.

      நீக்கு
  15. கோயில் தோற்றம் பழமையாக இருந்தாலும், சிலைகள் கறுப்புத்தங்கம் போல் பளபள என ஜொலிக்குதே..

    ஆஆஆஆ கோயில் தூண் பிள்ளையாரை ஆகவும் குளோசப்பில் எடுத்திட்டீங்க.. படம் தெளிவு குறைவாயிருக்கு.. எதுக்கு இவ்ளோ கோபம் பள்ளிப்படைப் பிள்ளையார் மீது கர்:)).. ஏன் எங்கும் வைரவர் இல்லையோ?:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சிற்பிகள் சிலைகள் வடித்தாலும் சிலதான் காலத்தை வென்று இருக்கிறது. சில கடவுளர் சிலையாக மாறி பல நூற்றாண்டுகளாக வழிபடப்படுகிறது.

      பிள்ளையார் சிலை பெரிதாக்கும்போது அதன் அழகு குறைவது உண்மைதான்.

      நீக்கு
  16. மூலஸ்தானக் கல்வெட்டில் உள்ளிருந்து அபிசேகப் பால் வடியும் இடம் பார்த்ததும் ஊர் நினைவு வருது, அபிசேகத்தின்போது, அதில் பால் வருமெல்லோ .. கையில் ஏந்திக் குடிக்க தேனாமிர்தமாக இருக்கும், அதுவும் எப்பவும் கோயில் எனில் சாப்பிடாமலே போவோம், அப்போ அந்நேரப் பசிக்கு இனிக்கும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க அதில் வருகின்ற நீரை தலையில் மட்டும்தான் தெளித்துக்கொள்வோம். அந்த இடத்தில் பால், மற்ற பொருட்கள் சுத்தமாக வருவதில்லை.

      ஆமாம்...இந்தக் கோவில், அதன் முறைகள் இதெல்லாம் உங்கள் மகன்கள் பார்த்திருக்கின்றனரா?

      நீக்கு
    2. கோயில்களுக்குக் கூட்டிப் போகிறோம்தான் ஆனா ஊர்க்கோயில்களுக்கு இன்னும் போனதில்லை, இங்கு வெளிநாட்டுக் கோயில்களுக்கே .. இங்கிருக்கும் கோயில்கள் நிறைய வித்தியாசம் எல்லோ.. பூஜை, திருவிளாக்கள் ஒரே மாதிரி இருந்தாலும், கோயில் அமைப்பு ஊர்போல வராதே:(.

      நீக்கு
    3. அதிரா... என் பசங்க நான் வளர்ந்த சூழலின் வாழ்க்கையைப் பார்க்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான். அவங்க வெளி நாட்டுல பதின்ம வயதுவரை மிக்சட் கல்சர்ல வாழ்ந்தவங்க. (இன்னைக்கும் அவங்க பிட்சா, பர்கர்னு உணவுப் பழக்கத்துல வித்யாசம் காண்பிக்கும்போது என்னால் டைஜஸ்ட் பண்ண முடியறதில்லை. ஆனாப் பாருங்க... பெண்கள் சுலபமாக அடாப்ட் ஆகிவிடுகிறார்கள்)

      நீக்கு
  17. பஞ்சவன் மாதேவி பள்ளிபடை விவரங்கள், படங்கள் எல்லாம் அருமை.
    ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்னும் சோழனின் பெருமையை பாசத்தை பறைசாற்றும் இடமாய் இருக்கிறது பெருமைதான்.

    அந்த இடங்களுக்கு சென்று வர எண்ணம் வந்தது நல்ல செயல்.
    எங்களுக்கும் அருமையான பதிவு கிடைத்தது படங்களுடன்.
    அடுத்த தடவை அந்த பக்கம் போனால் பார்க்க ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். வருகைக்கு நன்றி.

      நீங்கள் போயிருக்காத கோவில்களா? அடுத்த முறை மாயவரம் (காளியாகோவில்), மன்னார்குடி (அல்வா மற்றும் இன்னொரு கடை) டிரிப்தான்.

      நீக்கு
    2. காளியாகுடி-உணவு மற்றும் கோவில்கள். மன்னார்குடி-டெல்லி ஸ்வீட்ஸ்

      நீக்கு
    3. காளியாகுடி எல்லாம் முன்பு போல் இல்லை பல கை மாறி விட்டது. இருந்தாலும் வயிற்றை கெடுக்காது.
      மன்னார்குடியில் டெல்லி ஸ்வீட்ஸ் கிடைக்கிறதா! தெரியாது.

      நீக்கு
    4. ஒரு முறை போய் தண்டனை அனுபவிக்கட்டும் கோமதி! நாங்க எழுபத்தி மூன்றாம் ஆண்டில் சாப்பிட்டிருக்கோம். அப்போ ஓட்டல் இருந்த வடிவமே வேறே! இப்போக் காணப்படுவதே வேறே! சமீபத்தில் நாங்க வைத்தீஸ்வரன் கோயில் எல்லாம் போயிட்டுத் திரும்பும்போது காளியாகுடியில் தான் (பட்டமங்கலம் தெரு) நம்ம ரங்க்ஸ் காலை ஆகாரம்/மதிய சாப்பாடு (?) சாப்பிட்டார். நான் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் நல்லா இருக்குனு சொன்னார்.

      நீக்கு
    5. கோமதி அரசு மேடம்.... குமுதத்தில் 10-12 ஆண்டுகளுக்கு முன்னர் காளியாகுடி ஹோட்டல், மாலை 4.30க்கு அல்வா, சின்ன வெங்காய சாம்பார்னு போட்ட தினத்திலிருந்து அங்கு போகணும்னு எண்ணம். இன்னும் வாய்க்கலை.

      மன்னார்குடியில் இரண்டு கடைகள் இருக்கின்றன. டெல்லி ஸ்வீட்ஸில் அல்வா மற்றும் இன்னொரு ஐட்டமும் நன்றாக இருக்குமாம் (சமஸ் எழுதினது). அப்புறம் அங்கேயே ஒரு பஜ்ஜி அல்லது பகோடா கடை உண்டாம். இது இன்னொரு 'உணவைப் பற்றி' ரெகுலரா எழுதற பதிவர் எழுதினது. இரண்டும் லிஸ்டுல இருக்கு.

      நீக்கு
    6. கீதா சாம்பசிவம் மேடம்.... நாங்க சாப்பிட்டுப் பார்த்துத்தான் நம்புவோம். முதல் தடவை நான் மட்டும் 'ஆண்டவர் கடை'க்குப் போய், அசோகா அல்வா, வெறும் அல்வா சாப்பிட்டேன். அப்புறம் மனைவியோட போனபோது வெறும் அல்வாவை ரசித்துச் சாப்பிட்டோம்.

      73ம் ஆண்டிலா? (இதுல வேற-நாங்க. அப்படீன்ன, 35+40 = எவ்வளவு வருது?) நீங்க என்னைவிட ரொம்பச் சின்னவங்க, பெண் என்பதால் 'மேடம்'னு மரியாதைலாம் கொடுத்தா, நீங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்பப் பெரியவங்க போலிருக்கே...

      நீக்கு
    7. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெல்லைத்தமிழன்:)) கீசாக்காவுக்கு இப்போ 32:) அதிராவைவிட 16 கூட ஹா ஹா ஹா:).

      நீக்கு
    8. அது என்ன கணக்கு 35+40? நீங்க அம்பியை விட மோசமா இருப்பீங்க போல! :P

      நீக்கு
    9. அதிரடிக்கு ஸ்வீட் 16 என்றால் நான் இன்னும் பிறக்கவே இல்லையாக்கும்!:)))))))

      நீக்கு
    10. பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கும் அதிராவையும் (அவங்க வயசை 16க்குள் வைத்திருக்க மற்றவர்கள் வயதையும் (என் வயதைத் தவிர) குறைப்பது), என் மதிப்பிற்குரிய கீதா சாம்பசிவம் மேடத்தையும் இங்கு கண்டதில் மகிழ்ச்சி

      நீக்கு
  18. நெல்லைத் தமிழனுக்கு ஆயிரம் நன்றி. வெறுமனே புத்தகங்களைப்
    படித்து இப்படி இருக்குமோ என்று யோசித்த காலம் போய்
    இப்பொழுது எல்லோரும் மும்முரமாகச் சென்று பார்ப்பது இதம் தருகிறது.
    சிற்பங்கள் குறைவாக இருந்தாலும் இடம் உயர்ந்ததாயிற்றே..
    படங்கள் அனைத்தும் அருமை.
    சரித்திரத்தைக் கொண்டாடும் எல்லா நாட்களும் நல்லவையே.
    மனைவி தாங்க்ஸ் சொல்லும் இடங்களுக்கு நிறைய
    சென்று சமன் செய்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.... வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிட மாட்டேன்.

      நான் சத்தியாகாலம் மற்றும் மத்தியரங்கம் கோவில்களுக்கு அவளுடன் ஒரு சில மாதங்கள் முன்பு சென்றிருந்தேன். அவளில்லாமல் சோளிங்கர் சென்றிருந்தேன். விரைவில், காலில் தெம்பு மீண்டும் வரும்போது அஹோபிலம் செல்லணும்.

      நீக்கு
    2. ;சரித்திர ஸம்பந்தமான இடங்கள்.சிற்பங்கள், கோவில்கள், அதைப்பற்றிய படங்கள்,வர்ணனைகள் அருமையாக எழுதிக்கொண்டு போகிறீர்கள். எவ்வளவு விஷயங்கள் நெல்லைத் தமிழரால் நமக்குத் தெரியவருகிறது என்ற எண்ணமே மேலோங்குகிறது. கதைகளில் படித்த இடங்கள் கற்பனை மட்டுமில்லை. உண்மையான இடங்கள் என்று அறிந்து ஸந்தோஷம். எழுதுங்கள் நிறைய. படித்து மகிழ்கிறேன். நன்றி. அன்புடன்

      நீக்கு
    3. வாங்க காமாட்சி அம்மா... உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உற்சாகமூட்டும் எழுத்து உங்களுடையது.

      நீங்க சொல்றது உண்மை காமாட்சியம்மா. அந்த இடங்களுக்குப் போகும்போது ஒரு உண்மைத் தன்மையும், சரித்திரம் நடந்த இடங்களில் நாமும் இருக்கோம் என்ற உணர்வும் வரும்.

      தொடர்ந்து படியுங்கள் அம்மா. மிக்க நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..