நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 12, 2017

திருவாதிரைக் களி 1

அக்கா.. அக்காவ்!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

என்னக்கா.. இது? .. தக்காளி கிலோ எழுபது ரூபாய் சொல்றாங்க.. எதுவும் வாங்க முடியாதபடிக்கு விலை எல்லாம் ஏறிப் போய்க் கிடக்கு!...

ஆமா.. ரெண்டு மூணு மாசமா இப்படித் தான் இருக்கு..  மழை இல்லை.. சரியா விளைச்சலும் இல்லை.. என்னதான் செய்யமுடியும்.. பாவப்பட்ட ஜனங்களுக்கு பரிதவிப்பு தான் மிச்சம்!...



ஆனாலும் நாக்கு கேக்க மாட்டேங்குதே!.. மாமாவுக்கு தக்காளி சட்னி இல்லை..ன்னா இட்லி இறங்காது.. தக்காளி  ரசம் இல்லை..ன்னா அத்தை தவிச்சுப் போயிடுவாங்க!..

இங்கேயும் அப்படித்தான்..  அத்தானுக்கு யோகா முடிச்சதும் தக்காளி ஜூஸ் குடிச்சாத் தான் நிம்மதி..

இதெல்லாம் பிரச்னையே இல்லை.. விலைதான்.. அதிலயும் பாருங்க.. நல்ல பழமா பொறுக்கி எடுக்க விட மாட்டேங்கிறான்... இப்போ வாங்கின ஒரு கிலோவில நாலு பழம் நல்லதா இல்லை.. கேட்டா இஷ்டம்...னா வாங்குங்க.. - அப்படி..ன்னு எகத்தாளம்...

அதுக்குத் தான் சொன்னாங்க.. நாக்கை அடக்குங்க... ந்னு.. இல்லை..ன்னா வீட்டுத் தோட்டம் போட்டுட வேண்டியது தான்.. ஓரளவுக்கு சமாளிக்கலாம்...

அதுக்கெல்லாம் உடம்பும் வளையணுமே!..

நல்லது வேணும்..ன்னா வளைஞ்சு தான் ஆகணும்.. அத்தான் போன மாசம் பட்டுக்கோட்டை போயிருந்தப்ப அங்கேயிருந்து கீரை, கத்தரி, தக்காளி விதையெல்லாம் வாங்கிக்கிட்டு வந்தாங்க... கொல்லைப் பக்கம் போட்டுருக்கேன்..

சொல்லவேயில்லை.. அக்கா!..



நல்லா தழைச்சிருக்கு... இன்னும் நாலு நாளை..ல தக்காளி பழுத்திடும்... பழுத்ததும் கொடுத்து விடலாம்..ன்னு இருந்தேன்...

நாம பார்த்து பார்த்து வளர்க்கிறது தனி சந்தோஷம்.. இல்லையா அக்கா!..

ஆமாம் தாமரை.. ஏற்கனவே கொத்தமல்லி, புதினா கறிவேப்பிலை எல்லாம் தோட்டத்தில இருந்து தான்..

அது தான் தெரியுமே!... ஆனாலும் இந்தத் தக்காளி தான்...

தக்காளியைக் குறைச்சுக்கலாமே.... கொத்தமல்லி புதினா  இதெல்லாம் சட்னிக்கும் ரசத்துக்கும் ஆகி வராதா?..

அப்போ..  தக்காளிப் பழம் வேண்டாமா!?..

குறைச்சுக்கலாம்.. புளி, எலுமிச்சம்பழம் இதெல்லாம் தக்காளியை விட மலிவு தானே..

உள்ளது.. உள்ளது.. நீங்க சொல்றது சரிதான் அக்கா!..

இப்படித்தான் சமையல் குறிப்பு..ன்னு அதையும் இதையும் கலந்து கட்டி அடிச்சி விடுறாங்க... அதுக்கு இதைப் போடணுமா.. இதுக்கு அதைப் போடணுமா..ன்னு - படிக்கிறவங்களும் கேக்கிறவங்களும் தலையப் பிச்சுக்கிறாங்க...

அக்கா.. உங்களை ஒன்னு கேட்கலாமா!..

கேளேன்.. தாமரை!..

களி செய்யத் தெரியுமா?..

ஓ!.. உளுத்தங்களி, கம்பங்களி, கேப்பைக்களி, சோளக் களி...

திருவாதிரைக் களி!?..

என்னம்மா.. திடீர்... ந்னு சந்தேகம்!..

சொல்லுங்களேன்!...

தெரியுமே!..

சொல்லுங்க.. அக்கா.. திருவாதிரைக்களி எப்படி செய்றது..ன்னு சொல்லுங்க அக்கா!..

கால் கிலோ பச்சரிசிக்கு  கால் கிலோ வெல்லம்.. உள்ளங்கையளவு பயத்தம் பருப்பு.. கொஞ்சம் போல  தேங்காய்ப்பூ. கொஞ்சம் நெய்.. அஞ்சாறு முந்திரிப்பருப்பு ரெண்டு ஏலக்காய்.. அவ்வளவு தான்..

அரிசியையும் பருப்பையும் நல்லா  கழுவி விட்டு நிழல்ல உலர்த்தி தனித்தனியா வறுக்கணும்.. ஓரளவுக்கு சிவந்தால் போதும்..

அரிசியும் பருப்பும் ஆறினதும் திருகல்..ல்ல போட்டு பூ நொய் பதத்துக்கு உடைச்சுக்கணும்..

அதென்ன பூ நொய்!..

குறு நொய்க்கு அடுத்த பக்குவம்.. கிட்டத்தட்ட ரவை மாதிரி...

நெல்லோட உமி இல்லாம முழுசா இருந்தா அரிசி..
அரிசி ரெண்டா உடைஞ்சா நொய்..
நாலா உடைஞ்சா குறு நொய்..
எட்டா உடைஞ்சா பூ நொய்!..

யப்பா!.. இத்தனை அர்த்தம் இருக்கா!..

ஏலக்காயை  தட்டிக்கணும்.. முந்திரியை பக்குவமா வறுத்துக்கிடணும்..

வெல்லத்தை ரெண்டே கால் குவளை  தண்ணீரில் கொஞ்ச  நேரம் கொதிக்க வைக்கணும்.. கொதிக்கறப்போ - வெல்லத்தோட கசடு வந்தா எடுத்துப் போட்டுட்டு  உடைச்ச அரிசி பருப்பு இதெல்லாம் போட்டு கட்டிப் பிடிக்காம கிளறணும்..

முக்கால் பங்கு வேக்காடு ஆகி - தள தள..ன்னு வரும்..
அப்போ  தேங்காய்ப்பூ நெய் முந்திரி ஏலக்காய்
இதெல்லாம் போட்டு நல்லா கிளறி இறக்கி வைக்க வேண்டியது தான்..

என்னக்கா.. இப்படிச் சொல்லிட்டீங்க!.. பச்சரிசியும் பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்த்துப் பண்ணினா சர்க்கரைப் பொங்கல் ஆகிவிடாதோ!?..

ஆகிடும் தான்!..
குழைஞ்சு இறுகினா சர்க்கரைப் பொங்கல்..
தள.. தள..ன்னு நெகிழ்ந்தா பச்சரிசி பாயசம்!..
கொஞ்சம் கவனமாத் தான் செய்யணும்...

அக்கா.. இதுல கடலைப் பருப்பு இது மாதிரியெல்லாம் போடலாம்..ன்னு செல்றாங்களே!..

அம்மாடி.. தாமரை!.. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பக்குவம் இருக்கு... சமையல் விஷயத்துல மட்டும் இது தான் அது!.. -ன்னு நிலை நிறுத்திட முடியாது...

ஓ!.. இப்போ புரியுது.. அக்கா!..

ஆமாம்.. உனக்கென்ன இப்போது திடீர் சந்தேகம்!...

திங்கக்கிழமை திருவாதிரைக் களி.. அப்படி..ன்னு ஒரு பதிவு.. எங்கள் பிளாக்..ல.. நெல்லைத் தமிழன் எழுதியிருந்தாங்க.. அதைப் படிச்சிட்டு தான் உங்களைக் கேட்டேன்...

ஓஹோ!.. சரி.. முதன்முதலா இந்தக் களியை செஞ்சது யாரு..ன்னு தெரியுமா?..

தெரியாது..

சாப்பிட்டது யாரு..ன்னு தெரியுமா?..

அதுவுந் தெரியாதே!..

காவிரிப் பூம்பட்டினத்தில வைரத் தூண் நட்டு வைத்து வணிகம் செய்தவர் திருவெண்காடர்.. அவருக்கும் ஞானம் வந்தது.. போடா.. சரிதான்!.. -ன்னு எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு துறவியாயிட்டார்..

வைரத் தூணையும் தூக்கி எறிஞ்சிட்டா!?..

ஆமாம்!.. அவர் தான் பட்டினத்தார்.. அவரோட கணக்கப்பிள்ளை சேந்தனார்.. தன்னோட முதலாளி சிவனடியாராகப் போனதும் இவரும் சிவனடியார்களுக்கு அடியாராக ஆகிட்டார்.. சேந்தனாரோட மனைவியார் தான் முதன்முதலா திருவாதிரைக் களி செய்தவர்...

அப்போ.. முதன்முதலா சாப்பிட்டவர்!?..



வேற யாரு!.. ஈசன் எம்பெருமான் தான்!..

ஓ.. திருவாதிரைக் களி.. இதுக்குள்ளே இத்தனை கதை இருக்குதா!.. சொல்லுங்களேன் அக்கா!...

அதை சொல்றதுக்கு முன்னால - 
இறைவன் இந்த களியை உண்ணும் போது
அதில் கடலைப்பருப்போ துவரம்பருப்போ முந்திரியோ 
ஏன் - நெய் கூட சேர்ந்திருக்கவில்லை!..

பின்னே!?..

அன்புதான்.. அன்பு மட்டுமே அதில் சேர்ந்திருந்தது..
அன்பு தான் திருவாதிரைக் களிக்குக் கூட்டு!..

சரியாகச் சொன்னீர்கள்.. அக்கா!.. சரி நான் புறப்படுகின்றேன்..
நாளைக்கு மீண்டும் வருகின்றேன்.. கதை கேட்க வேண்டும்...

தாமரை.. காபியை மறந்து விட்டுப் போகலாமா!..

அக்கா.. அக்கா!...


வாழ்க நலம்..
* * *





18 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    தங்களது பாணியில் திருவாதிரைக்களியின் மகத்துவமும், வரலாறும் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ​திருவாதிரைக்களி எடுத்துப்போட்டு மேலதிகத் தகவலும் கொடுத்திருக்கிறீர்கள்.. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. செய்வதற்கு எளிதானது ஆனால் ஏனோ அதை மார்கழித் திருவாதிரை நாளுக்கு நைவேத்த்யமாகவே செய்கிறார்கள் நெல்லைத் தமிழன்பதிவைப்படித்ததும்மனைவியிடம்சொன்னேன் உடனே செய்தால் போச்சு என்று செய்து கொடுத்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      திருவாதிரைக் களியின் செய்முறை எளிதானது..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருவாதிரைக் களி வரலாறு அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்லா ரசனையா எழுதியிருக்கீங்க. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி தக்காளி, எலுமிச்சம்பழத்தைக் கொண்டுவந்திருக்கீங்க. (து.பருப்பு இல்லைனா ப்பருப்பு இல்லைனா க.பருப்பு மாதிரி).

    "மலிவுதானே"க்கு "உள்ளது உள்ளது" என்று தொடர்வது ஒட்டவில்லை.

    கதையைத் தொடர்கிறேன். மாருதியின் படம் உண்மையிலேயே மனதை மயக்குவதாக உள்ளது. பார்க்கலாம் அடுத்த பகுதியில் இதைவிடச் சிறப்பான படத்தைத் தேடி எடுக்கிறீர்களா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இணைய வேகத்தை நினைத்துக் கொண்டே பதிவு எழுதினேன்..

      எனக்கு நானே உரையாடிக் கொண்டு எழுதுகையில் எப்படியோ சில வார்த்தைகள் பொருந்தாமல் அமைந்து விட்டன..

      நினைவூட்டியதற்கு நன்றி..

      அடுத்த பகுதி கோயில் உலா.. 1000 ஆண்டுகளுக்கு முன்னே செல்கின்றோம்.. அதற்கு அடுத்த பதிவில் அக்காவும் தங்கையும் வருவார்கள்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நல்ல கருத்துள்ள பகிர்வு. சிதம்பரம் கோயிலில் கொடுக்கும் திருவாதிரைக்களிப் பிரசாதத்திலும் முந்திரிப்பருப்பு இருக்காது என எண்ணுகிறேன். நினைவில் இல்லை! காலத்துக்கு ஏற்றாற்போல் தக்காளி விலையையும் கொண்டு வந்து கூடவே பொருத்தமான சேந்தனார் கதையையும் கூறியது சிறப்பு. சேந்தனாரின் பல்லாண்டு பாடித்தான் களி நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் சிதம்பரத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்களது வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான களி புராணம்.
    படங்கள் வெகு அழகு.
    உரையாடல் அருமை.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  10. அருமை திருவாதிரைக் களியுடன் இன்றைய தக்காளியின் விலை (கிலோ 120. கலக்குகிறது!!) களியுடன் தகவல்கள், குறிப்புகள் அதை அன்புடன் படைப்பது என்று எல்லாம் கலந்து கட்டி அசத்தல் பதிவு. ஆம் எந்த உணவைச் செய்தாலும் அன்பு அதில் கலந்திருக்க வேண்டும். எதைச் செய்தாலும் அன்புடன் செய்தால் எல்லாம் நல்லதாக அமையும்.

    அருமையான பதிவு..

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பினால் ஆகாததும் உண்டோ!..
      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..