நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 22, 2016

மங்கல மஞ்சள்

மஞ்சள் என்றாலே மங்கலம்..

மங்கலம் என்றாலே மஞ்சள்..

பன்னிரு மாதங்களுள் பீடும் பெருக்கும் உடையது ஆடி மாதம்..


அனைத்துத் திருக்கோயில்களிலும் சிறப்பான வைபவங்கள் நிகழும் மாதம்..

நம்மை நாமே முழுமையாக ஆடி மாத வைபவங்களில் ஒப்புவிக்க வேண்டும் என்பதற்காகவே -

இந்த மாதத்தில் வீட்டில் எந்த விசேஷமும் அனுசரிப்பதில்லை..

ஆடி மாதம் பீடுடைய மாதம் என்பதையே -
நாக்கில் வசம்பு வைத்து தேய்க்கப்படாத நம்மவர்கள்
பீடை மாதம் என்று சொல்லி திரித்து வைத்தார்கள்..

சிறப்புடைய வேளாண் பணிகள் சிறக்கும் மாதமும் இதுவே!..

ஆடிப் பட்டம் தேடி விதை!.. என்பது சொல்வழக்கு...

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்பதையும்
நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர்..

எண்ணற்ற சிறப்புகளை உடைய ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் குறிப்பிடத்தக்கவை..

அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!.. - என்றார் மகாகவி..

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையின் அடி போற்றி நிற்கும் வேளையில் அவளுக்கே உரித்தான மங்கலங்கள் சிலவற்றை இயன்ற அளவில் சிந்திப்போம்..

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை..

மங்கலம் தரும் மஞ்சளை அம்பிகையின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன்..

மஞ்சள் முகமே வருக..
மங்கல விளக்கே வருக!..
கொஞ்சும் தமிழே வருக..
கோடனுகோடி தருக!..

- என்றுரைத்தார் கவியரசர் கண்ணதாசன்..

மஞ்சள் பூசி மங்கலகரமாகத் திகழும் மங்கையர்
ஒளி தரும் குத்து விளக்கிற்கு நிகரானவர்..

மஞ்சள் அதனால் தான் மஞ்சள்..

சொல்லும் பொருளும் மஞ்சள் தான்!..
இது தமிழுக்கே உரிய பெருமை.. 

இத்தகைய மஞ்சள் தரும் நற்பலன்களும் எண்ணற்றவை..

அதனால் தான் கவியரசர் அனைத்துச் சிறப்புகளையும் நான்கு வரிகளுக்குள் வைத்தார்..

அனைத்து மங்கலங்களிலும் முன் நிற்கும் சிறப்பினை உடையது - மஞ்சள்..

பூஜை அறையில் எத்துணை சிறப்புடையதோ -
அத்துணை சிறப்புடையது - சமையலறைகளிலும்!..

இந்த மஞ்சளின் மகிமை வீட்டின் தலைவாசலிலிருந்து தொடங்குகின்றது..

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டின் தலை வாசல் நிலையின் இருபுறமும் மஞ்சளை அரைத்துப் பூசி குங்குமப் பொட்டு வைப்பர்..

இது வீட்டிற்குள் துஷ்ட சக்திகள், பிணி பீடைகள் வராமல் இருப்பதற்கு என்று சொல்லி வைத்தார்கள் - பெரியோர்கள்..

ஆனால் - அதிக அறிவுடையோர் இதனை மூடப்பழக்கம் என்றனர்..

இப்போதெல்லாம் வீட்டின் தலை வாசல் நிலையில் மஞ்சள் பூசுவது கிடையாது.. குங்குமம் வைப்பதும் கிடையாது..

வாசலின் இருபுறமும் மாடப் பிறை கூட கிடையாது..

ஆனால் - இத்தகையோருக்கு நல்லன எல்லாம் நாடி வர வேண்டும் என்பது ஆசை..

கொட்டும் மழையில் குடத்தை வைத்தால் தானே நிறையும்..

நனைவதற்கு அலுப்பு கொண்டால் நடப்பது எது?..

ஆனால் - அமெரிக்க நாட்டின் நவீன விஞ்ஞானம் முந்திக் கொண்டது..

மஞ்சள் எங்களுக்கே உரிமையானது என்றனர்..

நல்லோர்களின் அயராத முயற்சியால் மஞ்சள் மீட்டெடுக்கப்பட்டது..

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் உடைமையான மஞ்சளில் அமெரிக்கா உரிமை கொண்டாட முடியாது என முடிவாயிற்று..

அப்படி மாற்றாருக்கும் நம்முடைய மஞ்சள் மீது கண் என்றால் - இதன் மாண்பினை எளிதில் உணரலாம்..

மங்கையரின் மங்கலம் - மாங்கல்யம்..

மஞ்சள் தோய்ந்த நூல் சரடில் விரலி மஞ்சளைக் கட்டினால் -
தாலி எனும் புனிதமாகி விடுகின்றது..

தாலம் எனும் பனையோலைதான் தாலி ஆயிற்று என்றாலும்
மஞ்சளே பிரதானமாயிற்று..

அத்தகைய மஞ்சள் -
மங்கல வழிபாடுகளில் விநாயகப் பெருமானாக உருவெடுக்கும் சிறப்பினை உடையது..

அம்பிகையை மஞ்சள் கொண்டு நீராட்டுவது சிறப்புடையது..


மஞ்சள் எல்லா தெய்வ மூர்த்திகளுக்கும் ஏற்ற அபிஷேக திரவியம்..

தாமிரபரணிக் கரையில் பாபநாசம் திருக்கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் இடித்துக் கொடுத்தால் - தீராத பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்..


சிவ தரிசனத்திற்கு சென்ற வேளையில் அந்தத் திருக்கோயிலில் உள்ள நடைமுறையினை அறிந்து நானும் என் குடும்பத்தினரும் மஞ்சள் இடித்துக் கொடுத்ததில் எங்களுக்கெல்லாம் பெருமகிழ்ச்சி..

அகத்திய மகரிஷி தரிசனம் கண்டதும் அங்கே தான்!..

மஞ்சள் அழகு சாதனம்..

முகத்திற்குப் பொலிவைக் கொடுப்பது..
அதனாலேயே மங்கையர் மஞ்சள் பூசிக் குளிப்பது..
மங்கையரின் மேனியில் அழகைக் கூட்டுவது..


மஞ்சள் - கிருமி நாசினி (Antiseptic)..

ஆறாத புண்களை ஆற்றுவது.. நாள்பட்ட வீக்கங்களைக் குறைப்பது..

மஞ்சள் நோய்க் கிருமிகளுக்கு எதிரி (Antibiotic)

தீங்குடைய பாக்டீரியாக்களை அழிக்கின்றது..
அதனால் தான் வாசல் நிலைப் படியில் பூசுவதும் வீட்டைச் சுற்றித் தெளிப்பதுவும் புத்தாடை மற்றும் மங்கல அழைப்பிதழ்களில் தடவுவதும்..

மங்கல வைபவங்களில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் விழாக்காலங்களில் தெய்வ திருமேனிகளுக்கு நீராட்டுவதும் மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீரை வாரித் தெளித்துக் கொள்வதும்..

மஞ்சள் மகத்தான மருந்து..

தொண்டை கரகரப்பு, நெஞ்சு சளி, சதைப் பிடிப்பு இவற்றுக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி..

கல்லீரலில் சேரும் அழுக்கினை அகற்றுகின்றது..

செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கின்றது..

புற்று நோய் செல்களை அழிப்பதுடன் மேலும் பரவாமல் தடுக்கின்றது..
உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அபரிமிதமாக வழங்குகின்றது..


மஞ்சள் சமையலறையின் அழகு..

அனைத்து வகைச் சமையலிலும் இடம் பெறுவது.. அசைவ சமையலில் இறைச்சி, மீன் இவற்றின் வாடையைப் போக்குவதுடன் கிருமிகளைக் களைகின்றது...

தனித்தன்மையான நறுமணத்துடன் சிறந்த நிறத்தையும் அளிக்கின்றது..
சாம்பாருக்கு அழகே மஞ்சள் வண்ணம் தான்..

தைப் பொங்கல் நாளில் பொங்கல் பானைக்கு மஞ்சளும் இஞ்சியும் கட்டுவதே அழகு..

பசுக்களையும் கன்றுகளையும் குளிப்பாட்டி அவற்றின் நெற்றியில் மஞ்சள் பூசுவது இல்லறத்தில் ஒன்று..

வீட்டுக்கு வருகை தரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் வழங்கி சிறப்பிப்பது கலாச்சாரம்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கையாண்ட அரும்பொருள் மஞ்சள்..

பருவம் எய்திய சிறுமியருக்கு செய்யப்படும் சிறப்பே மஞ்சள் நீராட்டு..

திருவிழாக் காலங்களில் அத்தை மகன் - மாமன் மகன் மீது மஞ்சள் நீரை வீசியடித்து விளையாடுவது இளங்கன்னியருக்கு இஷ்டமான ஒன்று.. 


நாகங்களின் மேல் ஏற்படும் காயங்களுக்கு அருமருந்தாக புற்றுகளைச் சுற்றிலும் மஞ்சள் பொடியைத் தூவி வைப்பது என்பது நம் முன்னோர் நமக்களித்த நற்பண்பு..

வாழ்வின் எல்லா நிலைகளிலும் மஞ்சளின் துணை கொண்டனர் - நம் முன்னோர்கள்..

ஆனால் -

இத்தகைய இயற்கை குணநலன்களை உடைய மஞ்சளை
செயற்கை உரங்களால் சீரழித்ததும்

சிறப்புடைய மஞ்சள் தூளில் கலப்படம் செய்து அதனைக் கெடுத்ததும்
இன்றைய மனிதனின் சாதனை..

இயன்றவரை விரலி மஞ்சள் மற்றும் மஞ்சள் கிழங்கினை சந்தைகளில் வாங்கி - நாமே அரைத்து பத்திரப்படுத்திக் கொள்வது நலம்..

ஆடி மாதத்தின் 
முதல் வெள்ளிக் கிழமை

இன்றைய அம்மன் தரிசனம்
புன்னை நல்லூர் ஸ்ரீமாரியம்மன்
தஞ்சை..


தீராத பிணிகளையும் தீர்த்து வைப்பவள்..
சேராத நலன்களையும் சேர்த்து வைப்பவள்..
தள்ளாடித் தளர்ந்தோர்க்குத் தாயானவள்..
தருமத்தில் நின்றோர்க்கு சேயானவள்..

நல்லார்க்கு நலிவென்னும் இடர் கெடுப்பவள்..
இல்லார்க்கு எளியார்க்கும் நலம் கொடுப்பவள்.. 

நகங்கொண்டு தீயோர் தம்கதை முடிப்பவள்..
முகங்கண்டு முகிலென்று வளம் கொடுப்பவள்..


மாரியவள் மாரியென்று பேர் படைத்தவள்..
கூரியவாள் தனையேந்தி பகை முடித்தவள்..
மாரியவள் மழைகொடுத்து வளம் கொடுப்பவள்..
வாரியவள் வரங்கொடுத்து நலம் கொடுப்பவள்..

மகமாயி திருவடிகளே சரணம்..
ஓம் சக்தி ஓம்..
***  

16 கருத்துகள்:

  1. மஞ்சளின் மகிமை அறியக் கொடுத்த கட்டுரை....
    அழகான ஆன்மீகப் பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி மஞ்சளைக்குறித்து அரிய பல பிரமிப்பான விடயங்கள் அறிந்து கொண்டேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆடிமாதத்தில் தினமும் ராமாயண பாராயணம் செய்கிறார்கள் கேரளாவில் அங்கும் கோவில்களில் கற்கடகக் கஞ்சி ஊற்றுகிறார்கள் இங்கு கர்நாடகாவிலும் இம்மாதம்பிரசித்தி பெற்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      நானும் இந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்..
      தங்கள் வருகைக்கும் மேலதிக செய்திகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மஞ்சளின் மகாத்மியம் அறிந்தாலும் இப்போது கிடைக்கும் மஞ்சளில் என்னவெல்லாமோ கலக்குகின்றார்கள். நாங்கள் எங்கள் வீடுகளில் கையில் அல்லது உடலில் ஏதேனும் காயம் பட்டு ரத்தம் வழிந்தால் அதைக் கட்டுப்படுத்த உடன் மஞ்சள் வைப்பது உண்டு. ஆனால் இப்போது சற்று பயமாகவே உள்ளது. பொடியில் கலப்படம் இருக்குமோ என்று. வீட்டில் மஞ்சள் வாங்கி அரைத்து வைத்துக் கொள்கின்றோம்.

    கேரளத்திலும் ஆடி மாதம் கர்கடக மாதம் என்று கொண்டாடப்படுகிறது.

    அருமையான தகவல்கள் ஐயா. பகிர்விற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வெறி பிடித்த மனிதர்கள் மஞ்சள் தூளில் கலப்படம் செய்கின்றனர் என்பதைப் பதிவிலும் சொல்லியிருகின்றேன்...

      நாமே அரைத்துக் கொள்வது நலம் தரும்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மஞ்சளின் மகிமையை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. ஐயா, விரலி மஞ்சள் என்பதே சரி என நினைக்கிறேன். (விறலி அல்ல)நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எழுத்துப் பிழைதனை சரி செய்து விட்டேன்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம்,

    மஞ்சள் மகிமை அருமை, இன்றும் நிலைக்கதவு,வாசல் என குங்குமம்,மஞ்சள் வைப்பது உண்டு. அந்த வகையில் எனக்கு அது அழகு மகிழ்ச்சி,,,
    வாசலில் கோலம் போட்டு அதில் மஞ்சள் குங்குமம் வைக்கலாமா???

    கால் மிதிப்டும் என்பதால் வைக்ககூடாது என்கிறார்கள் பக்கத்தில். ஆனால் எனக்கு வைக்க பிடிக்கும். முன்பு வைப்பேன். இப்போ வைப்பதில்லை.
    அருமையான தகவல்,,, நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அன்புடையீர்..

    வெள்ளிக் கிழமைகளில் இணையம் இழுவையாக இருக்கும்.. அதனால் வருவதற்கு இயலவில்லை..

    தாங்கள் சொல்வதே சரி.. கோலத்தின் நடுவில் மஞ்சள் குங்குமம் வைக்கக் கூடாது.. ஆனாலும் - சிலர் வைக்கின்றார்கள்.. அது அறியாமை..

    தங்கள் வருகையும் மேலதிக தகவல்களும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..