நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 28, 2016

ஆடிக் கிருத்திகை

வெற்றி வடிவேலனே..
சக்தி உமைபாலனே..
வீரம் விளைத்த குகனே!..
உற்றதொரு பகைவெல்ல 
தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிய வலிமை அருள்வாய்!..

தமிழ் மக்களின் தோளிலும் நெஞ்சிலும் உற்று உறவாடி நின்றவன் - வேலன்!..

அதனால் தான் - தமிழர் தம் ஊர்களிலும் உள்ளங்களிலும் உவப்புடன் திருக்கோயில் கொண்டு உறைகின்றான்..

வடிவேலன், உமைபாலன், சிவகுமாரன் - 
இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள் தான் அவனுக்கு!..

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் 
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை 
விளங்கு வள்ளிக் காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை -

- என்று வர்ணித்து மகிழ்வார் அருணகிரியார்...


எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்ற வளாமே
பிள்ளை என்றன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்!..

- என்று, மக்கள் அனைவரும் அவனையே போற்றி நிற்கின்றனர்..

அத்தகைய முருகன் உலகம் உய்வடைவதற்காகத் தோன்றினான்!..
- என்றுரைப்பார் கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சார்யார்..

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

அப்படி உலகம் உய்வதற்காக - 
ஆறு தீப்பொறிகளாக எம்பெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றி சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உதித்த திருமுருகனைத் தாலாட்டுதற்கும் சீராட்டுதற்கும் அம்பிகையின் திருவருளால் தேவ மகளிர் அறுவர் தோன்றினர்...

அவர்கள் தம் பணி நிறைவெய்திய வேளையில் - ஈசன் மனம் மகிழ்ந்து,

நீங்கள் அறுவரும் ஒருங்கிணைந்து கார்த்திகை நட்சத்திரங்களாகத் திகழ்வீர்களாக!.. உங்களால் வளர்க்கப்பட்ட  எங்கள் செல்வன் - கார்த்திகேயன் என்ற திருப்பெயருடன் மக்களால் வணங்கப்படுவான்.  கார்த்திகை நாளில் கார்த்திகேயனை வழிபடுவோர் எண்ணியதெல்லாம் ஈடேறப் பெற்று அனைத்து நலங்களையும் எய்துவர்!.. 

- என்று, வரம் அளித்தார்..

அதன்படியே - காலகாலமாக கார்த்திகை விரதம் அனுசரிக்கப்படுகின்றது..

அந்த வகையில் -
தட்சிணாயணத்தின் முதல் மாதமாகிய ஆடி மாதத்திலும்
உத்ராயணத்தின் முதல் மாதமாகிய தை மாதத்திலும்
வரும் கார்த்திகை நாட்கள் மிகச் சிறப்புடையவை..

இன்று ஆடிக் கார்த்திகை..

திருமுருகன் மூல மூர்த்தியாக விளங்கும் திருக்கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகின்றன..

அத்துடன் - சகல சிவாலயங்களிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

எங்கெங்கும் அவனுக்கே ஆடலும் பாடலும்
என்றென்றும் அவனுக்கே தேடலும் கூடலும்!..

அந்த வகையில்,
அருணகிரியார் அருளிய திருப்புகழ் பாடல் வரிகளுடன்
ஆறு சிவாலயங்களைத் தரிசிப்பதற்கு அன்புடன் அழைக்கின்றேன்..

குமார வயலூர்

இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஆதிநாயகி
தல விருட்சம் - வன்னி மரம்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


வாகையை முடித்துக் காட்டி கானவர் சம்ர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டும் -- இளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே!.. (915)

சிவாலயத்தில் - திருமூலத்தானத்திற்கு நேர் பின்னால் திருமுருகனின் சந்நிதி..

வள்ளி தெய்வயானையுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றான்..

திருஅண்ணாமலையில் திருமுருகனின் திருவருளால்
தடுத்தாட் கொள்ளப்பட்டவர் அருணகிரியார்...

அவ்வேளையில் முருகப் பெருமானைப் புகழ்ந்து பாடப்பட்டது தான் -

முத்தைத் தரு.. எனும் திருப்பாடல்..

அண்ணாமலையில் நிஷ்டையில் இருந்த அருணகிரியாரை -  வயலூருக்கு வா!.. என்றழைத்து பாடும் பணியை அருளினான் திருக்குமரன்..

முருகப்பெருமானின் திருப்புகழினை இத்திருத்தலத்திலிருந்தே பாடத் தொடங்கினார் - அருணகிரியார்..

குமார வயலூர் - திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது...
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நிறைந்த பேருந்துகள் இயங்குகின்றன..
***

தஞ்சை

இறைவன் - ஸ்ரீ பிரகதீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரகந்நாயகி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சிவகங்கை  


அஞ்சன வேல்விழி -- மடமாதர்
அங்கவர் மாயையில் -- அலைவேனோ
விஞ்சுறு மாவுன -- தடிசேர
விம்பம தாயருள -- அருளாயோ..

நஞ்சமுதா உணும் -- அரனார்தம்
நன்குமரா அருள் -- உமைபாலா
தஞ்சென வாம்அடி -- யவர் வாழ
தஞ்சையில் மேவிய -- பெருமாளே!.. (883)

புகழ் பெற்ற இத்திருக்கோயிலில் கலையழகு மிக்கதாக விளங்கும்
கந்த கோட்டத்துள் வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்துடன் திகழ்கின்றான்..


ஆறு திருமுகங்களுடன் பன்னிருகரங்களும் கொண்டு பக்தருக்கு பலநூறு நலங்களையும் வளங்களையும் வாரி வழங்குகின்றனன்..

அருணகிரியார் மூன்று திருப்பாடல்கள் கொண்டு போற்றுகின்றார்..

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் -- குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் -- பெருமாளே!.. (884)

- என்று பெரிய கோயிலையும் தஞ்சை மாநகரையும் சிறப்பித்தருள்கின்றார்..
*** 

திருஐயாறு

இறைவன் - அருள்திரு ஐயாறப்பர்
அம்பிகை - அருள்தரு அறம் வளர்த்த நாயகி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி, சூரிய புஷ்கரணி

வில்லேந்திய வேலவன்
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி
திசையி னான்மறை தேடிய முற்குடி -- விதியாதிச்

சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவை யாறுட னேழுதி ருப்பதி -- பெருமாளே!.. (886)

எண்ணரும் சிறப்புகளையுடைய திருத்தலம் திருஐயாறு..
சமயக்குரவர் நால்வரும் புகழ்ந்தேத்திய திருத்தலம்..

இத்திருத்தலத்தில் வில்லேந்திய வேலனாகத் திகழ்கின்றான் - திருமுருகன்..

வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் விளங்கும் வேலனின் வனப்பு அளவிடற்கரியது..

தஞ்சை நகரப் பேருந்து நிலையத்திலிருந்து
நிறைய பேருந்துகள் திருஐயாற்றுக்கு இயக்கப்படுகின்றன..
***

சிக்கல்

இறைவன் - ஸ்ரீ நவநீதேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு வேல்நெடுங்கண்ணி
தலவிருட்சம் - மல்லிகைக்கொடி
தீர்த்தம் - திருப்பாற்குளம்


அலர்தரு புஷ்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி -- இசையாலே

அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய -- பெருமாளே!.. (827)


இத்திருத்தலத்தில் முருகனுக்கு சிங்கார வேலன் என்பது திருப்பெயர்..

வசிஷ்டர் காமதேனுவின் பாலிலிருந்து பெற்ற வெண்ணெய் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்த திருத்தலம்..

அதனால் ஈசனுக்கு வெண்ணெய் நாதர் என்பது திருப்பெயர்..

அம்பிகை வேல் நெடுங்கண்ணி - முருகனுக்கு வேல் கொடுத்து வாழ்த்தினாள் - என்பது ஐதீகம்..

சூரசம்ஹாரப் பெருவிழாவில் அன்னையிடம் வேலினை வாங்கும்போது
திருக்குமரனின் முகத்தில் முத்து முத்தாக வேர்க்கின்றது..

திருக்கோயில் கட்டுமலையின் மீது அமைந்துள்ளது..

ஈசனுக்கு முன்பாக தெற்கு நோக்கிய வண்ணம் வள்ளி தெய்வானையுடன் சிங்கார வேலன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றான்..

ஆடிக் கார்த்தியன்று சிங்கார வேலனுக்கு மஹா அபிஷேகம் நிகழ்கின்றது.
இரவில் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா..

சிவாலயத்தினுள்ளேயே - வரசித்தி ஆஞ்சநேயரும் கோலவாமனப் பெருமாளும் திருக்கோயில் கொண்டுள்ளனர்..

திருஆரூருக்கும் நாகைக்கும் இடையில் அமைந்துள்ள திருத்தலம்..
***

எட்டுகுடி

இறைவன் - சௌந்தர நாயகர்
அம்பிகை - ஆனந்தவல்லி
தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம் - சரவணப்பொய்கை 


சோழ மண்டலத்தின் சிறப்பான தலங்களுள் இதுவும் ஒன்று..

திருமூலத்தான மூர்த்தியாக வள்ளி தெய்வயானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலமாக விளங்குகின்றனன்..

இத்தலத்தில் சித்ரா பௌர்ணமி மிகச்சிறப்பாக நிகழும்..

முதல் நாளில் தொடங்கும் பாலாபிஷேகம் பௌர்ணமிக்கு மறுநாள் வரை தொடர்ந்து நிகழும்..

வன்மீக நாதர் எனும் சித்தர் பெருமான் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார்..

திருஆரூர், நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..
***

திருவிடைக்கழி
(திருஇடைக்கழி)

இறைவன் - பாபநாசப் பெருமான்
அம்பிகை - பரமேஸ்வரி
தலவிருட்சம் - குரா, மகிழ்
தீர்த்தம் - சக்தி தீர்த்தம்


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனில் உலவிய -- பெருமாளே!.. (797)

சந்நிதியில் சிவலிங்கத்திற்கு முன்பாக ஆறடி உயரத்துடன் கம்பீரமாக திகழ்கின்றனன்..

முருகப்பெருமான் சிவபூஜை செய்த திருத்தலங்களுள் திருவிடைக்கழியும் ஒன்று..

சிவபெருமானை குரா மரத்தின் நிழலில் - முருகன் வழிபட்டதாக ஐதீகம்..

அவ்வண்ணமே குரா மரத்தினடியில் சிவலிங்கம் திகழ்கின்றது..  

இங்கு முதலில் அர்த்த ஜாம பூஜை செய்யப்பட்ட பின்னரே சந்நிதியில் செய்யப்படுகின்றது..

அசுரரை வென்ற பின் - தேவயானைக்கும் முருகனுக்கும் இத்திருத்தலத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ந்து என்பர் ஆன்றோர்..

தெய்வயானை மட்டும் தனிச் சந்நிதியில் திகழ்கின்றனள்..


பிரசித்தி பெற்ற திருக்கடவூரில் இருந்து ஆறு கி.மீ தொலைவில் உள்ளது திருவிடைக்கழி

மயிலாடுதுறை மற்றும் நாகையிலிருந்து சிறப்பான பேருந்து வசதிகளை உடையது..


விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!..

வேலும் மயிலும் துணை!.. - என வேண்டி நிற்போர் பல்லாயிரம்..

எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வந்தருள் செய்பவன் - என்பார் அருணகிரிநாதர்..

எல்லா நன்மைகளையும் தரவல்லது முருக வழிபாடு..

என்றென்றும் அறுமுகப் பெருமானத் துணைக் கொள்வோம்..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஓம் 
சரவணபவ குக சண்முக சரணம்..
***

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி ஆடிக்கிருத்திகை குறித்த விரிவான செய்திகள் நன்று வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆஹா,, அழகிய படங்கள், அவைக் கொடுக்கும் பாடம்,, அருமையான விளக்கம், அருமை அருமை

    இலக்கியம் இனிக்கிறது.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழகன் முருகன் பற்றி அருமையான பகிர்வு...
    அழகான படங்கள்...
    நான் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை அழைக்கும் கடவுள் முருகன்தான்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஆடிக்கிருத்திகை பற்றிய பதிவும் படங்களும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. சிறப்பான தகவல்கள். அருமையான படங்கள்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துரை செல்வராஜு ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..