நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 28, 2015

அழிபசி தீர்த்தல்

காவிரிப்பூம்பட்டினம்!.

சோழர்களின் தலைநகரங்களுள் முதன்மையானது.

அந்நகரில் வருடந்தோறும் நிகழ்வுறும் இந்திரவிழாவினைக் காண்பதற்கு பெருவிருப்பத்துடன் இந்திர லோகத்திலிருந்து வருபவள் - மணிமேகலா தேவி!..

மணிமேகலா தேவி - மானுடப் பெண்ணாக வடிவந்தாங்கி விழாவின் கோலாகலங்களைக் கண்டு மகிழ்வுறும் வேளையில் -

அந்நாட்டின் இளவரசன் உதயகுமாரன் மங்கை ஒருத்தியைத் தொடர்ந்து சென்று அவளுக்கு துன்பம் தருவதைக் காண்கின்றாள்..

அந்த மங்கையின் நல்வினைப் பயன் மூண்டெழுந்ததால் - மணிமேகலா தேவியின் நெஞ்சத்தில் அவளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது.

மணிமேகலா தேவியினால் அந்த மங்கையும் காப்பாற்றப்படுகின்றாள்..


மணிமேகலா தேவியினால் காப்பாற்றப்படுவள் - மணிமேகலை!..

கற்புக்கரசியாகிய கண்ணகிக்கு மகள் முறை..

கோவலனின் மனங்கவர்ந்த மாதவியின் மகள் - மணிமேகலை!..

கோவலன் - தன் அன்பு மகளுக்கு மணிமேகலை - என, பெயர் வைத்தது ஏன்!..

திரைகடல் ஓடி திரவியம் தேடிய பரம்பரை - கோவலனுடையது.

அவனுடைய முன்னோர்களுள் ஒருவர் - கடல் பயணத்தின் போது விளைந்த சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டார்..

அப்படிக் காப்பாற்றியவள் - தெய்வ மங்கையாகிய மணிமேகலா தேவி..

அந்த நன்றிக் கடன்!..

உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றிய - மணிமேகலா தேவி - அவளை மணிபல்லவத் தீவுக்கு அழைத்துச் செல்கிறாள்..

அங்கே - மணிமேகலை தனது முந்தைய பிறவியினை உணர்கின்றாள்..

மேலும்,

தீவின் காவல் தேவியான தீவதிலகாவின் அன்புக்குப் பாத்திரமாகின்றாள்.

அதன் பயன் - அங்கிருந்த கோமுகிப் பொய்கையிலிருந்து
அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் கிடைக்கின்றது.

தக்கோர் கரத்தினில் சேர்க!.. -  என, ஆபுத்திரனால் விடப்பட்டது - அமுதசுரபி .

அமுத சுரபி -ஆண்டு தோறும் வைகாசிப் பௌர்ணமி அன்று வெளிப்படும்.

தக்கோர் யாரும் தென்படாததால் மீண்டும் பொய்கையினுள்ளேயே ஆழ்ந்து விடும்.

தீவதிலகா மணிமேகலையிடம் கூறினாள்..

அமுதசுரபி வெளியே வரும் நேரமிது.. பொய்கையை வலம் வந்து சுரபியைப் பெற்றுக் கொள்!..

அதன்படியே செய்தாள் - மணிமேகலை.

பொய்கையினுள்ளிருந்து வெளி வந்த அமுத சுரபி மணிமேகலையின் திருக் கரங்களில் வந்தமர்ந்தது.

இனி நீ உயிர்களுக்கு உணவளிக்கும் அறத்தினைச் செய்வாய்!..

- என வாழ்த்திய, தீவதிலகா - மணிமேகலையை மீண்டும் புகார் நகரில் கொண்டு வந்து சேர்த்தாள்.

மணிமேகலை தன் தாய் மாதவியுடனும் தோழி சுதமதியுடனும் சென்று - அறவண அடிகளை சந்திக்கின்றாள்.

அறவண அடிகள் - நலந்தரும் நல்லறங்களை எடுத்துக் கூறுகின்றார்.

அதன் விளைவு!..

மதுமலர்க் குழலாளாகத் திகழ்ந்த மணிமேகலை -
தன் எழிற்கோலத்தினைத் துறந்து - துறவுக்கோலம் பூணுகின்றாள்..

அமுத சுரபியுடன் பிச்சை ஏற்க நகருக்குள் புகுகின்றாள்..

பெருவனப்புடன் திகழ்ந்த மணிமேகலை - துறவு பூண்டு - தன்கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருவதைக் கண்ட நகர மக்கள் வேதனையால் கண்கலங்கி நிற்கின்றனர்.

யாரிடம் முதலில் பிச்சை ஏற்பது!?.. மணிமேகலைக்கு சற்றே குழப்பம்.

அப்போது வருகின்றாள் - காயசண்டிகை!..

வானவீதியில் பறந்து திரியும் வல்லமை கொண்ட விஞ்சையர் குல மங்கை காயசண்டிகை. இவளது கணவன் - காஞ்சனன்.

இமயமலையின் அடிவாரத்திலுள்ள காஞ்சனபுரம் இவர்களுடைய நாடு.

வித்யாதரர்கள் எனவும் குறிக்கப்படும் இவர்கள் தென்னகத்தின் பொதிகை மலையைக் காண வருகின்றார்கள்.

மலை வளங்கண்டு மகிழ்ந்த வேளையில் - தேக்கிலையில் வைக்கப்பட்டிருந்த நாவல் பழத்தினைக் காண்கின்றாள் - காயசண்டிகை.

அது - பன்னிரண்டு ஆண்டு காலத்திற்கு தவத்தில் ஆழ்ந்திருக்கும் முனிவர் ஒருவர் - தவம் முடித்த பின் உண்பதற்காக வைத்திருந்த பழம்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதால் - அகந்தை கொண்டு - நாவற்பழத்தை காலால் சிதைத்து விடுகின்றாள் - காயசண்டிகை.

அதைக் கண்ட முனிவர் கோபங்கொண்டு சாபம் கொடுத்து விடுகின்றார்.

பழத்தைச் சிதைத்த நீ - என்னைப் போல பெரும்பசி கொண்டு பன்னிரண்டு ஆண்டுகள் அலைவாயாக!..

எங்கு சென்றும் காயசண்டிகைக்கு விமோசனம் கிடைக்காது என்பதால் - அவளைப் புகார் நகரில் விடுத்து விட்டு - காஞ்சனன் நாடு திரும்புகின்றான்.

அங்கே அறச்சாலைகளில் கிடைக்கும் உணவினை உட்கொண்டு -
அடங்காத பசியுடன் திரியும் காயசண்டிகை, தன்னுடைய நுண்னுணர்வினால் மணிமேகலையை புரிந்து கொள்கின்றாள்.

அவளே - மணிமேகலையை முதற்பிச்சைக்கு அழைத்துச் செல்கின்றாள்.

பெருந்தனவந்தனாகிய கோவலனின் அன்பு மகள் கால சூழ்நிலைகளினால் துறவுக் கோலத்துடன் பிச்சைக்கென நின்றபோது -

அவளுக்கு முதற்பிச்சையிட்ட இல்லத்தரசி - ஆதிரை!..

ஆதிரை - சாதுவன் எனும் பெருஞ்செல்வனின் மனைவி!..

தன் மனையின் முன் புனையா ஓவியம் போல் நின்றிருந்தவளைக் கண்டாள்.

மணிமேகலை யாரென நன்கு அறிந்திருந்தும் அவள் பூண்டிருந்த துறவுக் கோலம் கண்டு கை கூப்பினாள். வலம் வந்து வணங்கினாள்.

மணிமேகலையின் திருக்கரங்களில் இருந்த அமுதசுரபியில் முதற்பிச்சை இட்டாள்.

அப்போது மங்கை நல்லாளாகிய ஆதிரை கூறிய திருவாசகம் -

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக!..

அமுத சுரபியில் - ஆதிரை இட்ட உணவினை தன் கரத்தால் எடுத்து அடங்காப் பசியினால் அல்லலுற்றிருந்த காயசண்டிகைக்கு உண்ணக் கொடுத்தாள்.

மணிமேகலை அளித்த உணவினால் தன் துயர் நீங்கப்பெற்ற காயசண்டிகை - அவளை வாழ்த்தினாள். அதன்பின்,

தன் கதையை மணிமேகலையிடம் கூறிய காயசண்டிகை - ஊரம்பலத்திலுள்ள ஏழையர்க்கு உணவளிக்கக் கூறியபடி - விண்ணில் ஏறி தன் நகருக்கு ஏகினாள்.


மணிமேகலை அற்றோர்க்கும் அலந்தோர்க்கு அமுதமெனும் உணவை வாரி வாரி வழங்கினாள்..

சிறைக் கூடத்தினுள்ளும் புகுந்து - சிறைப்பட்டோர்க்கு உணவு வழங்கினாள். அதனை உண்டோர் - கொடுங்குணம் நீங்கினர். நல்வழிப்பட்டனர்.

இதையறிந்த மன்னன் அரசவைக்கு அழைத்தான்.
மணிமேகலையை போற்றிப் புகழ்ந்து - வேண்டுவன கேள்!.. - என்றான்.

பேரானந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்த மணிமேகலை -
சிறைப்பட்டோர்க்கு விடுதலையை வேண்டி நின்றாள்!..

என்ன ஒரு கருணை!.. நினைக்கும் போதே மெய்சிலிர்க்கின்றது..

நல்லவர் அளிக்கும் உணவு அமிர்தத்திற்குச் சமம்..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்!. 

- என்பது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை காட்டும் அறம்..

ஆதிரை , மணிமேகலை போன்ற மங்கையரால் பெருமையுடையது பாரதம்!..


சிற்றுயிர் முதற்கொண்டு பசிப்பிணி தீர்த்தல் என்பது பாரதத்தின் பண்பாடு!..

திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - ஈசனிடம் படிக்காசு பெற்று மக்களின் பசிப்பிணி தீர்த்த திருத்தலம் - திருவீழிமிழலை!..

மக்களுக்காக ஆற்றிய அருந்தொண்டிற்காகத் தான் - திருப்பைஞ்ஞீலியில்,
சோறும் நீரும் சுமந்து வந்து -  அப்பர் பெருமானுக்கு அமுதூட்டி மகிழ்ந்தனன் - எம்பெருமான்..

புராணங்களும் திருமுறைகளும் பிறருக்கு உண்ணக் கொடுப்பதைப் பலவாறாகப் புகழ்ந்துரைக்கின்றன.

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்பது திருமந்திரம்.

தான் சுவைத்த கனி கொடுத்து ஸ்ரீராமனை உபசரித்த சபரி அம்மை,
ஈசனுக்கு மாங்கனியுடன் அன்னமளித்த காரைக்கால் அம்மையார்,

மாவடுவும் தயிர் சோறும் அளித்த அரிவாட்டாய நாயனார், 
நள்ளிரவில் விதை நெல்லைக்கொண்டு அமுதளித்த இளையான்குடி மாறனார், 

பிள்ளைக்கனி அமுது எனும் விருந்தளித்த சிறுதொண்ட நாயனார்,
கடுங்குளிர் பொழுதில் களி கொடுத்து களி கொண்ட சேந்தனார்,

இன்னும் எத்தனை எத்தனையோ புண்ணியர்கள் - நம் கண் முன்னே!..

அந்த வழியில் வந்ததால் தான் -  

வாடிய பயிரக் கண்டபோதெல்லாம் வாடினேன்!.. - என்று வருத்தமுற்று அணையா அடுப்பினை ஏற்றி வைத்தார் - அருட்பிரகாச வள்ளலார்.


சைவ வைணவ இல்லங்களில் - பொழுது விடியும் போதே - மனைமங்கலம் வாசற்கோலத்தில் தொடங்குகின்றது.

சிற்றுயிர்கள் வருந்தக்கூடாது என்பதனால் தான் அரிசி மாவுக்கோலம்..

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் - இரவு நேரத்தில் யாரும் பிச்சை கேட்டு வருகின்றார்களா.. - என்று காத்திருப்பார்கள்..

இரவில் எவரும் பட்டினியுடன் படுக்கக் கூடாது என்பது தர்ம சிந்தனை.

பகலில் இடாவிட்டாலும் - இரவு பிச்சையை யாரும் ஒதுக்கமாட்டார்கள்.

எவரும் வரவில்லை என்ற பின்னரே சோற்றில் தண்ணீர் ஊற்றுவர்.

வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் சோறு வைப்பதும் உண்டு..

அலைந்து திரியும் நாய்களுக்கு ஆகட்டும் என்பது - அதன் நோக்கம்.

அதையெல்லாம் விட புண்ணியம் ஒன்றிருந்தது. அதன் பெயர் - அன்னக்காவடி!.

மேல் வளைவு இல்லாத - காவடியின் இருபுறமும் உரி போன்ற தொங்கலில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு வருவார்கள்.. 

காவடியின் இரு முனைகளிலும் மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். காவடியைத் தோளில் தாங்கி வரும் போது எழும் நாதமே - வழிக்குறிப்பு.

பெரும்பாலும் இரவில் மட்டுமே அன்னக்காவடியினர் வருவர். 

ஆனால் - யாரிடத்தும் எந்த வீட்டிலும் பிச்சை என்று கேட்கமாட்டார்கள்.

காவடியிலிருந்து எழும் மணியோசையே - குறிப்பு..

அன்னக்காவடி தெருவில் வரும் போதே எதிர்கொண்டு உணவளிப்பர் நம்மவர்கள். காரணம் - 

அன்னக் காவடியினரின் நோக்கம் - பிச்சை ஏற்று பிச்சை இடுதல்!..

தெருவில் திரிந்து பிச்சை எடுக்க இயலாதவர்களுக்கு உதவுவதே!..

நாற்பதாண்டுகளுக்கு முன் - தஞ்சையில் அன்னக் காவடியினர் தங்கியிருந்த மடம் ஒன்று இருந்தது. 

அங்கே என் தந்தை பல சமயங்களில் அன்னதானம் செய்திருக்கின்றார்.

கிராமத்தில் இருந்தவரைக்கும் - இரவில் வீட்டின் முன் பாத்திரத்தில் சோறு வைக்கும் பழக்கம் இருந்தது.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்!..

- என்றார் மகாகவி பாரதியார்.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!..

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்!..

- என்றுரைத்தார் கவியரசர் கண்ணதாசன்.  


அன்னதானம் வழங்குவது பெரும் புண்ணியச் செயல் எனும் நம்பிக்கையை நம் மக்கள் கொண்டிருக்கின்றனர்.


அன்னதானம் என்றில்லை.. 
ஒரு குவளை நீர் அளிப்பதும் புண்ணியம் தான்..

இன்று மே மாதத்தின் இருபத்தெட்டாம் நாள்!..
உலக பசிப்பிணி தீர்க்கும் நாள்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகை!.. - என மொழிந்த வள்ளுவப்பெருமான் -

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு!..

- என்றும் அருளினார்..

அப்படிப் பெற்ற ஊதியத்தை என்ன செய்வது!.. எங்கே வைப்பது?..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி!..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

24 கருத்துகள்:

  1. அய்யா மணிமேகலைக் காப்பியம் தான் எனினும் தாங்கள் சொன்ன விதம் அருமை. அக்காப்பியம் நிறையக் கிளைக்கதைகளுடன் கூடியது.
    ஆபுத்திரன்
    ஆதிரை
    காயசண்டிகை
    இன்னும்,,,,,,,,,,,
    ஆனால் இவர்கள் எல்லோரும் மணிமேகலையிடன் தொடர்பில் வருபவாக்ள்.
    மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிப்பல்லவத்தீவிற்கு அழைத்துச்சென்று அளித்த அட்சயப்பாத்திரம் அற்றார் அழிபசி தீர்த்தக் காவியத்தைச் பதிவில் வைத்த தங்களுக்கு என் நன்றிகள். உண்மைதான் ஒரு குவளை நீரும் புண்ணியம் தான். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
      விரிவான கருத்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
  2. பொருத்தமான நாளில் நல்லதொரு பதிவைத் தந்துமைக்கு நன்றி நண்பரே நிறைய விடயங்கள் அறியத்தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      பாரில் பசிப்பிணி நீங்கினால் - குற்றங்கள் இல்லை என்கின்றனர்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
      .

      நீக்கு
  3. அன்னதானத்தினும் உயரிய அறம் ஏது
    அருமையான பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மணிமேகலை மாதவியின் மகள் என்று மட்டும் தான் தெரியும். இக் கதை பற்றி இன்று தான் தெரியும் அன்னதானத்தின் சிறப்பையும் மணிமேகலை துறவு பூண்ட கதையும் காயசண்டிகையின் அடங்காப் பசியை தீர்த்தது பற்றியும் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பதிவுக்கு நன்றி! சொல்லி சென்ற விதம் அருமை. தொடர வாழ்த்துக்கள் ..!
    தங்கள் தளத்தில் இணைய முடியவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      '' இந்தத் தளத்தில் இணைக '' - என்னும் கட்டத்துக்கு அருகில் உள்ள சிறிய சிவப்பு கட்டங்களைத் திறந்து முயற்சிக்கவும்..

      கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
    2. நீங்கள் சொன்ன படியே சென்று இணைந்து விட்டேன் சகோ மிக்க மகிழ்ச்சி !

      நீக்கு
    3. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

      நீக்கு
  5. அன்னதானத்தின் சிறப்பும், மணிமேகலைபற்றியும்....அழகாய் படைத்திருக்கிறீர்கள். சிறுவயதில் படித்தது, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்லவர் அளிக்கும் உணவு அமிர்தத்திற்கு மேல்...

    சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அன்னதானத்தின் சிறப்பை பற்றி அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  8. அட்சய பாத்திர நினைவுகளால் உந்தப்பட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன் It may not be out of context to give the link
    http://gmbat1649.blogspot.in/2013/11/blog-post_29.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      மேலதிகமாக பதிவின் இணைப்பினை வழங்கியமைக்கு நன்றி..

      நீக்கு
  9. எனது பௌத்த ஆய்வில் ஈடுபட்டதன் காரணமாக மணிமேகலைக் காப்பியத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தாங்கள் பல செய்திகளை மிக அழகாக, சுருக்கமாக மனதில் தந்துள்ளவிதம் அருமையாக உள்ளது. மணிமேகலைக் காப்பியத்தின் சுருக்கமாகவே உங்கள் பதிவு உள்ளதை அறியமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பத்தாம் வகுப்பின் துணைப்பாடம் - மணிமேகலை..

      பசி தீர்க்கும் அறத்தினைக் கூறுவதற்காக ஓரளவு மட்டுமே பதிவில் வழங்கியுள்ளேன்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  10. பள்ளியில் படித்த நினைவு! இப்போது மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு, அதுவும் இன்னும் அழகான விரிவான நடையில் எழுதி பல தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி! மிக அழகான பதிவு! ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எத்தனை தரம் படித்தாலும் தித்திக்கும் தேனமுது - மணிமேகலை.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. உலகப்பணிப்பிசி நீக்கும் நாளில் மணிமேகலையில் துவங்கி பாரது, கண்ணதாசன் வரை அனைவரது கருத்துக்களையும் சிறப்புறத் தொகுத்தமைக்குப் பாராட்டுக்கள். தெரியாத செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. தேடி வந்து வாசித்து கருத்துரை வழங்கிய தங்களுக்கு நன்றி..

      நீக்கு
  12. காயசண்டிகை சாபம் வாங்கிய மலை எது

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..