நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 25, 2014

தேவி தரிசனம் - 2

தேவர்களுக்கு இரவுப் பொழுதாகிய தட்சிணாயத்தின் முதல் மாதம் ஆடி.  

சந்தியா வேளை. நித்ய பிரதோஷம் எனப்படும் விளக்கேற்றும் நேரம் .

அந்த நேரத்தில் தன தான்யங்கள் வீட்டிற்குள் வருவதைத்தான் எவரும் விரும்புவர். எக்காரணம் கொண்டும் விளக்கேற்றும் வேளையில் - உப்பு எண்ணெய், சுண்ணாம்பு முதலான பொருட்களைத் தரவே மாட்டார்கள். 

மிகக் கூடிய அவசியம் , அவசரம் என்றால் மட்டுமே - பணம் பெட்டியை விட்டு வெளியே வரும்!.. அதற்கும் கூட ஒரு நாழிகைப் பொழுது (24 நிமிடங்கள்) கணக்கிடுபவர்களும் உண்டு.

இந்த அடிப்படையில் தான் அயணத்தின் பிரதோஷ நேரமாகிய ஆடியில் நமது தேவை தவிர்த்த மற்ற எதற்கும் கைப் பொருளைக் கரைக்காமல் - இறுகப் பிடித்துக் கொண்டார்கள்.

மாமதுரை ஸ்ரீ மீனாட்சி
தேவ கார்யங்களுக்கான மாதம் ஆனபடியால் - வீட்டில் திருமண மங்கலங்கள் ஆவணியில் தான்!..

ஆனால்,  தற்காலத்தில் - நம்மைச் சுற்றி ஆடித் தள்ளுபடி எனக் கூச்சல்கள்.. 

நம் கண்ணை, நாமே - நம் விரலால் குத்திக் கொள்ள  - வியாபார தந்திரம்.

ஆடி மாதத்தின் வெள்ளிக் கிழமைகளில்  அம்மன் சந்நிதிகளில் - நிறை மங்கல வைபவங்கள் நிகழும்.

மாயையில் மூழ்கி விடாமல் நம்மைக் காப்பவை - அம்பிகையின் திருவடிகள்..
அந்த வகையில் இன்று ஆடி இரண்டாவது வெள்ளி!..

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!..

- எனத் துதித்த அபிராம  பட்டர் நமக்கு வழங்கிய திருப்பதிகங்கள் இரண்டினுள் ஒன்றினை சென்ற வாரம் கண்டோம்!..

இந்த வாரம் - இரண்டாவது திருப்பதிகம்..
ஒருமுறை பாராயணம் செய்தாலே - 
பொருள் விளங்கும்!.. பொருளும் விளங்கும்!..

அபிராமபட்டர் அருளிய
ஸ்ரீ அபிராமி திருப்பதிகம்!..

தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம் நால்வாய் 
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு!..


கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
மணி மிடறும்  மிக்க சதுர்பெருகு துங்க பாசாங்குசம்
இலங்கு கர தலமும்  விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ்சேவடியை நாளும்
புகழ்ந்துமே - போற்றி என வாழ்த்த  விடை மேல்
மங்களம் மிகுந்தநின் பதியுடன்வந்து  அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (1)

சந்திர சடாதரி! முகுந்த சோதரி! துங்க சல
சுலோசன மாதவி! சம்ப்ரம பயோதரி! சுமங்கலி!
சுலட்க்ஷணி! சாற்றரும் கருணாகரி!
அந்தரி! வராகி! சாம்பவி! அமர தோதரி! அமலை!
செக சால சூத்ரி! அகில ஆத்ம காரணி! வினோத சய நாரணி!
அகண்ட சின்மய பூரணி!
சுந்தரி! நிரந்தரி! துரந்தரி! வரை ராச சுகுமாரி!
கௌமாரி! உத் துங்க கல்யாணி! புஷ்ப அஸ்திராம்புய
பாணி! தொண்டர்கட்கு அருள் சர்வாணி!
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (2)

வாச மலர் மருஅளக பாரமும்  தண் கிரண மதி முகமும்
அயில் விழிகளும்  வள்ள நிகர் முலையும்  மான் நடையும்
நகை மொழிகளும்  வளமுடன் கண்டு  மின்னார்
பாச பந்தத்திடை  மனம் கலங்கித்  தினம் பல வழியும்
எண்ணி  எண்ணிப் பழி பாவம் இன்னது என்று அறியாமல்
மாயப்ர பஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு  வீணாக  நாய் போலத் திரிந்து அலைவது
அல்லால்  உன்றன் அம்புயப் போது எனும் செம்பதம்
துதியாத அசடன் மேல் கருணை வருமோ?
மாசிலாது ஓங்கிய குணாகரி! பவானி! சீர் வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ
சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (3)

ஸ்ரீமட்டுவார்குழலி - திருச்சி
நன்று என்று  தீது என்று நவிலும் இவ்விரண்டனுள்
நன்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்
நானுமே அவ்விதம் நாடினேன்  நாடினாலும்
இன்று என்று சொல்லாமல்  நினது திருஉள்ளமது இரங்கி
அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்
மெய்யான மொழி இஃது உன் இதயம் அறியாதது உண்டோ?
குன்றம் எல்லாம் உறைந்து  என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த குமரி! மரகத வருணி!
விமலி! பைரவி! கருணை குலவு கிரி ராச புத்ரி!
மன்றல் மிகு நந்தன வனங்களில்  சிறை அளி முரல
வளர்திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (4)

ஒரு நாள்  இரண்டு நாள் அல்ல  நான் உலகத்து
உதித்த இந் நாள் வரைக்கும் ஒழியாத கவலையால்
தீராத இன்னல் கொண்டு  உள்ளம் தளர்ந்து  மிகவும்
அரு நாண் இயற்றிட்ட வில் போல் இருக்கும் இவ்
அடிமைபால் கருணை கூர்ந்து  இங்கு அஞ்சேல் எனச் சொல்லி
ஆதரிப்பவர்கள் உனை அன்றி இலை உண்மையாக
இரு நாழிகைப் போதும் வேண்டாது  நிமிடத்தில் இவ்வகில
புவனத்தையும் இயற்றி  அருளும் திறம் கொண்ட நீ
ஏழையேன் இன்னல் தீர்த்து  அருளல் அரிதோ?
வரு நாவலூரர் முதலோர் பரவும்  இனிய புகழ் வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (5)

எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்
ஏறிட்டு ஒறுக்க  அந்தோ! எவ்விதம் உளம் சகித்து
உய்குவேன்? இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில்
நண்ணி எள்ளளவு சுகமானது ஒரு நாளினும் நான்
அனுபவித்த தில்லை  நாடெலாம் அறியும்  இது கேட்பது ஏன்?
நின் உள்ளமும் நன்றாய் அறிந்து இருக்கும்
புண்ணியம் பூர்வ சனனத்தினில் செய்யாத புலையன்
ஆனாலும்  நினது பூரண கடாட்ச வீட்சண்ணியம் செய்து
எனது புன்மையை அகற்றி அருள்வாய்
மண்ணவர்கள்  விண்ணவர்கள் நித்தமும் பரவும்
இசைவளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (6)

ஸ்ரீ வராஹி - தஞ்சை
 தெரிந்தோ  அலாது தெரியாமலோ இவ் அடிமை
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
கணக்காக வையாது  நின் திரு உளம் இரங்கி  மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது  நல்வரம்அளித்துப்  பாதுகாத்து அருள் செய்ய
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி!
புரந்தரன்  போதன்  மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
பதாம்புய மலர்ப் புங்கவி! புராந்தகி! புரந்தரி!
புராதனி! புராணி! திரி புவனேசுவரி!
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி! எழில்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (7)

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும், மருந்தினுக்கா
வேண்டினும்  மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொல்லாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
பிஞ்சு நெஞ்சதனில் பொறாமை தரியாமலும்  வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளி அவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத்  தமியேனுக்கு
அருள் புரிந்து  சர்வ காலமும் எனைக் காத்து
அருள வேண்டினேன்  சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (8)

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்
அவர்கள் கேட்டு  இவ் இன்னல் தீர்த்து  உள்ளத்து இரங்கி
நன்மைகள் செயவும்  எள் அளவும் முடியாது  நின்
உன்னத  மருவும் கடைக்கண் அருள் சிறிது செயின்  உதவாத
நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை ஆகும்
அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து
முப்பத்து இரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
நின்னைக் கருது நல் அடியவர்க்கு எளிதில் வந்து
சடுதியிற் காத்து  ரட்சித்தது ஓர்ந்து
வனச நிகர் நின் பாதம் நம்பினேன்  வந்து அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (9)

கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கன தண்ட
வெம் பாசமும்  கைக் கொண்டு  சண்ட மாகாலன் முன் எதிர்க்க
மார்க்கண்டன் வெகுண்டு நோக்க
திருநீல கண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில்
அன்பு கொண்டு  அருச்சனை செய  ஈசன்  அவ்விலிங்கம் பிளப்ப
நின்னொடு தோன்றி யமனைச் சூலத்தில் ஊன்றிப்
பெருநீல மலைஎன  நிலத்தில் அவன் விழப்
பிறங்கு தாளால் உதைத்துப் பேசுமுனி மைந்தனுக்கு அருள்
செய்தது  உனதரிய பேரருளின் வண்ணம் அலவோ?
வருநீல மட மாதர் விழியன்ன  மலர் வாவி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே! (10)

ஸ்ரீ அபிராமவல்லி
சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனயை!
மாதேவி! நின்னைச் சத்யமாய்  நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி  மிகவும்
அகிலமதில் நோய் இன்மை  கல்வி  தன தானியம்
அழகு  புகழ்  பெருமை  இளமை  அறிவு  சந்தானம்  வலி
துணிவு  வாழ்நாள்  வெற்றி  ஆகு நல்லூழ்  நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி  நீ சுகானந்த
வாழ்வு அளிப்பாய்  சுகிர்த குணசாலி! பரிபாலி!
அநுகூலி! திரிசூலி! மங்கள விசாலி!
மகவு நான்  நீ தாய்  அளிக்கொணாதோ? மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி! சுப நேமி! புகழ் நாமி!
சிவ சாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!.. (11)

ஓம் சக்தி ஓம்!..
அபிராமவல்லி சரணம்!..

10 கருத்துகள்:

  1. திருப்பதிகம் படித்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  2. ஓம் சகதி ஓம்!
    அபிராமவல்லி சரணம்.!
    திருப்பதிகங்கள் படித்தேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.
      வருகை தந்து கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வியாபார தந்திரம் உண்மை...

    திருப்பதிகம் என்றும் சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இந்த ஆண்டு ஆலய தரிசனத்தில் திருக்கடையூர் செல்ல உத்தேசம் .கொடுப்பினை இருக்கிறதா பார்க்க வேண்டும் இப்போதெல்லாம் ஆடியில்தான் செலவு அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தேவி தரிசனம் நிறைவளித்தது.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..