நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 18, 2014

தேவி தரிசனம் - 1

தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதம் ஆடி!..

அம்மன் சந்நிதிகளில் - இம்மாதத்தின் மங்கலங்கள் அனைத்தும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளை அனுசரித்து  நிகழும்.
அந்த வகையில் இன்று ஆடி முதல் வெள்ளி!..

தை மாத அமாவாசை தினத்தில்  - தன் அன்பனாகிய சுப்ரமண்ய பட்டருக்கு கனங்கொடுத்தவள் - பூங்குழலாள் அபிராமவல்லி!.. 

அவள் நடத்தும் அற்புதங்கள் பற்பல..  அபிராமவல்லியின் அருமைகளையும் பெருமைகளையும் அபிராம பட்டர் திருப்பதிகங்களில் பாடியுள்ளார்.

ஒருமுறை பாராயணம் செய்தாலே - 
பொருள் விளங்கும்!.. பொருளும் விளங்கும்!..

அபிராமபட்டர் அருளிய
ஸ்ரீ அபிராமி திருப்பதிகம்!..

 
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம் நால்வாய் 
ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லி
நண்ணும்பொற் பாதத்தில் நன்கு!..

நூல்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரோடு கூட்டு கண்டாய்:
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 1

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ண குண்டலமும் மதிமுகமண்டலம் நுதற்
கத்தூரிப் பொட்டு மிட்டுக்
கூரணிந்திடு விழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனிய தரமும்
குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தமும்
கோடுசோடான களமும்
வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும்
வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக
வல்வினையே மாற்றுவாயே
ஆரமணி வானி லுறை தாரகைகள் போலநிறை
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 2


மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம்பெற்ற பேர்களன்றோ?
செகமுழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா தனத்தி லுற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாகராகி நிரை
புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில்
புலோமிசை யொடுஞ்சு கிப்பர்:
அகரமுதலாகி வளர் ஆனந்த ரூபியே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 3

மறிகடல்கள் ஏழையுந்திகிரி இரு நான்கையும்
மாதிறக் கரியெட்டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும் அரையிற்
புலியாடை உடையானையும்
முறைமுறைகளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை
மூவுலகிலுள்ளவர்கள் வாலையென்று அறியாமல்
மொழிகின்ற தேது சொல்வாய்:
அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே! - 4

வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுதலான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக்
குறையாமலே கொடுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலி ! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும்
நீலியென்(று) ஓது வாரோ ?
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 5


பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங்கல் லிடைப்
பட்டதே ரைக்கும் அன்றுற்பவித் திடுகருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் யாவர்க்கும் அவரவர்
மனச்சலிப் பில்லாமலே
நல்குந் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு
நவநிதி உனக்கிருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனானால் அந்
நகைப்புனக் கே அல்லவோ?
அல்கலந்தும்பர் நாடளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 6

நீடுலகங்களுக்(கு) ஆதாரமாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் திரண்டறம் வளர்க்கின்ற
நீமனை வியாய் இருந்தும்
வீடுவீடுகள் தோறும் ஓடிப் புகுந்துகால
வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று)
உன்மத்த னாகி அம்மா!
உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந்தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 7

ஞானத் தழைத்துஉன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினிற்போய்
நடுவினிலிருந்து வந்தடிமையும் பூண்டவர்
நவிற்றும் உபதேசமும் உட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்து நெஞ்(சு)
இருளற விளக்கேற்றியே
ஆனந்த மானவிழி அன்னமே! உன்னை என்
அகத்தாமரைப் போதிலே
வைத்துவேறே கவலையற்று மேலுற்றபர
வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 8

சலதியுல கத்தினிற் சராசரங் களையீன்ற
தாயா கினால் எனக்குத்
தாயல்லவோ ? யான் உன் மைந்தனன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலைசுரந்தொழுகு பாலூட்டி என் முகத்தை உன்
முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக்(கு) உகந்து கொண்டிளநிலா
முறுவல் இன்புற்றரு கில்யான்
குலவி விளையாடல் கொண்டு அருள் மழைபொழிந்(து) அங்கை
கொட்டி வாவென்(று) அழைத்துக்
குஞ்சரமுகன் கந்தனுக்(கு) இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ?
அலைகடலிலே தோன்று மாறாத அமுதமே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே!.. - 9



கைப்போது கொண்டுஉன் பதப்போது தன்னில்
கணப்போதும் அர்ச்சிக் கிலேன்
கண்போதினால் உன்முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைக்கிலேன்
மோசமே போய்உழன்றேன்
மைப்போத கத்திற்கு நிகரெனப்போது
எருமைக்கடா மீதேறியே
மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங்கித் தியங்கும்
அப்போது வந்துஉன் அருட்போது தந்தருள்
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 10

மிகையுந் துரத்த வெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந் துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந் துரத்த வஞ்சனையுந் துரத்த
பசி யென்பதுந் துரத்த
பாவந்துரத்த பதிமோகந் துரத்த
பல காரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவறண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!.. - 11


ஓம் சக்தி ஓம்
அபிராமவல்லி சரணம்!..
* * *

12 கருத்துகள்:

  1. தொடர்கிறேன்.....

    அபிராமி அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    அருமையான பதிகம் ஆரம்பம்!

    அன்னையின் இன்னருள் எல்லோருக்கும் கிட்டட்டும்!
    நன்றியோடு வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
      தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. அருமையான அபிராமி பதிகம்.
    வாழ்த்துக்கள்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய வாழ்த்துரைக்கு மிக நன்றி..

      நீக்கு
  4. அருட்பாமாலை அருமை ஐயா தங்களின் இறைத்தொண்டிற்க்கு இறையருள் புரிவானாக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. முதல் நாள் பதிக ஆரம்பம். நெஞ்சம் நிறைந்தது. எங்கள் அனைவருக்காகவும் எழுதும் தங்களுக்கு இறையருள் என்றும் உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் அன்னையின் நல்லருள் கிடைக்கட்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பக்தி பரவசமூட்டும் பதிகத்தினை படித்து பாடி அபிராமி அன்னையின்
    அருள் பெற யானும் விழைகிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..