நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

சித்திரைப் பெருவிழா

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

அருள்மிகு பிரஹந்நாயகி சமேத அருள்மிகு பிரஹதீஸ்வர பெருமான் சர்வாலங்காரத்துடன் எழுந்தருளியிருக்க -

சித்திரைப் பெருவிழாவிற்கான - துவஜாரோகணம்  மங்கலகரமாக நிகழ்ந்தது.


தக்ஷிண மேரு என சிறப்பிக்கப்படுவது தஞ்சை பெரிய கோயில்.

சர்வலோக நாயகனாகிய சிவபெருமான் - விஸ்வரூபங் கொண்டு  விளங்கும் திருத்தலம்.

இத் திருத்தலத்தில். ஸ்ரீ ஜய வருடம் சித்திரைத் திங்கள் பன்னிரண்டாம் நாள் - வெள்ளிக்கிழமை  (25/4)  காலை (6.00/7.15) வேத மந்த்ர - தேவார திருவாசக திருமுறைகள் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

வெள்ளி அன்று தொடங்கிய திருவிழா பதினெட்டு நாட்கள் நிகழும்.


முதல் நாள் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் எழுந்தருளினர்.


இரண்டாம் நாள் சனிக்கிழமை காலையில் பல்லக்கு. அன்று மாலை சிம்ம வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா எழுந்தருளினார்.

மூன்றாம் நாளாகிய (ஞாயிறு) இன்று காலையில் பல்லக்கு. மாலை மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா.

நாளை (திங்கள்) காலையில் விநாயகப்பெருமானுக்கு சந்தனக் காப்பு அலங்காரம். மாலையில் , மேஷ வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமண்யர் திருவீதி உலா.


ஐந்தாம் நாள் காலை ஸ்ரீ சுப்ரமண்யர் பல்லக்கில் எழுந்தருளல்.  மாலையில் வெள்ளி மயில் வாகனம்.

ஆறாம் நாள் காலை - ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். 

மாலையில் - அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - எழுந்தருளல்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் - தெய்வ திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு வைபவம். 


சித்திரை இருபதாம் நாள் - அஷ்டத் துவஜாரோகணம் நிகழும்.

திருமேனிகள் பல்லக்கிலும் - சிறிய ரிஷபம், பெரிய ரிஷபம்,  யானை  , மயில் , மான் , குதிரை , பூத வாகனம்  - என வாகனங்களிலும் சூர்ய பிரபை மற்றும் சந்திர பிரபையிலும் எழுந்தருளி திருவீதி உலா.

திருவிழா நாட்களில் - தேவார திருவாசக பாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. 

பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சூர், கோவா - என, நாட்டின் பல்வேறு பகுதிகளின் நாட்டியக் கலைஞர்கள் - நாட்டியாஞ்சலி நிகழ்த்துகின்றனர். 

பதினெட்டாம் நாள் (சித்திரை - 29) காலையில் ஸ்ரீதியாகராஜர் ருத்ரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம். அதனைத் தொடர்ந்து - ராஜவீதிகளில் ஸ்ரீ நடராஜப் பெருமான்  திருவீதி உலா. 

மதியம் ஸ்ரீசந்த்ரசேகரர் திருக்கோயிலுக்குள்  எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல். அன்று மாலையில் துவஜ அவரோகணம். 

இரவு பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எம்பெருமானும் அம்பிகையும் எழுந்தருள பஞ்ச மூர்த்திகள் நகர் வலம் வருகின்றனர்.

அரண்மனை தேவஸ்தானத்தின் எண்பத்தெட்டுத் திருக்கோயில்களுள் பிரதானமானது - பெரு உடையார் திருக்கோயில்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கினால்  - தஞ்சைத் தளிக்குளம் எனப் புகழப்பெற்ற தொன்மையான திருத்தலம். ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கினிலும் சுந்தரரின் திருவாக்கினிலும் குறிப்பிடப் பெற்ற திருத்தலம்.


மஹாநந்தி விளங்கும் திருத்தலம்.

சித்தர் பெருமானாகிய கருவூராரின் திருப்பதிகம் பெற்ற திருக்கோயில்.

அருணகிரிநாதர்  வலம் வந்து வணங்கிய திருத்தலம் - தஞ்சை. 

பெரிய கோயிலின் திருச்சுற்றில் விளங்கும் முருகப்பெருமானைப் புகழ்ந்து - திருப்புகழ் பாடியுள்ளார்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் அற்புத கலைப் படைப்பாக நெடிதுயர்ந்து இராசராசேச்சுரம் என விளங்குகின்றது.


ஸ்ரீபிரஹதீஸ்வர மாகாத்மியம், சமிவன க்ஷேத்திர மகாத்மியம் என இரண்டு வடமொழிப் புராணங்கள் விளங்குகின்றன.

மராட்டிய மாமன்னர் சரபோஜி காலத்தில் - தஞ்சைப் பெரு உடையார் உலா எனும் நூல் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால்  பாடப் பெற்றது.

ராஜராஜன் திருஆரூர் தியாகராசப் பெருமானிடம் மிகுந்த பற்று உடையவன். ஆதலால் தஞ்சை இராசராசேச்சரத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை தியாக ராஜப் பெருமானாகவே எழுந்தருளச் செய்தான்.  

திருஆரூரில் தியாகராஜ ஸ்வாமிக்கு  நடைபெறும் சிறப்புக்களை எல்லாம் இத்தலத்தில் இவருக்கும் நடத்தி மகிழ்ந்தான்.  தஞ்சை விடங்கர் என்பது சோமாஸ்கந்த மூர்த்தியின் திருப்பெயர்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் உள்ளது - தியாகராஜர் சந்நிதி.  

தியாகராஜருக்கு எதிரில்  ராஜராஜனின் திருமேனி கூப்பிய கரங்களுடன்  விளங்குகின்றது.


ஸ்ரீவராஹி அம்மன் சந்நிதி , சித்தர் கருவூரார்  சந்நிதி - என அருள் விளங்குகின்றது.

அனைவரும் தஞ்சை சித்திரைப் பெருவிழாவில் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்று இன்புற விழைகின்றேன்.

பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்றும் நான் மறக்கேன்
மின்நெடும் புருவத்து இளமயில் அனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்து  இவர்க்கே!..

கருவூரார்.

21 கருத்துகள்:

  1. சித்திரை திருவிழா விபரங்கள், மற்றும் கருவூரார் பாடல் பகிர்வுக்கு நன்றி.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. சித்திரைத் திருவிழா..... மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு நன்றி. படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. சித்திரைத் திருவிழா படங்களும் செய்திகளும் மனதைக் கவர்ந்தன. பதிவைப் படிக்கும் போதே திருவிழாவிற்குப் போக வேண்டும் என்கிற ஆவல் உண்டாகிறது. நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. தஞ்சை பெரியகோயிலின் சித்திரைப் பெருவிழா குறித்து விவரமான பட்டியல். மற்றும் கோயிலுள் இருக்கும் இறையவர்களைப் பற்றிய விளக்கம். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. சித்திரைத் திருவிழா பற்றிய படங்களும் செய்திகளும் அருமை ஐயா
    உடல் குவைத்தில் இருந்தாலும், தங்களின் மனம் என்னவோ தஞ்சையைச் சுற்றி சுற்றித்தான் வருகிறது.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மாணாக்கனை விழியால் அளக்கும் ஆசிரியர் அல்லவா!..
      உண்மைதான் ஐயா!.. தஞ்சையை மட்டுமல்ல -
      தமிழகத்தையே சுற்றித் திரிகின்றது என்மனம்!..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. சித்திரை திருவிழா பற்றிய விபரமும் பாடலும் அருமை !
    வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. பலமுறை பெரிய கோவிலுக்குப் போயிருக்கிறோம். அது ஒரு பிரமிப்பூட்டும் , கலை நயம் மிகுந்த சுற்றுலாத் தலமாகத் தெரிகிறதே அன்றி பல கோவில்களில் உணரும் சாந்நித்தியத்தை உணர முடிவதில்லை. கலை விழாக்களுக்கும் திருவிழாக்களுக்கும் சென்றதில்லை.இது என் அனுபவம். வித்தியாசமாய் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் குறித்திருப்பது தங்களுடைய அனுபவமே..
      இங்கே ஒருவருக்கு ஏற்படும் உணர்வு மற்றொருவருக்கு ஏற்படுவதில்லை தான்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!..

      நீக்கு
  9. தஞ்சை பெரு உடையார் கோயிலின் சித்தரைப் பெருவிழா நிகழ்சிகள் பற்றிய செய்திகள் பயனுள்ள வண்ணம் இருந்தது. . படங்கள் அனைத்தும், நேரே இருந்து காண்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது. இன்று மாலை நடக்கும் வெள்ளி மயில் வாகனம் தரிசனம் காண வருகிறேன். அப்படியே தங்களையும் சந்தித்து விட்டு செல்ல விருப்பம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் விக்னேஷ்..
      தங்களின் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. என்னை சந்திக்க விருப்பம் என எழுதி இருக்கின்றீர்கள்.
      நான் தற்சமயம் இருப்பது - குவைத் நாட்டில்!..
      தாயகம் வரும் போது சந்திப்போம்!..

      நீக்கு
    2. // தாயகம் வரும் போது சந்திப்போம்!.. //

      நிச்சயம் சந்திப்போம்.

      அனைத்து சகோதரருக்காகவும், அனைவரின் நலன் வேண்டி எல்லாம் வல்ல பெருவுடையாரை வேண்டிக்கொள்கிறேன்.

      நீக்கு
  10. தஞ்சை சித்திரைப் பெருவிழா பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பான வாழ்த்தினுக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..