நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 04, 2014

ஸ்ரீ கோடியம்மன்

தஞ்சை மாநகரின் தனிப்பெரும் தலைவி ஸ்ரீ கோடியம்மன்!..

அவள் - இன்று முதல் (4,5,6) மூன்று நாட்களுக்கு தஞ்சையின் ராஜவீதிகள் என்றில்லாமல் தெருக்கள் தோறும் ஆடி வருகின்றாள்.


ஆம்!.. அன்னை ஸ்ரீகாளி மகோத்சவம் கண்டருள்கின்றாள்.

ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி என திருமுகம் தாங்கி விரும்பி அழைப்போர் எவரானாலும் அவர்தம் இல்லத்திற்கு எழுந்தருளி பஞ்சமும் நோயும் நீங்க பார்த்தருள்கின்றாள். 

அவளுடைய வருகையினால் - வஞ்சமும் வல்வினையும் ஓடிப்போகின்றன.

நஞ்சை எனும் விளை நிலத்தை - வெஞ்சமரில் மீட்டெடுத்து - தஞ்சை எனும் அருள் நிலமாகத் தந்தவள் - ஸ்ரீ கோடியம்மன்!..

அவள் இங்கு திருக்கோயில் கொண்ட அற்புதம் தான் என்னே!..

வாருங்கள்.. அன்னையைச் சிந்திப்போம்!..


பச்சைப் பட்டு விரித்தாற் போல - கண்ணுக்கு எட்டிய தூரம் வரை - பசுமை!..

செழுமை என்ற சொல்லுக்கு - சிறந்த முதல் உதாரணம்!..

இந்த இடம் இப்படி இருப்பதற்கு - யார், எது - காரணம் என்றெல்லாம் யோசிக்காமல், இதுவே - நமக்கு ஏற்ற நல்ல இடம்  எனத் தீர்மானித்தார்கள் - அவர்கள். 

அவர்கள்!.. - 

தஞ்சகன், தாண்டகன் மற்றும் தாரகன். மூவரும் சகோதரர்கள். 

இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் - ஆடு மாடுகளை மேய்ப்பதும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதும் தான்!..

இவர்கள் வந்து தங்கிய இடத்தின் பெயர் பராசரக்ஷேத்திரம் என்பதையும். பராசர முனிவரின் வேண்டுதலின் பேரில் மஹாவிஷ்ணு விண்ணிலிருந்து இறக்கித் தந்தருளிய விண்ணாற்றின் வற்றாத நீர் ஆதாரத்தினால் தான் அந்தப் பகுதி வளம் கொஞ்சுகின்றது என்பதையும் அவர்கள் அறிந்தார்களில்லை.

ஆனால் மகரிஷியாகிய பராசரர் - அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். ஆயினும்,  அவர்களால் பெரிதாக இன்னல் ஏதும் விளைவதற்கு யாதொரு காரணமும் இல்லையென - பெருந்தன்மையாக இருந்து விட்டார். ஆனால்  - அதற்கு அப்புறம் தான் தொடங்கியது வினை!..


தஞ்சகனின் வளர்ப்பு பசுக்களில் ஒன்று நாளும் மறைவாக எங்கோ சென்று வருவதை உணர்ந்து கொண்ட அவன் - அன்று அந்தப் பசுவைத் தொடர்ந்தான். அது பரபரப்புடன் சென்று - அடர்ந்து வளர்ந்திருந்த வன்னி மரத்தின் கீழ் நின்றது. 

அங்கே சுயம்புவாக சிவலிங்கம்!.. அப்புறம் என்ன!.. பசு தன்னிச்சையாய் சிவலிங்கத்தின் மீது - பாலைப் பொழிந்தது. இதனைக் கண்ட தஞ்சகனின் மனதில் அன்பும் ஆதுரமும் மேலிட்டது.

''..ஒரு விலங்குக்கு உள்ள உள்ளுணர்வு கூட நமக்கு ஏற்படவில்லையே!.. இத்தனை நாள் பிழை செய்து விட்டோமே!..'' - என்று வருந்தி - தானும் தன் தம்பியருடன் சிவ வழிபாடு செய்து தவம் மேற்கொண்டான்.

அப்படி அவன் செய்த தவத்திற்கு மனம் இறங்கினார் -  சிவபெருமான். சிவதரிசனம் பெற்ற தஞ்சகன் - பெருமானிடம் மாறாத அன்பு வைத்திருக்கும் படியான வரத்தினைக் கேட்டான். ஈசனும் அவ்வாறே வழங்கி மேலும் பல வளங்களையும் அருளினார்.

நேசனாக வளர்ந்தவன்  - வரங்கள் பல பெற்ற பின் நீசனாக ஆனான்.

அங்கிருந்த முனிவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்னல்கள் அவனால் விளைந்தது. மனதிலிருந்து அன்பு அகன்று ஆணவம் குடி கொண்டது. தவமுனிவர்களுக்கு உதவுதற்கு வந்த தேவர்களையும் எதிர்த்து வீழ்த்தினான்.

வானவர் தலைவனை வளைக்க முயன்றான். தேவ அஸ்திரங்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. அஞ்சி நடுங்கிய தேவர்கள் பரமேஸ்வரனைச் சரணடைந்தார்கள் -  ''..தஞ்சம் என்று!..''

ஆணவத்தில் சிகரத்தில் நின்று அடாது செய்யும் தஞ்சகனைக் கண்டு உள்ளம் கொதித்தாள் - சர்வேஸ்வரி!.. கோபம் கொதித்து - செந்தணலாகக் கொப்பளிக்க  - காளி என எழுந்தாள்.


அவளுடைய உக்ரத்தைக் கண்டு  - தேவர்கள் மேலும் பதற்றமாகினர். எல்லாம் வல்ல எம்பெருமான் நிகழ இருப்பதை அறிந்தவராக - தஞ்சம் அடைந்தவரைக் காக்கும் பொருட்டு, பூத நாயகனாகிய ஹரிஹரசுதனை அழைத்தார்.

தேவர்களைக் காக்கும் பொறுப்பினை ஸ்ரீஹரிஹர சுதனிடம் ஒப்படைத்தார். தர்மசாஸ்தாவாகிய ஹரிஹரசுதனும் தேவர்களை பாதுகாப்பாக ஓரிடத்தில்  - சிறை - வைத்து காத்தருளினார். அதனால் -

 ''ஸ்ரீசிறைகாத்த ஐயனார்'' - எனத் திருப்பெயர் பெற்றார்.

மூண்டது போர்.

எட்டுத் திக்கிலும் தீவண்ணங் கொண்டு சுற்றிச் சுழன்றாள் - ஸ்ரீ காளி.  அசுர குணம் கொண்டு அடாத செயல்களைப் புரிந்த தாண்டகனும் தாரகனும் சாம்பலாகி வீழ்ந்தனர்.

தஞ்சகன் மட்டும், தானறிந்த மாயவேலைகளை - மகாமாயை ஆகிய பராசக்தியிடம் காட்டியவனாக களத்தில் நின்று ஆடிக் கொண்டிருந்தான்.

அவனது அறியாமையை எண்ணிச் சிரித்த அம்பிகை - சீறிச் சினந்தபோது - அவளிடமிருந்து கோடி கோடி என - தீப்பிழம்புகள் திக்கெட்டும் பரவி நின்றன.

அதைக் கண்டு அண்டபகிரண்டமும் நடுநடுங்கியது. தஞ்சகன் புத்தி பேதலித்தவனாக தடுமாறிக் கீழே விழுந்தான். காரணம் -

கோடி கோடி என வெளிப்பட்ட பிழம்புகள் அத்தனையிலும் அன்னையின் உக்ர முகம் விளங்கியது தான்!..

கீழே விழுந்தவன் மீது, திருவடியைப் பதித்து திரிசூலத்தினை  ஊன்றினாள்!..

அந்த விநாடியில் அம்பிகையின் இதயக் கமலத்திலிருந்த சிவபெருமான் - பெருங் கருணையுடன் - அன்னையின் சஹஸ்ர கமலத்தில் திருமுகங்காட்டி, ''..ஹே கெளரி!..'' - என அழைத்தருளினார்.

ஸ்ரீகோடியம்மன்
அந்த அளவில் அம்பிகை - சாந்தம் அடைந்தாள். கோடி முகம் காட்டியதால் ஸ்ரீகோடியம்மன் எனும் திருப்பெயர் கொண்டாள்.

''தாயே!.. தகாதன செய்து கடையனான நான் - நின் திருவடி தீட்சையால் கடைத்தேறினேன். ஆயினும், என்னுள் ஒரு விருப்பம். என் ஆணவத்தினை அழிக்க - நீ எழுந்தருளிய இத்திருத்தலம் அகிலம் உள்ள அளவும் என் பெயரால் விளங்க வேண்டும்!. நீயும் இங்கேயே இருந்தருளி - உன்னை வணங்குபவரின் ஆணவத்தை அழித்து அருள வேண்டும்!..''. - என வேண்டிக் கொண்டான்.

தஞ்சகன் செய்த சிவபூஜையின் புண்ணியம் அவனைக் காத்தது.  பிரச்னை நீங்கிய அளவில் தஞ்சகனின் விருப்பப்படியே  அருளினர்.

அப்படி வழங்கப்பட்ட திருத்தலம்  -

தஞ்சாவூர்!.. 

தமக்குத் தஞ்சம் அளித்த - சிவபெருமானை ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் எனப் போற்றி வணங்கிய தேவர்கள் - உக்ரம் தணிந்து நின்ற அம்பிகையின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். தம்மைப் பாதுகாத்த அம்பிகைக்கு தமது அன்பினை - ஆனந்தத்தை சமர்ப்பித்தனர்.

தானாகி நின்ற தற்பரை - தேவர்கள் அளித்த ஆனந்தத்தை அவர்களுக்கே வழங்கி - தாயாக அருள்சுரந்து நின்றாள். ஸ்ரீஆனந்தவல்லி என திருநாமம் கொண்டாள்.

இந்தத் திருத்தலத்தில் தான் - வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து - தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வங்களையும் புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்வுகளுடன் சாந்தம் அடைந்த அன்னை, தான்கொண்ட திருவடிவுடன் கோடியம்மன் எனும் திருப்பெயர் கொண்டவளாக வடக்கு நோக்கி அமர்ந்தாள்.

அன்னை ஸ்ரீ கோடியம்மனின் மூலஸ்தானத் திருமேனி சுதையால் ஆனதால் - அவளுக்கு வஸ்திரம் சாத்தி - மலர் அலங்காரம் மட்டுமே!..

அபிஷேகங்கள் அனைத்தும் மூலஸ்தானத்தின் வெளிப்புறம் இருமருங்கிலும் எழுந்தருளியுள்ள பச்சைக்காளி மற்றும் பவளக்காளி திருமேனிகளுக்கு நிகழும்.

வருடந்தோறும் ஸ்ரீ கோடியம்மனைக் கொண்டாடி  மகிழ்வதே ஸ்ரீ காளியாட்ட உற்சவம்.


இந்த வருடம் - தை 28 (10.2.2014) திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபூர்ண கலா ஸ்ரீபொற்கொடியாள் சமேத ஸ்ரீ ஐயனாருக்கு திருக்காப்பு கட்டி, அபிஷேக ஆராதனைகளுடன் விழா தொடங்கியது.

பின் - மாசி 6 (18.2.2014)  காலை - ஸ்ரீ ஐயனாருக்கு காப்பு அவிழ்த்து, மாலை  7.00 மணிக்கு மேல ராஜவீதி திருமடத்தில் உள்ள ஸ்ரீ கோடியம்மனின் உற்சவத் திருமேனிக்கும் இரவு 10 மணிக்கு திருக்கோயிலில் மூலஸ்தான திருமேனிக்கும் முதல் காப்பு கட்டப்பட்டது.

மாசி 13 (25.2.2014) மாலை  7.00 மணிக்கு, மேல ராஜவீதி திருமடத்தில் உள்ள ஸ்ரீ கோடியம்மனின் உற்சவத் திருமேனிக்கும் இரவு 10 மணிக்கு திருக்கோயிலில் மூலஸ்தான திருமேனிக்கும் இரண்டாம்  காப்பு கட்டப்பட்டது.

நேற்று 3.3.2014 - இரவு  மேல ராஜவீதி திருமடத்தில் இருந்து  ஸ்ரீ கோடியம்மனின் உற்சவத் திருமேனி திருத்தேரில் எழுந்தருளி மூலஸ்தானம் பிரவேசித்து - யதாஸ்தானம் ஆகர்ஷணம் ஆகியது.

அத்துடன் - ஸ்ரீ காளி முகம் தரிக்க விரதம் இருந்தவர்கள் - திருநீறு நிறைந்த கபாலத்தினைப் பெற்றுக் கொண்டு திரு மடம் திரும்பினர்.

இன்று (4.3.2014) காலை 5.00 மணியளவில் -
ஸ்ரீபச்சைக்காளி ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்கோயிலில் இருந்தும் 
ஸ்ரீபவளக்காளி  ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் இருந்தும் 
திருவீதி புறப்பாடு ஆகியுள்ளனர்.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு ( 4,5,6 ) - தஞ்சையின் ராஜவீதிகளில் காலை தொடங்கி - இரவு 11 மணி வரை ஸ்ரீ காளியாட்டம் நிகழும்.

ஸ்ரீ பச்சைக் காளி
ஸ்ரீ பவளக் காளி

ஸ்ரீ காளியின் திருமுகம் தரித்தவர்களை வீடுகளுக்கு அழைத்து மாலை மரியாதை செய்வர்.

வியாழன்  இரவு 3.00 மணியளவில் - திருநீற்றுக் கபாலம் - மூலஸ்தானப் பிரவேசம் ஆகியதும் விடையாற்றி நிகழும்.

வெள்ளி அன்று காலையில் -  ஸ்ரீகோடியம்மன் திருமடத்திலிருந்து புறப்பட்டு -  ராஜவீதிகளில் வலம் வந்து - திருக்கோயிலை வந்தடைவாள்.

மாலை 6.00 மணியளவில் ஸ்ரீபச்சைக்காளி பவளக்காளி திருமேனிகளை அலங்கரித்து, மேளதாளத்துடன் களிமேடு கிராமத்தினர் - தங்கள் கிரமத்துக்கு அழைத்துச் செல்ல,

ஸ்ரீ சூலப்பிடாரி அம்மனை அலங்கரித்து மேளதாளத்துடன் பொந்திரிப் பாளையம் கிராமத்தினர் - தங்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்வர்.

அங்கே - அவர்கள் தலைமுறை தலைமுறையாக நிகழ்த்தும் பூஜைகளை நிகழ்த்தி மனதார வணங்கி மகிழ்வர்.

அவர்தம் வழிபாடுகளை அன்புடன் ஏற்றுக்கொண்ட அன்னை மறுநாள் காலை - திருக்கோயிலுக்குத் திரும்புவாள்.


ஞாயிறு (9.3.2014) அன்று காலை, உற்சவத் திருமேனிக்கு திருக்காப்பு அவிழ்த்து - பாலாபிஷேகம் நிகழும். மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை எழுந்தருளி - திருமடத்திற்குத் திரும்புவாள்.

செவ்வாய் (11.3.2014) அன்று மாலை,  ஸ்ரீபச்சைக்காளி ஸ்ரீபவளக்காளி திருமேனிகளுக்கும் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனை நிகழும்.

பிரிய மனம் இல்லாமல் விடை பெற்றுக் கொண்டு சர்வ அலங்காரத்துடன் திருவீதி எழுந்தருளி மேலராஜவீதியில் உள்ள திருமடத்தினைச் சென்றடைவர்.

தாயே!.. மீண்டும் உன்னை எப்போது காண்பது ?.. என்று அன்பர்கள் ஏங்கி நிற்க,

விரைவில் வந்து விடுவேன். கவலை வேண்டாம்!..  - என்று அன்னை ஆசி அளிக்க - மங்கலகரமாக ஸ்ரீ காளியாட்ட உற்சவம் நிறைவு பெறும்.

தஞ்சை மாநகரில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. வேம்பு தலவிருட்சம். வெண்ணாறு தீர்த்தம்.

ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலின் அருகிலேயே ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக் கோயிலும் தஞ்சை மாமணிக்கோயில் எனும் ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளன.

திருமங்கை ஆழ்வார்  மங்களாசாசனம் செய்வித்த  திவ்யதேசம் - தஞ்சை மாமணிக் கோயில். ஸ்ரீ திவ்யதேச வரலாற்றில் - இந்த புராண சம்பவம் சற்றே மாறுதலாக இருக்கும்.


ஸ்ரீகோடியம்மன் திருக்கோயில், தஞ்சை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, ஐயம் பேட்டை செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் திருக்கோயிலின் வாசலில் நின்று செல்கின்றன.

உற்சாகமான காளியாட்ட வைபவத்தினை - கீழே காணுங்களேன்!..


( நன்றி - Swamy Foto Animation Studio )

திருமுகம் தாங்கி - நமது இல்லம் தேடிவரும்  ஸ்ரீபச்சைக் காளியும் ஸ்ரீபவளக் காளியும்,

தமது திருக்கரத்தினை  தலைமீது வைத்து ஆசி கூற, பஞ்சமும் நோயும் பறந்தோடிப் போகும் என்பது ஐதீகம்.

ஸ்ரீகாளி திருக்கரத்தினை  தலைமீது வைத்து ஆசி கூற -
பஞ்சமும் நோயும் பறந்தோடிப் போயின என்பது - 
நம் கண்கண்ட காட்சி!.. 

அதற்கு வேண்டியதில்லை  - வேறு ஒரு சாட்சி!..

ஸ்ரீ காளியாட்ட வைபவமே - திருக்காட்சி!..
அன்னை அவளுடையதே - அரசாட்சி!..

ஸ்ரீதிருவுடைக் கோடியம்மன்
திருவடிகள் போற்றி!.. போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

8 கருத்துகள்:

  1. ஸ்ரீகோடியம்மன் எனும் திருப்பெயருக்கான விளக்கம், நடைபெற்ற நிகழ்வின் சிறப்பும் அருமை ஐயா...

    மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. விழாவில் கலந்து கொண்டு அருளாசி பெற்ற உணர்வு. Thank you, Sir,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. கோடியம்மன் திருவிழாவை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் சார். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. கோடியம்மன் திருவிழாவினை கண்ணால் கண்ட உணர்வு.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..