நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 30, 2013

வான் மழையே வருக!

மழை தவறிய காரணத்தினால் இந்த வருடம் காவிரியில் தண்ணீர் இல்லை. மீதமிருக்கும் ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் வறண்டு விட்டன. 


மக்களுக்கும் இதர உயிரினங்களுக்கும் சோதனையான வருடம் இது. 

லட்சக்கணக்கான துளைகளையிட்டு ஆழ் குழாய் கிணறுகள் என்ற பெயரில் நிலத்தடி நீரை உறிஞ்சி விட்டோம்!.. விளைவு -

நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்குப் போனது! 


மரங்களை வெட்டிச் சாய்த்ததால்  - தாறுமாறான தட்பவெப்ப நிலை.  பருவ மழை பொய்த்தது. கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு. விளைச்சல் இல்லை. கால்நடைத் தீவனம் தட்டுப்பாடு.

தென்னையுடன் பனை மரங்களும் சாய்கின்றன. அரசே மினரல் வாட்டர் என்று குடிநீருக்கு விலை வைத்து விற்க ஆரம்பித்து விட்டது.  


மேட்டூர்  அணை வறண்டது!. மின் பற்றாக்குறை.. இப்படியான நிகழ்ச்சிகளால், தமிழகம் சோகத்தில் ஆழ்ந்தது.

சங்க காலத்தில் பாண்டிய நாட்டில் பன்னிரு ஆண்டுகள் பஞ்சம் நேர்ந்ததாம். 

சோழ நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு - திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் - திருவீழிமிழலையில் - இறைவனை வேண்டி திருப்பதிகம் பாடி, படிக்காசு பெற்று பஞ்சம் தீர்த்த திருப்பணியை  அறிந்திருக்கின்றோம்!..

ஒரு கொடிய பஞ்சம் (1876 - 1878)   தாது - வருடத்தில் ஏற்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. 

அப்போது  உண்ண உணவின்றி - தழைகள், வேர் கிழங்குகளைத் தின்று, நோய் நொடிகளுக்கு இலக்காகி மடிந்தனர்.

பின்னும் வெள்ளையர் நம்மை அடிமைகளாக அடக்கி ஆண்ட (1939 -1940) வெகு தான்ய - வருடத்தில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகின்றது.  

சமீபத்தில் 2001-2002, சித்ரபானு - ஆண்டில் கடும் வறட்சியும், குடிநீர் பஞ்சமும், ஏற்பட்டது.  2002ல்  தானிய சேமிப்பின் காரணமாக  உணவுக்குப் பஞ்சமில்லை.

இம்மூன்று பஞ்சங்களும் - 60 ஆண்டுகள் இடைவெளியில் ஏற்பட்டவையாக குறிப்பிடப்படுகின்றன. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று சில தொன்மைக் கருத்துக்கள் உள்ளனவாம்!...

மனிதர்கள் முயன்றால் - அதனைப் பொய்யாக்கி விட முடியும்!.. 


ஆதியில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு. அது வெறும் கற்பனை அல்ல -   இயற்கைச் சூழலில் சமச்சீர் காக்கப்பட்டதால் - அது உண்மைதான் என்கின்றார்கள்.   

ஆனால் தற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையால் இயற்கைச் சமச்சீர் அழிக்கப்பட்டது. எனவே தான், தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் .

இயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணம் - ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை - என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இனி வருங்காலத்திலும் இந்நிலை தொடருமேயானால் - ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்கு பாதகமாகவே அமையும் என்பது அவர்கள் தரும் எச்சரிக்கை..


மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, பெருகும் வாகனங்களின் ஆகியவற்றால் - காற்று, நீர், மண் இவை மாசுபட்டு விட்டன. எதிர்காலத்தில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றிய கவலை இன்றி - தாம் மட்டும் சுகமாக வாழ்ந்தால் போதும் என எண்ணுகிறது. 

இயற்கை வழங்கும் கொடைகளில் மழை மிகச் சிறந்தது. அந்த மழையை வருவிப்பவை மரங்கள்.  

சங்க இலக்கியமான அகநானூறு கூட - இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் கற்றறிந்தோர் கூறுகின்றனர்.

திருவள்ளுவர் - வான் சிறப்பினை பத்து குறட்பாக்களால் சிறப்பிக்கின்றார். 

சிலப்பதிகாரமும் மாமழை போற்றுதும்!. மாமழை போற்றுதும்!. என மங்கல வாழ்த்துடன் தொடங்குகின்றது.

காவினை இட்டுங் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏவினையால் எயில்மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்து எமைத்தீண்டப்பெறா திருநீலகண்டம்.  (1/116/2)
                                                                                                        - திருஞானசம்பந்தர்

தேவாரமும் சரி திருமந்திரமும் சரி  - இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இயற்கைச் சூழலை மனிதன் காக்கவில்லை எனில் - என்ன நேரும் என்பதற்கு சமீபத்தில் இமாலய சாரலில் நிகழ்ந்த பெரும் சோகமே சாட்சி!.



Thanks To Facebook
இயற்கையை மனிதன் வென்றதாக தகவல் ஏதும் இல்லை!...

எனவே - இயன்றவரை இயற்கையைப் பாதுகாப்போம்!..

இந்நிலையில் காவிரித் தண்ணீரையே பெரிதும் நம்பி இருக்கும் நமக்கு நல்ல செய்தியாக -

கர்நாடகா - காவிரி படுகை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் -

தமிழக, கர்நாடகா மாநில வனப்பகுதியில் எல்லைகளை தொட்டபடி, காவிரி ஆறு பெருக்கெடுத்து வருவதாகவும்,

ஒகேனக்கல் நீர்ப்பெருக்கு
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் பகல்12:00 மணி நிலவரப்படி 32,000 கன அடியும் நேற்று பகல் 12:00 மணி நிலவரப்படி 36, 550 கன அடியும் தண்ணீர் வந்து -  அருவிகளில் வெள்ளமென கொட்டுவதால் - பயணிகள் குளிக்கவும்,  பரிசலில் பயணிக்கவும் - தடை விதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 


காவிரியில் பெருகி வரும் நீரால் 

மண்ணும் குளிர வேண்டும்!.. 
மக்கள் மனமும் குளிர வேண்டும்!..

வயலும் விளைய வேண்டும்!..
மக்கள் வாழ்வும் மலர வேண்டும்!..

இயற்கையும் நம்மை வாழ்த்துவதாக!...

2 கருத்துகள்:

  1. நல்லது நடக்கட்டும்... நல்வாழ்வு மேலும் மலரட்டும்... சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வாழ்வு மலரட்டும்.. எல்லோருடைய விருப்பமும் அதுதான்!... திரு. தனபாலன் அவர்களுக்கு நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..