நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

முளைக்கொட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முளைக்கொட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 19, 2015

முளைக்கொட்டு

மதுரையம்பதி!..


அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் திருத்தலம்!..

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி  - மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் மகளாக அக்னியில் தோன்றிய திருத்தலம். 

தடாதகை எனும் திருநாமத்துடன் அவள் வளர்ந்தாலும் அங்கயற்கண்ணி - மீனாக்ஷி எனும் திருப்பெயர்களே அவளுக்கு உரியவை. 

காரணம்?..

அங்கயற்கண்ணி - மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். 

மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல, 

அங்கயற்கண்ணியும் தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களைத் தன் அருட்கண்களால் நோக்கி நலம் செய்விக்கும் தன்மையால்!..

இறைவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த பெரும்பதிக்குச் சொந்தக்காரி!..

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமானின் திருத்தலம் எனினும் -

ஒவ்வொரு நாளும் அனைத்து பூஜைகளும்  ஸ்ரீ மீனாக்ஷிக்கு நிறைவேறிய பின்னரே  பெருமானுக்கு  நடைபெறுகின்றன.

சக்தி பீடங்களுள் இத்திருத்தலம்  - ராஜமாதங்கி சியாமளா பீடம்.

ராஜமாதங்கியின் திருமேனி வண்ணம் - பச்சை!..

ஓங்காரி என்பார் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்..

- என்றுரைப்பார் - திருமூலர்.

அந்தாதி உரைத்த அபிராமிபட்டர் - நூற்பயன் கூறும் போது அம்பிகையை மாதுளம்பூ நிறத்தாள் என்று போற்றுகின்றார்..

எனினும்,

சிந்துரானன சுந்தரி!. சிந்துர வண்ணத்தினாள்!.. பவளக்கொடி!.. படரும் பரிமளப் பச்சைக்கொடி!..

என்றெல்லாம் புகழ்கின்றார்..


அம்பிகையின் அழகு வண்ணங்களைச் சொல்லும் போது - 

பிங்களை!.. நீலி!.. செய்யாள்!.. வெளியாள்!.. பசும் பொற்கொடியே!.. - என வர்ணித்து களிப்பெய்துகின்றார்..

பிங்களை - பொன் நிறத்தாள்.. - இவளே ஸ்வர்ணா - எனப்படுபவள்..

நீலி - நீல நிறமுடைய காளி..

செய்யாள் - செந்நிறமுடைய திருமகள்..

வெளியாள் - வெண்ணிறமுடைய கலைமகள்..

பசும்பொற்கொடி - பச்சை நிறமுடைய மலைமகள்.. 

அம்பிகையின் திருநாமங்களை ஏத்தும் ஐம்பதாவது திருப்பாடலில் - சாமளை என்று குறிப்பார்..

சாமளை எனில் பச்சை வண்ணத்தை உடையவள்..

இதையே - மாதா.. மரகத ஸ்யாமா.. மாதங்கி!.. என்பார் மகாகவி காளிதாசர்.

ஒருசமயம் - மதங்க மகரிஷியின் மகளாகத் தோன்றி வளர்ந்ததனால் மாதங்கி எனப்பட்டாள்..

எனவே தான்- 

ராஜமாதங்கி!..

அம்பிகை - மனங்கொண்டு மதங்க மகரிஷியின் மகளாகத் தோன்றியபோது -

மண்களிக்கும் பச்சை வண்ணங்கொண்டு தோன்றினாள் - எனச் சொல்கின்றார் பட்டர்..

அவள் பச்சை வண்ணங்கொண்டு எழுந்தருளியதால் தானே - 

மதுரை மண்ணில் - மாளாத செந்நெல் விளைந்து -
மாடு கட்டிப் போரடித்து ஆகாமல் -ஆனை கட்டிப் போரடிக்க முடிந்தது.

அருளாட்சி செய்யும் அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்!.. 

அங்கயற்கண்ணி, கயற்கண்ணி, கருந்தடங்கண்ணி, மாணிக்கவல்லி, மரகத வல்லி, அபிஷேகவல்லி, கற்பூரவல்லி, சுந்தரவல்லி!..

வருடம் முழுதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். 

எனினும் - ஆடியில் நிகழும் முளைக்கொட்டு உற்சவம் தனித்தன்மையானது.

நாடும் செழிக்க வேண்டும்..
நல்லமழை பெய்ய வேண்டும்!..
வீடும் கொழிக்க வேண்டும்..
நல்லவிதை தழைக்க வேண்டும்!..

- என, வேண்டிக் கொண்டு நடத்தப்படும் மண் வாசனைத் திருவிழா..

ஆடி மாதத்தில் - நதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் நடத்தப்படும் உன்னதத் திருவிழா..

பாரெங்கும் பசிப்பிணி தீர வேண்டி நடத்தப்படும் மகத்தான உற்சவம்.


மதுரையில் ஆடி மாத  ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொடியேற்றி ஆடி முளைக் கொட்டுத் திருவிழா கொண்டாடுவார்கள்.   

அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப்படும் உற்சவம் இது.

இன்று காலை கொடியேற்றம்
அதன்படி -  முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சந்நிதியில் கொடியேற்றம் இன்று காலை (ஜூலை/19) மங்கலகரமாக நிகழ்ந்தது .

நேற்று வாஸ்து சாந்தி நடைபெற்றதைத் தொடர்ந்து -
இன்று முதல் பத்து நாட்கள் (ஜூலை/28)  முளைக்கொட்டு உற்சவம்.



விழாவினில் ஸ்வாமியும் அம்மனும் வெள்ளி சிம்மாசனம், சிம்ம வாகனம் தங்கச் சப்பரம், வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம், கிளி வாகனம் இவற்றில் எழுந்தருளி ஆடி வீதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஏழாம் நாள் - திருக்கயிலாய வாகனத்தில் எழுந்தருளி சுந்தரர்க்கு திருக்காட்சி அருள்கின்றனர். அன்றிரவு புஷ்ப பல்லக்கு..

ஒன்பதாம் நாள் சைத்ரோபசாரம். 

பத்தாம் நாள் பொற்றாமரைக் குளத்தில் பாலிகைகளைக் கரைத்து தீர்த்தவாரி..

அன்றிரவு கனக தண்டியலில் மீனாக்ஷி எழுந்தருள்கின்றாள்..

அத்துடன் முளைக்கொட்டு திருவிழா சிறப்புடன் நிறைவுறும்.   


முளைக்கொட்டு உற்சவத்தினை - நதிகளில் புது வெள்ளம் பாய்ந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளர்ந்து சாகுபடி செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் வைபவம் எனலாம்.

இந்த வேளையில் பல்வேறு கிராமங்களிலும் தெய்வங்களுக்கு விழா நடத்தி - முளைப்பாரி எடுத்து பிரார்த்திப்பார்கள்.

முளைப்பாரிக்கு என தனியாக மண்பாண்டம் உள்ளது.  
இப்போது பித்தளைப் பாத்திரங்களும் வந்து விட்டன.

பானையில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய  விளைநிலத்தின் மண்ணை  இயற்கை உரங்களான - சாணம்,சாம்பல், எரு இவற்றுடன் கலந்து நிரப்புவார்கள்.  

இதன் பின்னர் - சோளம், கம்பு, கேழ்வரகு எனும் சிறுதான்ய விதைகளைத் தூவுவர். 

அதிலும் முக்கியமாகப் பச்சைப் பயறு இடம் பெறும்.

விதைகளின் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவி பதமாக நீர் தெளித்து - சற்றே நிழலான இடத்தில் பாதுகாத்து வைப்பர். 


முளைப்பாரி நேர்ந்து கொள்ளப்பட்ட வீட்டில் அதிகமான சுத்தம் பேணப்படும்.  வெளி ஆட்களை உள்ளே விட மாட்டார்கள்.

முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்து மலர்ச்சரங்களை சூடி - எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வார்கள். 

காலை, மாலை - என இருவேளையும் வீட்டிலுள்ள பெண்கள் வழிபாடு நடத்துவார்கள்.

கன்னிப் பெண்கள் பராமரிக்கும் பாலிகை - முளைப்பாரி செழித்து உயரமாக வளர்ந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால்  அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பதும் ஒரு குறிப்பு.

திருவிழாவுக்கு முன் ஏழாம் நாள் ஒன்பதாம் நாள் என சௌகரியப்படி பாலிகை வளர்க்கும் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஊர்க்கோயிலில் வைத்து கும்மியிட்டு குலவையுடன் பூஜை செய்த பின் ஆறு குளங்களில் கரைத்து விடுவர். 

முளைப்பாரியில் முளைத்த இளம் நாற்றுகள் ஆற்று நீரின் ஓட்டத்தில் சென்று எங்காவது கரை சேர்ந்து தழைத்து எழும் என்பது நம்பிக்கை.

நன்றி - பரிவை சே. குமார்
மதுரையில் - திருவிழாவின் போது நேர்ந்து கொண்டு - மக்கள் எடுத்து வரும் முளைப்பாரிகள் எல்லாம் அம்மனுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும். 

கும்மி குலவையுடன் முளைக்கொட்டு பொற்றாமரையில் கரைக்கப்படும் நிகழ்வுடன் ஆடி முளைக்கொட்டு  உற்சவம் நிறைவடையும்.


(நல்மனதில்) வித்தாகி ( பசுமையுடன் ) முளைத்தெழுந்த புத்தி - அபிராமி!.. - என்று தீர்க்கமாக உரைக்கின்றார் அபிராமிபட்டர்.

மண்ணில் முளைக்கும் எல்லாமே பச்சை வண்ணம்!..

மனம் மகிழ்வது பச்சை வண்ணத்தினால்!..

மன்னுயிர்களின் பசிப்பிணி அடங்கி வயிறு நிறைவது பச்சை வண்ணத்தினால்!..

சோறும் நீரும் பச்சை வண்ணமே!..

இங்கே சோறு என குறிக்கப்படுவது - பசுமை நிறைந்த வயல் வெளியை!..

தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு.. அது நீல வண்ணமாகப் பொலியும்..

அந்த நிலையே - ராஜஸ்யாமா!..

ஆக - மண் மகிழ்வது பச்சை வண்ணத்தினால் என்பது தெளிவு!..

பச்சை மாமலைபோல் மேனி!.. - என்பார் தொண்டரடிப் பொடியாழ்வார்!..

அவ்வண்ணம் செங்கண்மால் திருத்தங்கச்சியாகிய அம்பிகைக்கும் உரியது..

அதனால் தான்,

அன்னை மீனாட்சி - ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் பச்சைப் பசேலென விளங்கும் முளைப்பாரிகளைக் கொண்டு ஆராதிக்கப்படுகின்றாள்..

பாருலகைப் பரிபாலிக்கும் வண்ணம்
பரமேஸ்வரியின் திருமேனி வண்ணம்!..

என்பதை உணர்ந்து கொண்டால்

பச்சைப் பசும் நிறத்தில் திகழ்ந்து பசி தீர்க்கும் 
நீரை - நிழல் தரும் மரத்தை அழிக்கும் எண்ணம் வராது!..

பசுமையைக் காக்கும் வண்ணம் 
அன்னை - நல்லெண்ணங்களை அருள்வாளாக!..

மேகம் பொழிய வேணும்.. மேட்டு அருவி பாய வேணும்.. 
காடும் செழிக்க வேணும்.. கண்மாயும் நிறைய வேணும்!. 
ஆடும் தழைக்க வேணும்.. மாடும் கொழிக்க வேணும்..
ஊரும் செழிக்க வேணும்.. உள்வீடும் நிறைய வேணும்!.

பசுங்கிளியுடன் திகழும் பச்சைப் பசுங்கொடியாள் 
பாரெங்கும் படியளந்து காத்தருள்வாளாக!.. 

அங்கயற்கண் அன்னையே சரணம்!..
* * *

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014

அங்கயற்கண்ணி

சக்தி பீடங்களுள் இத்தலம்  - ராஜமாதங்கி சியாமளா பீடம்.

ஆட்சி செய்யும் அவளுக்குத்தான் எத்தனை எத்தனை பெயர்கள்!.. 

அங்கயற்கண்ணி, கயற்கண்ணி, கருந்தடங்கண்ணி, மாணிக்கவல்லி, மரகத வல்லி, அபிஷேகவல்லி, கற்பூரவல்லி, சுந்தரவல்லி!..


அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி  - மதுரை!..

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி  - மலையத்வஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் மகளாக அக்னியில் தோன்றிய திருத்தலம். 

தடாதகை எனும் திருநாமத்துடன் அவள் வளர்ந்தாலும் அங்கயற்கண்ணி - மீனாக்ஷி எனும் திருப்பெயர்களே அவளுக்கு உரியவை. 

காரணம்?..

அங்கயற்கண்ணி - மீன் போன்ற விழிகளை உடையவள் என்பது பொருள். 

மீன் தனது முட்டைகளைத் தன் பார்வையினாலேயே தன்மயமாக்குவதைப் போல அங்கயற்கண்ணியும் தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களைத் தன் அருட்கண்களால் நோக்கி நலம் செய்விக்கும் தன்மையால்!..

இறைவனின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த பெரும்பதிக்குச் சொந்தக்காரி!..

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமானின் திருத்தலம் எனினும் -

ஒவ்வொரு நாளும் அனைத்து பூஜைகளும்  ஸ்ரீ மீனாக்ஷிக்கு நிறைவேறிய பின்னரே  பெருமானுக்கு  நடைபெறுகின்றன.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் முகிழ்த்தெழுந்த கலைக்கோயில்  இவளுடையது.


நான்கு திசைகளிலும் வானளாவிய திருக்கோபுரங்களை உடைய திருக் கோயில். இத்திருக் கோபுரங்களுள் தெற்கு கோபுரம் தான் உயரமானது.  160 அடி உயரமுடைய தெற்குக் கோபுரத்தில்  சுதையால் ஆன 1511 சிற்பங்கள் உள்ளன. 

மேலைக் கோபுரத்தில் 1124 ,  கீழைக் கோபுரத்தில் 1011 ,  வடக்குக் கோபுரத்தில் 404 ,  விமானங்களில் 174  மேலும் ஆங்காங்கே உள்ளவற்றுடன் - கூடுதல் 4224  சிற்பங்கள் என  கணக்கிட்டுள்ளார்கள்.

985 தூண்களுடன் கூடிய ஆயிரங்கால் மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப் பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் - கல்யாண மண்டபம் என பல மண்டபங்கள்.


தங்கக் கொடி மரம்,  நந்தி, பலிபீடம் இவற்றுடன்  சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு எதிரே நந்தி மண்டபம் எனும் கம்பத்தடி மண்டபம்

ஒரு காலத்தில் நீராழி மண்டபமாக திகழ்ந்த புது மண்டபம் இப்போது கடைத் தெருவாகிப் போனது.

பங்குனி உத்திரத்தில் மீனாட்சியம்மையின் திருக்கரத்தினை - சுந்தரேசப் பெருமான் பற்றிய வேளை!..

பெருமானும், மீனாட்சியும் - திருமணத்திற்கு வந்திருந்தவர்களை உணவு அருந்துவதற்காக  அழைத்த போது பதஞ்சலியும், வியாக்ரபாதரும் - 

பெருமானே!.. நாங்கள் எப்போதும் பொன்னம்பலத்தில்  ஆனந்த நடனத்தைத் தரிசித்த பிறகு தான் உணவு அருந்துவோம்!.. - என்றனர்.

இதைக்கேட்ட இறைவன் - இவர்களின் நியமத்தை காக்கும் பொருட்டு  திருநடனம் புரிந்தருளினார். அதனால் மதுரை வெள்ளியம்பலம் எனப்பட்டது.

பின்னாளில்,
மதுரையை ஆண்ட  ராஜசேகர பாண்டியனுக்காக நடராஜர் - கால் மாற்றி ஆடியதாகவும் ஐதீகம்.

ஆயிரங்கால் மண்டபம் - நூறாண்டுகளுக்கு முன்
திருச்செந்தூரில் - முருகன் திருவருளால் பேசும் தன்மையடைந்த  குமர குருபரர் - பிள்ளைத் தமிழ் கொண்டு மீனாட்சியைப் பாடி மகிழ- அது கேட்ட அன்னை சிறு பிள்ளை என வந்து முத்து மாலையை அணிவித்து உள்ளம் உவந்தனள் என்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை.

திருவாதவூராகிய மாணிக்கவாசகப் பெருமான்  - முதலமைச்சராகப் பணி புரிந்த வேளையில் நாளும் பணிந்த திருத்தலம். 

நீர் நிறைந்த பொற்றாமரைக் குளம்
திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து  சைவத்தை மீட்டு நிலை நிறுத்தியது இங்கேதான்!..

வருடம் முழுதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம். இருந்தாலும் ஆடியில் முளைக்கொட்டு உற்சவம் தனித்தன்மையானது.


மதுரையில் ஆடி மாத  ஆயில்ய நக்ஷத்திரத்தில் கொடியேற்றி ஆடி முளைக் கொட்டுத் திருவிழா கொண்டாடுவார்கள்.   அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப்படும் உற்சவம் இது. 

அதன்படி -  முளைக்கொட்டு உற்சவம் அம்மன் சன்னதியில் கொடியேற்றம் ஜூலை/28 திங்கள்கிழமை நிகழ்ந்தது .

அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம்.   

நதிகளில் புது வெள்ளம் பாய்ந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளர்ந்து சாகுபடி செழிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் வைபவம் எனலாம்.

பாரெங்கும் பசிப்பிணி தீர வேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம்.

கிராம மக்கள் அனைவருமே இந்த வேளையில் கிராம தெய்வங்களுக்கும் விழாக்கள் நடத்தி - முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.

முளைப்பாரிக்கெனத் தனியாக மண்பாண்டம் உள்ளது.  இப்போது பித்தளைப் பாத்திரங்களும் வந்து விட்டன.

பானையில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய  விளைநிலத்தின் மண்ணை  இயற்கை உரங்களான - சாணம்,சாம்பல், எரு இவற்றுடன் கலந்து நிரப்புவார்கள்.  

இதன் பின்னர் சிறு தான்யங்களான பச்சைப் பயறு, சோளம், கம்பு, கேழ்வரகு விதைகளைத் தூவி -  விதைகளின் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவி பதமாக நீர் தெளித்து - சற்றே நிழலான இடத்தில் பாதுகாத்து வைப்பர். 


முளைப்பாரி நேர்ந்து கொள்ளப்பட்ட வீட்டில் அதிகமான சுத்தம் பேணப்படும்.  வெளி ஆட்களை உள்ளே விட மாட்டார்கள்.

முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்து மலர்ச்சரங்களை சூடி - எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வார்கள். காலை, மாலை - என இருவேளையும் வீட்டிலுள்ள பெண்கள் வழிபாடு நடத்துவார்கள்.

 வைபவம் - புத்தளம், இலங்கை
கன்னிப் பெண்கள் பராமரிக்கும் பாலிகை - முளைப்பாரி செழித்து உயரமாக வளர்ந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. 

மேலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால்  அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பதும் ஒரு குறிப்பு.

நன்றி - சே.குமார்
திருவிழாவுக்கு முன் ஏழாம் நாள் ஒன்பதாம் நாள் என சௌகரியப்படி பாலிகை வளர்க்கும் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று ஊர்க்கோயிலில் வைத்து கும்மியடித்து குலவையிட்டு பூஜை செய்த பின் ஆறு குளங்களில் கரைத்து விடுவர். 

முளைப்பாரியில் முளைத்த இளம் நாற்றுகள் ஆற்று நீரின் ஓட்டத்தில் சென்று எங்காவது கரை சேர்ந்து தழைத்து எழும் என்பது நம்பிக்கை.

ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும். பத்து நாட்களும் அம்மன் சிறப்பான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியின் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் திருக்காட்சி அளிப்பாள். 

இவளுக்கு என்று நேர்ந்து கொண்டு வரும் முளைப்பாரிகள் எல்லாம் அம்மனுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும். 

கும்மிப் பாட்டுடனும் குலவையுடனும் முளைக்கொட்டு பொற்றாமரையில் கரைக்கப்படுவதுடன் ஆடி முளைக்கொட்டு  உற்சவம் நிறைவடையும்.   

ஆடி மாதத்தின் மூன்றாம் செவ்வாய் இன்று.
செந்தமிழ்ச் செல்வியான - அங்கயற்கண்ணியின் தரிசனம்.

மேகம் பொழிய வேணும். மேட்டு அருவி பாய வேணும். 
காடும் செழிக்க வேணும். கண்மாயும் நிறைய வேணும். 
ஆடும் தழைக்க வேணும். மாடும் கொழிக்க வேணும்.
ஊரும் செழிக்க வேணும். உள்வீடும் நிறைய வேணும்.

பசுங்கிளியை ஏந்தியிருக்கும் பச்சைப் பசுங்கொடியாள் 
பாரெங்கும் படியளந்து காத்தருள்வாளாக!.. 

அங்கயற்கண் அன்னையே சரணம்!..
* * *