நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மாங்கனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாங்கனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

மாம்பழச் சாமியார் 2

மாம்பழ ஸ்வாமிகளின் புகழ் அந்த நாடு முழுதும் பரவி விட்டது..

பற்பல ஊர்களிலிருந்தும் ஸ்வாமிகளின் குடிலைத் தேடிவந்து அருளுரை பெற்றுச் சென்றனர்...

அன்றைய தினம் காலைப் பொழுது...


மாம்பழத்துடன் வரகரிசிக் கஞ்சியை ருசித்துக் கொண்டிருந்த வேளையில் வாசலில் ஏகத்துக்கும் ஆரவாரம்...

என்னென்று அறிவதற்கு வாசலுக்கு ஓடிய இளந்துறவி
மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தான்..

ஸ்வாமி.. தங்களை நாடி தலைமை அமைச்சரும் ஏனைய
அரசு அலுவலர்களும் வந்திருக்கின்றனர்..

அப்படியா!..இதோ வருகிறேன்.. - என்றபடி தள்ளாத வயதிலும் எழுந்து நடந்தார்..
குடிலின் வாசலுக்கு வந்து - வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களை இன்முகத்துடன் இருகரம் நீட்டி வரவேற்றார்..

நாடு வாழ்க..
நற்றமிழ் வாழ்க..
நாடு காக்கும் எங்கோன்
நலங் கொண்டு வாழ்க!..

அரசன் அவ்விடத்தில் இல்லாத போதும்
அரசனையும் நாட்டையும் மொழியையும் வாழ்த்தி சிறப்பித்தார்..

பெரியீர்.. தமக்கு வணக்கம்.. அரசனின் ஆணைப்படி தங்களைச் சிறப்பிப்பதற்கு அரச முத்திரையுடன் கொடியையும் தாங்கி வந்துள்ளோம்...

எனக்கு சிறப்பா.. அந்த அளவுக்கு தகுதி எனக்கிருக்கின்றதா!..

இமயம் தன் பெருமையைத் தானெடுத்துக் கூறுமா!..
அவையடக்கம் ஆன்றோர்க்கே உரியதன்றோ!.

ஆயினும், முற்றும் துறந்த முனிவனுக்கு முத்தாரமும் கடம்பும் எதற்கு?..

எல்லாம் மக்களுக்காகட்டும்.. இந்த மாஞ்சோலையும் பூஞ்சோலையும் கழனி வெளியும் காடு கரைகளும் ஏரியும் குளமும் என்றும் நிலைத்திருக்க ஆவன செய்யுங்கள்.. அதுவே மக்கட்பணி..

மக்களுக்குச் செய்யும் பணியே மகேசனுக்குச் செய்யும் பணி...

அங்ஙனமாகில் நாங்கள் கொண்டு வந்திருக்கும் இந்தப் பரிசுப் பொருட்களை என்ன செய்வது?..

இதோ நிற்கும் இந்த தம்பதியினர் தான் எனக்கு முதலில் உணவளித்தவர்கள்.. 
இங்கே கூடியிருக்கும் மக்கள் எல்லாம் என் மீது அன்பைப் பொழிந்தவர்கள்.. ஏழை எளியவர்களாகிய இந்த மக்களிடம் வழங்கி விடுங்கள்...
அரசனுக்கும் அவன் தேவியருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!...

என்ன இருந்தாலும் பெரியவர் பெரியவர் தான்!.. - ஊர்மக்கள் பேசிக் கொண்டனர்...

ஆண்டுகள் சில ஆயின...

ஸ்வாமிகளுடன் ஊர் மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டார்கள்..

ஐயா.. கனி வகைகளில் உயர்ந்தது எது?...

சிறப்பித்துச் சொல்லப்பட்ட மூன்றிலும் முதலில் விளங்கும் மாங்கனி தான் உயர்ந்தது...


திருக்கயிலாய மலையில் ஈசனுக்கு நாரதர் சமர்ப்பித்த கனி மாங்கனிதான்..

நிறைந்த உயிர்ச்சத்துகளுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் நமக்கு வழங்குவது மாங்கனிதான்...

கனி மட்டுமல்லாது மா மரத்தின் பட்டையும் தளிர்களும் இலைகளும் பூக்களும் வடுவும் காய்களும் மனிதனுக்கு நன்மையளிக்கக் கூடியவை..

இன்றைய குருகுலம் எதிர்வரும் கால கட்டத்தில் கல்விச் சாலையாக மாறும்..
அந்தவேளையில் ஆசிரியர் மாணாக்கர்களுக்கு போதிக்கும் இடம் மரத்தடியாகவே இருக்கும்...

அப்படியான மரத்தின் நிழல் எதுவாக இருக்கும்?..

மா மரத்தின் நிழலாகவே இருக்கும்!...

ஆல்,  அரசு, வேம்பு இவையெல்லாம் பயனற்றவைகளா ஸ்வாமி?..
இதெல்லாம் தானே சிறந்தது எனக் கூறுகின்றார்கள்!..

ஆல்,  அரசு, வேம்பு இவையெல்லாம் சிறந்தவை தான்..
வேம்பின் நிழல் நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம் இவற்றை வழங்க வல்லது..
அரசும் ஆலும் - எல்லாவற்றையும் உணர்ந்த நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் கைகூடிவரச் செய்பவை..
அதனால் தான் தவம் முனைவோர் அவற்றின் நிழலில் அமர்ந்தனர்..

ஆனால்,
மாமரத்தின் நிழல் மனதின் எண்ண அலைகளைக் குவித்து ஓரிடத்தில் நிலை நிறுத்த வல்லது...
மாமரத்தின் கீழிருந்து ஒருவன் ஒன்றைக் கற்கும்போது கற்றுக் கொள்ளும் விஷயம் அவன் நினைவை விட்டு நீங்குவதேயில்லை... அதன் காரணமாக அவன் மேலும் மேலும் கற்பதில் நாட்டம் கொள்கின்றான்...


எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமானுக்கு கந்த வேலன் குருவாக அமர்ந்து ப்ரணவ மந்திரத்தின் உட்பொருளை உணர்த்திய தலம் - திருவேரகம் எனப்படும் சுவாமிமலை...

அந்த திருத்தலம் மாமரங்களால் சூழப்பட்டிருந்தது என்பது அருணகிரியாரின் திருவாக்கு..

சூத மிக வளர் சோலை மருவு
சுவாமிமலை தனில் உறைவோனே!..  - என்று போற்றுகின்றார்...

சூதம் என்றால் மாமரம்...

இன்னொரு திருத்தலம்.. மந்திரபுரி என்று சொல்லப்படுவது..
திரு உசாத்தானம் என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு
கோயிலூர் என்று பின்னாளில் வழங்கப்படும்...

ஸ்ரீ மந்த்ரபுரீஸ்வரர்
மந்திரபுரீஸ்வர் என்பது ஈசனின் திருப்பெயர்...
அம்பாள் பெரியநாயகி என விளங்குகின்றாள்..

மந்திரபுரி என்ற தலத்திற்கு என்ன விசேஷம் ஸ்வாமி!?..

இந்த திருத்தலத்திற்கு சூத வனம் அதாவது மாங்காடு என்றும் பெயர்..
ஸ்ரீராமபிரான் தேவியைப் பிரிந்த பின்னர் தம்பியுடன் தெற்கே வரும்போது
மாஞ்சோலையின் நடுவே சிவபூஜை விழைகின்றார்..

அப்போது சிவபெருமான் ஸ்ரீராமபிரானுக்கு மந்த்ரோபதேசம் வழங்குகின்றார்...

இங்கேயும் உபதேசம் மா மரத்தின் நிழலில் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...

இத்திருத்தலத்தின் தல விருட்சமாக மாமரம் விளங்குகின்றது...

ஸ்வாமி.. வேறெங்கெல்லாம் மாமரம் தலவிருட்சம் என்பதையும் கூறுதல் வேண்டும்...

அம்பிகை காமாட்சியாக பூஜை செய்த காஞ்சிபுரம், மயிலாக பூஜை செய்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,  அவிநாசி, திருப்பாதாளேஸ்வரம் எனப்படும் பாமணி, திருமாந்துறை - இங்கெல்லாம் தலவிருட்சம் மா மரம் தான்...

மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்திநீர் வருகாவிரி வடகரை மாந்துறை..

- என்று திருமாந்துறையில் ஞானசம்பந்தப்பெருமான் பாடியருள்கின்றார்..

ஆனி மாதப் பௌர்ணமி அன்று ஈசனுக்கு மாம்பழச் சாற்றினால் அபிஷேகம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும்...

வங்கக் கடலின் ஓரமாக விளங்கும் கற்பகநாதர் குளம் எனும் திருக்கோயிலில் விநாயகப் பெருமான் திருக்கரத்தில் மாங்கனியுடன் திகழ்வது சிறப்பு..

ஆனால்...

கூடியிருந்தவர்கள் திகைத்தனர்...

ஸ்வாமி ஜி அடுத்து என்ன சொல்லப் போகின்றாரோ என்று!..

இத்தனை சிறப்புகளையும் நன்மைகளையும் உடைய மாமரம் தமிழர்க்கே உரியது...

மாவூர், மாங்குடி, மாஞ்சோலை, மாந்துறை, மாங்காடு - என்றெல்லாம்
சிறப்பித்த தமிழர்களே இச்சிறப்புகள் அனைத்தையும் மறப்பார்கள்..

இதன் நிழலில் படுத்து உறங்கிய மக்களே இதனை அழிப்பார்கள்...

ஈவு இரக்கமில்லாமல் நாகரிக வளர்ச்சி என்ற பேரில் நிழல் கொடுத்த மரங்களையே கண்ட துண்டமாக வெட்டிப் போடுவார்கள்...


பசுமையான மா இலைகளை வீட்டின் நிலைகளில் கட்டி வைத்த தமிழர்கள் 

விஷத் தன்மையுடைய ஒரு வகை நெகிழியை மா இலை போல கட்டி வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள்...

மாஞ்சோலைக்கு உரிமையுடைய விவசாயிகளே விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காக - இளம் பூக்களில் ரசாயனம் என்னும் விஷத்தைத் தெளித்து வைப்பார்கள்..


விற்பனை செய்பவர்களோ நச்சுத் தன்மையுடைய கற்களைக் கொண்டு மாங்காய்களைப் பழுக்கச் செய்வார்கள்...


இன்னும் ஒருபடி மேலே போய் வருடம் முழுதும் மாம்பழம் என்ற மாயையான வார்த்தைகளால் சிறு பிள்ளைகளை மயக்கி இரசாயனக் கலவையில் உருவாக்கப்பட்ட கரைசலை மாம்பழச் சாறு என்று குடிக்கச் செய்வார்கள்....


உண்ணும் உணவு, குடிக்கும் நீர், உடுக்கும் உடை, சுவாசிக்கும் காற்று 

- என, எல்லாமே மனிதனுக்குப் பகையாகி நிற்கும்.. 

ஞானிகள் சொல்லியவை எல்லாம் மக்களுக்கு மறந்தே போகும்..


மா மர நிழலில் இருந்து சிறார்கள் கல்வி கற்க மாட்டார்கள்...


கல்விக் கூடங்களில் மண்ணும் கல்லுமே நிழலாகும்.. 

அந்த நிழலில் கற்ற கல்வி - மனிதனை அந்த நிலைக்கே இட்டுச் செல்லும்..

ஆக்கம் தரும் கலைகளுக்கு இருப்பிடமான கல்விச் சாலை

ஊழலுக்கும் லஞ்சத்திற்கும் பிறப்பிடமாகத் திகழும்

அழிவுக்கான வழியும் ஆங்கே ஆரவாரத்துடன் திறந்து வைக்கப்படும்...


கல்வி கற்றதாகச் சொல்லிக் கொள்பவனே 

கதிகலங்கி கயமை எனும் கழிவு நீரில் வீழ்ந்து அழிவான்...

அந்த அளவில் ஸ்வாமிஜி ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தார்...

ஸ்வாமிகளின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர் மக்கள்...

எதிர்காலம் எப்படியாகுமோ?.. - என்ற கவலை அவர்களை வாட்டியது...

ஸ்வாமிகளின் தியானத்தைக் கலைக்க விரும்பாமல்
அங்கிருந்து விடைபெற்றனர்...

ஸ்வாமிகள் அருளிய உபதேசங்களைக் கொண்டு
நல்வழியில் நடந்து நாட்டைக் காக்கவேண்டும் என முனைந்தனர்..

ஆனால் காலம் போன வேகத்தில் எல்லா உறுதிகளும் காற்றோடு கலந்தன...

அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் விடியலைத் தேடினர்...

ஆயினும் -
எப்போது விடியும் என்பது தான் 
தெரியவில்லை...

வாழ்க வையகம்.. 
*** 

ஞாயிறு, ஜனவரி 28, 2018

மாம்பழச் சாமியார் 1

சுவாமி!...

குழந்தாய்!..

சிவப்பழமாகிய தாங்களும் இளங்கன்றாகிய அடியேனும் வெகு நேரமாக நடந்து நெடுந் தொலைவினைக் கடந்திருக்கின்றோம்..

ஆமாம்!..

சூரியன் வேறு உச்சியில் நிற்கின்றான்...
வயது முதிர்ந்த தங்களுக்கு நோகாவிட்டாலும் -
எனது கால்கள் மிகவும் நோகின்றன.. 
அத்துடன் பசி என்பது எல்லாருக்கும் பொது.. ஆகையால்...

ஆகையால்!...

அதோ தெரிகின்றதே.. அந்த மாஞ்சோலையில் சற்று நேரம் தங்கி இளைப்பாறிச் செல்வதற்குத் தாங்கள் சித்தம் கொள்ளவேண்டும்!...


ஆகட்டும்.. அப்படியே ஆகட்டும்!...

அதன்படி அந்த மாஞ்சோலைக்குள் சுவாமியும் சீடனும் நுழைந்தவுடன்..

வரவேணும்... வரவேணும்!...
- என்றபடி இளம் வயதுடைய தம்பதியர் ஆவலுடன் ஓடி வந்து வரவேற்றனர்...

அங்கேயிருந்த வைக்கோற்போரில் இருந்து வைக்கோலை உருவி
நிழல் கவிந்திருந்த மாமரத்தினடியில் மெத்தை போல் பரப்பி -

அதன் மீது பழைய வேட்டியை விரித்து வயதான ஸ்வாமி அமர்வதற்கு உதவினர்....

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிகள் மனமார வாழ்த்தினார்..

சாமி... எங்கேயிருந்து வர்றீங்க?...

வடக்கே திருக்கயிலாய மலையில் இருந்து வருகின்றோம்...

ஈஸ்வரா... ஈஸ்வரா... இந்தா புள்ளே.. சாமியை விழுந்து கும்புட்டுக்க!...

மறுபடியும் -

மங்கலம் உண்டாகட்டும்!... - ஸ்வாமிஜி வாழ்த்தினார்..

ஏ... புள்ளே... அந்த பனை ஓலை விசிறிய எடுத்து வந்து வீசு!..

சாமீ... ரொம்ப களைப்பா இருக்கீங்க.. 
நாங்க கொண்டு வந்த கட்டுச் சோறு இருக்கு... 
ஒரு வாய் சாப்புடுறீங்களா?..

என்ன மச்சான் நீ... போய் அந்த வாழையில இருந்து நுனி எலை நறுக்கிட்டு வா... ஓடு... சீக்கிரம்!...

சாமீ.. கோவிச்சுக்கப்படாது.. எங்க கையால நீங்க சாப்புடுவீங்களா?...

மகளே... எல்லாவற்றையும் துறந்த எமக்கு மீண்டும் பற்றையும் பாசத்தையும் ஏற்படுத்துகின்றன உன்னுடைய பேச்சும் உபசரிப்பும்!...

ஏ.. புள்ளே.. என்னா இது.. சாமிகிட்ட நொய்..நொய்..ன்னு கிட்டு...
இந்தா இருக்கு எலை.... சாமிகள் கை கழுவ தண்ணி கொடு..
சோத்துல கை போடாம அகப்பையால எடுத்து வை...

தாயே!.. நீ உன்னோட கையாலயே சோற்றை எடுத்து வையம்மா!...

எங்க அப்பாரும் இப்படித்தான் வாயாரக் கூப்புடுவாங்க!..
மச்சான்... அந்த குடாப்புக்குள்ள மாங்கா பழுக்க வெச்சிருக்கேன்..
நல்லதா நாலு எடுத்து நறுக்கி வை!...


பெருந்துறவியின் கண்களும்
இளந்துறவியின் கண்களும் ஏக காலத்தில் கலங்கின...

அந்தக் காலத்தில் ஈசன் எம்பெருமானையும்
இப்படித்தான் மெய்யடியார்கள் உபசரித்தார்களாம்!...

நாங்க எங்க சாமி அதெல்லாம் கண்டோம்!...
உங்க மாதிரி பெரியவங்க இந்தப் பக்கம் வர்றப்போ
ஏதோ எங்களால ஆனது.. வயிறார உபசாரம் செய்வோம்!...

- வெள்ளந்தியாகச் சொன்னார்கள் தம்பதியர் இருவரும்...

மகனே.. பெரிய பெரிய மகான்களுக்குக் கிடைத்த பாக்கியம்
இன்று எனக்கும் கிடைத்திருக்கின்றது...

குனிந்த தலை நிமிராமல் தயிர் சோற்றையும் மாம்பழத் துண்டுகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளந்துறவி வியப்புடன் ஸ்வாமிகளை நோக்கினார்...

அந்தத் தம்பதியரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...

ஸ்வாமிகள் தொடர்ந்தார்...

பசித்த வயிற்றில் உணவு தெய்வம்.. பாலை வனத்தில் தண்ணீர் தெய்வம் என்பார்கள்... அந்த மாதிரி சாட்சாத் அம்பாளும் பரமேஸ்வரனும் நேரில் வந்து பரிமாறி பசி தீர்த்த மாதிரி இருக்கின்றது!...

சாமீ...  அப்படியெல்லாம் பெரிய வார்த்தை எதுக்குங்க...
நாங்க ஏழை பாழைங்க.. ஏதோ எங்களால ஆனது...

இந்த மாஞ்சோலை உங்களுடையதா?...

ஆமாங்க சாமி.. இந்த மாந்தோப்பும் சுத்தியிருக்கிற வயக்காடும் 
எங்க அப்பன் பாட்டன் எங்களுக்காக கொடுத்த சொத்து...
கொடுக்கறப்பவே சொன்னாங்க.. தர்மஞ் செய்யடா.. மகனே!.. - ன்னு...

வெள்ளாமையில முதல் பங்கு தர்ம காரியங்களுக்கு..
மறு பங்கு அரசாங்க வரி.. அதோட வர்ற வருஷ சாகுபடி செலவுக்கு..
மூனாவது பங்கு ஆடு மாடு கோழிகளுக்கு.. வீட்டு செலவுக்கு!..

ஆகா.. நிறைந்த குணம்.. நிம்மதியான மனம்...
உங்களை மாதிரி உயர்ந்தவர்கள் தான் நாட்டுக்குத் தேவை...
உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்!...

சாமீ... கேட்டா கொடுப்பீங்களா?..

நிச்சயம்!..

அப்படீ..ன்னா.. நீங்க இங்கேயே தங்கிடுங்க!...

இங்கேயேவா!.. - அதிர்ந்தார் ஸ்வாமிகள்..

எங்க அப்பன் பாட்டன் மாதிரி.. இருக்கீங்க...
வயசான காலத்துல.. ஏன்.. அங்கே இங்கே..ன்னு அலைஞ்சிக்கிட்டு!..
உங்களுக்கு வேணுங்கிறதெல்லாம் செஞ்சு தர்றோம்...
எங்க கூடவே இருந்து எங்க புள்ள குட்டிகளுக்கு நல்லவழி காட்டணும்!..

அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்ட ஊர் ஜனங்கள் ஒன்று திரண்டு ஓடி வந்து ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்திற்காக வரிசை கட்டி நின்றனர்...

சாமிகள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்போ தொந்தரவு செய்யக் கூடாது...
இனிமே நம்ம ஊர்ல தான் சாமிகள் தங்கப் போறாங்க!...

ஓ.. - என்று ஆர்ப்பரித்தது ஜனத் திரள்...

சாமிக்கு என்ன பேர்?.. - கூட்டத்துள் கிசுகிசுப்பு எழுந்தது...

பெரியவங்க கிட்ட போய் ஒங்க பேரு என்னா...ன்னு கேக்கிறது தப்பு...
அதனால நாமளே சாமிகளுக்கு பேர் வெச்சிடுவோம்!...

என்னா...ன்னு பேரு வெக்கப் போறே!...

சாமிகளோட முகத்தைப் பாரு.. 
மாம்பழத்தைச் சாப்பிடுறப்போ எவ்வளவு சந்தோஷம் தெரியுது... 
மாம்பழம் அவங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் போல இருக்கு...
அதனால...

அதனால?...

இன்னையில இருந்து அவங்க பேரு மாம்பழச் சாமியார்!...

மாம்பழச் சாமியார் வாழ்க!... - மீண்டும் ஜனத்திரளிடையே ஆரவாரம்...

இதற்குள் ஸ்வாமிகள் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தார்..

இரு கைகளையும் உயர்த்தி ஆசி கூறியதுடன்
வந்திருந்த அனைவருக்கும் திருநீறு வழங்கினார்..

ஜனங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

சாமிகள்... இனிமேல் நம்ம ஊர்ல தான் தங்கப் போறாங்க!...
ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க... கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும்..
உங்களோட கஷ்ட நஷ்டத்தையெல்லாம் அப்புறமா வந்து பேசிக்கலாம்...

இப்போ சாமிகள் தங்குறதுக்கு ஒரு குடிசை கட்ட வேணும்...
அதனால ஆளுக்கு ஒரு வேலைய கையில எடுங்க!...

அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது...

அவ்வளவு தான்...

சற்று நேரத்துக்குள்
மூங்கில் கழிகளும் தென்னங்கீற்றுகளும்
பாளைகளும் - மளமள.. என்று குவிந்தன...

அவற்றுடன் அந்த ஊர் மக்களின் அன்பும் சேர்ந்து கொள்ள
ஆங்கொரு குடில் அழகாக எழுந்து நின்றது...

ஸ்வாமிகள் படுப்பதற்கு தாழை நார் கட்டில்..
தரை விரிப்புக்கு பனை ஓலைப் பாய்..
மண்பானைகள்... கலயங்கள்...

கூடத்தில் குத்து விளக்கு.. தாழ்வாரத்தில் சர விளக்கு..
வாசற்படியினில் அகல் விளக்குகள்..

எல்லாவற்றையும் ஏறிட்டு நோக்கினார் ஸ்வாமிகள்...


இறைவா.. பற்றறுத்து வந்த என்னை மீண்டும் பாசத்தினால் கட்டுகின்றாயே...
இங்கே என்னென்ன திருவிளையாடல்களை நிகழ்த்தத் திருவுள்ளமோ!...

சூரியன் மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தான்...

சாமீ... ராப்பொழுதுக்கு பணியாரமும் கேழ்வரகு அடையும் 
தேங்காய்ப் பாலும் கொண்டு வர்றோம்... வேறென்ன வேணும்..ன்னு சொன்னீங்க...ன்னா!..

ஸ்வாமிகள் நிறைவாகப் புன்னகைத்தார்...

சரி.. நீங்க ஓய்வெடுங்க சாமீ!.....
நாங்கள்...லாம் நாளைக்கு வர்றோம்..

ஊர் ஜனங்கள் அப்போதைக்கு அங்கிருந்து புறப்பட்டனர்..
***

நாமும் நாளைக்கு அவர்களுடன் வருவோம்...

நலம் பெருகட்டும்..
***

புதன், ஜனவரி 24, 2018

மா... - 2

அக்கா... அக்கா..வ்!...

யப்பா... எத்தனை நாளாச்சு தாமரை.. இந்தப் பக்கம் வரனும்..ன்னு இப்பவாவது நெனைச்சியே!...

என்னக்கா நீங்க.. பொங்கல் அன்னைக்குத் தான் இங்கே வந்து பொங்கல்...லாம் சாப்பிட்டுப் போனேன்... அதுக்குள்ளயும் எத்தனை நாளான மாதிரி..ங்கிறீங்க!..

ஆமாண்டா... செல்லம்!... உன்னைப் பார்க்கலேன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு...

தாமரையைத் தோளோடு சாய்த்துக் கொண்டாள் அக்கா..

இந்த வருஷம் கன்னிப் பொங்கல் அதுவுமா - கிராமத்துக்கு போக முடியலை.. அன்னைக்கு தை அமாவாசை வந்ததாலே அவங்க அவங்களும் வீட்டு வேலையா ஆகிட்டாங்க.. நாங்களும் திருக்கடவூருக்குப் போய்ட்டோம்...

ஆமாக்கா!... மாமாவும் அத்தையும் திருவையாறு போய் இருந்தாங்க...
இந்த வருஷம் செண்பகத்தைப் பார்க்க முடியலை..

அதுக்கு வேறொரு யோசனை வெச்சிருக்கேனே!...

என்னக்கா அது!?.. ஜொல்லுங்க.. அக்கா!...

ம்ஹூம்.. அப்புறமாத்தான்!...

சரி.. எங்கிட்ட சொல்லாம வேற யாருக்கிட்ட சொல்லப் போறீங்க!..
அப்புறம்.... உங்க அண்ணாச்சி நேத்து போட்ட பதிவைப் படிச்சீங்களா!...

ம்.. படிச்சேனே!... மா மரத்தைப் பத்தி எழுதியிருந்தார்.. 
ஏன்.. அதுல என்னபிரச்னை?..


பிரச்னை ஒன்னுமில்லை... அது..ல .... வந்து.. வந்து...

என்னம்மா?.. என்ன சந்தேகம்!?...

ஆமாக்கா!.. அது..ல... அந்த பொன்னுமணிக்கு மாவடு!..
அது.. ஏங்..க்கா மாசமா இருந்தா மாவடு வாங்கித் தரணுமா!...

திக்கித் திணறினாள் தாமரை...

அடிப் பைத்தியமே.... புள்ள உண்டாயிருந்தா மசக்கை ஆயிடும்...

மசக்கை..ன்னா!...

மசக்கை..ன்னா தெரியாதா?... இப்படியும் ஒரு அப்பாவியா!..

அச்சச்சோ... உள்ளே அத்தான் இருக்காங்களா?.. - தாமரைக்குத் தயக்கம்..

நீ பயப்படாதே.. அவங்க காலேஜுக்குப் போய்ட்டாங்க..
அவங்க கிட்ட இதக் கேட்டா இன்னும் விளக்கமாகவே சொல்லுவாங்க...

அத்தான்..கிட்ட கேக்குறதா!.. வேற வினையே வேண்டாம்!..
இதெல்லாமா போய் அத்தான்... கிட்ட கேக்க முடியும்?..

அம்மாடி.. அத்தானப் பத்தி என்ன நெனைச்சிக்கிட்டு இருக்கே.. 
அவங்க என் பின்னாடி சுத்துனப்பவே எனக்கு பாடம் நடத்துனவங்க....

என்னது பாடம் நடத்துனாங்களா!?...

அந்தக் காலத்தில ஊருக்கு ஊரு மாந்தோப்பு இருக்கும்...
ரகசியமா பார்த்துப் பேசற இடமே மாந்தோப்பு தான்..
அப்படியே கூடைய எடுத்துக்கிட்டு மாங்கா பறிக்கிற மாதிரி
மச்சானோட மனசையும் பறிச்சுக்கிட்டு வருவாங்க!...

சே.. இந்த ஆம்பிளைங்களுக்கு விவஸ்தையே கிடையாதுப்பா!...

தாமரை.... இதெல்லாம் தெரிஞ்சிருக்கிறது தான் சந்தோஷமான இல்லறம்.... உனக்கு என்ன சந்தேகம் அதைக் கேளு!..

அந்த மாவடு... மாங்காய்!..

கடைசி..ல - அந்த சின்னமணி  
மாங்காய்....ங்கறதுக்குப் பதிலா - 
மாவடு..ன்னு வாத்யார்..கிட்ட உளறிட்டான்!.
நம்ம நெல்லை அதக் கண்டு பிடிச்சுட்டாங்க!...

அது.. ஏங்..க்கா?...

கல்யாணத்துக்கு அப்புறம் கரு உருவான சில வாரங்கள்..ல மசக்கை ஆரம்பமாயிடும்... எதுவுமே சாப்பிடப் பிடிக்காது.. லேசா தலை சுற்றல் வாந்தி இருக்கும்...மனசுக்குப் பிடிச்ச எதையும் சாப்பிடப் பிடிக்காது.. 

ஆனா புளிப்பு ருசிக்கு மட்டும் வாயும் மனசும் ஏங்கும்..

ஓஹோ!..

சில பொண்ணுங்க.. புளி அது...இது...ன்னு இறங்கிடுவாங்க.. புளிப்புச் சுவை நல்லது என்றாலும் புளி ஆபத்து... அதனால தான் மாங்காய் மேல ஈர்ப்பு ஆகிடுது... புளிப்பு மாங்காய் இருந்தாலும் அது உடம்புக்கு நல்லதாகி விடுது...

இப்படி எத்தனை மாசத்துக்கு இருக்கும்?...

கர்ப்பப் பையில கரு தங்கினதும் சரியாகிடும்.. அதுக்கு அப்புறம் 
மூனு மாசத்துக்கு மேலயும் தலை சுற்றல் வாந்தி இருந்தா டாக்டரைப் பார்க்க வேண்டியது தான்...

நீங்க மாங்காய் தின்னுருக்கீங்களா!..

மரத்தில ஒரு காய் விடாம பறிச்சுக் கொண்டாந்துட்டாங்களே உங்க அத்தான்!.. இப்படி மாங்காய் திங்கிறதுக்கு உண்மையான காரணம் என்னா..னு தெரியுமா!..

நான் என்னத்தைக் கண்டேன்.. அக்கா!.. நீங்களே சொல்லுங்க!..

இனிய இல்லறம் நன்மக்கட்பேறு.. இதுக்கெல்லாம் காரணம் அன்பான காதல்!... இந்த காதலுக்கு அதிபதி யாருன்னு தெரியுமா?..


ஓ.. தெரியுமே!.. ரதியும் மன்மதனும் தானே!..

அப்பா.. நல்ல அறிவான பொண்ணு... அந்த மன்மதன் கையில கரும்பு வில்லும் அஞ்சு மலர் அம்புகளும் இருக்குது.. ன்னு சொல்வாங்க!..

அந்த அஞ்சு அம்புகளுக்கும் பேர் சொல்லவா...
முல்லை, தாமரை, மா, கருங்குவளை, அசோகம் - அப்படின்னு பூக்கள்...

ராசாத்தி!... இந்த அஞ்சு பூக்கள்...ல - 
மாம் பூ தான் மனக் கிளர்ச்சியை உண்டு பண்ணுதாம்..

ஓ!...

அதனால தான் மன்மதனுக்கு ஆத்மார்த்த நன்றி சொல்றதா 
மாங்காய் மேல ஈர்ப்பு.. அப்படின்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...

இதெல்லாம் எங்க போயி அக்கா படிச்சீங்க!...

இதெல்லாத்தையும் பள்ளிக் கூடத்தில.. யா சொல்லித் தருவாங்க...
நாம தெரிஞ்சுக்கிடட்டும்....ன்னே அரசல் புரசலா
வீட்டுத் திண்ணையில பெரியவங்க பேசிக்கிட்டு இருப்பாங்க...

நாம வீட்டுக்குள்ள இருந்துகிட்டே காதுல வாங்கி 
மனசு..ல பதிய வெச்சிக்க வேண்டியது தான்!...

மாங்காய்... ல இவ்வளவு ரகசியம் இருக்கா...
நீங்க...ல்லாம் கொடுத்து வெச்சவங்க அக்கா!...

முக்கனிகள்...ல முதல் கனி மாம்பழம் தானே!..
இந்தப் பழத்தால தானே கயிலாயத்து..ல கலவரம் உண்டானது!..

ஆமா.. நானும் திருவிளையாடல் பார்த்திருக்கேன்...

ஈஸ்வரனுக்கு தயிர் சோற்றோட மாம்பழம் கொடுத்தவங்க யாரு..ன்னு
தெரியுமா?...

ஓ.. தெரியுமே!.. நம்ம காரைக்கால் அம்மையார்!..

சரி... ஈஸ்வரனுக்கு செந்நெல் சோறும் செங்கீரைக் கூட்டும்
உப்பிட்ட மா வடுவும் கொடுத்தவர் யாருன்னு தெரியுமா?...

தெரியாதே!... உப்பு போட்ட மா வடு யார் கொடுத்தாங்க.. அக்கா!..


அவர் பேர் தாயனார்.. திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்தில கணமங்கலம் ...ங்கற ஊர்க்காரர்... ஈசனுக்கு தினமும் நிவேத்தியம் கொண்டு போறப்ப ஒருநாள் வயல்...ல தடுக்கி விழுந்து சோற்றுப் பானை ஒடைஞ்சி போகுது..

அடப்பாவமே!...

கடவுளுக்கு கொண்டு போனது இப்படி ஆயிடிச்சே..ன்னு வருத்தப்பட்டு கழுத்தை அறுத்துக்கிறப்போ பூமியில இருந்து ஈசன் வெளிப்பட்டு மா வடுவை
விடேர்..விடேர்..ன்னு கடிச்சு சாப்பிட்டுட்டு..

தாயனே.. நீ கொண்டு வந்த சோற்றையும் கீரையையும் மா வடுவையும் நான் சந்தோஷமா சாப்பிட்டேன்.. நீ கழுத்தை அறுத்துக்காதே!..ன்னு - அருள் செஞ்சதா புராணம்..

இதனால அரிவாள் தாய நாயனார்.. அப்படின்னு சிறப்பு..
அறுபத்து மூன்று அடியார்கள்...ல இவரும் ஒருவர்...

ம்.... அப்போ பக்தியோட கொடுத்தால் கடவுள் வந்து சாப்பிடுவார்..ங்கிறீங்க!..
அக்கா.. மாங்காய்..ல என்னென்ன செய்யலாம்?...

உப்பு தடவி வைக்கிற அடை மாங்காய், வற்றல், ஊறுகாய், தொக்கு, 
மாங்காய் இனிப்பு பச்சடி, கார பச்சடி...

சாம்பார், கார குழம்பு, வற்றல் குழம்பு 
இதுல எல்லாம் மாங்காய் போடறதே தனிச்சுவை...

வண்டு துளைக்காத மாங்கொட்டைய உடைச்சி 
உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து தக்காளியோட சேர்த்து
மாங்கொட்டை ரசம் வைக்கலாம்...

அந்தத் துவர்ப்பு உடம்புக்கு ரொம்பவும் நல்லது... ஆனா - 
மாம்பிஞ்சில இருக்குற பால் உதட்டுல பட்டால் புண்ணாகி விடும்.. 

அப்புறம் மாம்பழ லஸ்ஸி, மில்க் ஷேக்!.. 

சரி.. அவ்வளவு தானா மாவடு புராணம்!..

இருக்குதே.. இன்னும் இருக்குதே!..
அம்பாளுக்கே வடு வகிர் கண்ணி..ன்னு திருப்பேர்..
மீன் மாதிரி கண்.. அதனால மீனாட்சி... அவ இருக்கிறது மதுரையில...

இங்கே அம்பிகைக்கு மாவடு மாதிரி கண்களாம்!..
மாவடுவுக்கு அவ்வளவு பெருமை...

எந்த ஊர்ல அக்கா... இப்படியான பேர்?...

மேலப் பெரும்பள்ளம் .. பூம்புகார் போற வழியில் இருக்கு..
தேவாரப் பதிகம் பெற்ற கோயில்.. திருவலம்புரம்..ன்னு தொன்மைப் பேர்...



ஜாக்கெட்..ல மாவடு எம்பிராய்டரி எல்லாருக்கும் பிடிக்கும் தானே...
மாம்பழ நிறச் சேலை கட்டுனா பொண்ணுங்களுக்கே தனியழகு...  

பட்டு ஜரிகை..ல கூட மாங்காய் டிசைன்... 
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!..



அதுமட்டுமா!.. எனக்கு ரொம்பப் பிடிச்சது மாங்காய் மாலை...நெக்லஸ் தான்!..
பத்தாவது படிக்கிறப்போ மூனரை பவுன்...ல போட்டிருந்தேன்...
மாம்பிஞ்சு மாதிரி தொங்கலும் இருந்துச்சு..

அக்கா... ஆச்சர்யமா இருக்கு!..
மாவடு மாங்காய்... க்கும் பெண்களுக்கும் இவ்வளவு தூரம் ராசியா!..

இன்னொன்னும் கேளும்மா!...
மாம்பழக் கன்னத்தை வர்ணிக்காதவங்க யாரு!..
மாம்பழக் கன்னத்தை பிடிக்காதவங்க யாரு!..

ஆமா.. இந்தப் பாட்டுக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லை... 
எதையாவது ஆபாசமா எழுதி...

அதை விடு... பராசக்தி படத்தில 
கண்ணே கண்மணியே.. கண்ணுறங்காயோ... - ங்கிற பாட்டுல

உந்தன் மாம்பழக் கன்னத்திலே
முத்தமாரி பொழிந்திட வருவார்..

- அப்படின்னு தாலாட்டு வரும்... நல்ல இனிமையா இருக்கும்!..

கவியரசரும் 
மாவடுக் கண்ணல்லவோ.. 
மைனாவின் மொழியல்லவோ!.. - ன்னு பாடுவார்..

மாந்தோப்புக் கிளிகள்
நாணத்தைப் பற்றிச் சொல்றப்போ,
செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி!.. - என்பார்..

இன்னொரு பாட்டில்,
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்..
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்!.. - அப்படின்னு வரும்...

மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்..
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலைத் தோரணங்கள்...

இது வாலி எழுதுன பாட்டு...

மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ.. - ந்னு ஒரு பாட்டு..
மாஞ்சோலைக் கிளி தானோ.. மான் தானோ.. - ந்னு ஒரு பாட்டு..
மாம்பூவே.. சிறு மைனாவே.. - ந்னு ஒரு பாட்டு..

மாம்பழம் மட்டுமா....
மாம்பழத்து வண்டு கூட பாட்டுக்குள்ள வந்திருக்கு...

சரி.. அக்கா நான் கிளம்பறேன்!...

இரு.. தாமரை.. நேத்து நெல்லை அவங்க சொன்ன பக்குவத்துல 
மாங்கா ஊறுகாய் செஞ்சேன்.. நீ கொஞ்சம் எடுத்துக்க...

அவ்வளவு சீக்கிரம் செஞ்சிட்டீங்களா!..

மாங்கா ஊறுகாய் செய்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்!..
அது சரி.. நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...

என்ன கேக்கிறீங்க... ஒன்னும் புரியலையே...


உன்னோட டார்லிங் எப்போ துபாய்...ல இருந்து வர்றார்?...
நீ எப்போ மாங்காய் திங்கப் போகிறாய்!...
நீ எப்போ தாலாட்டு பாடப் போகிறாய்!...

அவங்க பங்குனிப் பொங்கலுக்கு வர்றாங்களாம்!..

ஓகோ... மாங்காய்க்கு இப்பவே சொல்லிட வேண்டியது தான்!...
முத்தத்துல மணித்தொட்டில் கட்டிட வேண்டியது தான்!...

போங்க அக்கா.. எனக்கு வெக்கமா இருக்கு!...

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள் தாமரை...
*
வாழ்க நலமுடன்..
வளர்க வளமுடன்.. 
***

திங்கள், ஜனவரி 22, 2018

மா... - 1

மா..

அம்மா!..

மா!.. - எனும் ஓரெழுத்துக்குள் சிறப்புகள் பல பொருந்தியிருந்தாலும்
அம்மா - என்ற அழைப்பு இருப்பது ஒன்றே பெருஞ்சிறப்பு..

இன்று விடியற்காலையில் - எங்கள் பிளாக்கில் வெளியான மாங்காய் ஊறுகாய் பற்றிய பதிவினைக் கண்டதும் -



இதைப் பற்றி சிந்திக்காமல் இருந்து விட்டோமே!.. என்று தோன்றியது...

அந்த நேரத்தில் தான் வந்து சேர்ந்தான் அவன்....

வாத்யாரே.. என்ன யோசனை..ல இருக்கீங்க?...

வா.. சின்னமணி... உட்கார்.. இந்த இலக்கியத்துல...

சரி.. நா.. அப்புறமா வர்றேன்.. வேலையிருக்கு...

அட.. உக்காருப்பா.. கொஞ்ச நேரம்!...

அரை குறை மனதுடன் அவன் உட்கார்ந்த போது

என்ன அக்கா!.. தம்பிக்குப் பொண்ணு பார்க்கப் போனீங்களே.. 
பொண்ணு எப்படி.. சிவப்பா லெச்சணமா இருக்காளா?...

அதையேன் கேக்கிறே செங்கமலம்!.. பொண்ணு மா நிறந்தான்!.. 
ஆனாலும், இந்தப் பய மயங்கி விழுந்துட்டான்!..
பேசி முடி... சீக்கிரம்..ங்கறான்னா... பாரேன்!...

சாலையில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு போனார்கள்....

என்ன வாத்யாரே.. மா நிறத்துக்கு மயங்கிட்டான்.. மாங்கா மடையன்!...

அடே.. சின்னமணி.. மாநிறம்..ன்னா பொசுக்கு..ன்னு நெனைச்சிடாதே!..
இலக்கியத்து... ல மாநிறத்தைப் பத்தி நெறைய சொல்லியிருக்காங்க....

என்னா...ன்னு!.. 



மா நிறந்தான் அவள்!.... ஆனால் -
அவளுடைய பற்கள் முத்துக்களைப் போல....
அவள் மேனி நறுமணம் வீசுகின்ற பூவைப் போல....
மை பூசிய கண்கள் கூரிய வேலினைப் போல....
இத்தனையும் போதாதென்று -
தோள்கள் இரண்டும் மூங்கிலைப் போல இருக்கின்றனவே!...

அதெல்லாம் இருக்கட்டும்.. மூங்கி மாதிரி தோள்..ன்னா முள்ளு குத்துமே!..

அட... உங்கிட்ட சொல்ல வந்தேன் பாரு!..
மூங்கில் மாதிரி தோள்..ன்னா.. அழகா!...

உறுதியா.. குடும்ப பாரம் தாங்கற மாதிரி...ன்னு சொல்லுங்க வாத்யாரே!..

சின்னமணி ... இப்பதான் உன் தலைக்குள்ள விளக்கு எரியுது!...

இப்படி எல்லாம் சொல்லிட்டுப் போனது  யாரு?..

நம்ம திருவள்ளுவர் தான்!..

அவரா.. பார்க்கிறதுக்கு குடுமி தாடி எல்லாம் வெச்சுக்கிட்டு 
சாமியார் மாதிரி இருக்கார்... அவரா இப்படி சொன்னார்?...

நீ என்ன இந்த காலத்து பரட்டை....ங்க மாதிரி நெனைச்சியா!..
இவங்க...ல்லாம் அந்த காலத்துல நல்லதே சொன்னவங்க.. செஞ்சவங்க!...

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு... (1113)

அப்படி..ன்னு சொல்றார்....

சரி.. இந்தப் பாட்டுல முதல் வார்த்தையா -
முறிமேனி - ன்னு சொல்லியிருக்காரே..
முறிமேனி....ன்னா புருசனோட இடுப்பை முறிக்கிற மேனியா!...

புருசனோட எலும்பை முறிக்கிறதெல்லாம் அப்புறம்!.. 
முதல்..ல முறிமேனி..ன்னா தளிர் மேனி..ன்னு அர்த்தம்..

அப்படியா!.. சரி... தளிர்மேனி.. ன்னா அரசந்தளிரா... ஆலந்தளிரா?...

தளிர்...ன்னா.. மாந்தளிர் தான்!...
இந்த மாந்தளிர் மேனி...ங்கறது தான் மா நிறம்... 

ஓகோ... திருவள்ளுவர் காலத்திலயே மா நிறத்தைப் பார்த்து 
மயக்கம் போட்டிருக்கானுங்களா... அப்போ இந்தப் பையன் மயங்கி விழுந்ததுலயும் தப்பில்லே...

வள்ளுவர் மட்டுமில்லே.. இளங்கோவடிகள் கூட ....

யாரு.. இந்தக் கண்ணகி பாட்டு எழுதுனாரே அவரா!...

அவரே தான்!..

என்ன வாத்யாரே.. சாமியாராப் போனவங்களுக்கெல்லாம் 
இப்படித்தான் தோனுமா?...

சின்னமணி.. இதெல்லாம் இலக்கியம்....ப்பா!...
இதையெல்லாம் படிச்சுட்டு யாரும் கெட்டுப் போனதில்லை..
விமர்சனம் பண்றேன்....ன்னு தான் முகத்துல கரி...யப் பூசிக்கிறது!..

சரி.. அவரு என்ன சொல்லியிருக்காரு!..

வேந்துறு சிறப்பின் விழுச் சீரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை.. 

- அப்படீ..ன்னு சொல்றார்....

அட.. இந்தக் கோவலனும் மாநிறத்துக்கு மயக்கம் போட்டவன் தானா!..

இப்படியான அழகான மா நிறத்தைத் தான் -
மாந்தளிர் மேனி... ந்னு இலக்கியத்தில சொல்றாங்க!...
அந்த சிறப்பெல்லாம் மா மரத்துக்குத் தானே!..

சரிங்க வாத்யாரே.. அவ்வளவு பெருமையா இந்த மாமரத்துக்கு?...

பின்னே... இல்லையா!..
தென்னை, பனை, மூங்கில், வாழை - இதுங்களைப் போல
முற்று முழுதாக மக்களுக்குப் பயன்படுவது - மாமரம்...

முதல்ல தளிரை எடுத்துக்குவோமே...


தளிரு..ல என்ன இருக்கு?...

தளிரை எடுத்து நல்லா காய வெச்சி பொடியாக்கி பல்லு தேச்சா அவ்வளவு நல்லது... பல்லு கறையெல்லாம் காணாப் போய்டும்...

சொல்லவேயில்லையே!...

இன்னுங் கேளு.. மாந்தளிரைப் பறிச்சு ரெண்டு குவளை தண்ணியில கொதிக்க வெச்சி வடிகட்டி வெதுவெதுப்பா குடிச்சா வயித்துல உள்ள கிருமி எல்லாம் ஒழிஞ்சிடும்.. ரத்தத்துல சர்க்கரையும் கட்டுப்படும்!...

அடடே!...

நல்ல நாள் பெரிய நாள்..ன்னா மாவிலை..ல தோரணம் கட்டுறாங்க தானே!..

ஆமா... எல்லாம் பார்க்க அழகா இருக்கும்!..


அழகுக்கு மட்டும் இல்லே... வேப்ப இலை மாதிரி மா இலையும் கிருமி நாசினி.. நம்ம கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிச்சிடும்... அதனால தான் மாந்தோப்புக்குள்ள அந்தக் காலத்தில வீடு கட்டுனாங்க...

ஓகோ!...

செம்புக்குள்ள தண்ணிய நிரப்பி அதில நாலு மா இலையப் போட்டு ராத்திரி பூரா வெச்சிருந்து காலையில வீட்டுல தெளிச்சா ரொம்ப நல்லது..

வாத்யாரே.. கோயில்..ல ஐயருங்க மாவிலையால தண்ணி தெளிக்கிறாங்களே.. அந்த மாதிரியா....

ஆமா... சும்மா இருந்தா தண்ணி..
அதுல துளசி, மா இலை இதெல்லாம் போட்டு வெச்சா தீர்த்தம்!...

அடேங்கப்பா!.. இவ்வளவு இருக்கா!..

மாம்பட்டை, கருவப்பட்டை ஆலம்பட்டை எல்லாத்தையும் காய வெச்சி இடிச்சி தூளாக்கி சலிச்சி பல்லு விளக்குனா சொல்லு ஒன்னொன்னும் கணீர்.. கணீர்.. ந்னு இருக்கும்...

மாந்தளிர், மா இலை, மரப்பட்டை எல்லாம் சொல்லிட்டீங்க!..

இதோ.. இன்னொரு சேதி இருக்கு... காஞ்சு போன மாம்பூவை சேகரம் பண்ணிக்கிட்டு மழைக் காலத்தில தணல்...ல்ல சாம்பிராணி மாதிரி தூபம் போட்டா கொசுவெல்லாம் தொலைஞ்சு போகும்....

மாம்பூ ரசம் வயிற்றுப் போக்கை நிறுத்தும்... மாம்பூவை கொதிக்க வச்ச தண்ணியில வாய் கொப்பளிச்சா பல்லு வலி வாய் நாற்றம் போகும்...

வாத்யாரே.. இவ்வளவு சொல்றீங்க... எனக்கு எதுவும் தெரியாதே!..

இதெல்லாம் பெரியவங்க சொன்னது... எளிமையான கை வைத்தியம்...

ம்.. அப்புறம்!...

நெல்லு கொட்டி வைக்கிற பத்தாயம் செய்றது மாம்பலகையில தான்.. ஏன்னா மாம்பலகை மங்கலகரமானது..ன்னு ஐதீகம்..

அதோட நாற்காலி கட்டில் எல்லாம் பெரும்பாலும் மாம்பலகையில தான் செய்வாங்க... காரணம் - உடம்புக்குக் குளிர்ச்சியோட மன அமைதியத் தர்றது மாம்பலகை....

பூஜையறை பலகை கூட மாம்பலகையில செய்றது நல்லது...

நம்ம நாட்டுக்கே உரியது மா மரம்...
வெள்ளைக்காரனுக்கு மா மரத்தைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது..
அவனோட ஆங்கிலத்துல மா மரத்துக்குப் பேரே கிடையாது..
அதனால தான் மாங்காய்.. ங்கிறதை மேங்கோ..ன்னு ஏத்துக்கிட்டான்..


அப்படியா!..

அரபு நாட்டுல..யும் இப்படித்தான்..
அரபு மொழியிலயும் இதுக்குப் பேர் கிடையாது... 
அரபுக் காரனும் மாங்கா..ன்னு தமிழை அப்படியே ஏத்துக்கிட்டான்...
அரபுக் காரனுங்க மாம்பழத்துக்கு அடிமை.. ந்னா பார்த்துக்கோ!...

இவ்வளவு சொல்றீங்களே.. மா வடுவப் பத்தி சொன்னீங்களா?..
மாங்காய், மாம்பழத்தைப் பத்தி சொன்னீங்களா?..

அட.. சின்னமணி!.. இவ்வளவு சொன்ன நான்
அதுங்களப் பத்தியும் சொல்லாம இருப்பேனா!.. 
இப்போ போய் டெலிபோனுக்குப் பணம் கட்டணும்.. 

அப்போ மிச்ச விஷயம் எல்லாம்!...

நாளன்றைக்கு சொல்றேன்!..

அப்போ நானும் கிளம்பறேன்.. கடைக்குப் போவணும்..

என்ன வாங்கப் போறே!...


மா வடு தான்!.

ஊறுகாய் போடவா!..

இல்லே.. பொன்னுமணிக்கு!..

பொன்னுமணிக்கா!?..

ஆமா!.. பொன்னுமணி மாசமா இருக்குது..ல்லே!...
***


வாழ்க வளமுடன்!..   
***

சனி, ஜூன் 22, 2013

காரைக்காலம்மையார்

சமயக்குரவர்கள் நால்வருள் ஒருவர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

இவர் அருளிய திருப்பதிகங்கள் திருப்பாட்டு எனப்படுபவை.

திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

அவற்றுள்ளும் மிகச்சிறப்பானது திருத்தொண்டத் தொகை.

சிவபெருமானின் அன்புக்கு ஆட்பட்டு - அடியவர்களாக விளங்கியவர்களைப் போற்றும் திருப்பதிகம் - திருத்தொண்டத் தொகை.

இதனைப் பின்பற்றியே - பின்னாளில் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணம் எனும் நூலை இயற்றினார்.

பெரிய புராணம் காட்டும் நாயன்மார்கள் அறுபத்து மூவர்.

பெரும்பாலான சிவாலயங்களின் திருச்சுற்று மண்டபத்தில் அறுபத்து மூவர்
திருமேனிகளைத் தரிசிக்கலாம்.

அறுபத்து மூவரின் திருமேனிகளுள் - ஒருவரின் திருமேனி தவிர - மற்றவர் தம் திருமேனிகள் நின்ற திருக்கோலத்திலேயே திகழ்வன..

அந்த ஒருவர் - மங்கை நல்லாளாகிய புனிதவதி!..

காரைக்கால் அம்மையார் என்று புகழப்பட்டவர்.

ஆனாலும் அவர் - தம்மை காரைக்கால் பேய்!.. என்றே கூறிக் கொள்கின்றார்.

ஏன்!..

இயற்கையின் பல்வேறு கோலங்களில் விரவிக் கிடக்கும் அழகு தானே  மனதிற்கு சந்தோஷத்தினை அளிக்கின்றது!...  

அத்தகைய அழகு -  பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் பரி பூரண ஆனந்த அழகு - 

பெண்மையில் குடி கொள்ளும் போது  - திருமகள் எனப் பெயர் கொள்கின்றது.

திருமகளைப் போலப் பேரழகு வாய்க்கப் பெற்ற ஒரு பெண் தனக்கு இந்த அழகு வேண்டாம் !.. என்றால்,

அப்படியும் சொல்வார்களா!?... என்ன!...

சொல்லியிருக்கின்றார்களே!..

அப்படிச் சொன்னவர் தான் காரைக்கால் அம்மையார்!..

அதனால் தான் - எல்லாம் வல்ல எம்பெருமானாகிய சிவப்பரம்பொருள் - அம்மையே!.. - என்றழைத்தது!... 

அப்படி சிவபெருமானின் திருவாக்கினால் அம்மையே - என்று அழைக்கப் பட்டதனால் தானே - 


செயற்கரிய செய்த சிவனடியார்களாகிய - நாயன்மார் திருக்கூட்டத்துள் தான் மட்டும் அமர்ந்திருக்கும் தனிப்பெரும் பேற்றினைப் பெற்றார் - பின்னை நாட்களில்!..


''..தாயும் தந்தையும் இல்லாதவன்!..'' எனும் பெருமைக்குரிய ஈசனே - இவர் திருக்கரத்தினால் அமுதூட்டிக் கொள்ள விரும்பி வந்தார் எனில் - 

மெய்யாகவே புனிதத்துவம் நிறையப் பெற்றிருந்த - புனிதவதி அம்மையாரின் திருப்பாதங்களை நாம் - நம் தலையில் சூட்டிக் கொள்ள என்ன தவம் செய்தோமோ!.. 


சோழநாட்டின் கடற்கரை நகரங்களுள் ஒன்றாகிய காரைக்காலில் தனதத்தர் -  தர்மவதி எனும் தம்பதியருக்கு - அவர் செய்த அருந்தவத்தின் நற்பயனாக திருமடந்தை என அவதரித்தவர் புனிதவதி.

தனதத்தர் - காரைக்காலில் பெருவணிகர்.
சிறப்புடன் வணிகம் செய்த சிவபக்தர்.

நற்கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் பயின்று வளர்ந்தார் புனிதவதி.

காலங்கள் மாறிட - திருமணப் பருவம் எய்திய புனிதவதிக்கு-

நாகப்பட்டினத்தில் வணிகம் செய்து வந்த நிதிபதி எனும் வணிகரின் மகனாகிய பரமதத்தனுக்கு, சீரும் சிறப்புடனும் மணமுடித்து வைத்தனர்.  

திருமணத்திற்குப் பின் - தம் கண்ணுக்குக் கண்ணாகிய அருமை மகளைப் பிரிய மனமில்லாத - தனதத்தர்,

''..இங்கேயே - காரைக்காலில் எம் மகளுடன், தாம்  தனி மனையில் தங்கி இல்லறம் எனும் நல்லறத்தினை நாடாத்துங்கள்!...'' - என்று,  தன் அன்பு மருகனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார்.

பரமதத்தனும் அதற்கிணங்கி- தன் வணிகத்தினை காரைக்காலிலும் விரிவு செய்து கொண்டு அன்பு மனையாளுடன் இனிதிருந்தான்.

புனிதவதியும் பரமதத்தனும் - இல்லறமாகிய நல்லறத்தில் மகிழ்ந்திருந்தனர்.

ஒருநாள் மதியத்திற்குச் சற்று முன்பாக - தனது வேலையாள் மூலமாக இரண்டு மாங்கனிகளை அனுப்பி வைத்தான் பரமதத்தன்.

அந்த வேளையில் -  

எல்லாம் வல்ல சிவம், உலகோர் உணரும்படி - ஒரு திருவிளையாடலை நிகழ்த்துதற்கு - சித்தம் கொண்டு, 

பாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம்  - வயோதிக அடியாராக தானும் ஒரு பாத்திரம் ஏற்று - ஆடுகளமாகிய - பரமதத்தனின் வீடு தேடி வந்து நின்றது.

''சிவாய திருச்சிற்றம்பலம்!..'' - 

தேனாகப் பாய்ந்த குரல் கேட்டு வாசல் வந்த புனிதவதி - அடியாரைக் கண்டு அகமகிழ்ந்து - பாதமலர்களைப் பணிந்து அமுது உண்ண அழைத்தார்.

குணக் குன்றாகிய புனிதவதியாரின் அழைப்பினை ஏற்று இல்லம் நுழைந்தார் அடியவராய் வந்திருக்கும் அருட்கடல்.

அடியார் தம் பாதங்கழுவி வணங்கி - மிகுந்த மரியாதையுடன் அவருக்கு ஆசனம் அளித்து தலைவாழையிலையில் அமுதளித்ததோடு,

சற்று முன் தன் கணவன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பியிருந்த மாங்கனிகள் இரண்டனுள் ஒன்றினை பக்குவமாக அரிந்து அடியார் தம் இலையில் இட்டார்.

மாங்கனியை அடியவர் விருப்புடன் உண்ணுவதைக் கண்டு மகிழ்ந்தார்.

வயிறார உணவருந்திய அடியார் மனமார வாழ்த்தி திருநீறு வழங்கிச் சென்றார். அது நிகழ்ந்த பின்  - சிறு பொழுதில் -

மதிய உணவருந்த வீடு திரும்பினான் - பரமதத்தன்.

கணவனை வரவேற்ற புனிதவதி,  களைப்பு தீர உபசரித்து அன்புடன் உணவு பரிமாறினார். கணவன் கொடுத்தனுப்பிய  மாங்கனியை  அரிந்து இலையில் இட்டார்.

ஆவலுடன் அதனை உண்ட பரமதத்தன் - மிகவும் சுவையாக இருக்கின்றதே!..   இன்னொன்றையும் கொடு!..'' - எனக் கேட்டான். 

அதிர்ச்சியடைந்த புனிதவதி - உள்ளே ஓடிச் சென்று,  சிக்கலான சூழ்நிலை சீராக வேண்டி - கயிலாய நாதனிடம் கையேந்தி நின்றார். 

ஏந்திய கரங்களில் திருவருட் துணையால் ஒரு மாங்கனி கிடைத்தது. 

ஈசனின் பேருதவியை வியந்த வண்ணம் - அதனை கணவனுக்கு அளித்தார்.

அதனை உண்ட பரமதத்தன் - வியப்பின் எல்லைக்குச் சென்றான். காரணம் - முன்பு எப்போதும் உண்டறியாத சுவையுடன்  இருந்தது அந்தக்கனி..

தான் பெற்ற அனுபவத்தை வியந்து  - தன் மனதில் உண்டான சந்தேகத்தையும் கூறினான். இதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாத புனிதவதி நடந்தவற்றினை விளக்கினார்.

அதிர்ச்சியடைந்த பரமதத்தன் - ''..அங்ஙனமாயின்  வேறு ஒரு மாங்கனியைப் பெற்று என் கண் முன்னே காட்டுக!..'' - என்றான். 

அன்னையும் அவ்வண்ணமே - ஐயனைச் சரணடைந்து கையேந்தி நின்றார்.


ஏந்திய கரங்களில் ஈசன் மீண்டும் ஒரு மாங்கனியினை அருளினான்.

அன்னை அதனை அன்புடன்  - கணவனின் கையில் கொடுத்தார். பரமதத்தன் தன் கையினில் வாங்கினான். விழிகள் வியப்பால் விரிய  - விந்தையினும் விந்தையாக  - மாங்கனியைக் கண்டான்.

கண்ட மாத்திரத்தில் மாங்கனி மறைந்து விட்டது. 

அதிர்ந்தான். அஞ்சினான். அடுத்துப் பேச மொழியின்றி அடங்கினான்.

அப்போதைக்கு அந்த அருஞ்செயலை வியந்தாலும் - தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!.. என, தனக்குள் தானாக முடிவு செய்து -  

சில நாட்கள் கழித்த நிலையில் வணிகத்தின் பொருட்டி வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து வேண்டிய பொருளுடன் மதுரையம்பதியை சென்றடைந்தான்.

நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என.

வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயமே! - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.

அங்கும் இங்கும் சென்று வணிகம் செய்வோரால் அறியப்பட்டது - பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தி!...

அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உற்றாரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே சென்றனர்.  ஊர் எல்லையில் இருந்து கொண்டு தகவல் அனுப்பினர். 

ஓடோடி வந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் தன் மகளுடனும்  ''..தம்முடைய  கருணையால் நலமுடன் வாழ்கின்றேன். என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...'' எனக் கூறியபடி புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

இதனைக் கண்ட அத்தனை பேரும் நடுநடுங்கிப் போயினர்.

மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....

அவர்களின் மனம் தெளியும்படி,  அன்று நடந்த அதிசயத்தை விவரித்தான். இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.


புனிதவதியார் - கணவனின் செயல் கண்டு மிகுந்த வேதனையடைந்தார்.

மனம் கலங்கிய அவர் - தன் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் தனக்கு எதற்கு?.. ''அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக'' - என தன் பேரழகை தானாகவே நீத்தார்.

எவரும் விரும்பாத - எலும்பும் தோலுமான பேயுருவினை ஈசனை வேண்டிப் பெற்றார்.

''..காண்பதெல்லாம் என்ன!..'' - என வியந்து நின்றனர் அனைவரும்.

எல்லாவற்றையும் துறந்து விலகிய அம்மையார் - நாளும் பொழுதும் சிவ வழிபாட்டில் மனம் ஒன்றி இருந்தார்.

திருவருள் கூடிய நிலையில் திருக்கயிலாய தரிசனம் பெற வேண்டி நடந்தார்.

காலங்கள் சென்றன . திருக்கயிலாய மாமலையினை நெருங்கிய வேளையில் திருமலையினில் கால் பதிக்க அஞ்சிய அம்மையார் தலையை வைத்து கைகளால் ஊர்ந்து சென்றார்.

ஐயனின் உடனிருந்து அனைத்தையும் நடத்தும் பாகம் பிரியாதவளாகிய பராசக்தி ஏதும் அறியாதவளைப் போல வியந்து  இறைவனை நோக்கி,

''..பெருமானே தலையினால் நம்மை நோக்கி ஊர்ந்துவரும் இவர் யார்?..'' என வினவினாள்.

சிவபெருமானும்,  ''..அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்!..''  எனக் கூறி,

''..அம்மையே... வருக!..'' என இன்முகத்துடன் செந்தமிழ் கொண்டு புனிதவதியாரை அழைத்தருளினார். 

''..அப்பா!..'' என்றபடி  இறைவனையும் இறைவியையும் தொழுது அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினார் புனிதவதியார்.

இறைவன் அவரை நோக்கி, ''..நீ நம்மிடம் வேண்டுவது என்ன?...'' எனக் கேட்க
,

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார். (60)


வழித்துணை: 
சேக்கிழார் அருளிய (காரைக்காலம்மையார் புராணம்) பெரிய புராணம்.  

அவ்வண்ணமே நல்கிய பெருமான்,  ''..ரத்ன சபை எனும் திருஆலங்காட்டில் யாம் அருளும் திருக்கூத்தினைக் கண்டு  இன்புறுக!..'' என அருளினார். 


அவ்வாறு ஐயனின் ஆடலைக் கண்டு களிக்கும்போது, திரு ஆலங்காட்டு திருஅந்தாதி, மூத்த திருப்பதிகம், திருஇரட்டைமணிமாலை என சொல்மாலை சூட்டி இன்புற்ற புனிதவதியார் - 

ஐயனின் திருவடித் தாமரையின் கீழ் சிவநிலையினைப் பெற்றார்.  

அம்மையாரின் புகழைப் போற்றும் வண்ணமாக - காரைக்காலில் மாங்கனித் திருவிழா நேற்று (ஜுன் 21)  மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியுள்ளது.

இன்று ஜுன் 22 புனிதவதியார் - பரமதத்தன் திருக்கல்யாணம் நிகழ்கின்றது.

நாளை (ஜுன் 23) இரவு பிக்ஷாடனர் திருவீதியுலாவும், பின் அடுத்தடுத்த எல்லா நிகழ்வுகளுடன் ஜுன் 23 பின்னிரவில் (ஜூன் 24 அதிகாலை) புனிதவதியார் பேயுரு வேண்டிப் பெற்று கயிலாயம் செல்லும் வைபவம் சிறப்புடன் நிகழும்.

அம்மையார் நமக்குக் காட்டிய வழியாக - 

இறைவா!... உன்னை என்றும் மறவாதிருக்க வரம் தருக!.. 
என வேண்டித் தொழுவோம்!.. 

மற்ற அனைத்தையும் ஐயன் அவன் பார்த்துக் கொள்வான்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *