நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 5
புதன்கிழமை
இலட்சக் கணக்கான மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடத் தூண்டிய போராட்டம் ஒன்று உண்டெனில் அது தான் உப்பு சத்தியாகிரகம்..
காலகாலமாக இயற்கை அன்னையின் மடியில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்குப் பேரிடியாக இறங்கியது தான் வெள்ளையர் அரசு விதித்த உப்பு வரி..
1930 ஜனவரி 30 அன்று அன்றைய காங்கிரஸ் அறிவித்த முழு விடுதலை என்ற பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை உப்பு சத்தியாகிரகம்..
அறவழியில் போராடிய நூற்றுக்கணக்கான மக்களை காவலர்கள் கண்மூடித் தனமாக அடித்து நொறுக்கி சிறைப்படுத்தி அரசாங்கத்தை எதிர்த்தால் இது தான் கதி என்று மற்றவர்கள் அச்சம் கொள்ளும்படிச் செய்தது இப்போது தான்..
ஆங்கிலேய அரசின்
இந்த நடவடிக்கையே இந்திய சுதந்திர வேள்விக்கான தீயை மூட்டியது..
1882 ல் ஆங்கிலேயர் இயற்றிய உப்புச் சட்டம் இந்தியாவில் உப்பு உற்பத்திக்கும் உப்பு சேகரிப்பிற்கும்
ஒட்டுமொத்த உரிமையை அவர்களுக்கே கொடுத்தது..
இதன்படி,
1882 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசாங்கமே உப்பைத் தயாரித்து விற்க ஆரம்பித்தது. தனிநபர்கள் உப்பினை விற்கக்கூடாது, உப்பினை அரசாங்கத்திடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன..
பற்பல நிலைகளில் ஆலோசித்த பின் துளியளவும் வன்முறை கூடாது என்ற கடும் நிபந்தனையுடன் - 1930
மார்ச் 12 ல் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காலை 6:30 மணியளவில் தண்டி கடற்கரையை நோக்கி பாத யாத்திரையை காந்திஜி தொடங்கினார்.. உடனிருந்தவர்கள் 72 தொண்டர்கள் மட்டுமே..
தண்டியைச் சென்றடைந்த போது ஒரு லடசம் பேருக்கு மேல் காந்திஜியுடன் அணிவகுத்திருந்தனர்..
கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தது இந்தத் தருணத்தில் தான்..
1930 ஏப்ரல் 5, மாலை ஐந்து மணியளவில் தண்டி கடற்கரையின் உப்பளத்தில் இருந்து கையளவு உப்பினை அள்ளிக் காட்டினார் காந்திஜி..
(ஏப்ரல் 6 அதிகாலை என்றும் சில தரவுகள்)
1930 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 90, 000 பேர்.. அரசின் தாக்குதலால்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.
அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி - சத்தியாகிரகம் நடத்தியதன் விளைவாக 1930 மே 5 அன்று காந்திஜி சிறை பிடிக்கப்பட்டார்..
ஆங்கில அரசின் பிரதிநிதி
இர்வின் பிரபு காந்திஜியை விடுவித்ததுடன் உப்பு வரியையும் நீக்குவதற்கு ஒப்புக் கொள்ள -
1931 ஜனவரி 26 அன்று உப்புச் சத்தியாகிரகம் முடித்துக் கொள்ளப்பட்டது.
காந்திஜி நடத்திய உப்பு சத்தியாக்கிரகம் அவரையும் இந்தியாவின் பிரச்னை களையும் உலக அளவில் கொண்டு சென்றது.. பின்னாளில் தென் ஆப்பிரிக்காவின் மார்டின் லூதர் கிங் சத்தியாக்கிரக தத்துவத்தினையே மேற்கொண்டார்..
காந்திஜியின் உப்பு சத்தியாக்கிரகத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தில் வேதாரண்யம் அகஸ்தியம் பள்ளியில் உப்பு எடுக்கின்ற அறப்பணியில் மக்கள் ஈடுபட்டனர்..
1930 ஏப்ரல் 13 அன்று
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது..
திருச்சிராப்பள்ளியில் இருந்து கல்லணை திருக்காட்டுப்பள்ளி திருவையாறு தஞ்சாவூர் நீடாமங்கலம் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யத்திற்கு வந்து உப்பெடுத்து சிறைப்பட்டனர்..
இப்போராட்டத்திற்குத் தலைமை வகித்தவர் ஸ்ரீமான் ராஜாஜி அவர்கள்.. வேதாரண்யத்தில் முன்னெடுத்து நடத்தியவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை..
இதனால் ஆறு மாத சிறை வாசம் சத்தியாக்கிரகிகளுக்கு ..
ராஜாஜி அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது..
இந்த இடத்திற்கு எளியேன் சென்றிருக்கின்றேன்..
கல்லணையைக் கடந்து வந்து கொண்டிருந்த உப்பு சத்தியாக்கிரகத் தொண்டர்களுக்கு நீரோ உணவோ வழங்கக் கூடாது என்று அப்போதைய தஞ்சை ஆங்கிலேய நிர்வாகத்தின் கடுமையான உத்தரவு...
அப்படி இருந்தும் இரவோடு இரவாக பழங்களையும் கட்டு சாத வகைகளையும் கூடைகளில் வைத்து மரக்கிளைகளில் கட்டித் தொங்க விட்டிருக்கின்றனர் இப்பகுதி மக்கள்..
தஞ்சையில் சத்தியாக்கிரகத் தொண்டர்களுக்கு உணவு அளித்த வீட்டின் வாசலில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகின்றது..
உப்பைப் பற்றி பதிவு எழுதியதும் உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றியும் எழுதியிருக்கலாம் என்பது அன்பின் ஸ்ரீராம் அவர்கள் கருத்து..
உப்பு பற்றிய பதிவின் போதே இதைத் திட்டமிட்டு இருந்தேன்.. நடைமுறை சிக்கல்கள் சிலவற்றால் தாமதம் ஆகி விட்டது... மன்னிக்கவும்..
வாழ்க பாரதம்...
ஃ
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***





