நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 22, 2026

தமிழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
சனிக்கிழமை


தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...

தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில்  இல்லை.  

அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற 
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக்  கொடுத்தது தமிழ் மொழியே..

அமுதே தமிழே 
அழகிய மொழியே
எனதுயிரே!..
***

ஞாயிறு, மே 03, 2026

தமிழ்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 ஞாயிற்றுக்கிழமை

தமிழ் வாழ்கின்ற விதம்

(தமிழ்ப் புத்தாண்டு)


( ஒப்பிலியப்பன் கோயில் )


( கூர்ம வடிவில்)

இவற்றைப் போல் பற்பல..

தமிழே... தமிழே..
***

புதன், டிசம்பர் 11, 2024

முத்தம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 26
புதன்கிழமை

அன்றைய
எங்கள் பிளாக்  தளத்தில் 
களேபரம்.. 

உன்னை
முத்தமிட்டால்
உப்பு
கரிக்கிறதே..
உன்
டூத்பேஸ்ட்டில்
நிச்சயம்
உப்பு இருக்கிறது...

என்ற, ஸ்ரீராம் அவர்களது 
கவிதையைத் தொடர்ந்து -

அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்...
அதனால் தான்
அதில் உப்பின் சுவை...

- என்று எழுதியிருந்தேன்...

அதனைத் தொடர்ந்தே கீழுள்ள முத்தத்தின் சத்தம் எனும் கவிதை..

எப்படியோ கைக்குள் சிக்கியது.. மீண்டும் ரசித்து மகிழும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

பதிவின் நாள் - ஜூலை 13, 2018.
ஃஃ


முத்தத்தின்
சத்தம்

கத்தியில்லா யுத்தம் என்று
நித்தம் பாடுவார்..
சத்தமில்லா முத்தம் என்று
சத்தம் போடுவார்..

அடடா.. என்ன இது 
உளறல்!. - எனில் -
ஐயிரண்டு திங்களிலே
அன்பின் முத்தம்...
அருமலராய் கரந்தனிலே
ஆசை முத்தம்..

தொட்டிலிலே தூமலராய்
உயிரின் முத்தம்...
மட்டில்லா மகிழ்வுடனே
மகவின் முத்தம்...

பூவிதழாள் புன்னகைக்கப்
புதிதாய் முத்தம்...
முத்தம் இது முத்தம் என
நெஞ்சுக்குள் சத்தம்...

தாயவளின் காலடியில்
அன்பின் முத்தம்..
தந்தையவன் கையினிலே
அறிவின் முத்தம்...
தங்கையவள் நெற்றியிலே
பண்பின் முத்தம்...
தோழனவன் தோளினிலே
நட்பின் முத்தம்...

முகில் வடித்த முத்தம்
அது வளமை ஆனது..
முந்தி வந்து முளைத்த
விதை செழுமை ஆனது..
அதில் அடர்த்த முத்தம்
அது பசுமை ஆனது...
மூங்கில் தந்த முத்தம்
முதல் வாழ்க்கை ஆனது..


கத்துங் கடல் எறிந்ததையும் 
முத்தம் என்றார்...
கரி அதனின் கொம்புகளில்
முத்தம் கண்டார்...
செஞ்சாலிக் கதிர் எல்லாம்
முத்தம் என்றார்...
செந்நெறியின் தமிழதுவும்
முத்தம் என்றார்...

சித்தன் அவன் சிவன் மகனை
முத்தன் என்றார்...
முத்து முத்துக் குமரா 
நீ தரவேணும் 
முத்தம் என்றார்...

இளந் தமிழும் பாடியது
முத்தப் பருவம்...
இளைஞர் அவர் தேடுவதும்
பருவத்து முத்தம்...

கிழவருக்கும் 
முத்தம் எனில்
கொள்ளை 
இன்பம் தான்..

பிள்ளை வழிப் 
பிள்ளை எனில்
இன்பம்
கொள்ளை தான்!..

முத்தம் ஒன்று தந்ததாலே
பருவம் வந்ததா...
பருவம் வந்து நின்றதாலே
முத்தம் தந்ததா!..

கவியரசன்
மீண்டும் இங்கே
வரவேண்டும்..
கனித் தமிழில்
கருத்தொன்றைத்
தரவேண்டும்!..

கண்ணுக்குள் ஒரு முத்தம்
காதல் என்றது..
காதுக்குள் மறு முத்தம்
கவிதை என்றது..
கையினிலே ஒரு முத்தம்
கலைகள் என்றது..
உயிருக்குள் ஒரு முத்தம்
உலகம் ஆனது..

சேயிழையாள் முத்தம்
செவ்விதழாள் முத்தம்
மாறில்லாத முத்தம்..
நிகர்வேறில்லாத முத்தம்...


கடலேறிச் சென்றாலும்
காற்றேறி நின்றாலும்
கண்ணிமையில் நிற்கிறது
கன்னி மயில் முத்தம்...

கனியிதழில் நித்தம்
கற்கண்டாய் முத்தம்
இனிக்காதோ சித்தம்
இனியெதற்குச் சத்தம்!..

இன்னும் பல முத்தம்
இயம்பிடவே சித்தம்!...
ஆனாலும் வலைத் தளத்தில்
எழுந்திடுமே சத்தம்!..
ஃஃ

முருகா முருகா
முருகா முருக 
***

புதன், நவம்பர் 27, 2024

நினைவெல்லாம் 7

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 12
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க..

கல்லூரியின்
தமிழ் வகுப்புகள் தொடர்கின்றன..


அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் 
எங்காவது ஆ ஊ என்றால் இங்கே கல்லூரிக்கு விடுமுறை என்றாகி விடும்..

இந்நிலையில் கிடைக்கின்ற நாட்களில் நடத்தப்பட்ட வகுப்புகளில் மனதில் பதிந்தவை இன்றைய பதிவில்..

குற்றாலக் குறவஞ்சி காட்டுகின்ற அழகு


ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
     ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
     வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
     புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி
     திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே..

எங்கள் நாட்டில் ஓடிப் பாய்வது பூக்களைச் சுமந்து வரும் நீர் மட்டுமே.  யோகியர்களிள் மனம் அடங்கி இருக்க - 

மெலிந்திருப்பது பெண்களின் இடை மட்டுமே.. 

துன்பப்படுபவை முத்துகளை ஈனுகின்ற சிப்பி சங்குகள் மட்டுமே.

நிலத்தில் போடப்படுபவை விதைகள்.. ஒலி எழுப்புவன கிண்கிணியின்  மணிகள் ..  

ஒவ்வொருவரும் ஈட்ட  முயல்வது நல்லறம் புகழினை மட்டுமே.. 

எனவே, 
இப்படியான  குற்றாலத் திருநாட்டில் 
வாடுவோரும் இல்லை வருந்துவோரும் இல்லை -
எனப் பாடுகின்றாள்.

குற்றாலத் திருநாட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்பது இப்பாடலின் உட்குறிப்பு.

இப்பாடலின் வழிநடையாக - ஊட்டி வரை உறவு +
எனும் திரைப் படத்தில் - அங்கே மாலை மயக்கம் யாருக்காக -  என்ற பாடலில் கவியரசர் தனது கவித் திறனைக் காட்டியிருப்பார்..

அன்றைய  வகுப்புகளில் மனதில் பதிந்த -
திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்..


பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள் எஞ்சினீரே ..

போற்றப்படுகின்ற சிவபெருமானை வணங்கித் துதிக்கவும் இல்லை.. இரந்து நின்றவர்க்கு கொடுத்ததும் இல்லை.. குடத்தில் நீர் எடுத்து ஊற்றி  மரங்களை வளர்க்கவும் இல்லை.. 
வாழ்நாள் குறைவுடைய 
நீங்கள்,  எஞ்சிய நாட்களில் நரகத்தில் நின்றிருக்கப் போகின்றீர்களோ?..

என்று, ஊருக்கான சமூக பங்களிப்பை ஒவ்வொருவரிடமும் வினவுகின்றார் திருமூல நாயனார்..

உள்ளங்கை நெல்லிக்கனி எனப் பொருள் விளங்கக் கூடிய இன்னொரு இன்தமிழ்ப் பாடல் :


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி,
யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரை தானே.
-: திருமூலர் ;-
**
நினைவெல்லாம்
 தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க

ஓம்  சிவாய நம ஓம்
***

புதன், நவம்பர் 13, 2024

நினைவெல்லாம் 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 27
புதன்கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க..


பள்ளிக்கூடத்தின் நினைவெல்லாம் தொடர்கின்றன..

பொறுப்பைப் புரிந்து கொண்ட பதினொன்றாம் வகுப்பு..

பதினொன்றாம் வகுப்பில் பருகிய தமிழமுதினில் ஒரு துளியை இன்று சிந்திப்போம்..


இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
கம்பமா என்றேன் நற்களியாம் என்றாள்
பகடு என்றேன்
உழும் என்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே..
-: அந்தகக் கவி வீரராகவ முதலியார் :-
 
தலைநகருக்குச் சென்றிருந்த
பாணர் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார்..

சமையலுக்குள் முனைப்பாக  இருந்த அவள்  வாசலுக்கு வந்து பார்க்காமலேயே கேட்கின்றாள்..

அரசரைப் புகழ்ந்து பாடுதற்குச் சென்றிருந்தீர்களே..  என்ன பரிசு கிடைத்தது?..

களபம்!.. என்கிறார் பாணர்  பெருமிதத்துடன்... 

அதைக் கேட்ட அவரது மனைவிக்கு களபம் எனில் 
சந்தனம் எனப் புரிந்தது..

திங்கிற சோத்துக்கு வழியக் காணோம்.. இந்தக் கெரகத்துல  பூசிக்கிறதுக்கு சந்தனமா!.  என,  நொந்து கொண்டு,  நீங்களே பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள்..

தான் சொன்னதைத் தன் மனைவி தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்த பாணர் அவளுடன் மேலும் விளையாட  எண்ணியவராக
மாதங்கம்!.. என்கிறார்.

அவளோ, சந்தனக் கட்டைகளுடன் சிறப்புடைய பொற் காசுகளும் என நினைத்துக் கொண்டு, இனி நல்ல காலம் தான் நமக்கு என்கிறாள் மகிழ்ச்சியுடன்..

தொடர்ந்து, வேழம் கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.பாணர் 

மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, நல்லது கடித்துத் துப்புங்கள் என்கிறாள்

பாணர், புன்சிரிப்புடன், கம்பமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவள் இது என்ன வேடிக்கை.. எதற்காக கம்பு மாவு!?.. எனக் குழம்பியவளாக , இதையுமா கொடுத்தான் அரசன்?.. என, நினைத்துக் கொண்டாலும்
நல்ல களி செய்து களிக்கலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் இந்த விளையாட்டு சரி வராது என உணர்ந்த பாணர், கைமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்..

அப்போதுதான்   கணவன் யானையுடன் வந்திருக்கின்றான்  என்பது விளங்குகின்றது அவளுக்கு..

யானையின் தீனிக்கு என்ன செய்வது!?.. எனக்  கலங்கினாலும்  -  வெளியே ஓடி  வந்து - ஆனையின் மீது அமர்ந்திருக்கின்ற கணவனை ஆவலுடன் பார்க்கின்றாள்..

- என்று பாடல் நிறைவு செய்யப்படுகின்றது..

சமையலுக்குள் முனைப்பாக  இருந்த அவள்  வாசலுக்கு வந்து பார்க்காமல் கேள்வி கேட்டதே நல்லது.. 

இல்லையெனில் இப்படியான பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா!..

யானைக்குத் தமிழில் எத்தனைப் பெயர்கள் என்பதைப் பாருங்கள்.
**


இரட்டைப் புலவர்கள்..

ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் விளங்காது என்றும் அறியப்படுகின்றது.
கால் விளங்காதவரை பார்வையற்றவர் தோளில் சுமந்து கொள்ள
பார்வையற்றவருக்கு மற்றவர் வழி  கூறுவார்..

ஊர் ஊராக இவர்களது பயணம் தொடர்ந்திருக்கின்றது..

கவியின் முதல் இரு அடிகளை ஒருவரும் ஈற்றடிகளை மற்ற்வரும் பாடி முடிக்கின்ற வல்லமை பெற்றிருந்தனர்..

ஒருமுறை மதுரையில் குளிக்கும் போது துவைத்து அலசிய வேட்டி நழுவிச் செல்வதை கண்டு சொல்லிய முடவர் தம் கூற்றுக்கு பார்வையற்றவர் மொழிந்ததே ஈற்றடிகள்..

அந்தக் காலத்தில் வேட்டிக்குக் கலிங்கம் என்றும் பெயர் இருந்திருக்கின்றது.

அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்   
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை..
--: இரட்டைப்புலவர் :- 
 
வேட்டியைத் தண்ணீரில் நனைத்து  அடுத்தடுத்து அடித்தால் (தப்பினால் - வெளுத்தால்)
அது நம்மிடம் இருந்து தப்பித்துப் போகாதோ’ - என்று ஆற்று வெள்ளத்தில் துணி போய் விட்டது என்பதை அவர் பாட,

அதைக் கேட்ட விழியற்றவர் அதற்குக் கவலைப்படாமல் இந்தத் துணி போனால் என்ன? நமக்கு மா மதுரைச் சொக்கலிங்கம் தான் துணையாக இருக்கின்றாரே.. - என்று சொல்லிப் புன்னகைக்கின்றார்..


***
நினைவெல்லாம் தொடரும்

அழகே உந்தன் புகழ்  வாழ்க 

ஓம் சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 30, 2024

நினைவெல்லாம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 13
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

எப்போதும் கலகலப்பாக இருக்கின்ற பத்தாம் வகுப்பு நிசப்தமாக இருந்த விந்தை..

வழக்குரை காதை:

சிலப்பதிகாரத்தின் இந்தப் பகுதி 
திரு. பால சுந்தரம் ஐயா அவர்களால்
நடத்தப்பட்ட போது வகுப்பறை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...


தேரா மன்னா!  செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோ னன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து 
ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே... 

ஆராய்வதற்கு அறியாத மன்னனே!
சொல்கின்றேன் கேள்.

எங்கள் நாட்டின் சக்கரவர்த்தி சிபி பறவை ஒன்றின் துன்பம் தீர்ப்பதற்காக தன் தசையையே அரிந்து
துலாக்கோலில் இட்டவன்.. 

எங்கள் நாட்டின் மாமன்னன்  மனுநீதிச் சோழன் பசுவின் துயரத்தைத் தீர்ப்பதற்காகத்  தனது மகனையே தேர்ச் சக்கரத்தில் இட்டு நசுக்கியவன்.

அப்படி - நீதி வழங்கிய மன்னர்கள் ஆட்சி செய்த சோழ  நாட்டில்  - புகார் நகரம் எனது ஊர்..

அவ்வூர் வணிகர்களுள் ஒருவர் மாசாத்துவான். அவர் பெரும்  சிறப்பினை உடையவர். அவருடைய மகன் தான் என் கணவர். 

என் கணவரும் நானும் இனிது வாழ்வதற்காக உனது ஊருக்குள் - ஊழ்வினை துரத்தியதால்
வந்தோம். 

எனது சிலம்பினை விற்பதற்காக அங்காடித் தெருவிற்கு வந்த - அவர் உன்னால் கொலைக் களத்தில் மாண்டு போனார். அவர் பெயர் கோவலன். கண்ணகி என்பது என்  பெயர்..  -

கொந்தளிக்கின்ற கோபத்திலும் கொதிக்கின்ற சோகத்திலும் கூட எத்தனை எத்தனை தெளிவான செய்திகள்... 

எனில்.
அவள் தான் கண்ணகி..

தனக்கான சாட்சியாக மாணிக்க சிலம்பினைக் கொணர்ந்தவள் ஆயிற்றே!..

இதே போல ஒன்றை நிரூபிக்கத் தேவையான தரவுகளுடன் தான் வழக்கு மன்றங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான குறிப்பு சுந்தரர் சரிதத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
***
துணைப் பாடத்தின்  பல்சுவைப் பகுதியில் இருந்து :


முக்காலுக்கு  ஏகாமுன்  முன் நரையில் வீழாமுன்
அக்காலரைக்  கால் கண்டு அஞ்சாமுன்  -  விக்கி
இருமா முன்  மாகாணிக்கு ஏகா முன்  கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது.
-: காளமேகப்புலவர் :-

வாழ்வின் நிதர்சனம் ஆனாலும் பாடலின் முழு விளக்கத்தைத் தருவதற்கு மனம் இல்லை.. 

பாடல் காட்டுகின்ற நெறி : 
இளமை இருக்கின்ற போதே ஈசனை  - கச்சி ஏகம்பனை - வணங்குக.. என்பதாகும்..

வாழ்வின் நிதர்சனத்தைக காட்டுகின்ற இப்பாடலில் குறிக்கப்படுகின்ற பின்ன அளவுகள்..

முக்கால் = ¾ (மூன்றின் கீழ் நான்கு)
அரை = ½ 
(ஒன்றின் கீழ் இரண்டு)
காலரைக் கால் = 3⁄8
(மூன்றின் கீழ் எட்டு)
இரு மா =1⁄10 
(ஒன்றின் 3⁄8 பத்து)
மாகாணி = 1⁄16 வீசம் 
(ஒன்றின் கீழ் பதினாறு)
ஒரு மா = 1⁄20
(ஒன்றின் கீழ் இருபது)

(இதில் மா காணி எனப்படுவது  மயானம்)

இவையே பழந்தமிழ் நில அளவின் கணக்குகள்.. 

இதைச் சொல்லிக் கொடுக்கத் தான்  அரேபியனும் ஐரோப்பியனும் இந்நாட்டுக்குள் நுழைந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு இன்னும் உலவிக் கொண்டு இருக்கின்றது..
***
நினைவெல்லாம் தொடரும்

அழகே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 23, 2024

நினைவெல்லாம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 6
புதன் கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

உயர்நிலைக் கல்வி..

ஒன்பது பத்து பதினொன்று என்ற மூன்று வகுப்புகளுடன் கூடிய உயர்நிலைப் பள்ளி.. 

அந்தப் பள்ளியில்
ஆறு ஏழு எட்டு என்ற மூன்று வகுப்புகளும் இருந்தன..

தமிழாசிரியர்களாக வந்தவர்கள் திரு K. குஞ்சிதபாதம் ஐயா அவர்களும்  வித்வான் பால சுந்தரம் ஐயா அவர்களும்...  
திரு குஞ்சிதபாதம் அவர்கள் ஆங்கில வகுப்புகளும் நடத்துவார்.. 

திரு தங்கராசன்  M.A., திரு வைரக்கண்ணு M.A., எனும் முது நிலை ஆசிரியர்கள் 9B 10B 11B வகுப்புகளில் தமிழ் நடத்துவர்.

நான் மூன்று வருடங்களுமே
9A 10A 11A ( மாணவர்களுடன் மாணவியரும் பயிலும்) வகுப்புகளிலேயே இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது

9A 10A 11A  என்ற மூன்று நிலைகளிலும் வகுப்பு (ஆங்கில) ஆசிரியராக வந்தவர் திரு .A.சுப்ரமணியன் ஐயா அவர்கள்..

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ண மூர்த்தி M.A., அவர்கள்..  மிகவும் கண்டிப்பானவர்.. 

ஒன்பதாம் வகுப்பின்
மனப் பாடப் பாடல்கள் இன்றைய பதிவில் :


நாராய் நாராய்
 செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்னப்
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயுநின் மனையும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனையாளைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே..
 -: சத்திமுற்றப் புலவர் :-

தமிழரின் பரந்த அறிவுக்கு இப்பாடலும் சான்று.


ஏழையாளன்... 

ஏதோ ஒரு சூழ்நிலையில்
நாடு விட்டு நாடு பொருள் தேடச் சென்று  -  உடலையும் மனதையும்  வாட்டுகின்ற 
வாடைக் காற்றிலும்
பனிச் சாரலிலும் சிக்கிக் கொண்டு விட்டான்..  

மேல் துணி இல்லாமல் வாடுகின்ற காலத்திலும் கூட வலசை எனும் பறவைகளின் இடப் பெயர்வினைக்  கவனிக்கத் தவறவில்லை.. 

இணையாகப் பறக்கின்ற பறவைகளை நட்புடன் அழைத்து மழைக்குத் தாங்காத இற்றுப் போன கூரைக் குடிசையில் - பல்லியின் சகுனத்திற்காகக் காத்திருக்கும்
தனது அன்பு மனையாளுக்குத் தூது அனுப்புகின்றான்..

பாண்டிய நாட்டில் தான்  - பத்திரமாக இருப்பதைச் சொல்லி அனுப்புகின்ற போதும் வீட்டின் அடையாளத்தைக் குறிப்பிட்டுச் சொல்வதற்குத் தவறவில்லை.. 

அத்தோடு நிற்காமல் தமது ஊர்க் குளத்தில் விருந்தினராகத் தங்கிச் செல்லும் படியும் அந்த நாரைகளிடம் கேட்டுக் கொள்கின்றான்.. 

என்னே மாண்பு!..

இதைத் தான் வறுமையிலும் செம்மை என்றனர்..

வாடைக் காற்று உடலை வாட்டுகின்ற பனிக்காலத்தில் புலவர் மதுரையில்
இருக்கின்றார். 

வானில் வடக்கு நோக்கி செங்கால் நாரைகள் பறந்து கொண்டிருக்கின்றன..

செங்கால் நாரை  வடக்கே சைபீரியாவில் இருந்து தெற்கே  வந்து குமரியில் நீராடி மகிழ்ந்து விட்டு திரும்புகின்ற காலம் மார்கழி
(நவம்பர்)..

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்ற சொல் வழக்கும் நம்மிடையே இருக்கின்றது..

பனிக் காலம் என்பதும் இத்துடன் சரியாகப் பொருந்துகின்றது..

அரிய செய்திகளுடன் கூடிய இனிய தமிழ்ப் பாடல்..

இத்தனை நயம் மிக்க பாடலை இயற்றிய புலவரது பெயர் தெரியாததால் அவர் குறிக்கின்ற சத்தி முற்றம் எனும் ஊர்ப் பெயரே குறியீடு ஆயிற்று.. 

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ளது  சத்திமுற்றம்.. 
**

வீட்டு வாசலில் சிவனடியார்.. உணவு கேட்டு  நிற்கின்றார்.. 

மழை வேறு தூறிக் கொண்டு இருக்கின்றது..

அடியாருக்குக் கொடுக்கத் தக்கதாக வீட்டில் எதுவுமே இல்லை.. 

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள - பெருமழை பிடித்துக் கொண்டது..

அப்போது தான் இளையான்குடி மாறனாருக்கு காலையில் வயலில் நெல் விதைத்தது
நினைவுக்கு வருகின்றது.. 

அந்த நெல்லைத் திரட்டி அள்ளிக் கொண்டு வந்தால் அடியாருக்கு ஏதாவது செய்து கொடுக்கலாமே!..

உற்சாகத்துடன் இரவுப் போதில் மழையின் ஊடாக ஓடுகின்றார் வயலை நோக்கி..

அப்படியான இரவுப் பொழுதை சேக்கிழார் பெருமான்  இப்படி வர்ணிக்கின்றார்..

பெருகு வானம் பிறங்க மழை பொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிருளின் கணங் கட்டுவிட்டு
உருகுகின்றது போன்றது உலகெலாம்.. 15

ஆகாயத்தினின்றும் பெருமழை பொழிகின்றது.. எதிரிலிருக்கும் ஏதொன்றையும் அறிய இயலாதபடி இருள் சூழ்ந்த நள்ளிரவு.. 
கரிய நிற மை மேலும் கருகியதைப் போல இருளானது உருகி நிறைந்திருக்கின்றநிலையில்  ஊரும் உலகமும் இருந்தன..

பெரிய புராணப் பாடலை இப்படி விளக்குகின்ற போது - பாலசுந்தரம் ஐயா அவர்களின் கண்கள் குளமாகி இருக்கும்..

ஐயா அவர்கள் தன் விருப்பமாக துணைப் பாட நூலில் இருந்து நடத்திய மெய்ப்பொருள் நாயனாரின்  மெய்த் திறம் கூறுகின்ற திருப்பாடல் இது..


கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேடமே மெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.. :-
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுரம் ஆதீனம்..
**
நினைவெல்லாம் தொடரும்

அமுதே உந்தன் புகழ் வாழ்க 

ஓம் 
நம சிவாய நம ஓம்
***

புதன், அக்டோபர் 16, 2024

நினைவெல்லாம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 30
புதன்கிழமை

அமுதே தமிழே நீ வாழ்க


நினைவெல்லாம் பகுதி தொடர்கின்றது..

எட்டாம் வகுப்பு..
அது நடுநிலைப் பள்ளி.. 

ஆறு ஏழு எட்டு என மூன்று வகுப்புகளுக்கும் தமிழாசிரியர்களாக வந்தவர்கள் திரு மணியன் ஐயா அவர்கள் திரு ஜெயராமன் ஐயா அவர்கள் திரு புலவர் க. சின்னையன் ஐயா அவர்கள் ஆகியோர்... 

இவர்களில் மணியன் ஐயா அவர்களிடம் மட்டுமே - பள்ளி வளாகத்தில் புழங்காமல் இருந்த கிணற்றில் எச்சில் துப்பியதற்காக  அறை வாங்கியிருக்கின்றேன்.. 

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டிகள்
நேரடி இணைப்பு குழாயடி என்று எதுவும் இல்லாத காலம்.. 

புழக்கத்தில் இல்லாதது என்றாலும் கிணறு தானே... அதற்கு மரியாதை கொடுக்கத் தவறியது தவறு தானே..

அன்றைக்குக் கன்னத்தில் கிடைத்த ஒரு அறை பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது..

பள்ளியின் தலைமை ஆசிரியர் வித்வான் திரு நாராயணசாமி ஐயா அவர்கள்.. 

இவர்களிடமே நான் ஒழுக்கத்தையம் தமிழை கற்றுக் கொண்டேன்..

இவர்கள் திருப்பனந்தாள் ஆதீனத்தில் தமிழ் பயின்றவர்கள்.

அப்போதைய
பாடப் பகுதியின் மனப் பாடப் பாடல்கள் இதோ..

மனப் பாடப் பகுதி எனில் திருக்குறள் இல்லாமலா!..

அவற்றைக் குறிப்பிட்டு பதிவு எனில் நூறு வாரங்களுக்கு மேல் எழுதலாம்... 

எனவே திருக்குறளுக்கு பணிவுடன் வணக்கம் சொல்லி விட்டு ஏனைய இன்தமிழ்ப் பாடல்களைக் குறிக்கின்றேன்..

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு...


மருத நிலத்தின் அழகினை வர்ணித்து கம்பர் இயற்றிய பாடல் இது...

(பாடலுக்கான விளக்கம் எல்லாம் இன்றைய சிந்தனையில்!..)

தண்டலை மயில்கள் ஆட
   தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
   குவளை கண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்டத் தேம்
   பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட -
   மருதம் வீற்றிருக்கும் மாதோ.

நீர் வளம் மிக்க குளக்கரைச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடவும் குளத்து நீரில் தாமரை  மலர்கள்  விளக்குகளைப் போல் அழகூட்டவும் மேகங்கள்
மத்தளங்களைப் போல  ஒலிக்கவும் குவளைப் பூக்கள்  விழித்துப்  பார்க்கவும் நீர் ததும்புகின்ற நிலையின்    அலைகள்  திரைச் சீலை போல அசைந்திருக்கவும் தேனை  ஒத்த மகர யாழின் இசை  போல வண்டுகள் ஒலி எழுப்பவும் ஆகிய  சூழலில் மருத நிலமானது இளவரசி போல வீற்றிருக்கின்றாள்..

என்று வர்ணிப்பது கம்ப நாட்டாழ்வாரின் கவித்திறம் 
**
இந்தப் பாடலும் அற்புதம்.. திருக்குற்றால மலையின் வளத்தினை மாண்பினைக் காட்டுவது..


வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே..
-: குற்றாலக் குறவஞ்சி :-
**


மழை வர இருப்பதற்கான அறிகுறிகள் இந்தப் பாடலில்.. 

எளிதில் பொருள் விளங்கும்படியான  அழகிய பாடல்..

பாடலை வாசிக்கும் போதே மண் வாசம் கமழும்..

காலச் சூழ்நிலையின் அவதானிப்பினை உழவர் பெருமக்களும் அறிந்திருந்தமைக்கு இப்பாடலும் முக்கியமான சான்றாகும்..

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி மலை
      யாள மின்னல் ஈழமின்னல்
      சூழமின்னுதே
நேற்றும் இன்றுங் கொம்பு சுற்றிக்
காற்றடிக்குதே கேணி
      நீர்ப்படு சொறித் தவளை
      கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்றடைக்குதே மழை
      தேடியொரு கோடி வானம்பாடி யாடுதே
          போற்று திரு மாலழகர்க்
கேற்றமாம் பண்ணைச் சேரிப்
      புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
      துள்ளிக் கொள்வோமே..
-: முக்கூடற்பள்ளு :-
**

கவி காளமேகப் புலவர் சிலேடைக் கவியில் திறன் உடையவர்.. 

திரு ஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளால் -
போகின்ற போக்கில் கவி சொல்லக் கூடிய வல்லமை பெற்றவர்.. 

யானைக்கும் வைக்கோலிற்கும் ஒப்பு வைத்து அவர் மொழிந்த பாடல் இது..

சிலேடைக் கவிகள் இரட்டுற மொழிதல் என்றும் சொல்லப் பெறும்..

இத்தொடரில் பதிவாகின்ற பாடல்கள் பலவும் மனதில் ஊடாடிக் கொண்டு இருப்பவை.

உடல் நலன் 
சூழ்நிலையின் காரணமாக இணையத்தில் தேடி எடுத்து இங்கே பதிவு செய்கின்றேன்..

பாடலின் கருத்துக்களை மீண்டும் உணர்ந்து கொண்டு இயன்றவரை ஒற்றை விரலால் தட்டச்சு செய்கின்றேன்..
 
வாரிக் களத்தடிக்கும் வந்து பின்பு கோட்டை புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் சீருற்ற
செக்கோல மேனித் திருமலை ராயன் வரையில் வைக்கோலும் மால் யானையாம்.. 
-: காளமேகப் புலவர் :-

நினைவெல்லாம்
தொடரும் 

அழகே உந்தன் புகழ் வாழ்க.. 

ஓம்  சிவாய நம ஓம்
***

ஞாயிறு, அக்டோபர் 13, 2024

தமிழகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 27
ஞயிற்றுக்கிழமை


தமிழ் நாட்டின்
முப்பத்தெட்டு மவட்டங்களிலும் சதுர கிலோ மீட்டருக்கு மக்கள் தொகை அடர்த்தி குறித்த புள்ளி விவரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.. 

பயிர்த் தொழில் அற்றதான தலை நகரின் வசதி வாய்ப்புகளின்படி அங்கே மக்கட்செறிவு  வழக்கமானது தான்.. 

நீர்வளமும் நிலவளமும் பொருந்தி விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் மக்கட் செறிவு குறைவாக இருப்பது புரியவில்லை..


மேலே உள்ள வரைபடத்தின் தரவுகளின்படி மக்கள் அடர்த்தி அதிகமுள்ள மாவட்டங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்...

உற்று கவனித்தால் ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன..

1 சென்னை 26076

2 கன்னியாகுமரி 1119
3 திருவள்ளூர் 1089

4 விழுப்புரம் 928

5 செங்கல்பட்டு 868
6 மதுரை 812

7 மயிலாடுதுறை  782
8 வேலூர் 776
9 கோவை 732
10 கடலூர் 709
11 தஞ்சாவூர் 708
12 காஞ்சிபுரம் 704

13 சேலம் 669
14 திருப்பத்தூர் 620
15 திருச்சிராப்பள்ளி 618

16 நாகப்பட்டினம் 595
17 திருவாரூர் 585
18 ராணிப்பேட்டை  542
19 நாமக்கல் 513

20 தென்காசி 483
21 திருப்பூர் 478
22 விருதுநகர் 453
23 தேனி 434
24 திருநெல்வேலி 433

25 திருவண்ணாமலை 398
26 கள்ளக்குறிச்சி 389
27 அரியலூர் 389
28 தூத்துக்குடி 379
29 கரூர் 368
30 கிருஷ்ணகிரி 366
31 புதுக்கோட்டை 347

32 திண்டுக்கல் 345
33 தர்மபுரி 335
34 ராமநாதபுரம் 333
35 சிவகங்கை 328
36 பெரம்பலூர் 322
37 நீலகிரி 300

38 ஈரோடு 276

தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற 
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம் 
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா..
-: மகாகவி :-

வாழ்க தமிழகம்
வளர்க தமிழகம்
***