நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 15, 2026

தவம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
புதன்கிழமை



இன்று

வாராது வந்த மாமணியின் பிறந்த நாள்..

மீண்டும் பெருந்தலைவர் கிடைப்பாரோ?..

தவம் இருப்போம்..

நலம் வாழ்க
***

சனி, நவம்பர் 01, 2025

இமயம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை


பெருந்தலைவர் அவர்களை பல்வேறு திரைப்படப் பாடல்களில் புகழ்ந்து எழுதியிருக்கின்றார்கவியரசர் .. 
அந்த வகையில் இது தனிப்பாடல் போல் இருக்கின்றது.. 

ஏழையெனப் பிறந்தவன் தான்
பாண்டி நாட்டிலே  - அவன்
ஏழைக்கெல்லாம் கல்வி தந்தான் 
பிறந்த நாட்டிலே..

அறிவுக் கண்ணைத் திறந்து வைத்தான் அழகு மொழியிலே - அவன்
அறிஞன் என  உயர்ந்து நின்றான் 
இமயம் வரையிலே...

இது தான் முழு வடிவமா என்பது தெரியவில்லை..

 நன்றி
எங்கள் சமுதாயப் பேரவை
Fb

 நல்லோர் புகழ் வாழ்க
**

திங்கள், ஜூலை 15, 2024

தவப்புதல்வன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 31  
திங்கட்கிழமை



பெருந்தலைவர் பிறந்த நாள்
(15 ஜூலை 1903)


காமராஜர்  அனைவருக்குமாக  இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்..


1957 - 1962 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில்  திறக்கப்பட்ட புதிய பள்ளிகளின் எண்ணிக்கை பதின்மூன்றாயிரத்திற்கும் மேல்.. 

மாணவர் எண்ணிக்கையும் 19 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்ந்தது..



நீர்வளத்தைப் பெருக்குவதற்கு காமராஜர் செயல்படுத்தியவை - மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைக் கால்வாய்த் திட்டம்  ஆகியன

தமிழகத்திலுள்ள  பெரும்பாலான அரசு கலைக் கல்லூரிகள் தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவையே..


தெற்காசிய அளவில் பிரம்மாண்டமான அம்பத்தூர் தொழிற்பேட்டை
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ஆகியன காமராஜரின் பொற்கால ஆட்சியின் சாட்சியங்கள்..




காமராஜருடைய ஆட்சிக் காலம் ஒன்பது ஆண்டுகளே!... 

பொற்கால ஆட்சி இனி வரவே வராது என்பதே உண்மை..


என்றென்றும புகழ் வாழ்க..
**

திங்கள், ஜூலை 15, 2019

நின் புகழ் வாழ்க..

இன்று பெருந்தலைவர் பிறந்த நாள்..

15.7.1903 < > 2.10.1975
நீரற்றுப் போனாலும் நிலத்தில் - தங்கள் 
நினைவற்றுப் போகுமோ மனத்தில்!..
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - VHNSN College., Viruthunagar.. 
நன்றி - விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி இணையதளம்.. 
10.11.1957 
ஒரே நாளில்
தமிழகத்தில் இரண்டு அணைக்கட்டுகளைத்
திறந்து வைத்த மகராஜன்...


அன்று
அன்னைத் தமிழ் நாட்டுக்கென
அணைக் கட்டுகளுடன் பழகிக் கிடந்தனை!..

இன்று
நீ வாழ்ந்த மண்ணிலன்றோ
அரசியல் வியாதிகளும் அரசாங்க ஊழியமும்
பணக் கட்டுகளுடன் புரண்டு கிடக்கின்றன!..

நல்லவேளை.. நின்றன் பாதத்தூளியை
கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.
நீ வாழ்ந்த காலத்திலேயே!...


மகராசன்.. நீங்க மறுபடி ஒருக்க வந்து பொறக்க மாட்டியளா!... 
அறம் சார்ந்த ஆட்சியை 
அரசியலை நடத்தியவர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த
லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

ஞாயிறு, ஜூலை 15, 2018

படிக்காத மேதை


அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா!.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே!..


சந்தோஷமும் துக்கமும் ஏழை நெஞ்சுக்குள் அலை அலையாய் புரண்டன..

கல்யாணங்காட்சி..ன்னு ஒன்னும் இல்லாம - நாடு நாடு..ன்னு காடு மேடு எல்லாம் சுத்தித் திரிஞ்ச புள்ளை.. ஆசையா முகத்தைப் பாத்து சோறு போட்டு கொள்ளை நாளாச்சு..

என்னைய விட்டா யாரு பொறுப்பா பாத்துக்குவாங்க.. 
இனிமேயாவது ஒரு எடத்துல ஒக்காந்து புள்ளைய பாத்துக்கணும்.. 
நாமளும் காமாட்சி கூட பட்டணத்துக்கே போயிறலாம்!..

அன்னையின் மனம் ஆசைப்பட்டது... ஆனாலும் - கூடவே தயக்கம்!..

காமாட்சிக்கு இது தெரிஞ்சா - என்ன பதிலு வருதோ தெரியலையே.. நாகு!..

அன்பு மகளுடன் - தன் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டது தாய் மனம்..

அண்ணாச்சி.. ஒண்ணுஞ்சொல்ல மாட்டாக!..

தாய்க்கு ஆதரவாகப் பேசியது - அந்த ஏழைக் குடும்பத்தின் இளங்கிளி..

விளைந்த வெள்ளரி வீதிக்கு வரத்தானே வேண்டும்!..

ஒருவழியாக வெளியில் வந்தது விஷயம்..

ஒம் மனசுல இப்படியும் ஆசை இருக்கா.. அதெல்லாம் சரிப்படாது..ன்னேன்..
நீ எங்கூட வருவே.. உங்கூட இன்னும் நாலுபேரு வருவாங்க!.. 
கூடவே ஊரு பொல்லாப்பும் சேந்து வரும்!..

இதெல்லாம் பாக்குறதுக்கா நா மந்திரியானது.. ன்னேன்?.. 
பட்டணம் எல்லாம் உந்தோதுக்கு ஒத்து வராது.. 
நீ இங்கேயே இரு.. ன்னேன்!..

நறுக்கு தெறித்தாற்போல பேச்சு..

தாயின் ஆசை அத்துடன் அடங்கிப் போனது..

சீராட்டி பாராட்டி வளர்த்த அன்பு மகனை - நாட்டுக்காக அர்ப்பணித்தார்..

நாட்டுக்காக - உழைப்பைத் தருவர்..
நாட்டு மக்களுக்காக பொருளைத் தருவர்.. பொன்னையும் தருவர்..

ஆனால் -

தன் உயிருக்கும் உயிரான செல்வ மகனை - கொடையாகக் கொடுத்த தாய் -

சிவகாமி அம்மையார்!..

(கலங்கும் கண்களோடு தான் இந்தப் பதிவு!..)


தமிழகம் இதுவரையிலும் கண்டிராத -
இனியும் காண இயலாத - தங்கமகனின் பிறந்த நாள் இன்று!..

இலவசக் கல்வி, ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகங்கள், பிள்ளைகளுக்கு  சீருடை என்றெல்லாம் வழங்கியவர் பெருந்தலைவர்..

கல்லாய் கிடந்த மக்கள் கல்வி கற்று எழுந்திடக் கை கொடுத்தவர் - காமராஜர்.
* * *

கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. 
நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?..
இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள் மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், காலக் கோளாறினால்  ஏற்பட்ட கடும் வறட்சியை - சரியாகக் கையாளத் தெரியாமல் சறுக்கி விழுந்தனர். 

பனை ஏறி விழுந்தவனைக் கிடா ஏறி மிதித்ததைப் போல - 
அப்போது மொழிப் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

அடுத்து வந்த தேர்தலில் - 

எதிரணியினர் பேசியது புதியதாக புரட்சியாக இருந்தது. இனிமையாக இதமாக இருந்தது. அதனால் அன்றைய மக்கள் அவர்களின்  பின் ஓடினர்.  

மக்களோடு மக்களாக இருந்ததால் -  காமராஜருக்கு  வீர வசனம் பேசுவதற்குத் தெரியவில்லை.  

எதிர் அணியினர் விஷம் கக்கினர். அவர்கள் பேசியவற்றில் ஒரு சில!..

ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்!.. ஒரு படி நிச்சயம்!..
தட்டினால் தங்கம் வரும்!.. வெட்டினால் வெள்ளி வரும்!..

குடல் கருகுது!.. கும்பி கொதிக்குது!..
குளுகுளு கார் ஒரு கேடா!..

இந்த மாதிரி பல வசனங்களால் சொந்த மண்ணிலேயே காமராஜர் தோற்றுப் போனார். 

அண்டங்காக்கை, பனையேறி  - என்றெல்லாம்  பழிக்கப்பட்டார்.

இன்னும் ஒருபடி மேலே போய் - 
காமராஜர் சுவிஸ் பேங்கில் பணம் போட்டு வைத்திருக்கிறார்.. 
- என்று புழுதி வாரி வீசப்பட்டது. 

காட்சி மாறியது.... அதன் பின்  நாட்டில் - 
நடந்தது அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயம்!.. 

நாவில் ஈரமின்றிப் பேசியவர்கள் எல்லாம் - 
லஞ்ச லாவண்யங்களில் மூழ்கித் திளைத்தனர்..
தாமும் தம் மக்களும் என - தின்று கொழுத்தனர்.


பொதுக்கூட்டங்களில் - தன்னைப் பாராட்டி யாராவது பேசினால், 
கொஞ்சம் நிறுத்து.. ன்னேன்!.. - என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். 

வேறு எவரையும் தாக்கிப் பேசினால், 

அதுக்கா இந்தக் கூட்டம்..ன்னேன்!.. - என்று தடுத்துரைப்பார்..

தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்குத் தாரை வார்த்தவர்.

யாரும் அன்பளிப்புகளைக் கொடுக்க முனைந்தால் - 
இதெல்லாம் கஷ்டப்படுற தியாகிகளுக்குக் கொடுங்க..ன்னேன்!.. -  என்பார்

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்தவர்..

மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என வரையறுத்து - அதன்படி முதல் ஆளாகப் பதவி விலகியவர். 

சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் மக்கள் அவரைத் தோற்கடித்தனர். 

உடனிருந்த கட்சிக்காரர்கள் அழுதார்கள். 
பொதுவான நல்ல மனிதர்களும் அதிர்ந்தார்கள்..

இதான் ஜனநாயகம்..ன்னேன்.. ஜெயிச்சவனைக் குறை சொல்லாம தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டா மறுபடி ஜெயிக்க முடியும்..ன்னேன்!.. 

- என்று சற்றும் தளர்ச்சியில்லாமல் சொன்னவர் பெருந்தலைவர்.


கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷம் அது ஒன்றுதான்!..

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர். 

பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர்..

அவருடைய அதிகபட்ச ஆடம்பர உணவு - சோற்றுடன் முட்டை.

இறந்தபோது அவருடைய கையிருப்பு என மிச்சம் இருந்தவை -  

ஒரு சில வேஷ்டி சட்டைகள்..
ஓய்வு நேரத்தில் படித்த புத்தகங்கள்..
எளிய சமையலுக்கான பண்ட பாத்திரங்கள்..
நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும்!.. 

பெற்ற தாய் உடல் நலம் குன்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்தார்.

அவருடன் பயணித்தவர் திரு. பழ. நெடுமாறன்..

வீட்டில் படுத்த படுக்கையாயிருந்த அன்னையைக் கண்டார்.

இதுவே இறுதி சந்திப்பு என்று தாய் மனதில் தோன்றுகின்றது. மகனுக்கும் அவ்வாறே..

மனதைக் கல்லாக்கிக் கொண்டார். அருகிருந்த தங்கையிடம் பேசினார்..

உறவினர்களிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு புறப்பட யத்தனித்தார்.

மகனை ஆவலுடன் நோக்குகின்றன தாயின் கண்கள்..

சாப்பிட்டானோ - இல்லையோ.. ஏந்தலா இருக்கானே!..

பரிதவித்தது - தாயின் மனம்..

உலர்ந்திருந்த உதடுகள் பிரிந்தன..

சாப்பிட்டுப் போ.. ராசா!..

அந்த நேரத்தில், என்ன நினைத்தாரோ - எங்கள் ஐயா!..

கல்லான மனமும் கரைந்தது..

சரி.. - என்ற முகக் குறிப்பைக் கண்ட தாயின் முகத்தில் ஆனந்தப் பிரகாசம்..

எங்க அண்ணாச்சிக்கு சோறு போட்டு எவ்வளோ நாளாச்சு!..

தங்கை நாகம்மையின் மனம் பாசத்தில் பொங்கி வழிந்தது..

மகன் உண்ணுவதைக் கண்ட தாயின் மனம் இறும்பூதெய்தியது..

தாயிடமிருந்து விடை பெற்றுக்கொண்டார் - மகன்..

விருதுநகரிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்பட்டது - கார்.

காரினுள் மௌனம்.. அதைக் கலைத்தார் நெடுமாறன்.

ஐயா.. நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எத்தனை வருடங்கள் இருக்கும்!?..

என்ன.. ஒரு.. முப்பது வருஷம் இருக்கும்!..

அமைதியாக பதில் வந்தது - பெருந்தலைவரிடமிருந்து..

சிவகாமி அம்மையாரின் மரணத்தின் போது
பள்ளியில் பயிலாதவர் தான் பெருந்தலைவர்.. ஆனாலும் படிக்காத மேதை!..

அவர் படித்த நூல்களை அவரது நினைவாலயத்தில் காணலாம்..

அரசாங்க பணத்தை அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதர்..


அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வு கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்த லட்சோபலட்சம் பேர்களுள் எளியேனும் ஒருவன்..

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்!..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

சனி, ஜூலை 15, 2017

என்றும் இமயம்

படிக்கக் கல்வி நிலையங்கள் வேண்டும்..

இது தான் முதல் நடவடிக்கை..


தான் பெறாத கல்வியை எனது மக்கள் பெற வேண்டும்.. அறியாமை எனும் இருள் அகல வேண்டும்.. வறுமை அதனால் நீங்க வேண்டும்...

இல்லாமை என்னும் இருளில் மக்கள் சிக்கிக் கிடக்கும்போது அறிவு ஒளியூட்டும் பள்ளிகளை மூடுவதா?..

எனும் உயரிய சிந்தனை மலர்ந்தது -
தமிழகத்தின் முதல்வராக அமர்ந்த ஏழைப்பங்காளரின் நெஞ்சில்..


அதன் விளைவாக -
அதற்கு முந்தைய ஆட்சியாளரால் இழுத்து மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளும் திறக்கப்பட்டன..

அவை போதாதென்று மேலும் பதினாலாயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன..

முதல் திட்ட முடிவில் ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை - 21,500..

இரண்டாவது திட்ட காலத்தில் - 26,750..

வெகு விரைவில் முப்பதாயிரத்தையும் தாண்டியது..

ஆரம்பப் பள்ளிகளுக்கு வந்த மாணவர் தொகை முதல் திட்ட முடிவில் 25 லட்சம்..

இரண்டாவது திட்ட இறுதியில் 33.8 லட்சம்..

கல்வியின் சிறப்பை உணராத மக்கள் குழந்தைகள கல்லாத மூடராக்கி வரும் தீமைகளைக் கண்டு வெகுண்டார்.. கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தை உருவாக்கினார்..

பல்லாயிரக் கணக்கான பள்ளிகளின் மூலம் லட்சோப லட்சம் குழந்தைகளின் வாழ்வில் கல்வியறிவு எனும் ஒளியேற்றப்பட்டது..

இருந்தும் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவில்லையே!.. அது ஏன்?.. -  என, சிந்தித்த போது - மூலகாரணம் கண்டறியப்பட்டது..

அதற்கான பரிகாரமும் தேடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..

ஒரு வேளை உணவுக்கும் அல்லாடும் ஏழை எப்படித் தன் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவான்?..

ஒரு வேளையாவது குழந்தைகளுக்கு உணவு அளித்தால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஆசை - தாய் தந்தையர்க்கு ஏற்படுமே - என்ற எண்ணத்தால் விளைந்ததே - மதிய உணவுத் திட்டம்..

மதிய உணவுத் திட்டம் மேலும் பல்லாயிரம் சிறார்கள் பள்ளிக்கு வருவதற்கான காரணமாக அமைந்தது..

பள்ளிகளைக் கட்டுவதும் ஆசிரியர்களை நியமிப்பதும்  பகல் உணவு  வழங்குவதும் ஏதோ சர்க்கார் செய்ய வேண்டிய வேலை.. அதில் நமக்கென்ன இருக்கின்றது!.. - என்ற மனநிலையில் இருந்த மக்களை -

கல்வி இயக்கத்துடன் இணைத்த பெருமையும் அவருக்கே உரியது..

தமிழகம் முழுவதும் பள்ளி வளர்ச்சிக்கென 133 மாநாடுகளை நடத்தி மக்களை கல்விப் பணியுடன் இணைத்ததால் கிடைத்த நன்கொடை 6. 47 கோடி..

அதன் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் சிலேட்டு முதலியன வழங்கப்பட்டன...

குழந்தைகளின் மனதில் ஏழை பணக்காரன் என்ற ஏற்ற தாழ்வு ஏற்படக்கூடாது.. இதைத் தடுக்க வேண்டும்!..

அந்த உயரிய சிந்தனையின் விளைவு தான் பள்ளிப் பிள்ளைகளுக்கு  சீருடை..

இன்று பல்லாயிரக் கணக்கான சிறார்கள் வண்ண வண்ண சீருடைகளில் சிறகடித்து வலம் வருவதற்கு காமராஜர் அவர்களின் உயரிய எண்ணங்களே காரணம்..

1960 ஆம் ஆண்டில்வருடாந்திர வருமானம் ரூ 1200 எனில் அவர்தம் பிள்ளைகளுக்கு பதினொன்றாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்த காமராஜர் -

1962 - 63 ல் வருமான வரம்பினை 1500 என திருத்தினார்..

பலதரப்பட்ட மக்களுடன் அரசு பதிவு பெறா ஊழியர்களும் கடை நிலை ஊழியர்களும் பள்ளி இறுதி வகுப்பு வரை தம் பிள்ளைகளுக்கு கல்விச் சலுகை பெற்றனர்..

இதன் விளைவாக உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருள் இலவசக் கல்வி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள் நூற்றுக்கு பதினேழு பேர் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டது..


காவிரி டெல்டா, கீழ் பவானி, மணிமுத்தாறு, வைகை, அமராவதி, சாத்தனூர், புள்ளம்பாடி, வீடூர், பரம்பிக்குளம், ஆளியாறு - எனும் நீர்ப்பாசனத் திட்டங்களால் விவசாயம் வளர்ச்சி கண்டது..

காமராஜருடைய ஆட்சிக் காலத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு 150 லட்சம் ஏக்கர்..

இதில் 56 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலையான பாசன வசதி பெற்றவை...

நெய்வேலி நிலக்கரி, அம்பத்தூர், ஆவடி, கிண்டி, திருவெறும்பூர், பொன்மலை - என தொழிற்பேட்டைகள்.. பற்பல தொழிற்சாலைகள்..

சென்னை துறைமுக மேம்பாடு மற்றும் அனல் முன்நிலையம், குந்தா நீர் மின் திட்டம் - என,

தமிழகம் ஒளி மயமாகியது காமராஜர் ஆட்சியில்!..


- புள்ளி விவரங்கள் -
திரு. முருக தனுஷ்கோடி அவர்களின்
காமராஜ் ஒரு சரித்திரம்
---

அப்படியிருந்தும் -
அந்த மாசற்ற மாணிக்கத்தையும் வீழ்த்தி
தன் முகத்தில் தானே கரியைப் பூசிக் கொண்டது - தமிழினம்!..

ஆனாலும் 
இமயம் என்றுமே இமயம் தான்!..

பெருந்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க!.. 
***