நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 30, 2025

ஆரோக்கியம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 17
வியாழக்கிழமை


நமக்கு உடல் நலன் 
வேண்டும்.. நிம்மதி வேண்டும்..

என்றால்,

ஆரோக்கியமான உணவு  வேண்டும்.. 

அதற்கு நாம் நமது மரபு வழி உணவு வகைகளை மறவாது இருக்க வேண்டும்.. 

அதற்கு மரபு வழி உணவு வகைகளுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழி இல்லை..

விடியும் போதில் நீராடிய ஒருவரால்
திருக்கோயில் நிவேதனங்கள் மிகப் பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.. 

உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கியம் வேறு இல்லை...

பருவ காலத்தின் பயனாகிய
கீரைகள் காய் கனிகள் மற்றும் ஒரு சில கிழங்குகள்  மட்டுமே உண்ணத்தக்கவை..

புலால் உணவு வகைகளில் மீன்களைத் தவிர்த்து
கிடா ஆடும் சேவலும் தான்  உண்ணக் கூடியவை..
 
வழிபாடுகளில் கூட பெட்டை ஆடும் பெட்டைக் கோழியும்
பலியிடப்படுவதில்லை..

இன்று புலால் பிரியர்கள் உண்ணுகின்ற செயற்கைக் கோழிகள் முட்டையிடுவதில்லை.. கருத்தரிக்கும் திறன் அற்றவை.. அவற்றின் வாழ்நாளும் குறுகியவையே..

இப்படியான செயற்கைக் கோழிகள் நன்மையினைத் தருகின்றனவா எனில் விடை கேள்விக்குறி தான்!..
 
வாரந்தோறும்  நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் உஷ்ணம் சமச்சீராக இருக்கும்..

அதிகாலையில் எழுவதும் அந்தியின் முன்னிரவுப் பொழுதில்  உறங்குவதும் 
ஆரோக்கிய வாழ்வு... 

நடுநிசிப் பிரியாணி விருந்தின் பிடிக்குள் இருக்கின்ற இன்றைய நவீன கலாச்சாரத்தில் அவரவரும் அவரவர்க்கு நல்லனவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..

சைவ வைணவ மரபுகளில்
மலையில் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர்ந்த நீரில் குளிப்பதும் ஆரோக்கியம்.. மாதம் இருமுறையாவது  விரதம் இருப்பது உடலை வலுப்படுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன..

அவற்றை எல்லாம் புறக்கணித்ததன் விளைவு தான் நோய்களின் தாக்கம்..

இவற்றுடன் 
இந்த கால கட்டத்தில் மானுடத்திற்கும் கருத்தரிப்பதில் சிக்கல்.. 

ஏற்கனவே 
காளையின் சேர்க்கை இல்லாமலே பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கின்றோம்..

கோழிக்கும் அது வேண்டாம் என்று சேவலை ஒழித்துக் கட்டி விட்டு செயற்கை முட்டைகளுடன் திளைக்கின்றது நாகரிக உலகம்..

முடிந்தவரை பழைமையினை மீட்டெடுப்பதே நல்வாழ்வுக்கு அடிப்படை..

வாழ்வதற்கு  உதவுவன நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள்..

முன்னோர்களது நலமான  வாழ்வின் ரகசியம் அவற்றில் தான் ஒளிந்திருக்கின்றது..

அதை மீட்டு எடுப்போமாயின் நல்வாழ்வு கிட்டும்...  
மாறாக இயற்கை உணவுகள் எல்லாம் பழைமை என ஒதுக்கி வைத்தால் மேலை நாட்டின் மருத்துவர்களும் மருந்துக் கடைகளுமே உறுதுணைகள்.. 

இப்படி ஒரு பலஹீனமானதாக  நமது நாடு ஆக வேண்டும் என்பதே மேலைத் தேசங்களின் ஆசை.. அதன் விளைவுதான் இது..

இந்நாடு தமது  மருந்துகளின்  வேட்டைக்காடாக வேண்டும் என்பதே மருந்து நிறுவனங்களின் கணக்கு..

நாம் நமது கவனத்தை 
மீட்டெடுத்தால் ஒழிய  ஆரோக்கியத்தைத் திருப்பப் பெறமுடியாது... 

இதை இச்சமூகம் உணருமோ உணராதோ.. தெரியாது..

செறிவூட்டப்பட்ட செயற்கை மிகை இனிப்புகளும் சந்தைக்கு வந்திருக்கின்றனவாம்.. (அந்தக் காலத்து சாக்ரீன் போல..)

இதயம், கல்லீரல், இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளை சீர் குலைப்பதும் பல விதமான நோய்களை உண்டாக்குவதும் கூடுதல் இணைப்பு..

நோய்  எல்லாரையும் தாக்கும்.. ஆனால் அது வாந்தி பேதி மாதிரி அப்போதே நடக்காது என்பதால் நமக்கு எதில் பிரச்னை என்று தெரிவதில்லை.

உணவை விழுங்கிய நெடுநேரத்திற்குப் பிறகும்  நாவில் சுவை மொட்டுகள் பரபரப்பாக இருப்பதைக் கொண்டு 
உணவின் ரசாயனத்தை
ஓரளவுக்கு உணரலாம்.. 

தாம் தயாரிக்கின்ற  உணவு பிறர்க்கு நலம் தர வேண்டும்   என்ற எண்ணம்  உணவு ஏவாரிகள் எவரிடத்தும் இல்லை.

நலமற்ற நிலையில் தவிக்கும் போது
நம்மைக் காக்க உணவை விற்பனை செய்த எவரும் வரப் போவதில்லை.

நம்மை நாமே காத்துக் கொள்வது ஒன்றே வழி..

ஆகவே,
கண்ணில் கண்டதை எல்லாம் தின்று விட்டு தெருத் தெருவாக வீதி வீதியாக - நடை பயிற்சி என்று சுற்றி வந்தாலும்  ஆகப் போவது ஒன்றும் இல்லை...


நமது நோக்கம் இயற்கை உணவுகளையும் உடல் உழைப்பையும் நோக்கி இருக்க வேண்டும்..

அங்கே தான் இருக்கின்றது உடல் நலத்திற்கான மருந்து...
ஃஃ

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், டிசம்பர் 10, 2024

செவ்வாழை


நாடும் வீடும்
நலம் பெற வெண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 25
செவ்வாய்க்கிழமை


செவ்வாழை

பூவன் பழங்களைப் போலவே - சிறப்பு வாய்ந்தது  செவ்வாழை..

தமிழகத்தின் தென்கோடி மற்றும் கேரளப்  பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றதாகும்...


கண் நோய் முதற்கொண்டு பற்பல பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகின்ற கனி தான் செவ்வாழை. 

மூளை , இதயம், கல்லீரல், எலும்புகள் வலுவடைகின்றன.. 

குடல் இயக்கம் முதற்கொண்டு  உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் அவசியமான சத்துக்கள் இப்பழத்தில் உள்ளன..


செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சீறுநீரகங்களில் கற்கள் ஏற்படாமல் தடுக்கின்றது..

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கத்  தேவையான இரும்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் செவ்வாழைப் பழத்தில்  நிறைந்துள்ளது..

செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6  மூளையில் செரோடோனின் எனும் ஹார்மோன் அளவை அதிகரிக்கின்றது..

தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு - நல்ல மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் செவ்வாழைக் கனியை உண்பதால் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும்  நல்ல மாற்றத்தை உணரலாம்.. 

உணவிற்கு முன்பாகத் தான் இக்கனியை உண்ண வேண்டும் என்பதை மறத்தலாகாது..

(தொகுப்பு :  நன்றி விக்கி)


நானும் பொதுவாக - வாழைப்பழம் குறித்த அச்சத்தில் தான் இருந்தேன்.. 

ஆசை தீரப் பூவன் பழங்கள் தின்று மூன்று வருடங்கள் ஆகியிருக்கின்ற நிலையில் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி செவ்வாழைக் கனியின் பக்கம் இப்போது தான் வந்திருக்கின்றேன்..


இப்போது செவ்வாழையின்  பக்கம் பெருமளவில்
மக்கள் வருவதைக் கண்ட ஏவாரிகள் விலையை அதிகமாக்கி விட்டு பழங்களையும் எடையிட்டு விற்க ஆரம்பித்து விட்டனர்...

வாழ்க செவ்வாழைக்கனி..
ஃஃ

ஓம் சிவாய நம ஓம்
***

ஞாயிறு, டிசம்பர் 08, 2024

வாழைப் பழம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 23
 ஞாயிற்றுக்கிழமை


வீட்டில் விழா என்றாலும் கோயிலில் திருவிழா என்றாலும் தோரண வாயில் என்று முன் நிற்பவை குலை ஈன்ற வாழை மரங்கள் .. 


அதிலும் பூவன் வாழைகளே சிறப்புடையவை..


வழிபாட்டிற்கு மட்டுமல்லாது மங்கலச் சடங்குகள் அனைத்திலும்  முன் நிற்பவை பூவன் பழங்களே..

வருடம் முழுதும் நமக்குக் கிடைப்பவை வாழைப்பழங்கள்..  அதிலும் பூவன் பழங்கள் குறிப்பிடத் தக்கவை..


காவிரிப் படுகையாகிய  சோழ தேசத்தின் மகத்தான  செல்வங்களுள் ஒன்று வாழை.. 

திருப்பைஞ்ஞீலி தலத்தில் வாழை தல விருட்சம்.. தஞ்சை கண்டியூருக்கு அருகிலுள்ள திருவேதிகுடியில் வாழை மடு நடுவே ஈசன் தோன்றியதாக தலபுராணம்..


வாழை இனங்களில் சிறப்பு பூவன்!..

பூவன் வாழைப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்பு, மெக்னீசியம், சோடியம்  சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன..

இரும்புச் சத்து பூவன் பழத்தில் நிறைந்துள்ளதால், அனீமியா எனும் ரத்த சோகை ஏற்படுவதில்லை..

மூளையில் இயற்கையாகவே செரடோனின் ஹார்மோன் சுரக்கவும், செரிமானம் சீராக இருக்கவும்  பூவன் பழங்கள்  உதவுகின்றன. 

செரடோனின் சுரப்பது ஆழ்ந்த தூக்கத்தில்... இதுவே மனிதனுக்கு மன அமைதியைத் தருவது.. 


இரவு உணவு உட்கொண்ட  ஒரு நாழிகைக்குப் பிறகு இரண்டு பூவன் பழங்களை உண்ண வேண்டும் என்று முன்னோர் வகுத்தது இதற்காகத் தான்..

பூவன் பழத்தினால், ரத்த அழுத்தம் குறைகின்றது.. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பயங்கரங்கள்  ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன..

வாழை இனங்கள் எல்லாவற்றிற்குமே மருத்துவ குணங்கள் எனினும் பூவன் பழத்தில் அதிகம்...

என்றாலும், சர்க்கரைக் குறைபாடு உடையவர்கள் மருத்துவரது அறிவுரை ஆலோசனையைப் பின்பற்றி இருப்பது நல்லது..

சர்க்கரை குறைபாடு உடையவர்கள், பூவன் பழத்தை மட்டுமல்லாது வாழைப் பழங்களையே உண்ணாமல் இருப்பது நல்லது என்கின்றது மருத்துவம்..
(மருத்துவக் குறிப்புகள் :  நன்றி விக்கி)


பூவன் பழங்களைத் தானமாகக் கொடுப்பதால் பித்ரு தோஷம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்கின்றன..

நலம் வாழ்க

ஓம் சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூலை 01, 2024

இனிப்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 17 
திங்கட்கிழமை

உணவுத் திருவிழா 1

இறைவன் அளித்த இந்த உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது.. 

இதில் ஏழாவது தாது ஆகிய மூளை சரிவர இயங்குவதற்கு முதல் ஆறு தாதுக்கள் தக்கபடி  அமைய வேண்டியது அவசியம். 

இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்க்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

இனிப்பு தசையை வளர்க்கின்றது

புளிப்பு கொழுப்பினை வழங்குகின்றது

கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது

உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது

கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது

அக்காலத்தில் நமது பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவங்களும்,  இதனை வலியுறுத்தி நின்றன.. 

இன்று மாற்று முறை உணவுப் பழக்கத்தால் நமது நாட்டில் நோயாளிகள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்..

அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பழங்கள், காரட் போன்ற கிழங்குகள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது..
(நன்றி விக்கி)

இந்த அளவில் இனிப்புச் சுவையுடன் கூடிய பொங்கல் இன்று அறிமுகம்...

மகிழ்ச்சிக்கு ஆதாரமாகிய சுவை இனிப்பு..

இது யாருக்கும் தெரியாதா என்றால் இது தான் மரபு..

இன்று தொடங்கி ஏழு நாட்களும்  சிறு சிறு உணவுக் குறிப்புகள் தங்களுக்காக...

சர்க்கரைப் பொங்கல்  


தேவையானவை:
பச்சரிசி 250 gr
வெல்லம் 500 gr
பசும்பால் 750 ml
ஏலக்காய் 3
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு  15
உலர்ந்த திராட்சை 20 

பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
(விருப்பம் எனில்)

வாணலியில் நெய் விட்டு  தேவையான  முந்திரிப்பருப்பு உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். 

பாத்திரம் ஒன்றில்
பச்சரிசியை நன்றாக அலசி விட்டு ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் பால் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.. 


வேறு ஒரு உருளியில்  வெல்லத்தைப் போட்டு
மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு சூடாக்கவும்..

வெல்லம் இளகிக்
கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

தளதள என்று குழைந்து இருக்கின்ற சாதத்தில் வெல்லப் பாகினைச் சேர்க்கவும்..

ஒன்றுக்கு மூன்று என்ற கணக்கில் பாலும் பாகும் அதிகமாகி விடக் கூடாது.. 

வெல்லப்பாகினைச் சேர்த்த பிறகு   ஏலக்காயைத் தட்டிப் போட்டு வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கிளறவும்..

முந்திரி திராட்சையைப் பொங்கலில் சேர்த்ததும் மேலும் சிறிது நெய் சேர்க்கவும்..

நெய்யின் முறுகலான வாசம்  வீடெங்கும் பரவி நிற்கும்...

மாதம் ஓரிரு முறை சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை..


(விருப்பம் எனில் பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்துக்  கொள்ளலாம்..)

உணவில் இனிப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.. அளவுடன் இருப்பது அவசியம்.. முயற்சிக்கவும்..

சர்க்கரை பொங்கல்..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
**

நமது நலம்
நமது கையில்

சிவாய நம ஓம்
***

சனி, ஜூன் 08, 2024

உணவே உயிரே..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 26 
சனிக்கிழமை


நேற்று (7/6) சர்வதேச உணவு பாதுகாப்பு நாள்.. 

( நேற்று இந்தப் பதிவை வெளியிட இயலவில்லை.. )

World Food Safety Day, observed on June 7..

Food safety is a scientific discipline describing handling, preparation, and storage of food in ways that prevent food borne..



உலர்த்துதல்,  பாதுகாத்தல்,  (தானியங்களை வெயிலில் உலர்த்தி  வேப்பிலை நொச்சி இலைகளுடன் குதிர்களில்
பாதுகாப்பது)

பதப்படுத்துதல், உப்பிடுதல் ( அவல், உலர் பழங்கள், தேன் நெல்லி, ஊறுகாய் முதலானவை)
 
கொதித்தல் (சமைத்தல்)

நொதித்தல் (குறிப்பாக தயிர்)
பரிமாறுதல் (நலம் தரும் சூழலில் அன்னமிடுதல்
- என்கின்ற இன்றைய பாதுகாப்பு முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நம்மிடையே இருந்தன.. 

அவை தான் இன்றைய நவீன உணவுப் பழக்கங்களால் சிதைந்து கொண்டு இருக்கின்றன..



உணவு என்பது - பாரத கலாச்சாரத்தில் மிக உயர்ந்த கொடை.. 

சேவை - என்கின்ற நிலையில் இருந்த உணவை -  தொழில் என்கின்ற நிலைக்கு மாற்றம் செய்து பலகாலம் ஆயிற்று..


உணவு காசுக்கு விற்கப்பட்ட - உடல் உழைப்பிற்கு கொடுக்கப்பட்ட விவரங்கள் திருவிளையாடல் புராணத்தில் காணக் கிடக்கின்றன..

அப்போது, அதில் நீதி நியாயம் நேர்மை - எல்லாமும் இருந்தன..

இன்றைக்கு அப்படி எல்லாம்?.. - என்பதை ஆராய்ச்சி செய்ய இயலாது.. நமக்குத் தான் ஆபத்து!..

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..


அப்படிப்பட்ட இல்லங்களில் ஒரு வாய் உண்பதற்காக இறைவன் இறங்கி வந்த வரலாறுகளும் இங்கே பல நூறு..


உணவுத் தொழில் என்பது உண்பவர் தம்  ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது..

இதில் ஒவ்வொரு நிலையில் சுத்தம் சுகாதாரத்தைப் பேணுவது இன்றியமையாத ஒன்றாகும்..

உணவைச் சாப்பிடுபவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. 
உணவைச் சமைப்பவன் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது அடிப்படை..

கெட்டுப் போன காய்களைக் கொண்டு ஏதும் செய்ய இயலாது.. 

ஆனால் இன்றைக்கு கெட்டுப் போன இறைச்சி மீன் வகையறாக்கள் பற்பல இடங்களிலும் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களால் கைப்பற்றப்படுகின்ற செய்திகள் விவரமாக வெளிவருகின்றன..

இன்றைய சூழலில் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதற்கு பழகிக் கொள்ளாமல் இருப்பதே சாலச் சிறந்தது..



உண்ணுகின்ற உணவையும் அருந்துகின்ற நீரையும் தின்னுகின்ற வெற்றிலையையும் கண்ணன் என்று கருதி விட்டால் வெளியில் உணவகங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.. 

அப்படியே ஏற்பட்டாலும் நல்லதொரு - உணவை உணவகத்தை நாயகன் காட்டியருள்வான்!..


நம்முடைய நலம்
நம்முடைய கையில்
 
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், மே 15, 2023

தலைவாழை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல்நாள்
திங்கட்கிழமை

சமையல் குறிப்பு ஒன்றினை Fb ல் 
படித்ததனால் மனதில்
எழுந்த பதிவு..


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!..

உண்டி என்பது உணவு..
உண்பதெல்லாம் உணவு ஆகி விடுமா?..

உணவுக்கும் லட்சணங்கள் பல உண்டு..

அன்னத்தை லக்ஷ்மி என்றனர்.. அன்புடன் அதைத் தருபவள்
அன்பின் பூரணி - அன்ன பூரணி -  ஆகின்றாள்..

சிறைப்பட்ட நிலையிலும் காலந் தாழ்த்தி - தண்ணீர் கொடுக்கப்பட்டதால் மனம் பொறாமல் தன்னுயிரைத் தான் நீத்துக் கொண்டவன் கணைக்கால் இரும்பொறை..

சரி.. சோறும் நீரும் எப்படி இருக்க வேண்டும்?..

சமையலறையில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம்..

கோப தாப குரோதங்கள்  ஆக்ரோஷ விவாதங்கள் அனாவசிய சச்சரவுகள் நடந்தால் அவற்றின் அதிர்வுகளால் அங்கே சமைக்கப்பட்ட உணவு வகைகள் அசுத்தமாகி விடுகின்றன என்பது பழங்காலத்து நம்பிக்கை..

அதனை முழுப்பொய் என்று புறந்தள்ளுதற்கும் இயலாது..

துரியோதனனின் 
மேற்பார்வையில்  ஐம்பத்தாறு வகையான உணவு வகைகள் சிறப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தன - தூதாக வரவிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு என்று..

தூது செல்லும் இடத்தில் சாப்பிடுதல் முறையல்ல என்பதால் பொதுவானவராகிய விதுரர் இல்லத்தில் எளிய உணவை ஏற்றுக் கொண்ட - சர்வ வியாபியான ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியும் - 

கிருஷ்ணனை அவமதித்து சிறை பிடிப்பது எப்படி?.. என்ற குரூர நினைப்புடன் குழம்பித் தவித்து இருந்த துரியோதனின் முன்னிலையில் தான் தனக்கான சமையல் நடந்தது என்பது!..

சில குடும்பங்களில் பெண் எடுப்பது நிச்சயம் ஆன பிறகே கை நனைப்பார்கள்..

இன்னும் - 
யார்?.. என்ன விவரம்!.. என்பதை முழுதாக அறியாமல் சாப்பிடுவது பேராபத்தில் முடியும் என்பதற்கு மகாபாரதத்தில் சல்லியனின் கதை மிகச் சிறந்த எடுத்துக் காட்டு..

உண்ட வீட்டுக்கு ரெண்டகமா?.. - என்பது எல்லாரும் அறிந்ததே!..

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தவன் கர்ணன் என்பது பிரசித்தம்..

ஒருவரது வீட்டில் மற்றவர் பால் அருந்தி விட்டால் அவர்களுக்குள் பகை கூடாது என்பது  நீதி..

சண்டை சச்சரவுகள்,  வில்லங்க விவாதங்கள் இவற்றுக்கான இடம் அல்ல - சமையலறை..

சுத்தமான இடத்தில்  உணவு சமைக்க வேண்டும் என்பதைப் போல நல்ல எண்ணங்களுடன் தான் உணவு சமைக்கப்பட வேண்டும்..

தமது குடும்பத்துக்கான உணவைத் தாமே தயாரிப்பதே உத்தமம்..


சமைக்கும் பொழுது இறைவனை வாழ்த்தி கணவர் குழந்தை மற்றும் வீட்டில் இருக்கின்ற உறவுகளை நினைத்து , அவர்களது ஆரோக்கியத்தை வேண்டிக் கொண்டு சமைத்தல் வேண்டும்..


அதுமட்டுமன்றி தெய்வீக அதிர்வுகள் பரவிடுமாறு தோத்திரங்களை சொல்லிக் கொண்டு சமைக்க வேண்டும். அப்படிச் சமைக்கும் போது அதனுடைய அதிர்வுகள் சமையலறையில் உள்ள பொருட்களில் நிறைகின்றன.. 

உள் வாங்கப்படும் நல்ல அதிர்வுகளால் நல்லன விளைகின்றன..


இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, உணவின் வழியாக இறை உணர்வு  கொடுக்கப்படுகிறது. 

அசுத்தமான சூழ்நிலையில்  சுவாசிக்கும் காற்று நமக்கு  பிரச்னைகளை ஏற்படுவது போல -

சுத்தமில்லாத தண்ணீரும்   உணவும் நமக்கு நன்மையைத் தருவதில்லை..

அவ்விதமே
கோபத்துடன் சமைப்பதும்..

வேண்டாவெறுப்புடன் செய்யப்படும் சமையில் எத்தனை சுவையானதாக இருந்தாலும்  உடல் நலனுக்கு எதிரானதாகவே அமையும்..

வானலை வழியாக வீட்டுக்குள் வரும் அழுகைச் சத்தங்கள் அவலமான ஓலங்கள் கூக்குரல்கள்  வன்முறை, வஞ்சகப் பேச்சுகள், காட்சிகள் எல்லாமே நமக்குக் கேடானவையே!.. 

இவ்வாறான அமங்கல ஓசைகளைக் கேட்டுக் கொண்டு காய்களை நறுக்குவதும் சமைப்பதும்  நமது குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை தான் ஏற்படுத்துகின்றன..

துக்கம் நிகழ்ந்த வீட்டில் சமையல் செய்யமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்..

குடும்பத்தில் இறை உணர்வுடன் சமைக்கப் படுகின்ற உணவினால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதற்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன.
 

நல்ல எண்ணங்களுடன் சமைப்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு அவசியம் பரிமாறுவதும்..

(விருந்து) உபசரிப்பு பற்றி வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார்..

நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் பந்தி விசாரிப்பு என ஒன்று உண்டு.. 

ஏதோ ஒரு " ஆப்பைத் "  தேடி அதில் அழைப்பை அனுப்பி விட்டு அக்கடா என்று இருந்த காலம் அல்ல அது...


உள்ளூர் குடும்பங்கள் ஒவ்வொன்றையும் தேடித் தேடிச் சென்று அழைப்பு கொடுத்த பின்னும் - முகம் பார்த்து கல்யாணத்துக்கு வாங்க!.. - என்று அழைக்க வேண்டும்..

கல்யாண விருந்து என்பது கௌரவம்..

வாழையிலையில் விருந்திடுவது  பாரம்பரியம்.. மகிழ்ச்சி..


அதிலும் தலைவாழை என்பது (வாழை இலையின் நுனி) சிறப்பிலும் சிறப்பு..

தஞ்சை மாவட்டத்தின்   கல்யாணங்களில் எல்லாமே தலைவாழை இலைகளாகவே இருக்கும்..

கேரளத்தின் ஓண சத்யா

கல்யாணத்துக்கு
வந்தவர்களை அழைத்துச் சென்று பந்தியில் அமர வைப்பதும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கனிவுடன் உபசரிப்பதும்.. அடடா!..

பந்தி விசாரிப்பு சரியில்லை.. - என்று பெரிய சச்சரவுகள் கூட நடந்திருக்கின்றன..  

இதைப் பார்த்து விட்டு
அடுத்த பந்திக்கானவர்கள் கலைந்து போயிருப்பார்கள்..

உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் 
தம் மனையில் உண்ணாமை கோடியுறும்!..

என்று ஔவையார் பாடி வைத்ததும் இதைத்தான்..

இதே போல
ஏசி இடலின் இடாமை நன்று.. - என்பதும் ஔவையாரின் வாக்கு..

அதாவது,
ஒருவரைக் கேவலமாகப் பேசி விட்டு - அவருக்கு சோறிடுவதை விட சோறிடாமல் இருப்பதே நல்லது - என்கின்றார்..

மேலும்,
கொடியது கேட்கின் 
வரி வடிவேலோய்..
எனத் தொடங்கி,
ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது 
அன்பில்லாப் பெண்டிர்..
எனத் தொடர்ந்து,

அதனினும் கொடிது
அவர் கையால்
இன்புற உண்பது தானே!.. - என்று முடிக்கின்றார்..

இதனால், 
அன்புடன் உபசரித்தல்  அதி முக்கியம் என்பது புலனாகின்றது..


அலட்சியமாகப் பரிமாறுவதும்
அவசர அவசரமாக பரிமாறுவதும் மகா பாவம்..

இப்போது எல்லாம் தலை கீழ்.. ஒவ்வொரு வீடும் உறவுகள் அற்றதாகி விட்டன ..

இக்காலத்தில் சொல்ல வேண்டும் எனில்,
வீட்டுக்குள் தோக்கா பார்த்துக் கொண்டே பரிமாறுவது கூடாது..

சாப்பிடும் போது தோக்கா கவனிப்பதும்  சேப்போ பார்ப்பதும் கூடவே கூடாது..
(தோக்கா - தொலைக் காட்சி)
(சேப்போ - செல்போன்)

பரக்க பரக்க சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்..

அனைவரும் இயன்றவரை ஒன்றாக இருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சாப்பிடுவதே நல்லது..

உடல்நலன் மட்டுமல்ல மனநிலை மற்றும், நற்குணங்களுக்கு அடிப்படை உணவே!..

நவீன அரக்கர்களின் காலமாகிய இன்றைய சூழலில் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அவரவர் கைகளில் தான் உள்ளது..

வைகாசி பொறந்தாச்சு என்பதற்கேற்ப இன்றிலிருந்து நன்மைகள் பெருகட்டும்..

நம்முடைய நலம் 
நம்முடைய கையில்..
வாழ்க நலம்
வாழ்க நலம்!..
***