நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 30, 2025

திருவிழா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
வெள்ளிக்கிழமை



கடந்த ஞாயிறன்று சுவாமிமலையை அடுத்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் வசந்த உற்சவ பால்குடம்..

ஓரளவுக்கு எடுத்துள்ளேன் கண்டு மகிழவும்...




















ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

செவ்வாய், மே 27, 2025

முத்தழகு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13 
செவ்வாய்க்கிழமை


 முத்தழகு
 ***********
விழித்துக் கொண்ட
சுகந்தி கைக் கடிகாரத்தை நோக்கினாள்.. 

11:30 என ஒளிர்ந்தது. அருகில் படுத்திருந்த சித்தியைக் காணவில்லை..

' வெளியே சென்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.. ' - என்று நினைத்துக் கொண்டாள் சுகந்தி..

தலைக்கு மேல் - ' கரக்.. கரக்.. ' -  என்ற சத்தத்துடன் மின் விசிறி சுழன்று கொண்டிருந்தது..

இதே மாதிரியான சத்தம் மேலும் சில மின் விசிறிகளில்..
அனைத்தும் ஓடிக் கொண்டிருக்க கோயில் பிரகார மண்டபம் முழுவதும் காற்றோட்டம்.. 

புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் .. அதன் பிரகாரம் நெடுகிலும் வேண்டுதலின் பேரில்  ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக -  தூங்கிக் கொண்டிருக்கின்றனர்..

அன்று ஞாயிற்றுக் கிழமை..
தீராத பிரச்னை உடையவர்கள் ஞாயிறு இரவு கோயில் வளாகத்தில்  உறங்கினால் நல்லது என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.. 
கோயில் வளாகத்தில் இரவு தங்குவதால் குறைகள் தீர்கின்றன என்பது பலருக்கும் கண்கூடாகத்  தெரிந்தது..

இது கால வட்டத்தில் சுழன்று சுற்றுப் பகுதிகளிலும் பரவியது...

இப்போதெல்லாம் வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தோடு வருகின்றனர்.. கோயில் வளாகத்தில் தங்கி - உடன் கொண்டு வந்திருக்கும் கட்டுச் சோறு வகையறாக்களை சாப்பிடுகின்றார்கள்.. ஆங்காங்கே கூடி அம்பாளின் பெயரைப் பாடி பாராயணம் செய்கின்றனர்.. தூக்கம் வந்ததும்  நிம்மதியாக உறங்குகின்றனர்.. விடிந்ததும் எழுந்து அம்பாளைத் தரிசனம் செய்து விட்டு ஊருக்குத் திரும்புகின்றனர்..

இப்படியான சூழலில் நம்பிக்கை வெள்ளத்தில் நீந்திக் களிப்பதற்கு வந்தவர்களுள் ஒருத்தி தான் சுகந்தி.. துணைக்கு சித்தி ..

நிகழ்வின் நினைவுகளில் இருந்து மீண்ட சுகந்தி ஏறிட்டு நோக்கினாள்..
நேர் எதிராக  மேலைப் பிரகாரம்..
குழந்தைகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்க  வயதான சிலர் தூக்கம் வராமல் கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருந்தனர்..

சுவர் ஓரமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் மீது சுகந்தியின் விழிகள்  நிலைத்தன..

பாவாடை தாவணி.. தலை நிறைய மல்லிகை.. காதில் ஜிமிக்கி.. குனிந்த தலை நிமிர வில்லை.. ஏதோ புத்தகத்தை வாசிப்பது போல் இருக்கின்றது.. 

" பாவம்.. அவளுக்கு என்ன பிரச்னையோ!.. " - சுகந்தி நினைத்துக் கொண்டாள்.. 

இரவு எட்டரை மணியளவில்  பெரிய  மணியுடன் மேள தாளங்கள் சேர்ந்து  ஒலிக்க - கொடிமரத்தின் அருகில் நின்று மூலஸ்தானத்தில் அர்த்த ஜாம தரிசனம் செய்தது நினைவில் வந்தது சுகந்திக்கு..

தங்க நிறப் பட்டுச் சேலையில்  கோலாகலமாக விளங்கிய அம்பிகையிடம் - 
தனது குறையைச் சொல்லி கையேந்தி நின்றாள்..

" மாசத்துல நாலு நாள் வயித்து வலி வந்தா நான் என்ன செய்வேன்?.. சரியாக்கி வைக்க வேணாமா.. அம்மா!.. "
கண்களில் நீர் வந்தது.. 
சில விநாடிகளில் மகா தீப ஆராதனை..
அருமையான தரிசனம்.. 
தரிசனம் முடிந்ததும் பிரசாத விநியோகம்.. நெய் வடிய வடிய வெண்பொங்கல்.. ஒன்றுக்கு இரண்டாக தொன்னைகளில் வாங்கிக் கொண்டாள்..

" எதுக்கும் கவலைப்படாதே.. எல்லாம் சரியாகிடும்... " - என்றபடி முன் நடந்த சித்தியைப் பின் தொடர்ந்தாள் சுகந்தி..

பேச்சியம்மன் சந்நதி அடைக்கப்பட்டிருந்தாலும் சாம்பிராணி வாசம் கமழ்ந்து கொண்டிருந்தது..

நிலைப்படியைத் தொட்டு வணங்கிய சித்தி அங்கு கிண்ணத்தில் இருந்த திருநீற்றைக் கையில் எடுத்துக் கொண்டாள்..
தெற்குப் பிரகார மண்டபத்தில் நடந்து முன்னதாக விரித்து வைத்திருந்த போர்வைவை நெருங்கியதும் சுற்றிலும் விழித்து நோக்கிய சித்தி சொன்னாள்..

" சுகந்தி.. இந்த சீலைய மேலப் போர்த்திக்கிட்டு படும்மா!.. "

" சரிங்க சித்தி!.. "

மீண்டும் ஒருமுறை சுற்று முற்றும் பார்த்துக் கொண்ட சித்தி - சுகந்தியின்  ஆடையைத் தளர்த்தி  கையில் இருந்த திருநீற்றை அவளது வயிறு முழுதும் தடவி விட்டாள்..

" அம்பாள நெனச்சுக்கிட்டு  அப்படியே கண்ண மூடித் தூங்கு!.. "

அருகிலேயே சித்தியும் தலை சாய்த்தாள்..
அப்போது உறங்கிய சுகந்தி இப்போது தான் கண் விழித்திருக்கின்றாள்..
ஆங்காங்கே குறட்டைச் சத்தங்கள்.. கூடவே சில் வண்டுகளின் ரீங்காரம்... கோயிலுக்கு வெளியே நாய்களின் சத்தம்..  அவ்வப்போது நெடுஞ் சாலையில் விரையும் வாகனங்களின் இரைச்சல்..

" சித்தி வர்ற வரைக்கும் தனியா இருந்து  என்ன செய்றது!.. அந்தப் பொண்ணு கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம்!..."

சுகந்தி மெல்ல எழுந்தாள்.. ஆடையை சரி செய்து கொண்டாள்.. நடந்தாள்.. 

கால் கொலுசுகள் சிலுங்.. சிலுங்.. என்றன..

அந்தப் பெண்ணின் அருகில் சென்றதும் தான் சுகந்திக்குத் தெரிந்தது - அவளது கையில் எந்தப் புத்தகமும் இல்லை என்பது..

" என்னக்கா!.. நல்லா இருக்கீங்களா?.. " - என்று இயல்பாக விசாரித்தபடி அந்தப் பெண்ணின் அருகில் அமர்ந்தாள் சுகந்தி..

" நல்லா இருந்தா இங்கே எதுக்கு வர்றோம்?.. " - புன்னகையுடன் நிமிர்ந்தாள் அந்தப் பெண்..

" அதுவும் சரிதான்!.. "  
- புன்னகைத்த சுகந்தி பேச்சைத் தொடர்ந்தாள்....

" நானும் சித்தியும் வந்தோம்.. மாசம் ஒழுங்கா ஆகறதில்லை.. வயத்து வலி வேற.. ஏழை பாழைங்களால  ஓயாம டவுனுக்குப் போக முடியுமா?.. அம்மா நீதான் கதி... ன்னு அவ வாசல்..ல வந்து கிடக்குறோம்... "
நெடுமூச்செறிந்தாள் சுகந்தி..

இதைக் கேட்டதும் ஏறிட்டு நோக்கிய அந்தப் பெண் -
" அதுக்குத்தான் வயத்துல விபூதியப் பூசி விட்டாங்களா!... " - என்றாள்..

திடுக்கென்று இருந்தது சுகந்திக்கு...

' அப்போ தான் யாரும்  பக்கத்துல இல்லையே!.. ' - என்று நினைத்துக் கொண்டபோது,
" நாந்தான் பார்த்துக்கிட்டு இருந்தேனே!.. " 
- என்ற அந்தப் பெண்ணின் பதில் அவளை வியப்புக்கு உள்ளாக்கியது..

தன்னைப் பற்றி ஏதும் சொல்வாள் என்று எதிர்பார்த்த சுகந்தி பளிச்சென்று கேட்டு விட்டாள்..

" உங்களுக்கு என்னா பிரச்சன?..  கூட யாரும் வரலையா?.. "

கலகல என்று சிரித்த அவள் - 
" பிரச்னை  இவங்களுக்குத் தான்.. எனக்கு ஒன்னும் இல்லை.. துணைக்கு வா.. 
முத்தழகு!.. ன்னு  கூப்பிட்டாங்க..  வந்திருக்கேன்.. " - என்றபடி அருகில் படுத்திருந்தவர்களைக் காட்டினாள்..
அவளது பெயர் முத்தழகு என்று தெரிந்ததும் - 'அப்பாடா.. ' என்றிருந்தது சுகந்திக்கு..

" இன்னும் எத்தனை வாரம் வந்து நேர்ச்சை பண்ணனுமோ!.. "

" ஏன்... அம்மா மடியில படுத்து உறங்கறது சந்தோஷம் இல்லையா?.. "

" நான் அந்த அர்த்தத்துல சொல்லலை.. இந்த வயித்து வலி வராம இருக்க அம்மா கண்ணத் தொறந்து பார்க்கணும்!.. "

" அதெல்லாம்  பார்ப்பாள்... அவ பார்க்கம வேற யாரு பார்க்குறது.. அதுக்குத் தானே அவளுக்கு ஆயிரம் கண்ணு.. வலி எல்லாம் தீர்ந்துடும்.. பேச்சியம்மா திருநீறு தான் தீராத பிணி எல்லாம் தீர்க்குமே!.. நம்ம மாதிரி பெண் பிள்ளைகளுக்கு அவ தானே காவல்.. இருந்தாலும் நான் ஒன்னு சொல்லவா!.. "

" சொல்லுங்களேன்!.. "

" முல்லையோ மல்லிகையோ... அரும்புகளா ஒரு கையெடுத்து ஈரத் துணியில முடிஞ்சு பேச்சியம்மா மடியில வச்சு வேண்டிக்கிட்டா அரும்பு மலர்ற மாதிரி வயிறு மலர்ந்திடும்.. மாசாந்திரம் ஒழுங்காயிடும்... மண் பானத் தண்ணியில வேப்பிலைய போட்டு வச்சிருந்து அந்தத் தண்ணியக் குடிச்சா.. எந்த பிணியுமே வராது!.. "
- என்று சொல்லி விட்டு தீர்க்கமாகப் பார்த்தாள்...

" மகமாயி!.. " - என்றபடி கன்னத்தில் போட்டுக் கொண்ட சுகந்திக்கு வியப்பு..
" உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்!.. "
" அப்பன் ஆத்தாள் மகன்..ன்னு  எங்க குடும்பத்துக்கே வைத்தியம் தெரியும்!.. " - மீண்டும் புன்னகைத்தாள் முத்து..

" என்னமோ எல்லாரையும் நோய் நொடியில்லாம காப்பாத்துனா.. சரி.. "

" அதோ உங்க சித்தி வந்துட்டாங்க.. போய்ப் படுங்க... நடு ராத்திரி..ல அம்பாள் அரூபமா  சுத்தி வருவாள்.. ன்னு ஐதீகம்!.. " - என்றாள் முத்து...

" சரிங்க முத்து!.. " - என்றபடி அவளது கன்னத்தை வருடி முத்தமிட்ட சுகந்தி எழுந்து நடந்தாள்..
*****

கோயில் பறவைகளின் இன்னிசையோடு பொழுது விடிந்து கொண்டிருந்தது..
முன்னதாக விழித்துக் கொண்டவர்கள்  பிரகாரத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

மேலைப்  பிரகாரத்தை நோக்கினாள் சுகந்தி... அங்கே யாரும் இல்லை...
" போய்ட்டு வர்றேன்... ன்னு முத்துக்கிட்ட சொல்லிக்கலையே!.. "
சுகந்திக்கு உள்ளூர வருத்தம்...

ஆனாலும் முன் நடந்த சித்தியைத் தொடர்ந்தாள்..
கொடி மரத்தருகில் நின்று கை கூப்பினாள்..
மூலஸ்தானத்தில் -
 ஆரஞ்சு வண்ண பட்டுச் சேலையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..
கோயிலுக்கு வெளியே வந்தாயிற்று..  அப்போது தான் சுகந்திக்குத் தெரிந்தது - எப்போதும் ' சுருக் சுருக் .. ' என்றிருக்கும் வயிறு இப்போது மல்லிகைப் பூக்களால்  வருடப்பட்டதைப் போல் இருப்பதை..

சித்தியிடம் இதைச் சொல்ல நினைத்தபோது நேற்று ராத்திரி  தன்னுடன் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் முத்தழகு வேறு சில பெண்களுடன் கோயிலில் இருந்து வருவதைக் கண்டாள்..

சாலையின் இந்தப் பக்கம் பேருந்துக்காக நின்றிருந்த சுகந்தி சட்டென குறுக்காக ஓடி - அருகில் சென்று, 
" முத்தழகு!.. " - என்றாள்..

அருகில் இருந்தவர்கள் -
" யாரம்மா நீ?.. "  - என்றார்கள்..

" நேத்து ராத்திரி முத்தழகும் நானும் கோயில் மண்டபத்துல பேசிக்கிட்டு இருந்தோம்!.. "

"  என்னாது!.. பேசிக்கிட்டு இருந்தீங்களா?.. "

" ஆமாம்!.. "

" இவ!.. உங்கூட வாய் தெறந்து பேசிக்கிட்டு  இருந்தாளா?.. "

" ஆமாங்க... ஆமாம்!... "

" நல்ல பொண்ணும்மா நீ!.. "

" ஏங்க?.. "

"  கண்ணாலயும் கையாலயும் ஜாடை  தான் காட்டுவா.. இவ  பேசா மடந்தையம்மா..
பேசா மடந்தை!.. "

" என்னது பேசா மடந்தையா!.. அப்போ ராத்திரி எங்கூட பேசிக்கிட்டு இருந்தது யாரு!?.. "
திடுக்கிட்ட சுகந்தி அப்போது தான் கவனித்தாள்..
முத்தழகு ஆரஞ்சு வண்ண தாவணி உடுத்தியிருப்பதை!..
 ஃ
ஓம் சக்தி ஓம்
**

திங்கள், மே 26, 2025

பால் கேசரி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
திங்கட்கிழமை

அனைவருக்கும்
நல்வரவு


இன்று பால் கேசரி

தேவையானவை

ரவை  200 கி
பால் 390 மிலி
ரவை ஒரு பங்கு எனில் பால் மூன்று பங்கு
சர்க்கரை  சுவைக்கு ஏற்ப
(அதிக சீனி வேண்டாம்)
நெய் தேவைக்கேற்ப
ஏலக்காய்  3
குங்குமப்பூ சிறிது
முந்திரி 10 
உலர் திராட்சை 10

செய்முறை :

ஏலக்காயை பொடி செய்து  கொள்ளவும்..
 வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை சேர்த்து சற்றே  வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் ரவையை சேர்த்து இளந் தீயில்  வறுத்து  எடுத்துக் கொள்ள வேண்டும். 

சிறிது பாலுடன் குங்குமப் பூவைக் கலந்து கொள்ளவும்.

வாணலியில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து கொதி வந்ததும், அதில் ரவையை இட்டு  கிளறவும்.  அத்துடன் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து கிளறி விடவும் .

ரவை நன்கு வெந்ததும், அதில் சீனியைச் சேர்த்து  கிளறி,  தளதள - என வருகின்ற போது, அதில் நெய் சேர்த்துக் கிளறவும்..

அடுத்து அதில் ஏலக்காய் பொடி  வறுத்த முந்திரி மற்றும்  திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான பால்  கேசரி .

இது வழக்கமான  கேசரி தான்.. 
வழக்கமாக சேர்க்கின்ற
தண்ணீருக்குப் பதிலாக பால்..
அவ்வளவே!...

பதிவுகளின் நடைமுறை மாறி இருப்பதால் முதல் பதிவாக பால் கேசரி...

மகிழ்ச்சி.. நன்றி..

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

ஓம் சிவாய நம 
**

சனி, மே 24, 2025

கணக்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
சனிக்கிழமை

Fb யில் வந்த கணக்கு இது.. சற்றே அலங்காரங்களுடன்!..          


நேர்மையான  அலுவலர் அவர்..

அவருக்கு குடும்பச் சொத்தின் மதிப்பாக பல லட்சங்கள் கிடைத்தன...

அதை எதில் முதலீடு செய்வது எப்படி 
முதலீடு செய்வது
என்று அவருக்குப் புரியவில்லை..
கணிதப் பேராசிரியையான
அவரது மனைவி முழுப் பணத்தையும்  பத்திரமாக - தான் வைத்திருந்து தருவதாகச் சொல்லி தன்னிடம் கொடுக்கும்படி கேட்டார்..

அதில் - கணவருக்குத் துளியும்  விருப்பமில்லை.. 

சில நாள் குழப்பத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையில்   சமாதான உடன்படிக்கை ஆயிற்று..

ஒன்பது அதிர்ஷ்ட புள்ளிகள் கொண்ட பட்டியல் கணவரிடம் தரப்பட்டது..

அதன்படி அவர் அதிலிருந்து ஒரு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..  

அதை மனைவியின் வழிகாட்டுதலில் கணக்கிட்டு கிடைக்கும் கூட்டுப் புள்ளியின்படி கணவன் மனைவி இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் சாராம்சம்...

இருதரப்பிற்கும் சம்மதம்..

1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8.. 9..

அதன்படி
கணவர் ஒன்பதிற்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்து மனைவி சொன்னபடியே கணக்கிட்டார்..

கணக்கின் முடிவில்
விடையும் வந்தது... 

விடையைக் கண்டு பதறிப் போன கணவர் வேறொரு எண்ணைத் தேர்ந்தெடுத்து கணக்கிட்டார்..

அதுவும் நீர்க்குமிழி ஆயிற்று..

மறுபடியும் வேறொரு எண்ணை முயற்சிக்க -  அதுவும் வாண வேடிக்கை ஆயிற்று..
 
முடிவில் பெட்டிப் பணம் முழுதும் மனைவியின் கைகளுக்கே சென்றது..

எப்படி டா?..

இப்படித் தான்...

நீங்களும் முயற்சித்து முடிந்தால் இருவருக்கும் நல்வழி காட்டலாமே!..

முதலில் பட்டியலில் உள்ள விஷயங்கள் :

1) தான தர்மங்கள்
2) வைரக் கற்கள்
3) தங்க நகைகள்
4) வயலை வாங்கி மனைகளாக்கி விற்றல்
5) புதிய வீடு கட்டுதல்
6) பிரியாணிக் கடைகளுக்காக  கோழிப் பண்ணை 
7) ஒப்பனைப் பொருட்கள் வாங்குதல்
8) சேமிப்பு பாத்திரங்கள்
9) இல்லத்தரசியிடம் ஒப்படைத்து விடுதல்..

ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் ஒரு  எண்ணை எடுத்துக் கொள்ளவும்..

அதை மூன்றால் பெருக்கவும்..

வரும் விடையுடன் மூன்றைக் கூட்டவும்..

விடையை மூன்றால் மீண்டும் பெருக்கவும்....

இப்போது இரண்டு இலக்க எண் விடையாய்க் கிடைத்திருக்குமே!..

அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டவும்..

கையில் கிடைத்திருக்கும்
அந்த எண் தான் உங்களது முதலீட்டின் இலக்கு... 

அந்த அதிர்ஷ்ட எண்ணைக் கொண்டு - கையில் உள்ள பட்டியலின்படி  சரியானதைச் செய்ய வேண்டும் -  என்பது உடன்படிக்கை..

எல்லா கணக்கீடுகளும் ஒன்பதில் வந்து முடிந்தது என்பது தான் சிறப்பு..

குளிர்ந்த நீரைக் குடித்தபடியே பணப்பெட்டியின் சாவியை இல்லத்தரசியிடம் கொடுத்தார் கணவர்..

தன் கையில் இருந்த தாளை மீண்டும் ஒரு தரம் பார்த்துக் கொண்டார்..

எல்லாத்துக்கும் - அந்த கணக்கு டீச்சர் தான் காரணம்!..
😁😁😁

ஓம் சக்தி ஓம்

வெள்ளி, மே 23, 2025

வெள்ளி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 9
வெள்ளிக்கிழமை


நன்றென்று, தீதென்று நவிலும் இவ்விரண்டனுள்,  
நவின்றதே உலகில் உள்ளோர் நாடுவார் ஆதலின்
நானுமே அவ்விதம் நாடினேன் நாடினாலும்
இன்றென்று சொல்லாமல் நினது திரு உள்ளம் அது இரங்கி 
அருள் செய்குவாயேல் ஏழையேன் உய்குவேன்
மெய்யான மொழி இஃதுன் இதயம் அறியாதுண்டோ
குன்றம் எல்லாம் உறைந்து என்றும் அன்பர்க்கு அருள்
குமார தேவனை அளித்த குமரி மரகத வருணி
விமலி பைரவி கருணை குலவு கிரி ராச புத்ரி
மன்றல் மிகு நந்தன வனங்களில் சிறை அளி முரல
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..

மறி கடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் 
மாதிரக் கரி எட்டையும் மா நாகம் ஆனதையும்
மா மேரு என்பதையும் மா கூர்மம் ஆனதையும் ஓர்
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்,
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையும் திகிரி மாயவனையும்
அரையில் புலி ஆடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்
பழைமை முறைமை தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றதேது சொல்வாய்
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே நின்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம்

ஓம் சிவாய நம 
**

வியாழன், மே 22, 2025

மகிழ்ச்சி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல்நாள் 
வியாழக்கிழமை
 

உற்சாகமான நேரங்களில் நமது மனம் மகிழ்ச்சியாக 
இருக்கின்றதெனில் அதற்கு  நான்கு ஹார்மோன்கள் தான்
முக்கிய காரணம் என கண்டறிந்துள்ளனர்..

அவைகளாவன;
1. Endorphins
 எண்டோர்பின்
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நமது  உடலில் சுரக்கின்றது..

2. Dopamine 
டோபமைன் 
 நமது செயல்களுக்காக பிறர் நம்மைப் பாராட்டுகின்ற போது சுரக்கின்றது..

3. Serotonin 
செரோடோனின்
 நாம் பிறரது 
மகிழ்ச்சியை
நாடும் போது 
சுரக்கின்றது..

4. Oxytocin
ஆக்ஸிடாஸின்
நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்திக்கும் நிகழ்வுகளில் சுரக்கின்றது..
நன்றி விக்கி

எண்டோர்பின்
உடற்பயிற்சி அல்லது 
விளையாட்டுக்களில் ஈடுபட்ட பிறகு நமது  முயற்சிக்கு ஈடாக  உடலில்  சுரக்கின்றது. 

இதனால் தான் உடற்பயிற்சி செய்த பிறகு  ஒரு வகை மகிழ்ச்சியை உற்சாகத்தை உணர்கின்றோம்.. 

விளையாட்டுகளில் ஈடுபடுவதே  எண்டோர்பின் சுரப்பதற்கு  சிறந்த வழி..

முதியோர்களுக்கு ஆரோக்கியம் ஆயுள் என்பது பேரக்குழந்தைகளுடன்  விளையாடி
மகிழ்ச்சியாக இருப்பதே..

டோபமைன்
 நமது வாழ்க்கைப்  பயணத்தில், நம்மில் ஒவ்வொருவரும் 
பெரியதாகவோ , சிறியதாகவோ  ஏதாவது ஒன்றை இயன்றவரை
சாதிக்கின்றோம். 

இத்தகைய செயல்களை நாம் நினைவு கூர்ந்து மகிழும் போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. நாம் செய்த முயற்சிகளுக்கும்    
பணிகளுக்கும் பாராட்டுகள் கிடைக்கும் போது இந்த ஹார்மோன் சுரந்து நமக்குள் மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது. 

இதனால்தான்  மனைவியைப் பாராட்டுக என்பது..

பல குடும்பங்கள் கலவர பூமியாக இருப்பதற்குக் காரணம் நல்லதாக ஒரு வார்த்தையும் கிடைக்காததே..

நாள்தோறும் நாம் செய்யும் பணிகளுக்கான பாராட்டுகள் கிடைத்து விட்டால் இந்த ஹார்மோன் நமக்கு ஒரு வரப்பிரசாதம்..

செரோடோனின்
 நாம் பிறர் நலத்தை
நாடும் போதும், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் போதும் இந்த ஹார்மோன் சுரக்கின்றது. இதனால்தான் நாம்  உலகிற்கும், சமூகத்திற்கும் பயனுள்ளவற்றை செய்து கொண்டிருக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்லி வைத்தனர்.. 

செரோடோனின்..
இதனால்தான் நாம் பிறருக்கு ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போதும் உதவிக் கரம் நீட்டும் போதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்..


ஆக்ஸிடாஸின்
நாம் நமது அன்புக்குரிய நண்பர்களை சந்தித்து தோள் தொட்டு கை குலுக்கி,  அவர்களை ​​அரவணைத்துக் கொள்ளும்போதும் காதல் கலவி குழந்தை பிறப்பு இவைகளில் தனித்ததொரு உணர்வை அடைவதற்கு இதுவே காரணம்..

இந்த ஹார்மோன்
நமது உடலில் மிகு  மகிழ்ச்சியைத் தருகின்றது.. 

இதனால்தான்  வீட்டில் நம் மனைவியை, மற்றும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து அளவளாவுதல் அவசியம் என்றனர்.. 

இந்த சுரப்புகள் எல்லாம் உள்ளார்ந்த உணர்வுகளினால் மட்டுமே வசப்படுபவை.. 

ஒருவர் மற்றவரைப் பாராட்டி இன்சொல் சொல்லும் போது எதற்கும் நான் மசிய மாட்டேன் என்றிருந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை..


இவற்றிற்கெல்லாம் எடுத்துக் காட்டாக  பற்பல குறட்பாக்கள் உள்ளன..

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்..

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்..

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். 

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று..

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

மேற்கண்ட  குறட்பாக்களைச் சிந்தித்தால் நல்லதொரு குடும்பம் என்பது என்ன
பொது வாழ்க்கை
என்றால் என்ன என்பது விளங்கும்...

அத்துடன் மேலைநாட்டினரை விட நமது நாகரிகம் எத்தனை மேன்மையானது என்பதும் விளங்கும்...

நாமும் மகிழ்ந்து பிறரையும் 
மகிழ்வித்திருப்போம்..

இதன் பொருட்டுத்தான்
நான் எழுதிக்கொண்டு. இருப்பதும்..

நலங்கொண்டு வாழ்க
வளங்கொண்டு வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
**

புதன், மே 21, 2025

நல்லன

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 31
புதன் கிழமை


இன்று - விக்கி வழங்குகின்ற சில தகவல்கள்..

Endorphins
Endorphins are naturally produced hormones, specifically peptides, that act as neurotransmitters and hormones, primarily in the brain and pituitary gland, to relieve pain, reduce stress, and improve mood. 

Endorphins are synthesized and released by the hypothalamus and pituitary gland in response to pain, stress, or pleasurable activities like exercise, eating. 

Dopamine
Dopamine is a neurotransmitter and hormone that plays a crucial role in various bodily functions, including movement, emotions, and reward systems. It's often referred to as the "feel-good" hormone due to its involvement in pleasure and motivation.

Serotonin
tryptamine (5-HT), is a naturally occurring chemical in the body that acts as both a neurotransmitter and a hormone. It plays a crucial role in regulating mood, behavior, and various physiological functions. Serotonin is involved in regulating mood, happiness, and well-being. 

Oxytocin
often called the "love hormone" or "cuddle hormone," is a peptide hormone and neuropeptide produced in the hypothalamus and released by the posterior pituitary gland. It plays a crucial role in social bonding, love, reproduction, childbirth and the postpartum period. 

 நன்றி விக்கி


இவை குறித்து நாளையும் ஒரு பதிவு..

வளம் கொண்டு
வாழ்க

ஓம் நம சிவாய 
**

செவ்வாய், மே 20, 2025

கண்ணாத்தா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
செவ்வாய்க்கிழமை

 கை வண்ணம்..  


ஒளிமயமான சர விளக்குகள்.. அவற்றில் இருந்து எங்கும் பிரகாசம்..  புற்று முகத்தில் பூ முகம் காட்டி மஞ்சள் குங்குமத்துடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அம்பாள்..

இப்போது சின்னதாக முன் மண்டபமும் நீளமான ஆள் நடையும்.. அதற்கு முன்பு கீற்றுக் கொட்டகை தான்.. அதற்கும் முன் அதுவும் இல்லை.. புன்னை மரம்..
அதன் கீழாக புற்று.. அவ்வளவு தான் கோயில்..

மாடு மேய்ச்ச பையன் தான் முதல்.. ல பார்த்தது.. சின்னப் பொண்ணு ஒன்னு பூ மாலை எல்லாம் போட்டுக்கிட்டு இந்தப் புற்றுக்குள்ள எறங்கிப் போனதை..

ராசாவுக்கு சேதி சொல்லி விட்டாங்க.. அவுரு யானை மேல வந்து பார்த்துட்டு சீர் வைச்சு கொடுத்ததும்  நாடு முழுக்க பரவிடுச்சு..

அதற்கு அப்புறம் ஜனங்கள் வர போக..ன்னு ஆகி மூட்டை மூட்டையா நெல்லும் அரிசியும் அம்பாரம் அம்பாரமா இளநியும் தேங்காயும் ..  காணிக்கை..ன்னு கொண்டாந்து ஜனங்க சேர்த்துட்டாங்க.. பெரிய சாமியார் ஒருத்தர் வந்து புற்று மண்ணக் குழைச்சு அம்பாள் ரூபமா செஞ்சு வெச்சார்.. இத்தோட தங்கக் கிரீடம் , நெத்திப் பட்டம், திரு நேத்திரம், செவிப்பூ, முத்து புல்லாக்கு.. ன்னு செஞ்சு வைச்சு அம்பாளோட முகத்தை எடுத்துக் காட்டுனதும் ஜனங்க மத்தியில அம்மா.. அம்மா.. ன்னு  ஆனந்த கோஷம்... அந்த அம்பாளும் குழந்தை மாதிரி ஓடி வந்து இந்த ஜனங்களோட ஒட்டிக்கிட்டா..

அதுக்கு அப்புறம் ஊர்ப் பெரியவங்க ஒன்னா கூடி அம்பாள் பேர்ல கோயில் கட்றதுக்கு உத்தரவு கேட்டாங்க..
ராசாவும் ரெண்டு கிராமத்தை மானியமாக் கொடுத்தாரு .. எல்லாருமா சேர்ந்து கோயிலைக் கட்டுனாங்க..  

அதெல்லாம் ரொம்ப  வருசத்துக்கு முன்னே.. இப்போ நாடு வெள்ளக்காரன் கையில இருக்கு.. கோயிலுக்கு உள்ளே நுழைற வாசல்.. ல கோட்டும் சூட்டுமா கால் மேல கால் போட்டுக் கிட்டு உக்கார்ந்திருக்கான் துரை.. நாலடி தள்ளி ஜமக்காளம் விரிச்சு மணியக்காரரும் கோயில் கணக்கரும்.. பக்கத்துல வெள்ளிச் செம்புல தண்ணீர்..
கூடவே நாலு தடியனுங்க.. அம்பாள்கிட்ட இருக்கிற காணிக்கை குடம் நெறைஞ்சதும் தூக்கிக்கிட்டு வந்து வெள்ளைக்காரன் கிட்ட ஒப்படைக்கிறதுக்குன்னு..  அதனால இவனுங்களோட பேரு குடந்தூக்கி .. ஆனா ஜனங்க சொல்றதோ சொம்பு தூக்கி - அப்படி.. ன்னு..

அன்னைக்கு வெள்ளிக் கிழமை.. ஏராளமான ஜனங்க..  பால்குடம், கரகம், மாவிளக்கு.. ன்னு ஒரே ஆரவாரம்..

கோயிலுக்கு உள்ளே போன சனங்க திரும்பி வந்தபாடு இல்லை.. அம்பாளப் பார்த்த மனசுக்கு வேற என்ன வேணும்?.. பசி மயக்கம் இல்லாம - கிறங்கிக் கெடக்குது சனம்..
இருந்தாலும் கோயிலுக்கு வர்ற சனங்க.. அவங்களும் உள்ளே போய்த் தரிசனம் செய்யத் தானே வேணும்..  முடியலை.. நெரிசல்.. ஆ.. ஊ.. ன்னு சத்தம்.. தொரை கடுப்பாகிட்டான்..

" Nonsense... Why they are shouting?.. "

 அவம் பாஷையில கத்தி விட்டு - " Go Man..  போய்ப் பார்!.. " - என்று குடந்தூக்கி ஒருவனைப் பார்த்து சத்தம் போட்டான்..

அவனுக்கு அப்போது பிடித்தது ஏழரை..

கைப்பிரம்பால் தட்டிக் கொண்டே வந்தவன் காரை மண்டபத்தின் வாசலில் புற்று முகத்தின் முன் நின்று கொண்டு பெரிதாக சத்தம் போட்டான்.. 

" ஐயரே... எதுக்கு இவுங்கள இங்கே நிறுத்தி வெச்சிருக்கீங்க.. விறுவிறு.. ன்னு வெளியே அனுப்புங்க.. அங்கே தொரை கத்துறார் கேக்கலையா?.. "

" இதோ.. ஆச்சு.. இவாள்.. எல்லாம் வெகு தூரத்துல இருந்து வண்டி கட்டிண்டு வந்திருக்கா... கண் குளிர நின்னு பார்த்துட்டுப் போகட்டுமே... அவாள போ.. போ.. ன்னு விரட்டியடிக்கிறது பாவம் இல்லையா?.. "

" ஐயரே.. இங்கே பாவ புண்ணியம் எல்லாம் பார்க்காம காணிக்கை.. ய மட்டும் பாருங்க..
உமக்கு நேரம் சரி இல்லே.. ன்னு... நெனைக்கிறேன்.. இல்லேன்னா தொர வார்த்தைக்கு மறு வார்த்தைப் பேசுவீரா?... " 
- என்றபடி காணிக்கைக் குடத்தைக் கையால் அசைத்துப் பார்த்தான்.. அது இன்னும் நெறையலை..

" சிவ சிவா!.. நா ஒன்னும் தப்பா பேசலையே!.. "

" தெரியும் ஐய்ரே... நீர் பொம்பளைப் புள்ளைகள ஈரத் துணியோட வரச் சொல்றதும்.. கையத் தொட்டு எலுமிச்சம்பழம் தர்ற தும்.. நெத்தியில குங்குமம் வச்சி விடறதும்!.. " 

" அபச்சாரம்... அபச்சாரம்... இதுவரைக்கும் அம்பாள் சந்நிதியில் எந்தக் குத்தமும் செஞ்சதில்லயே.. சந்நதியில ஆவேசம் வந்து குழந்தைகள்  ஆடறச்சே விபூதி போடாம வேற என்ன தான் செய்றது?.."

இதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு குரல்.. 

" யோவ்.. சொம்பு தூக்கி.. இதனால ஒனக்கு என்னா பிரச்னை?.. போ யா அந்தப் பக்கம்!.. "

ஜனங்களிடையே பரபரப்பு..

" யார் என்னா சொல்றது?.. நீங்க அம்பாள வேண்டிக்கிட்டு எம் மகளுக்கு திந்நீறு போட்டு விடுங்க சாமீ!.. "

நடுத்தர வயதுடைய பெண் தன் மகளுடன்  முன்னே வந்தாள்..

" ஆட்டு மந்தை சனங்களுக்கு இவ்வளவு ஆங்காரமாப் போச்சா!.. " - என்று கொக்கரித்த குடந்தூக்கி,

" இந்த மாதிரி குளிச்ச ஈரத்தோட நனைஞ்ச சேலயோட பொண்ணுங்க வந்தா ஐய்ரு ஏன் நிறுத்தி வைக்க மாட்டார்!?.. "
- வக்கரித்தான்...

" டேய்.. என்னடா சொன்னே!.. "
முன்னால் நின்றிருந்த இளம் பெண் ஆவேசமானாள்.. விழிகளில் தீப்பொறி பறந்தது... 

நீதி கேட்க அம்பாள் வந்து விட்டாள் என்று எல்லாரும் பரவசமான நேரத்தில் - தாம்பாளத்தில் இருந்த தேங்காயை எடுத்தாள்.. அதை அந்த முரடனின் மண்டையில் அடித்தாள்.. உடைத்தாள்.. மலையேறி விட்டாள்...

முன் மண்டபம் எங்கும்  சிவப்பாகி விட்டது..
நடந்ததைப் பார்த்த  துரைக்கு கடுங்கோபம்.. பெரிய கோர்ட் வரைக்கும் போனான்... ஆனால் உள்ளூர் பஞ்சாயத்தார்களும் கண்ணால் கண்ட சாட்சிகளும் பலமாக இருந்ததால் பிராது
தள்ளுபடியாகி விட்டது ..

அது நடந்த வருசம் 1800..

இன்றைக்கு 1950..
 தாத்தாவின் தாத்தாவுடைய வாழ்க்கையில் அன்றைக்கு
நடந்த சம்பவம் இன்றைக்கு  மீண்டும் நடந்திருப்பதை நினைத்துக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் சுப்பு குருக்கள்..

அதே மாதிரி அச்சு அசலா இன்று காலையில் நடந்தது தான் அவருக்கு ஆச்சர்யம்..

சந்நிதி மத்தியில கம்பித் தடுப்பு.. அந்தப் பக்கம் ஆண்களும் இந்தப் பக்கம்  பெண்களும்.. நடுவால பத்தடி தூரத்துக்கு நடந்து நடந்து கற்பூரம் கொடுப்பார்.. எலுமிச்ச மாலை, ரோஜா மாலை, கதம்ப சரம், புது சேலை.. ன்னு யார் கொடுத்தாலும் அவங்க கண்ணு முன்னாலயே அம்பாளுக்கு சாத்தி கற்பூர தரிசனம் காட்டி கையில எலுமிச்சம்பழம் கொடுப்பார்..
கற்பூரத் தட்டுல நாலணா போட்டாலும் சரி.. ஒரு ரூபா துட்டு வைச்சாலும் சரி.. எல்லாருக்கும் அன்புதான்..  
எல்லாருக்கும் மரியாதை தான் .. அந்த குணம் வாழையடி வாழையா  வர்றது..

இதுக்கு சோதனையா வந்து சேர்ந்தான் கங்காணி.. எல்லாம் சரியா நடக்குதா..
ன்னு கண்காணிக்கிறது தான் அவன் வேலை..
பெரிய எடத்து சிபாரிசு.. அதனால சத்தமும் ஜாஸ்தி..

" குருக்களே.. ஒவ்வொரு மாலைக்கும் நடையா நடந்து நேரத்தை வீணாக்காதீங்க... ஒரு எடத்துல நின்னு மாலை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு விபூதி கொடுத்து ஜனங்கள வெளியே அனுப்புங்க.. கூட்டம் கூட்டாதீங்க.. மாலை எல்லாம் அப்புறமா போட்டுக்கலாம்.."

" ஐயா.. கொண்டு வர்ற மாலைய அம்பாளுக்கு சாத்துறத கண்ணால பார்த்தா தானுங்களே எங்க மனசுக்கு நிம்மதி!.. " - கூட்டத்தினுள் இருந்து ஒரு குரல்..

" உங்க மாலையத் தூக்கிக் கிட்டு ஓடிட மாட்டோம்... அவ்வளவு வக்கணை.. ன்னா கூட்டம் இல்லாத கோய்லுக்குப் போகணும்!.. " 

கங்காணியிடம் எகத்தாளம்..

" குருக்களே.. கறாரா சொல்லிட்டேன்.. இன்னும் ஒரு நாழி.. ல கூட்டம் கலையணும்.. இல்லேன்னா தர்மகர்த்தா ஐயாக்கிட்ட சொல்லி உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.."

கடூரமாக இருந்தது அவன் குரல்..

' அம்பாளைத் தேடி வர்றவங்களை என்ன சொல்லி நிறுத்துறது?.. ' 

உச்சிக் காலம் முடிந்து நடை அடைப்பதற்கு நேரமாகி விட்டது.. சொன்னபடிக்கு எதுவும் நடக்காததால் அங்கே உறுமிக் கொண்டிருந்தான் கங்காணி ..
சாயங்காலப் பொழுது எப்படி போகப் போகின்றதோ என்ற நினைவுடன் வீட்டுக்கு வந்து பேருக்கு ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு  திண்ணையில் உட்கார்ந்தவர் தான்..

மனசு இன்னும் ஆறாத நிலையில் பசுபதியைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டார்.. சந்நிதியில் சுப்பு குருக்களுக்கு ஒத்தாசையாக இருப்பவன் பசுபதி..

" அண்ணா..  சேதி தெரியுமோ!.. "

" என்னடா அது?.."

" காலைல உங்ககிட்டே வந்து கரைச்சல் பண்ணினானே கங்காணி..  அவன போலீஸ் காரங்க வந்து பிடிச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க!... "

" ஏண்டா?.. " - சுப்பு குருக்களுக்கு ஆச்சர்யம்..

" அவன் ரொம்பவும் மோசமான பேர்வழியாம்.. ஏகப்பட்ட சனங்கள ஏமாத்தி இருக்கானாம்.. நாலு ஊர் பஞ்சாயத்தார் போலீஸுக்குப் போனதில எல்லாம் ருசு ஆகிட்டதாம்.. ஜீப்புல வந்து அள்ளிக்கிட்டுப் போய்ட்டாங்க.. இன்னும் பத்து வருசத்துக்கு ஜெயில் சாப்பாடுதானாம்!.. "

" மகமாயி!.. "

" பிறத்தியார் பேச்சைக் கேட்டு அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்ததுல என் பேர் கெட்டுப் போய்ட்டதே.. ன்னு தர்மகர்த்தா தலையில அடிச்சுக்கறார்.. "

"  கௌரீ.. அந்தத் திறவு கோலை எடுத்துண்டு வா!.. "

" ஏன்னா.. சாயரட்சைக்குத் தான் இன்னும் நாழி இருக்கறதே!.. "

" தெப்பக்குளத்துல மூழ்கிட்டு அப்படியே ஈரத்தோட அம்பாள தரிசனம் செய்யணும்..டி!.. "

" அண்ணா பார்த்தேளா.. உங்க சீட்டைக் கிழிச்சிடுவேன்.. னான்!.. அவன் சீட்டே கிழிஞ்சு போய்டுத்து!.. "

சிரித்துக் கொண்டான்  பசுபதி..

"  அம்பா கண்ணத் தொறந்துட்டாள் அண்ணா!.."

" அம்பாள் என்னைக்கு.. டா கண்ணை மூடிண்டு இருந்தாள்?.. "
***
ஓம்  சக்தி ஓம் 
**