நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 11, 2022

மங்கல மார்கழி 27


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
-: குறளமுதம் :-

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி..226
*
-: அருளமுதம் :-

இன்று கூடாரவல்லி எனும் நன்னாள்..

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை..

திருப்பாடல் - 27


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்..
*
-: ஆழ்வார் திருமொழி :-


தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்து மிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. 1034
-: ஸ்ரீ திருமங்கையாழ்வார் :-
*
-: சிவ தரிசனம் :-
தேவாரத் தேனமுதம்

திருத்தலம்
ஸ்ரீ காளஹஸ்தி
திருக்காளத்தி


இறைவன்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
ஸ்ரீ திருக்காளத்திநாதர்


அம்பிகை
ஸ்ரீ ஞானப்பூங்கோதை
ஸ்ரீ வண்டார் பூங்குழலி

தீர்த்தம் - ஸ்வர்ணமுகி
தலவிருட்சம் - ஆல், மகிழ்


பஞ்ச பூதத் திருத்தலங்களுள்
வாயுவின் பகுப்பு..
சிலந்தி, நாகம், யானை வழிபட்டு உய்ந்ததால் சீகாளஹஸ்தி..


வேடுவராகிய திண்ணப்பர் நாளாறில் வலக்கண்ணை இடந்து ஈசனது கண்ணில் அப்பி 
கண்ணப்பர் - என
சிவசாயுஜ்யம் பெற்ற திருத்தலம்..

நால்வராலும் திருப்பாடல் பெற்று விளங்கும் மேற்கு நோக்கிய திருக்கோயில்..

ஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரரும் இங்கிருந்தே வடதிசைத் தலங்களைப் பாடிப் பரவினர்..
திருக்கயிலாய தரிசனம் செய்வதற்காக
அப்பர் ஸ்வாமிகள்
இங்கிருந்தே புறப்பட்டார்..
*

செண்டாடும் விடையாய் 
சிவனே என் செழுஞ் சுடரே
வண்டா ருங்குழலாள் உமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண நாதன் 
எங்காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்
தேத்த மாட்டேனே..7/26
-: ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
*
-: திருவாசகத் தெள்ளமுதம் :-


வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே..
-: மாணிக்கவாசகப் பெருமான் :-
*
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. கூடாரவல்லித் திருநாள் எனக்குள் எப்போதுமே மதுரை அனுபவங்களை நினைவூட்டும். வீட்டுக்கு வீடு சர்க்கரைப் பொங்கல். கோயில்களில் முந்திரி முழிக்கும் சர்க்கரைப் பொங்கல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  2. அருமையான பாசுரம்/பதிகம் பகிர்வுக்கு நன்றி. திருக்காளஹஸ்திக்குப் பல முறை போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நானும் திருக்காளத்தி தரிசனம் செய்திருக்கின்றேன்..

      நன்றியக்கா..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாசுரம் மிக அருமை. மற்ற பதிகங்களும் அருமை. கூடாரவல்லி நாள் இன்று அனைவருக்கும் இனிமையானதாக அமையட்டும்.தெய்வ படங்கள் அனைத்தும் கண்களில் ஒற்றிக் கொள்வது போன்ற அழகுடன் உள்ளது.

    இன்றைய தினம் அழகிய பரந்தாமனையும், திருகாளத்தியப்பனையும் சேவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. கண்ணப்பநாயனார் திருவடிகளையும் போற்றி வணங்கி கொண்டேன். சென்னையிலிருக்கும் போது ஒரு தடவை 80ல் காளஹஸ்தி சென்றிருக்கிறோம். அது அவ்வளவாக நினைவில் இல்லை. இங்கு நல்ல விபரங்களுடன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.. நன்றி..

      நீக்கு
  4. பதிவு அருமை.
    கூடாரவல்லி அன்று அனைவரும் மகிழ்ச்சியாக மன அமைதியோடு இருக்க இறைவன் அருள வேண்டும்.
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் பிரார்த்தனையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி. ம்

      நீக்கு
  5. சர்க்கரைப் பொங்கலாய் இனித்த பகிர்வு. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வெங்கட்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

    எங்கும் நலமே நிறையட்டும்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..