நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 12, 2021

வேண்டும்.. வேண்டும்..


நாடும் வீடும் 
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வேண்டும் வேண்டும்
நலம் தர வேண்டும்..
வேண்டும் வேண்டும்
துயர் அற வேண்டும்..

பொழியும் மழையும்
குறைந்திட வேண்டும்..
பொழுதும் இனிதாய்
புலர்ந்திட வேண்டும்..

அல்லலின் வெள்ளம்
வடிந்திட வேண்டும்..
ஆனந்தக் கண்ணீர்
வழிந்திட வேண்டும்..

துயரெனச் சூழ்ந்த
துன்பங்கள் யாவும்
தொலைவாய் சென்று
தொலைந்திட வேண்டும்..


வீடும் வாசலும்
விளங்கிட வேண்டும்..
விளங்கிடும் உயிர்கள்
மகிழ்ந்திட வேண்டும்..

வினைதரு பிணிகள்
உதிர்ந்திட வேண்டும்..
உறுதுயர் எல்லாம்
உலர்ந்திட வேண்டும்..

மண்ணும் மகிழ்வுடன்
பொலிந்திட வேண்டும்..
மனைதனில் மங்கலம்
மலிந்திட வேண்டும்..

நீதியும் நேர்மையும்
தழைத்திட வேண்டும்..
நீதி அல்லாதவை
அழிந்திட வேண்டும்..

மக்கட் பணியும்
மகிழ்ந்திட வேண்டும்..
செவ்விய நெறியில்
சிறந்திட வேண்டும்..

அறவோர் அரசில்
அணிபெற வேண்டும்..
குறையுறு கொடியோர்
குலைந்திட வேண்டும்..


உரைதரு பொய்யர்
ஒழிந்திட வேண்டும்..
ஊர்நிதி உண்டோர்
புதைந்திட வேண்டும்..

நீர்வழி அடைத்தோர்
அழிந்திட வேண்டும்..
சீர்வழி கெடுத்தோர்
சிதறிட வேண்டும்..

நல்லவர் கைகளில்
நாடுற வேண்டும்..
நாடுறும் நலந்தனில்
பீடுற வேண்டும்..

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..

வேண்டும் வேண்டுதல்
விளங்கிட வேண்டும்..
வேண்டுதல் யாவும்
வழங்கிட வேண்டும்..

வேண்டும் நலங்கள்
நல்கிட வேண்டும்..
நலிவுகள் நீங்கிட
நல்லருள் வேண்டும்..
***
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

  1. ஹரி ஓம் ஓம் நமச்சிவாய !  சில ஆசைகள், சில பேராசைகள்!  நல்லவை நடக்க ஆண்டவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      தாங்கள் சொல்வதைப் போல
      சில ஆசைகள்.. சில பேராசைகள்..

      எனினும் வேண்டிக் கொள்வோம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வேண்டும் கவிதை அருமையாக உள்ளது. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    வேண்டுபவற்றை வேண்டுவோம். நமக்கு வேண்டியதை இறைவன் தருவான். அனைத்தும் நலமாக நாராயணனின் திருப்பாதங்களை சரணடைவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

    வேண்டியதை வேண்டிக் கொள்வோம்.. வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி வைப்பான்..

    அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. //நல்லவர் கைகளில்
    நாடுற வேண்டும்..
    நாடுறும் நலந்தனில்
    பீடுற வேண்டும்..//
    நம் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை நடக்க வேண்டும் என்றால் இந்த வேண்டுதல் பலிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கனமழையால் ஏற்பட்ட துனபங்கள் தொலைந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டும்.
    கவிதை அருமை.

    வேண்டும் வரங்களை தருவார். நல்லதே நடக்க இறைவன் அருள்வார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  6. நாடு நலம் பெறட்டும் வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  7. கன மழை பெய்யட்டும் அது இயற்கை. இயற்கையைப் போற்றுவோம். மக்களும், ஆள்பவர்களும் பொறுப்புடன் இருந்தாலே போதும். நல்லது நடக்கும்.

    வரிகள் அருமை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      பெய்யும் கன மழை குறையட்டும்.. அதுவே வேண்டுதல்..

      நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நல்லதே நடக்கட்டும்..
      நன்றி..

      நீக்கு
  9. உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..