நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 06, 2021

நாடு வாழ்க..

 மச்சான்!...

என்னாடி என் தங்கம்?...

ஊரெல்லாம் ஒரே களேபரமா கெடக்கு... நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறே?..

நீ எந்தக் கட்சிக்குப் போடப் போறியாம்?...

ம்ம்.. அதெல்லாம் ரகசியம்!...


அப்ப.. இங்க மட்டும் என்ன வாழுதாம்!..

அது கிடக்கட்டும்.. கெரகம்.. இதென்ன ஓயாம பல்லு குத்திக்கிட்டு?..

இல்லே.. பிரியாணி தின்னது.. இடுக்குல சிக்கியிருக்கு.. அதான்!..

அதுக்காவ... கண்டதையும் எடுத்து பல்லைக் குத்துனா... சீக்கிரமே சின்ன இடுக்கு பெரிய இடுக்காவும்.. ஈறு கேடாவும்.. பல்லு தன்னால கழன்டு விழும்.. அப்புறம் பொக்கை வாய் தான்....

ஏ!... என்னா.. நீ ஒரேயடியா அளக்குற!..

நா.. ஒன்னும் அளக்கலை.. நெசத்தைத் தான் சொன்னேன்!.. இப்பவே பேசுறது புரிய மாட்டேங்குது!.. இன்னும் பொக்கை வாய் ஆகிப் போனா வெளங்கிடும்!... 

வாய் நெறைய தண்ணி எடுத்து நல்லா கொப்புளிச்சு - த்தூ!..ன்னு துப்புவியா?... அதை உட்டுட்டு.. குச்சிய எடுத்து குத்திக்கிட்டு இருக்குற!..

என்ன செய்யிறது.. உன்னைய உங்கப்பாரு படிக்க வெச்சுட்டாரு.. நீயும் நல்ல வெவரமா பேசுற!..

எதுக்கெடுத்தாலும் அப்பாரு.. அப்பாரு..ன்னு சொல்லிக்கிட்டு இருக்கே.. ஏன் நீயும் படிக்க வேண்டியது தானே!.. பள்ளிக் கூடம் போ.. ன்னு அனுப்பி வெச்சா... நீ.. சினிமா கொட்டாயில போயி நின்னே!...

அதனால என்னா.... உன்னைய கண்ணு கலங்காம வெச்சிக்கிறேனா.. இல்லையா?..

அதுக்கு ஒன்னும் கொறச்சலில்லே!.. நேத்து ஆட்டுத் தலை சின்னத்தப் பார்த்து போடுங்கம்மா.. ஓட்டுன்னு வேகாத வெயில்ல நாயி மாதிரி கத்திக்கிட்டுப் போனே?..

ஏய்!.. என்னாது?..
என்னைய நாயி ..ங்கிறே!..

ஏன்னா.. நாய்க்குத் தான் ஒரு லச்சியமும் கெடையாது... ரெண்டு நாளைக்கு முன்னால வௌவால் சின்னத்துக்கு ஓட்டு கேட்டுக்கிட்டு ஊரைச் சுத்துனே!.. நேத்து ஆட்டுக் குட்டி சின்னம்..  நாளைக்கு பச்சோந்தியா?..  விலாங்கு மீனா?..

தேர்தல்...ன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்..டி தங்கம்!..

ம்க்கும்!.. தங்கம்.. பித்தாளை..ன்னு கிட்டு!... ஏழை பாழை....ங்களுக்கு யாரால என்னா புண்ணியம்?.. அததுங்க தன்னால இருக்கிறதுக்கும் உழைக்கிறதுக்கும் எவ்வளோ கஷ்டப்படுதுங்க... 

இவனுங்க என்னான்னா கோடீஸ்வரனுங்க.. குளுகுளுப்பா கார்ல வந்து எறங்கி எங் கால்...ல விழுந்து ஓட்டு கேக்குறானுங்க...

அதானே தேர்தல்!...

ஆமா.. அதான் தேர்தல்!... அந்த ஆளுங்க ஜெயிச்சாலும் தோத்தாலும் மறுபடி இங்கே வந்து நிப்பானுவளா?.. 

ஏதாச்சும் ஒன்னு...ன்னா.. நாம தான் தேடிப் போயி கால்... ல விழணும்!... ஐயா... பாலத்தைக் கட்டிக் கொடுங்க... ஐயா.. கரண்டு கம்பி இழுத்துக் கொடுங்க.. அப்படின்னு!...

நீ.. நல்லாவுல பேசுற!.. உன்னைய கொண்டு போயி மேடையில ஏத்தியிருக்கலாம்!...

ஏன்?.. நாம நல்லா இருக்கிறது புடிக்கலையா.. உனக்கு!... 

இவங்கள்ளாம்.. நாம நல்லா இருக்கோணும்.. ங்க்கறதுக்காகவா ஓட்டு கேக்குறாங்க.. அவங்க .. எடுப்பு தொடுப்பு, புள்ள குட்டி, மாமன் மச்சான், பேரன் பேத்தி - இதுங்க எல்லாம் நல்லா இருக்கறதுக்காகத்தான் ஓட்டு கேட்டு அலையிறாங்க!...

..... ..... ..... ..... .....?..

காவேரி ஆறு கஞ்சியா ஓடுனாலும் நாய் பாடு நக்கித் தான் தீரும்!.. கோழி பாடு கொத்தித் தான் தீரும்!. அந்த மாதிரி - யாரு மந்திரியானாலும் தந்திரியானாலும் நம்ம பாடு உழைச்சாத்தான் தீரும்.. ஒவ்வொரு  பருக்கைக்கும் வேர்வை சிந்தியே ஆவணும்!..

நம்ம கஷ்டம் எல்லாம் தீர்க்கத் தானே... என்னென்னவோ சாமான் எல்லாம் சும்மாவே தர்றாங்களாம்!..

அட.. அறிவு கெட்ட மச்சான்.. ஒனக்கு மூளையே இல்லையா!...

ஏன் டி.. தங்கம்.. இப்படி கேக்கிற?..

யாரு வூட்டுக் காசை எடுத்து யாருக்கு கொடுக்கிறது?.. வேல வெட்டிக்குப் போகாம மூனு வேளையும் ஓசியில கிடைச்சதத் தின்னுபுட்டு சும்மாவே கிடந்தா என்னத்துக்கு ஆவும் இந்த ஒடம்பு!..

அதான் வைத்தியச் செலவுக்கும் பணம் தர்றாங்களே!..

ஆமா... அப்படியே.. மயானச் செலவுக்கும் கொடுத்திடலாம்!.. ஊரை அடிச்சி உலையில போட்ட மாதிரி - நம்ம நாட்டுப் பணத்தைக் கொள்ளை அடிச்சி தேசம் விட்டு தேசத்தில மூட்டையா கட்டிப் போட்டுருக்கானுங்களாம்!..

..... ..... ..... ..... .....?..

நாடு இன்னும் யார் யாரு கையில எல்லாம்  போய்ச் சேருமோ!.. பயமா இருக்கு மச்சான்!..

அதெல்லாம்.. விடு.. ராசாத்தி... யாரு வந்தாலும் முன்ன மாதிரி இல்லே.. இப்போ எல்லாம் ஜனங்க ரொம்ப வெவரமா ஆகிட்டாங்களாம்.. ஏன்.. எதுக்கு.. ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.... அப்படி... இப்படி..ன்னு சொல்லிக்கிட்டு யாரும் ஏமாத்த முடியாது..ன்னு... கல்லு வீட்டு சுந்தரி அக்கா சொன்னாங்க!..

நல்லாத் தான் சொல்லியிருக்காங்க!... ஆனாலும், நரி ஒரு நாளும் ஆட்டுக் குட்டிக்காக வருத்தப்படாது!...

சரி.. சரி.. வெயிலு எறங்கிடுச்சி.. வா.. கடலைக் கொல்லைக்குப் போவோம்.. சூல் இறங்கிற நேரம் தினசரி சுத்தி வரலே...ன்னா.. நாய் நரி பூந்து அழிச்சிடும்!.. பட்ட பாடு வீணா போய்டும்!... கடலைக் காடு தான் நம்ம சொத்து... அப்பன் பாட்டன் தேடி வெச்சது... அதைக் காப்பாத்த வேணும்...

அந்த மாதிரிதான் இந்த நாட்டையும் பார்க்க வேணும்.. கண்ட நரியும் உள்ளே நுழைஞ்சிடாம காப்பாத்த வேணும்!..


தங்கம்.. ஓட்டு போடறதுக்கு காலைலயே போயிடனும்... போன தடவை மாதிரி முதல் ஓட்டு நம்மளோடதா இருக்கணும்!...

அது சரிதான்.. கோழி கூப்புட எழுந்தா சரியா இருக்கும்!.. நீ பாட்டுக்கு எங்கேயும் போயி ஊரு வம்பை வாங்கிக்கிட்டு வந்திடாதே.. சொல்லிட்டேன்..

நீ சொன்ன வார்த்தையை.. நான் மீறவே மாட்டேன் தங்கம்!..

அங்கே தேவகோட்டை அண்ணாச்சி - ஓட்டைப் பிரிக்கிறான்.. ஓட்டைப் பிரிக்கிறான்.. ன்னு நடுராத்திரியில கனா கண்டுட்டு சத்தம் போட்டு பெரிய கலாட்டா ஆயிடிச்சாம்!..

அவுங்க சொன்னா... சரியாத்தான் இருக்கும்.. அப்படியே தடிக் கம்பை எடுத்து தலைல போட வேண்டியது தானே!..

அப்படி போட்டதுலதான்.. நாலு பேரு ஆஸ்பத்திரியில கெடக்காங்க ளாம்!...

நான் சொல்லலை!... அங்க பாரு ஒரு நரிய.. வேலியப் பிரிச்சிக்கிட்டு.. எட்றா கல்லை... ஓஹோய்!..

ஒரு நரியல்ல!.. 
ஒன்றன் பின் ஒன்றாகப் பல நரிகள்!..

கடலைக் காட்டின் வேலி இடுக்கிலிருந்து 
பிய்த்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி மறைந்தன..
***

சென்ற தேர்தலின்போது
எழுதப்பட்ட பதிவு இது..
மீண்டும்
புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது..
* * *

தேர்தல் நாளாகிய இன்று
தவறாமல் வாக்களித்து
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவோம்..
***

நாடு வாழ்க
நலம் வாழ்க!..
***

20 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    அருமையான சொல்லாடல்கள் நிறைந்த பதிவு. நாட்டு நிலைமைகளை (குறிப்பாக இன்றைய தினம்) விளக்கமாக சொல்லி கணவனும் மனைவியும் பேசியதை ரசித்தேன். இடையில் வரும் கணவன் மனைவி ஜோக்கும் அருமை. இது மீள் பதிவானாலும் எனக்குப் புதிதுதான். ரசித்துப் படித்தேன். "ஓட்டைப் பிரிக்கிறான்" கனவின் சூட்சும வரிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. ஆழமான கருத்துக்கள் நிறைந்த பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இந்தப் பதிவும், இன்றைய எ.பி பதிவும் என் "நண்பர்கள் பதிவில்" ஏனோ வரவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இந்தத் தேர்தலுக்கான பதிவு ஐந்தாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இப்போதும் பொருந்தி வருவதைப் போல அடுத்து வரும் தேர்தலுக்கும் பொருந்தி வரும்...

      ஏனெனில் மக்களும் அரசியல்வாதிகளும் திருந்தப் போவது இல்லை..

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஹா.. ஹா.. யதார்த்த நடை பேச்சு வழக்கு ரசித்தேன் ஜி.

    //ஓட்டைப் பிரிக்கிறான்// பழைய வசனத்தை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி

    படத்தின் நகைச்சுவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இந்தப் பதிவிற்கான காரணம் தங்களது பதிவு தான்.. தாங்களும் இதனை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மீள் பதிவானாலும் எக்காலத்துக்கும் தேவையான ஒன்று. நல்லதொரு பதிவுக்கு நன்றி. இனிமேல் தான் ஓட்டுப் போடப் போகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மீல் பதிவா? படித்த நினைவு இல்லை.
    இருந்தாலும் எக்காலத்திலும் பொருந்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. மீள் பதிவு - சரியான சமயத்தில், சரியான நாளில்.

    சுவையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மிக மிக அருமை. படித்த நினைவில்லை. அன்பு துரை செவராஜு, நீங்களும், தேவகோட்டைஜியும்
    விழித்த்ருங்கள். நாட்டுக்குத் தேவையான விழிப்பைக் கொண்டு வரும் பணி உங்களுடையது.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  9. நல்ல பதிவு. இன்னும் சற்று முன்னதாக போட்டிருக்கலாம். 

    பதிலளிநீக்கு
  10. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    இந்தப் பதிவை மீண்டும் போடலாம் என்று முதல் நாள் இரவு தான் மனதில்
    தோன்றியது..

    அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. துரை செல்வராஜு சார் - நலமா - ஏன் EB Whatsapp குழுவிலிருந்து விலகினீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கௌதமன்..

      ஏதோ பழைய எண்ணில் ஆக்டிவேட் ஆகி மறுபடியும் வாட்ஸாப் கோளாறாகி இருக்கின்றது.. இதுபோல என் மகளுடைய எண்ணும் துண்டிக்கப் பட்டுள்ளது... இதற்குள் புகுந்து தோண்டித் துருவுவதற்குத் தெரியவில்லை.. இருப்பினும் கவனிக்கின்றேன்...

      தங்களது அன்பினுக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..