நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், செப்டம்பர் 19, 2016

ஏறு எனும் பேறு

ஏறு எனும் சொல் மிகவும் பொருள் பொதிந்தது..

கால்நடைகளைப் பொதுவாக மாடுகள் என்று குறித்தாலும் -

மாடு எனும் சொல் - செல்வத்தைக் குறிப்பதாகவே அமைகின்றது..

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றயவை.. (0400)

- என்ற திருக்குறள் ஒன்றே இதற்குச் சான்றளிக்கும்..

வீரமிகு காளையை - ஏறு எனக் குறித்தது பழந்தமிழ்...

வீரமிகும் காளையை அடக்குதல் ஏறு தழுவுதல் எனப்பட்டது..

ஏறு தழுவி வெற்றி கொண்ட - காளை (இளைஞன்) தான் விரும்பிய பெண்ணை மணமுடிப்பது மரபாக இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன..

திடகாத்திரமான இளைஞனைக் கூட - காளை என்பதே வழக்கம்...

பாரம்பர்ய ஏறு தழுவுதலுடன் தொடர்புடையவை - புலிக்குளம் காளைகள் எனப்படுகின்றன..


இயற்கை நமக்களித்த செல்வங்களுள் மிகச் சிறந்தவை - காளையும் பசுக்களும்!..

அத்தகைய காளையும் பசுவும் சைவத் திருமுறைகளில் பலநூறு இடங்களில் புகழ்ந்து பேசப்படுகின்றன..

எனை ஆளுடைக் காளை!.. - என்றே, சிவபெருமானை - திருப்பூவனூர் திருப்பதிகத்தில் குறிக்கின்றார் திருநாவுக்கரசர்..

மேலும்,

இறைவன் நீ.. ஏறூர்ந்த செல்வன் நீயே!.. - என்று வணங்குகின்றார்..

நப்பின்னையை மணம் முடிக்கும் காலத்தில்
மாயக் காளைகள் ஏழினை ஸ்ரீ கண்ணபிரான் அடக்கிய வரலாற்றினை -

ஏறுடன் ஏழு அடர்த்தான்!.. - என்றும் திருக்குறுக்கைத் திருப்பதிகத்தில் என்றும் குறித்தருள்கின்றார் திருநாவுக்கரசர்....

இதனையே பெரியாழ்வார் -

நப்பின்னை தன்திறமா நல்விடை 
ஏழளவிய நல்லதிறலுடை நாதன்!.. (0070)

- என்று புகழ்ந்துரைக்கின்றார்..

திருஞான சம்பந்தப் பெருமான் - முதல் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே

தோடுடைய செவியன் விடையேறி!..
- என்று ஈசன் எழுந்தருளும் திருக்கோலத்தைக் குறித்துப் பாடுகின்றார்..

மழலை வெள்ளேறு - என்றும் இளமையான காளை!.. - என்று குறிப்பவர் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்..

இவ்வாறு காளையையும் இறைவனையும் புகழ்ந்து சைவ சமயத் திருமுறைகளில் எங்கெங்கும் காணக் கிடைக்கின்றது..

இவை மட்டுமின்றி இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகள்..

இத்தகைய காளைகளை மீட்டெடுக்கும் வகையில் -

ஜல்லிக்கட்டு மற்றும் பாரம்பர்யம் மீட்புக் குழுவின் சார்பாக நேற்று (18/9) காலை முதல் மாலை வரை ஈரோடு AET பள்ளி வளாகத்தில் காங்கேயம் கால்நடைக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது..

இந்தக் கண்காட்சியினை நடத்தியவர்கள் -
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தினர்..

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தினர்
FBல் வழங்கிய படங்கள் இன்றைய பதிவில்..









தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற இந்த கண்காட்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய வட்டாரங்களின் கால்நடைகளுடன் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்..

தமிழகத்தின் பாரம்பர்யமான காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி, ஆலம்பாடி இனங்களும் மற்றும் மலைமாடுகளும் பாதுகாக்கப்படவேண்டும்..

பாரம்பர்ய மாடுகளை வளர்க்க அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்..

என்று - கண்காட்சியில் நடந்த விழாவில் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு கார்த்திகேயா சிவசேனாபதி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்..




வளரும் தலைமுறை
பெருந்திரளான விவசாயப்பெருமக்கள் கலந்து கொண்ட இந்த கண்காட்சியின்  பயனாக பாரம்பர்ய காளைகள் மீட்டெடுக்கப்படவேண்டும்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.. (1033)

உணவின் முன்னது உழவு..
உழவு இல்லையேல் உணவு இல்லை..
அந்த உழவின் முன் நடப்பவை காளைகள்..
அவற்றைப் பாதுகாப்பது நமது கடமை!..

பாரம்பர்யம் காப்போம்.. பண்பாடு காப்போம்..
பசுக்களையும் காளைகளையும் பாதுகாப்போம்!..

வாழ்க நலம்!..  
*** 

14 கருத்துகள்:

  1. மிக அருமை! நீங்கள் எழுதியுள்ள‌து போல அவசியம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. உம்பளச்சேரி, காங்கேயம் கேள்விப்பட்டுள்ளேன். மற்றவற்றைப் பற்றி தங்கள் பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமை ஐயா
    அருமை
    பாரம்பரியம் எப்பாடு பட்டாவது காக்கப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதே ஆவல்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. உண்மை நீங்கள் சொல்வது காக்கப்படவேண்டிய செல்வங்கள் காளைகள்.
    முன்பு விவசாயி வீட்டில், காளைகள், பசுமாடுகள் உண்டு.

    திருவிளக்கு வழிபாட்டில் பட்டி நிறைய பால் பசுவைத் தாரும் அம்மா என்று என்று அனு தினமும் பாடுவார்கள். நீங்கள் சொன்னது போல் செல்வங்கள் தான் இவை.
    இறைவன் அருளால் செல்வங்கள் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய அன்பான வேண்டுதல் பலிக்கட்டும்..

      நல்ல நேர்மையான விவசாயிகளின் கையில் இருந்த பசுக்கள் ஊருக்கே உபகாரமாக இருந்தன..

      என்றைக்கு பால் வியாபாரம் என்ற போர்வைக்குள் அகப்பட்டனவோ - அன்றைக்கே பசுக்களுக்கு ஆபத்து மூண்டது..

      பட்டி நிறை பால் பசுக்கள் என்று வேண்டும்போதே - காளைகளையும் கன்றுகளையும் சேர்த்தே பிரார்த்தனை செய்யப்பட்டது..

      ஆனால் - இன்றைக்கு பாரம்பர்ய காளைகள் அழிவின் எல்லையில் உள்ளன.. செயற்கைக் கருவூட்டலால் சீர்கேடுகள் தான் விளைந்தன..

      அதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எங்கோ ஒரு ஊரில் ( இடம் நினைவில்லை)விவசாயிகளுக்கு ஜாதிப் பசுக்கள் இலவசமாகக் கொடுக்கப்பட அவற்றைப்பராமரிக்க முடியாமல் விவசாயிகள் தவித்தார்கள் என்று வாசித்த நினைவு பண்டைக்கால வாழ்வுமுறைகள் இக்காலத்துக்கு ஒத்து வருமா சிந்திக்கவேண்டும் அந்தக் கால ஏறேறுதல் முறைகள் வேறு இப்போது கடைப்பிடிக்கப் படுபவை வேறு ஏறேறி பெண்களை மணப்பது என்றால் பலருக்கும் மணம் செய்ய இயலாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      பாரம்பரியமான காளைகளையும் பசுக்களையும் மீண்டும் பரமரிக்க வேண்டும் என்பதே நோக்கம்.. மற்றபடி மாடுகளை அடக்கி மாப்பிள்ளையாகி கல்யாணம் முடிப்பது என்பதெல்லாம் ஒத்து வராது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான தகவல். வருடா வருடம் இந்த மாதிரி நடப்பது என்பதும் இதுவரை கேள்விப்படவில்லையே என்று தோன்றியது. நமது பாரம்பரிய விஷயங்களை மறந்து கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      ஒவ்வொன்றாக பாரம்பரியங்கள் மீட்டெடுக்கப்படும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. வருடா வருடம் நடப்பது அறிந்திருந்தாலும் தகவல்கள் மிக அருமை. பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பது மிக நல்ல விடயம் முயற்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி. படங்கள் மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      கால்நடைச் செல்வங்கள் காக்கப்படவேண்டும்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..