நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 13, 2016

திருஅம்பர் மாகாளம்

அகில பாரதத்திலும் புகழுடன் திகழும் சிவாலயங்களுள் -
மாகாளம் என்ற சிறப்புடன் விளங்கும் திருக்கோயில்கள் மூன்று..

அவற்றுள் ஒன்று தான் - திருஅம்பர் மாகாளம்.. 

மற்ற இரண்டு திருத்தலங்கள் -

ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..

- என்பன..

இந்த மூன்று திருத்தலங்களிலும் ஈசன் எம்பெருமானின் திருப்பெயர்
ஸ்ரீ மாகாளேஸ்வரர் - என்பதாகும்...

இந்த மூன்று திருத்தலங்களும் மனித ஆயுளை நீட்டித்துத் தர வல்லவை - என்றுரைக்கின்றனர் ஆன்றோர்..

உஜ்ஜயினி மாகாளம் - வடநாட்டிலுள்ள திருத்தலம் ..
பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்று..

திருஇரும்பை மாகாளம் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது..
தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் முப்பத்திரண்டனுள் ஒன்று..

திரு அம்பர் மாகாளம் - திருஆரூர் மாவட்டத்திலுள்ளது..
காவிரியின் தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது..

தற்போது திருமாகாளம், கோயில் மாகாளம் என்ற பெயர்களில் விளங்குகின்றது..


ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..
திரு அம்பர் மாகாளம்..

இந்த மூன்று திருத்தலங்களும் ஸ்ரீ மகாகாளியுடன் தொடர்புடையவை..

குறிப்பாக - ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளீஸ்வரி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பல ஊர்களிலும் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றாள்..

தஞ்சை கீழவாசலிலும் ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளீஸ்வரியின் திருக்கோயில் விளங்குவது குறிப்பிடத்தக்கது..

ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளம்..
திருஇரும்பை மாகாளம்..
திரு அம்பர் மாகாளம்..

எனும் மூன்று திருத்தலங்களிலும் - ஸ்ரீ மகாகாளீஸ்வரி தனது திருக்கரங்களால் சிவலிங்க வடிவினை நிறுவி சிவபூஜை நிகழ்த்தியதாகவும்

ஸ்ரீ காளீஸ்வரியின் வழிபாட்டினை - 
ஸ்ரீ மகாகாளேஸ்வரர் - என, எம்பெருமான் ஏற்றுக் கொண்டதாகவும் ஐதீகம்... 

ஸ்ரீ மகா காளீஸ்வரி
அம்பன் மற்றும் அம்பாசுரன் எனும் கொடியவர்களை அழித்த பின் -
ஸ்ரீ மகாகாளீஸ்வரி சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் - திரு அம்பர் மாகாளம்...

இத்திருக்கோயிலில் விளங்கும் மோக்ஷ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் - மானிடர்க்கு மரண அவஸ்தை கிடையாது என்பது தொல்வழக்கு...

இத்தலத்தில் தான் - சோமாசி மாறனார் சோம யாகம் நடத்தினார்...

மாறன் எனப்பட்ட அவர் - பிறப்பால் அந்தணர்...
சகல வேதங்களையும் கற்றறிந்தவர்..

ஆயினும், பேதமில்லாத பெருங்குணம் உடையவர்..
மக்களுள் உயர்வு தாழ்வு கருதாது அனைவருக்கும் அறப்பணி ஆற்றியவர்..

சோம யாகங்களை நிகழ்த்தி - இறைவனைத் துதிக்கும் வழக்கம் உடையவர்..
அதனாலேயே அவர் சோமாசி மாறனார் என அழைக்கப்பட்டார்...

தமது யாகத்தில் இறைவன் அவிர் பாகம் ஏற்றுக் கொள்வதைக் கண்ணால் காண வேண்டும் என விரும்பினார்...

தமது விருப்பத்தை சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் கூறினார்..  

சுந்தரரும் சோமாசி மாறனாருக்காக தியாகராஜப் பெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்..

இறைவனும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டான்..

அதன்படி - சோமாசி மாறனார் - சோம யாகம் நிகழ்த்தும் போது
அந்த யாக சாலைக்கு எம்பெருமான் எழுந்தருளினன்..

எப்படி!?..

மனைவி மக்கள் - சுற்றத்துடன் எழுந்தருளினன்!..


ஞான சம்பந்தப் பெருமான் அருளியபடி -
காடுடைய சுடலைப் பொடியுடன் சுடலையாளனாக எழுந்தருளினான்...

தான் மட்டுமல்லாது - 
தனது திருமேனியின்று அகலாதவளான அம்பிகையையும் -
அன்புக்குரிய திருக்குமாரர்களையும் - தன்னைப் போலவே திருக்கோலம்
கொள்ளச் செய்து கோலாகலக் குதுகலமாக குடும்பத்துடன் எழுந்தருளினன்!...

இறந்த கன்றினைக் கோல் ஒன்றில் கோர்த்துத் தோளில் தாங்கியவனாக!..

பாசிமாலை பவளமாலை இவற்றுடன் - காட்டு மலர்களையும் சூடியவனாக!..

சுடலையாளனாக இருந்தாலும் எனக்கும் யக்ஞோபவீதம் உண்டு!.. - என, அதையும் தரித்தவனாக!..

அழுக்கடைந்த அரையாடையின் மீது வார் கச்சை அணிந்தவனாக!..

அதிரும் பறையை அறைந்து முழக்கியவனாக!...

ஆதியில் தோழமையான நாய்களுடனும் 
ஏவலுடன் காவல் கொள்ளும் கணங்களுடனும் 
காண்போர் மயங்கும் வண்ணம் - திருநீறணிந்தவனாக!..

பொன்னார் திருமேனியன் - புலையன் எனத் திருக்கோலம் கொள்ள 
பூவுலகைப் பூத்த வண்ணம் காத்தருளும் கருணாம்பிகையும்
கள் குடத்தைச் சுமந்தவளாக - புண்ணியனுடன் எழுந்தருளினாள்!..

பறை முழக்கி வரும் பரமனின் ஜதிக்கு ஏற்றபடி
ஆடிக் களிப்பதற்கு அவளுக்கும் ஆசை தான்!..

அப்படி, ஆடிக் களித்தவள் - கூடிக் களித்தவள் தானே - அவள்!..

ஆனாலும் - தலையில் மண் குடம் ஒன்று இருக்கின்றதே!...
அந்தக் குடத்திலிருக்கும் கள் ததும்பி வழிந்திடக் கூடாதே!..

அதனால் தான் -
ஆனந்தப் பூங்காற்று!.. - என,
அம்பிகை புன்னகைத்து வந்தாள்..

செந்தூரப் பொட்டழகும் சிங்காரச் சிரிப்பழகும் -
கண்டவர் தம் கண்களை விட்டு நீங்கவேயில்லை!..

கண்டவர் தம் மனம் உருக்கும்
திருக்கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
திருச்செங்கண்மாலின் திருத்தங்கச்சி அல்லவா!..

அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் - ஆனந்தவல்லி!..
அவள் அல்லவா -  அன்றைக்கு ஐயனுடன் அணைந்து வந்தாள்!..

தமிழ் தந்த நாயகி தையல் நல்லாள் அவளல்லவா - 
பிச்சி மொய்த்த கன்னங்கருங் குழலை அள்ளி முடித்தபடி 
செங்கலசம் ஒன்றினைத் தலையில் சுமந்து கொண்டு,
தலைவன் வழியே தன் வழி!.. - என, தளிர் நடையிட்டு வந்தாள்!..

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செம்பட்டு 
சீர்மிகு கூறைப் பூஞ்சேலையாய்ப் பொலிந்திருக்க
கயல் விழி இரண்டிலும் கருமை தீட்டி
கோலக் குயிலாள் குளிர் நிலவாய் கூடவந்தாள்:.. 

எரிபுரைமேனி இறைவர் தம் - செம்பாகத்தில் இருந்தவள்
எளியோர்க்கும் எளியளாக இன்முகம் காட்டி வந்தாள்...

உதிக்கின்ற செங்கதிர் நெற்றியில் இலங்க
கதிதரும் கருணை விழிகளில் துலங்க
பசுங்கிளி இதழ்களில் தாம்பூலம் விளங்க
பறைகொண்ட பரனுடன் பரையென வந்தாள்!..

ஆனால் - 
எல்லாம் அறிந்தனம் யாம்!.. - என, செருக்குற்றிருந்தோர் - 
கள் குடம் சுமந்து வந்த காமாட்சியைக் கண் கொண்டு நோக்கினாரில்லை..

அப்படி நோக்கியிருந்தால் - 
அவர்கள் ஏன் யாக சாலையை விட்டு வெளியேறப் போகின்றனர்!...

மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதனை மறந்தார் போலும்!...
கல்வியில் இல்லாத கசடு - அவர்தம் கருத்தினில் சேர்ந்தது போலும்!..

தாம்பூலம் தரித்து வந்த தயாபரியின் புன்னகை தான் - 
யாக சாலையில் கூடி இருந்த எளியோர் கொண்ட அச்சத்தை அழித்ததாம்!...

சோமாசி மாறனாரின் யாகம் நிறைவுறும் வேளை..

பூர்ணாஹூதி வழங்கும் நேரம்...

எம்பெருமான் எழுந்தருளினான்!..

நரியாட கழுகாட நள்ளிருளில் நகுவெண் தலைஓடு 
உதையுண்டு உருண்டோடும் சுடலையின் சுந்தரனாக!.. 
ஆமைஓடு இளநாகம் இவற்றோடு ஏனக்கொம்பு எனச்சூடி
அதிரும் பறையை அறைந்து முழக்கியவனாக!..

அவனோடு - அவன் மனைவியும் மக்களும்!...

அவர்களைக் கண்ட மாத்திரத்தில் - சோமாசி மாறனாரின் நெஞ்சில்
எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!.. 
- என்ற அப்பர் ஸ்வாமிகளின் அருள்வாக்கு எதிரொலித்தது..

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தன்!..

- என்று சிந்தித்தார்..

பார்க்கும் திசைதொறும் திரிபுரையாள்!.. 
புரிசடையோன் புடையாள்!.. உடையாள்!.. 
ஒல்கு செம்பட்டு உடையாள்!.. என்னை இனிப் படையாள்!..
மலையாள்!.. வார் கொண்ட வன முலையாள்!..
பிங்கலையாள்!.. செய்யாள்!.. வெளியாள்!.. 
வெயிலாள்!.. மயிலாள்!.. குயிலாள்!.. பசும்பெண் கொடியாள்!..

- என்று வந்தித்தார்..

சுடலையாளும் சுந்தரனையும் அவனது மனையாளையும் மக்கட் செல்வங்களையும் மனமார வணங்கி யாகசாலைக்குள் வரவேற்றார்..

அதைக் கண்ட வேத விற்பன்னர்கள் வெகுண்டெழுந்தனர்..

யாகத்தை நிறுத்தி விட்டு கோபத்துடன் வெளியேறினர்...

பூர்ணாஹூதிக்கான திரவியங்களை புத்தாடைகளை தாம்பூலம் சந்தனம் இவற்றுடன் - நீசன் என வந்த நின்மலனுக்கு வழங்கியதோடு - 

தன் மனைவியாகிய சுசீலையுடன் - வீழ்ந்து வணங்கி மகிழ்ந்து எழுந்தார்..

அவ்வேளையில் எல்லாம் வல்ல எம்பெருமான் - தன்னுரு காட்டி -
சோமாசி மாறனார்க்கும் அவர் தம் மனைவியாருக்கும்
முக்திப் பேறு நல்கினான் - என்பது ஐதீகம்..

அவ்வண்ணமே, இன்றளவும் -
அம்பர் மாகாளத்தில் வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று
சோமயாக வேள்வி நடத்தப் பெறுகின்றது..








திருவிழாவின் உச்சிப் பொழுதில் காட்சி கொடுத்த நாயகர்  - என,
ஈசன் எம்பெருமான் - யாகசாலைக்கு எழுந்தருளி நலம் நல்கும் வைபவம் கடந்த 9/6 வியாழன் அன்று கோலாகலமாக நடைபெற்றது...


இந்தப் பதிவில் உள்ள படங்கள்
உழவாரம் திருக்குழுவினரால் வழங்கப்பெற்றன..
அவர்கட்கு மனமார்ந்த நன்றி... 
***

திரு அம்பர் மாகாளம்


இறைவன் - ஸ்ரீ மாகாளேஸ்வரர், மாகாள நாதர்
அம்பிகை - ஸ்ரீ பயக்ஷயாம்பிகை, அச்சம் தவிர்த்த நாயகி
தலவிருட்சம் - மருத மரம்
தீர்த்தம் - மாகாள தீர்த்தம்..

ஸ்ரீ மாகாளி வழிபட்ட திருத்தலம்..

நாகராஜனும் நாககன்னியரும் துயர் தீர வழிபட்ட திருத்தலம்..
மதங்க மகரிஷி தவமிருந்து - உமையம்மை தன் மகளாகத்
தோன்றுதற்கு வரம் பெற்ற தலம் இதுவே!..

திரு ஆரூர் - மயிலாடுதுறை சாலையில் - பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து கிழக்காக நான்கு கி.மீ., தொலைவிலுள்ளது - அம்பர் மாகாளம்..

திரு ஆரூர் - மயிலாடுதுறை இருப்புப் பாதையில் - பூந்தோட்டம் நிலையம் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது..
***

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்
பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்
கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந் திருப்பிடன் அம்பர்மா காளந்தானே!.. (3/93) 
-: திருஞான சம்பந்தர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம..
*** 

27 கருத்துகள்:

  1. அறியாச் செய்திகள் அருவியாய் கொட்டுகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. உஜ்ஜயின் பற்றி அறிந்திருந்தாலும் நம் தமிழகத்தில் இருக்கும் இரு கோவில்கள் பற்றி தெரியாமல் இருந்திருக்கிறேன். உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். இக்கோவில்களுக்குச் சென்று வர வேண்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      அவசியம் மாகாளேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. தெரியாத செய்தி...பார்க்க வேண்டும் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மயிலாடுதுறை அருகில் இருந்தாலும் திருவிழா சமயம் போனது இல்லை. திருவிழாவை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் படங்கள் மூலமாகவும் உங்கள் சொற்சித்திரங்கள் மூலமாகவும். கண்டு களித்தேன். நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மயிலாடுதுறையைச் சுற்றிலும் எத்தனை எத்தனை திருக்கோயில்கள்..
      அத்தனையையும் தரிசிப்பதற்கு ஐயன் அருள் செய்யவேண்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. அய்யா நான் அறியாத பல செய்திகள். படமும், பதிவில் உள்ள தகவல்களும், ஆதி சங்கரர் முன் தோன்றி அவருக்கு ஞானம் சொன்ன சண்டாளன் என்னும் புலையன் கதையை நினைவூட்டின. அம்பர் மாகாளம் - இதற்கு வேறு ஏதேனும் பெயர் இருக்கிறதா? வடமொழிப் பெயர் போன்று தெரிகிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..

      ஆதிசங்கரருக்கு முன்னால் தோன்றிய புலையனுடன் வாதப் பிரதி வாதம் நடந்திருக்கின்றது..

      இங்கே அம்பர் மாகாளத்தில் - பார்த்த மாத்திரத்தில் பரவசம்..
      சோமாசி மாற நாயனார் - எல்லா தரப்பு மக்களிடமும் பேதமின்றி வாழ்ந்திருக்கின்றார்.. சிவ சின்னங்களைத் தாங்கியோரை சிவமாகப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றார்..

      ஸ்ரீ காளி - அம்பாசுரனை வீழ்த்திய பின் சிவபூஜை செய்த தலம்..
      அம்பர் மாகாளம் என்றே ஞான சம்பந்தர் திருப்பதிகத்தில் குறிக்கின்றார்..

      அப்பர் ஸ்வாமிகளும் மாகாளம் என்றே புகழ்கின்றார்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. நான் அறிந்திடாத பல செய்திகள்.மாகாளம் என்கிறப் பெயரில் கோவில்கள் இருக்கிறது என்பதே உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்துக் கொண்டேன். இந்தக் கோயில்களுக்குப் போக வேண்டும். இறைவன் சித்தம் எப்படியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மாகாள நாதனும் மாகாளி ஈஸ்வரியும் மங்கலம் அருள்வர்..
      தங்கள் ஆவல் பூர்த்தியாக நானும் வேண்டிக் கொள்கின்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஜி செய்திகள் அனைத்தும் ஆச்சர்யமாக இருக்கின்றது வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  8. அருமையான தமிழ் உங்கள் எழுத்துக்களில் விளயாடுகிறது திருச்சியில் சமயபுரம் அருகே இருக்கும் ஒரு உஜ்ஜயினி காளி கோவிலுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சமயபுரத்திற்கு அருகில் இருக்கும் உஜ்ஜையினி காளி கோயில் - மேலைத் தொடர்பினால் அமைந்ததுவே!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி

      நீக்கு
  9. கடந்த பதிவில் அம்பர் மாகாளம் பற்றி கேட்டிருந்தேன். தற்போது அழைத்துச் சென்றுவிட்டீர்கள். கேள்விப்பட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது மற்றொரு கோயில் உலாவின்போது செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அடுத்த கோயில் உலாவின் போது அவசியம் தரிசித்து வாருங்கள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி

      நீக்கு
  10. அன்புடையீர்..

    தங்கள் வருகையும் தகவலும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  11. உஜ்ஜயினி குறித்து ஜோதிர்லிங்கம் குறித்து அறிந்ததுண்டு. ஆனால் மற்ற இரு திருமாகாளங்கள் புதிய தகவல். விளக்கங்கள் அறிந்து கொண்டோம்.குறித்தும் கொண்டோம். மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. ஐயா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பெயரில்லா19 ஜூலை, 2022 14:23

    Super The same drawing found in kamallambal sannidhi in tiruvarur but no details. Now only entire story is read thank you sir

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. இக்கோயில் தொடர்பான செய்தி மகிழ்சி அளிக்கிறது. இக்கோயில் இறைவன் “காட்சி கொடுத்தநாயினார்” அழைக்கப்படுகிறார் சுந்தரரின் வேண்டுகோளுக்கு இணங்க சோமசி மாறநாயினார்க்கு காட்சிகொடுத்தால் இப்பெயர் பெற்றார் என அறியமுடிகிறது. இன்நாயினார்,(தியாகராஜர்) திருவாரூர் தலத்தில் இருந்து வைகாசி விழாவிற்கு திருமாளத்திற்கு வருதால் திருவாரூர் தியாகாரஜர் கோயில் மூலவர்க்கு பூசைகள் செய்வது நிறுத்தப்படுகிறது. இன்நாயினர் காட்சி கொடுக்கும் கோலம் புலையர் உருவில் உள்ளது. பின்னாளில் இவர் பறையாகவும் அறியப்படுகிறார் ..இத்திருமேனியை இடைக்காலத்தில் இக்கோயிலுக்கு செய்து அருளியவர்கள் பூந்தோட்டம் அருகில் உள்ள செறுவெளூர் என்ற ஊரை சார்ந்த ஒரு தம்பதியினர். பழங்காலத்தில் இந்த இடம் நந்தன் என்ற மன்னனால் ஆண்டு வந்தது. ராஜ்ஜியத்தில் பஞ்சம் ஏற்பட்டது, நீதிமான் மன்னன், என்ன செய்வது என்று தெரியாமல், நிவாரணத்திற்காக இந்த கோவிலில் விநாயகரை வணங்கினான். விநாயகர் ராஜாவுக்கு ஒரு படி (அளக்கும் கோப்பை) வழங்கினார், அது ஒவ்வொரு நாளும் தன்னை நிரப்பும் – அந்த நாளுக்கு மக்களுக்கு உணவளிக்க போதுமானது. எனவே இங்குள்ள விநாயகருக்கு படிக்காசு விநாயகர் என்று பெயர்.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் அன்பின் கருத்துரைக்கும் மேல் விவரங்களுக்கும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..