நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 11, 2016

மாப்பிள்ளை சாமி

யுகாதி..

தெலுங்கு வருடப் பிறப்பு நாள்..

கடந்த 8/4 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கின்றது

இந்நாளில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் தேவுனி கடப்பா நகரில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் இறையன்பர்கள் பெருந்திரளாகக் கூடி பெருமாளை வழிபட்டிருக்கின்றனர்.

இதிலென்ன விசேஷம் என்கின்றீர்களா?..

அழகிய மணவாளன் - உறையூர்
வெங்கடேசப் பெருமாளையே -
கண்ணிலும் கருத்திலும் கொண்டு 
காதலாகிக் கசிந்து - கரியவனோடு 
கலந்து ஐக்கியமானவள் பீபி நாச்சியார்..

அந்த வகையில் வெங்கடேஸ்வர ஸ்வாமி 
எங்களுக்கு மருமகன் ஆகின்றார்!.. 

- எனக் கொண்டு,

அந்த வட்டாரத்தில் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் திரண்டு வந்து
யுகாதித் திருநாளன்று ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசித்து
சடாரி தீர்த்தம் பிரசாதம் பெற்று மகிழ்ந்திருக்கின்றனர்..

மனங்கள் சங்கமித்த அந்த மகத்தான வைபவத்தின் சில காட்சிகள்..






இந்த வழிபாடு பல நூற்றாண்டுகளாக நடைபெறுவதாகக்
குறிப்பிடுகின்றது - தினமணி..

நேற்றைய தினமணி வழங்கிய செய்தியை -

இங்கே காணலாம்...

எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வின் படங்களும் FB - வழியாகக் கிடைத்தன..

படங்களை வழங்கிய சுப்ரமணியன் சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி..

இவ்வாறே -

தமிழகத்தில்
திரு அரங்கத்திலும் 

கர்நாடக மாநிலத்தில்
மைசூர் அருகே யதுகிரி எனப்படும்
மேலக்கோட்டை திருநாராயணபுரத்திலும்

இஸ்லாமியப் பெண் - கண்ணனுடன் காதலாகிக் கலந்த
சம்பவங்கள் சொல்லப்படுகின்றன..

திருஅரங்கத்தில் குறிக்கப்படுபவள் டில்லி ராஜவம்சத்தைச் சேர்ந்தவள்..

திரு அரங்கன்
திருஅரங்கனின் வடிவழகில் மயங்கி - அவனைத்
தேடி வந்து - காதலினால் கசிந்து கண்ணீர் மல்கிக்
காற்றோடும் கண்ணனோடும் கலந்தவள்..

பெருமாளைத் தரிசித்து விட்டு வரும் போது திருச்சுற்றில் 
துலுக்க நாச்சியார் எனும் திருப்பெயரில் சித்திரமாக
இன்றும் விளங்குகின்றாள்..

பகல் பத்து உற்சவத்தின் போது - துலுக்க நாச்சியாரின் திருமுன்
சாரம் (லுங்கி) அணிந்து படியேற்றம் ஆகி திருக்காட்சி நல்குகின்றனன்..

இந்நாளில் பெருமானுக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் நிவேதனமாகின்றன..

மேலும்,

மைசூர் மேலக்கோட்டை செல்வ நாராயணப்பெருமாள் திருக்கோயில்..

யதுகிரி எனும் தொல் பெயருடைய திருநாராயணபுரம்..

செல்வ நாராயணன் - மேல்கோட்டை
உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் பன்னிரு ஆண்டுகள் தங்கியிருந்த திருத்தலம்..

இத்திருத்தலத்தில் குறிக்கப்படுபவள் - பீஜப்பூர் சுல்தானின் மகள்..

சுல்தானி பீபி எனப்படும் இத்திருமகள் - 
பெருமான் நினைவில் பித்தாகி
பெருமானின் திருவடிகளில் 
இரண்டறக் கலந்திருக்கின்றாள்..

இச்சம்பவம் உடையவர் ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது..

பெரும்பேறு பெற்ற இத்திருமகளின் திருமேனியை வடித்து,
கண்ணனின் காலடியில் - உடையவரே ஸ்தாபித்ததாகக் கூறுகின்றனர்..

பெருமானின் காலடியில் - பீபி நாச்சியாரின் திருமேனியைக் காணலாம்..

பெருமானுக்கு செய்யப்படும் அலங்காரங்களும் ஆரத்திகளும்
அன்பினில் கட்டுண்ட - நாச்சியாருக்கும் நிகழ்த்தப்படுகின்றன..


திருநாராயணபுரம் திருக்கோயில்
பீஜப்பூரிலிருந்து - கண்ணனின் திருமேனியை மீட்டு வரும்பொழுது - 
கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க வேண்டிய சூழ்நிலை..

அச்சமயத்தில் ஆதரவளித்து உதவியவர்கள் -
தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள்..

அவர்களுடைய அன்பினில் கரைந்த ஸ்ரீராமானுஜர் -
அவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றதாக வரலாறு..

உடையவர் காட்டியருளிய வழியாக - இன்றளவும்
திருக்கோயிலின் பெருந்திருவிழாவின் போது
தேரோட்டம் நிகழ்ந்ததிலிருந்து மூன்று நாட்களுக்கு 
திருக்குலத்தார் கூடிக் கொண்டாடி வழிபட்டு மகிழ்கின்றனர்..
***


தேவுனி கடப்பா நகரில் பெருமாளத் தரிசிக்கக் காத்திருக்கும் மக்களைக் காணும் போது மனம் மகிழ்ச்சியால் நிறைகின்றது..

சமய பேதங்களைக் கடந்து அன்பினில் 
ஒன்றாய் கலந்திருக்கும் நாளே - நன்னாள்..

ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் அருளால்
அகிலமெங்கும் தழைக்கட்டும்..

அவனருளாலே அவன் தாள் வணங்கி!..
- என்றுரைப்பார் மாணிக்கவாசகர்..

அதற்கெல்லாம், 
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

சுல்தானி நாச்சியாரைப் போல
பீபி நாச்சியாரைப் போல
கண்ணனுடன் கசிந்துருகிக் கலந்திருப்பதற்கு
இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ!..

ஓம் ஹரி ஓம் 
*** 

13 கருத்துகள்:

  1. தாங்கள் விவாதித்துள்ள செய்திகளை நாளிதழ்களில் படித்தேன். அருமையான புகைப்படங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பழைமையான இந்த வழக்கத்தை இந்த வருடம் தான் படித்தேன்..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. இவ்வருடம் அதுவும் தங்களின் மூலம் அறிகிறோம். மெய்சிலிர்க்கிறது.
    அழகான புகைப்படங்கள்.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நேற்றிரவு அந்தப் படங்களை FB -ல் பார்த்தபோது நெஞ்சுருகி நெகிழ்ந்தது.

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தாங்கள் பகிர்ந்து இருக்கும் செய்திகளில் , முகநூலில் படித்தேன்.
    அழகிய படங்கள் சமய ஒற்றுமைக்கு இவை எடுத்த்க்காட்டுக்கள்.

    படங்கள், செய்திகள் எல்லாம் அழகு.

    உடையவர் எல்லோருக்கும் நன்மை தருவதை சொல்வேன் என்று தனக்கு மட்டும் உய்யும் வழி வேண்டாம் அனைவருக்கும்வேண்டும் என்று ஓம் நமோ நாராயணா என்று சொன்னபெருமகன் அல்லவா! நல்லோர்களின் பெருமையை என்றும் பேசுவோம். நன்றி.
    வாழக் வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உடையவராகிய ஸ்ரீ ராமானுஜர் நல்வழி காட்டியிருக்கின்றார்..

      மக்கள் நல்வழியில் வாழ வேண்டுமென்பதே ஆச்சார்யப் பெருமக்களின் நோக்கம்.. அவ்வழியில் அனைவரும் பயணித்திட அரங்கன் நல்லருள் புரிவானாக..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின்ஜி இந்தப்புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்து வைத்திருந்தேன் பதிவெழுத தாங்கள் நிறைய விளக்கமுடன் பதிவிட்டமைக்கு நன்றி
    எங்கும் சமத்துவம் ஓங்கட்டும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களின் கைவண்ணத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்.. தாங்களும் எழுதுங்களேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான
    புகைப்படங்கள்...
    விளக்காமான பதிவு ....
    அருமை நண்பரே....
    வாழ்த்துக்கள் நட்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இசுலாமியர்களின் இந்து தெய்வ வழிபாடு
    போற்றுதலுக்கு உரியது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் கருத்து சிறப்பானது..
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மைசூர் திருநாராயணபுரம் பற்றி அறிவோம். துலுக்க நாச்சியார் கதை. மற்ற திருத்தலங்களில் குறிப்பாக ஆந்திரா தகவல் புதிது. மிகவும் மகிழ்வாக இருக்கிறது. மத பேதம் இல்லாமல் தொழுவது. சமத்துவம் ஓங்கட்டும்!!

    அருமையான பகிர்வு ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..