நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 21, 2015

அம்பகரத்தூர்

மிக மிகத் தொன்மையானது -  அவளுடைய வழிபாடு..

அவளுக்கு எத்தனை எத்தனையோ திருப்பெயர்கள்.. இருப்பினும் -

ஸ்ரீ பத்ரகாளி எனும் போது உள்ளம் மகிழ்கின்றாள்..

அவள் கோர சௌந்தர்யங்கொண்டவள்..

கடைவாயின் இருபுறமும் சற்றே நீண்ட பற்கள் மட்டுமல்ல!..

மேல் வரிசையில் தெற்றுப் பல் அழகி - அவள்!..

தெற்றுப் பல் அழகுடன் திகழும் திருக்கோயில் எங்கே இருக்கின்றது!?..

உங்களுக்குத் தெரியுமா!..

தெரிந்தால் கூறுங்கள்.. அல்லது அடுத்து வரும் பதிவினில் காணுங்கள்!..

அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளி
இன்றைக்கு ஆடிச் செவ்வாய்!..

அன்னை கோபங்கொண்டு நின்ற -

ஸ்ரீ பத்ர காளி, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - எனும்  திருக்கோலங்களைத் தரிசிக்க ஏற்றதொரு நாள்..

அது வேண்டும்.. இது வேண்டும் எனக் கேளாமல் - அவளுடைய அன்பு ஒன்றையே யாசித்து அவளுடைய திருவடித் தாமரைகளைப் பூசித்தால்

சத்தியமாக - அவளைத் தரிசிக்கலாம்!..

இன்றைய தரிசனம் - அம்பகரத்தூர்!..

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அன்னை ஸ்ரீ காளிகாம்பாளின் திருக்கோயில்கள் திகழ்கின்றன..

அவள் தீமையை அழிக்க வந்தவள்..
அவளுடைய திருத்தோற்றம் அசுர சம்ஹாரத்திற்குத் தான்!..

கோபாவேசத்துடன் போரிடும் வீரர்களின் தோள்களில் வீற்றிருப்பவள்..

வனாந்திரங்கள், மலையிடுக்குகள், ஆற்றங்கரைகள் என எல்லா இடங்களிலும் அவள் திருக்கோயில்கள் இருக்கின்றன..

ஆனால் அவள் மயானத்தில் ஈசனுடன் நடனமாடுவதையே விரும்புகின்றாள்..

எனினும் தன் பக்தர்களுக்கு எவ்விதக் குறையினையும் வைத்ததில்லை..

அம்பகரத்தூருக்குச் செல்லும் முன் ஒரு செய்தி!..

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலை நாம் அறிந்திருக்கின்றோம்..

மேற்கு நோக்கிய அத்திருக்கோயிலின் - இரண்டாவது வடக்கு திருச்சுற்றில் கார்த்திகை மண்டபத்திற்கு அருகில் ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி உள்ளது.

அந்த சந்நிதியின் முன் கடந்த சில நாட்களாக (ஜூலை/13) ஒரு குரங்கு  உட்கார்ந்து இருக்கின்றது.

அதுவும் - அம்பிகையை நோக்கி கண்ணீர் வடித்துத் தொழுத வண்ணம்!...



சந்நிதி அடைத்த பின்னரும் அந்தக் குரங்கு - வேறு எங்கும் செல்லாமல் -  அங்கேயே இருக்கின்றது..

தகவல் அறிந்து கொண்டு பலரும் வந்து பார்க்கின்றனர்.

அதன் மீது பரிதாபம் கொண்டவர்கள் பால் பழம் முதலியனவற்றைக் கொடுத்தாலும் விரும்பி உண்பதில்லை..

அந்த ஜீவனின் நிலை கண்டு மனம் கலங்குகின்றது..

அதன் - மன உறுதி கண்டு நெஞ்சம் திகைக்கின்றது..

நேற்று கிடைத்த காணொளியைப் பாருங்கள்..


நமது புராணங்களில் - விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் ஈசனை வழிபட்ட நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன..

ஜடாயு , சம்பாதி ஆகிய கழுகுகள் வழிபட்டதிருத்தலம் இது!..
இந்தத் தலத்தின் திருப்பெயரே - புள்ளிருக்குவேளூர்!..

ஆனாலும், தற்போது குரங்கு சந்நிதியில் தவமிருப்பதன் அர்த்தம் என்ன!..

உபாசனாமூர்த்தி அருளும் திருவாக்கு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது..

நாம் அந்த நிலையை எப்போது எய்துவோம் என்றிருக்கின்றது..

இதனை - அவரவரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்..


இதோ அம்பகரத்தூர்...

காலமல்லாத காலத்தில் அரக்கி ஒருத்தியின் வயிற்றில் தோன்றியவர்கள் -

அம்பகரன், அம்பன்!..

வழக்கம் போலவே - குலகுருவாகிய சுக்ராச்சார்யாரிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டனர்..

நல்ல நிலைக்குச் செல்லும் வழியைக் காட்டினார் குரு..

ஆனால் - ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதால் - இவர்கள் சென்று நின்ற இடம் - மதுச்சாலை..

அல்லாதன செய்வோர்கள் அனைவரும் - அவர்களுக்கு அன்பர்களாகினர்..

அதன் பின் அவர்களுடைய ஆரவாரங்கள் ஆரம்பமாயின..

மதுவின் மயக்கம் அவர்களுக்கு நிரந்தரம் என்று பட்டது.. அதனால் -

பெருந்திரு எனப் புகழப்பட்ட பெண்களின் மேல் இவர்களின் கண் பட்டது..

கண்ணும் கருத்தும் கெட்டதனால் -
அம்பகரனும் அம்பனும் சென்ற வழித்தடத்தில் பெண்களின் வாழ்வு கெட்டது.

அபலைகளின் கூக்குரல் - தவமுனிவர்களின் மனதைத் தொட்டது.

தவமுனிவர்களின் வேண்டுதலால் - அசுரர்களுக்கு நாள் குறிக்கப்பட்டது..

அண்டம் நடுங்கிட ஆங்கார ரூபமாக காளி வந்தாள்!..

சங்கரி சாம்பவி - பஞ்சமி பைரவி - பத்ரகாளி என வந்தாள்!..

ஏந்திழையாள் தனது எட்டுத் திருக்கரங்களிலும் -
வெட்டிக் குத்திக் குடையும் கூரிய ஆயுதங்களை ஏந்தி வந்தாள்..

அவளைக் கண்டு ஆர்ப்பரித்து எழுந்த அம்பன் -

அம்பிகையின் - ஹூங்காரக் கூச்சலைக் கேட்டதுமே கீழே விழுந்து மாண்டு போனான்..


இதைக் கண்டு ஆத்திரத்துடன் போரிட முனைந்தான் அம்பகரன்..

மூளையற்ற அவனது ஆயுதங்கள் எல்லாம் முனை முறிந்து தொலைந்தன..

சரணடையத் திருப்பாதங்களைக் காட்டிய போதும் - கண்டு கொள்ளாத கசடன் - காட்டெருமை வடிவங் கொண்டு களத்திலிருந்து ஓடினான்..

உயிர் தப்பி ஓடிய அவனது எண்ணம் உலகை அழிப்பதாக இருந்தது..

அந்த எண்ணம் ஈடேறாதபடிக்கு அன்னை தன் திருவடியினால் மிதித்தாள்..
தன் திருக்கரத்தில் இருந்த வாளால் எருமையின் தலையை சேதித்தாள்..

சுய வடிவம் எய்திய அம்பகரனின் மார்பில் பாய்ந்தது - சூலியின் திரிசூலம்

தேவர்களும் முனிவர்களும் பூமாரி பெய்து தொழுது வணங்கினர்..

அவ்வண்ணமே திருக்கோலங்கொண்டு அமர்ந்தாள்..

இந்த நிகழ்வின் உட்பொருளை அறியாதவர்கள் ஒன்றாகக் கூடி -
பலகாலம் எருமைகளைப் பலியிட்டனர் அம்பகரத்தூரில்!..

இன்னமும் சில இடங்களில் காளி பூஜையில் பலியிடும் வழக்கம் உள்ளது. 

அது - நம்முள் மண்டிக் கிடக்கும் காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யம் - எனும் குணங்களைப் பலியிடும் குறிப்பு என்பர் பெரியோர். 

நல்லோர்கள் முயற்சியினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் - உயிர்ப்பலி
நிறுத்தப்பட்டது - அம்பகரத்தூரில்.. அதற்குப் பதிலாக -

வைகாசி மாத இரண்டாம் செவ்வாய் அன்று மகிஷாசுர வதம் நடக்கின்றது.

இந்த நாளை அனுசரித்து சித்திரை மாதத்தில் அம்பகரத்தூரிலுள்ள மாரியம்மனுக்கு பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கும்.

அதன்பின் - காப்பு கட்டுதலுடன் - ஸ்ரீ பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வாள்..

ஒவ்வொரு நாளும் அலங்கார ரூபினியாக வீதி வலம் வந்தருள்வாள்..

வைகாசி இரண்டாம் செவ்வாய் அன்று நடுப்பகலில் மகிஷாசுர வதம்!..

அதற்கு முன்பெல்லாம் - பலியிடுதற்காக உள்ள எருமைகளில் ஒன்று மட்டும் கட்டறுத்துக் கொண்டு வந்து பலி பீடத்தில் நிற்குமாம்..

அந்தத் துன்பமெல்லாம் - இப்போது இல்லை..

மகிஷாசுர வதத்திற்குப் பின் - மறுநாள் - எல்லை ஓட்டமாக திக் விஜயம்.

அடுத்த நாள் வியாழன்று திருத்தேர்..

அன்னையைத் தேடிச் சென்று வணங்குகின்றனர் ஆயிரமாயிரமாக!..  அவர்களுள் எங்களையும் வைத்தனள் - என்பதே மகிழ்ச்சி!..

அன்னைக்கும் எமக்கும் உள்ள பந்தம் காலங்களைக் கடந்தது..

அதனால் தான் - அவளுக்கு அபிஷேக ஆராதனைகளை -
சந்நிதியில் நிகழ்த்தும் பெரும் பேற்றினைப் பெற்றிருக்கின்றேன்..

என் மனைவியும் பிள்ளைகளும் - வேளை கிடைக்கும் போது அம்பகரத்தூர் சென்று விடுவர்.


ஸ்ரீபத்ரகாளியம்மனைத் தரிசனம் செய்த பலன் விவரிக்க இயலாதது..

திருக்கோயிலில் ஸ்ரீ காளீஸ்வரர் என சிவசந்நிதியும் உள்ளது..

திருக்கோயிலில் ஸ்ரீ பெத்தண்ணர் சந்நிதியும் ஸ்ரீ பேச்சியம்மன் சந்நிதியும் விளங்குகின்றன.

ஆடி மற்றும் தை மாத கடைசி செவ்வாய் அன்று ஏக தின லட்சார்ச்சனை.

ஆடி மற்றும் தை மாத கடைசி வெள்ளி அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் திருநள்ளாற்றிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அம்பகரத்தூர் உள்ளது.

தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை - என அனைத்து நகரங்களில் இருந்தும் அம்பகரத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த ஒலிப்பேழையில் திருவிழா கோலாகலத்தைக் கேளுங்கள்....


அம்பகரத்தூரில் 
அஷ்ட புஜ மகா பத்ரகாளி..
அன்புடன் வீற்றிருக்கின்றாள்!..

அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான்..
அவளைச் சரணடைந்தோர்க்கு அல்லல் என்பதே இல்லை..

ஓம் சக்தி ஓம்..  
* * *

24 கருத்துகள்:

  1. வணக்கம்,
    காணொளி வியக்க வைக்கிறது, அவரின் வேண்டுதல் என்னவோ,
    தங்கள் எழுத்தின் நடை மிக அருமை,
    நானும் சென்றுள்ளேன்,
    அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தெற்றுப் பல் அழகியின் கோயில் எங்கே இருக்கின்றது கேட்டேன்..
      பதில் இல்லையே!...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. வணக்கம்,
      சொல்லாமல் சென்றேனோ,
      வடபத்தரக்காளி தானே,
      தஞ்சாவூர்.
      அல்லது
      ஏகௌரியா- இங்க நான் போனது இல்லை,
      கோடியம்மன்.
      சொல்லுங்கள்
      நன்றி.

      நீக்கு
    3. தங்கள் மீள்வருகைக்கு நன்றி...

      அவள் தான்.. அவளே தான்!..

      தெற்றுப் பல் அழகி - தஞ்சை ஸ்ரீ வடபத்ரகாளி தான்!..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அம்பகரத்தூர் பற்றிய தகவலுக்கு நன்றி...

    திருவக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலா ஐயா... காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      திருவக்கரை அல்ல.. அது வேறு ஒரு தலம்.
      தங்களின் ஆர்வத்திற்கு நன்றி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அம்பகரத்தூர் பற்றி முதல் முதலாக அறிகிறேன் ஐயா...
    குரங்கு அம்மன் முன் எதுவும் சாப்பிடாமல் கண்ணீரோடு இருக்கும் வீடியோ நானும் பார்த்தேன்... என்ன அம்மனின் அருள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      குரங்கின் இயல்பினை நாமறிவோம்.. அது தன்னைத் தானே வருத்திக் கொண்டு - தன் பிறவி கடைத்தேற வேண்டுகின்றது போலும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அறிகிறேன் ஐயா. குரங்கு வீடியோ முகநூலில் கண்டேன். மெய்சிலிர்க்க வைக்கிறது.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குரங்கின் சேட்டைகளை நாமறிவோம்.. அது உண்ணாமலும் உறங்காமலும் கண்ணீர் வடிப்பதற்கு என்ன காரணம் என்பதை அம்பாள் - அவளே அறிவாள்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அம்பகரத்தூர் சென்றதில்லை. கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் பதிவின்மூலமாக அதிகமாகத் தெரிந்துகொண்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். இந்த வார கோயில் உலாவின்போது நாங்கள் சென்ற தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று குரக்குக்கா. குரங்கு வந்து சிவனை வழிபடும் கோயில் என்ற நிலையில் பெயர்பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காவிரி வடகரைத் தலம் - திருக்குரக்குக்கா..

      மேலும் வட குரங்காடுதுறை, தென் குரங்காடு துறை - குரங்கணில் முட்டம் என்றெல்லாம் தலங்கள் உள்ளன..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அம்பரகத்தூர் அன்னையின் கோவில் வரலாறு அற்புதம்!

    அன்னை அனைவருக்கும் அருள்பாலிப்பவள். அந்தத்தாயின் அருளை
    வேண்டிக் காத்திருக்கும் குரங்கைப் பார்க்கையில் நான் இன்னும்
    பக்தி மார்க்கத்தில் கடுகளவேனும் ஈடுபடவில்லை எனத் தோன்றுகிறது!..

    அருமையான பதிவு ஐயா!
    அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..

      குரங்கின் மன அடக்கத்தில் - அணுவளவேனும் ஈடுபட்டதில்லை..
      அன்னையின் திருவருள் எங்கெங்கும் நிறையட்டும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பிள்ளையார் பால் குடித்த கதை, ஆஞ்ச்நேயர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தகதை இப்போது கோவிலில் குரங்கு உண்ணாமல் இருக்கும் செய்தி. , வித்தியாசமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அதெல்லாம் புரளி.. ஆனால் - இந்த காணொளியில் தன்னைத் தொடுவதையும் பொருட்படுத்தாமல் -

      தன்னிரக்கத்துடன் கண்ணீர் மல்க அமர்ந்திருக்கின்றதே - அதற்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அம்பகரத்தூர் பற்றி இப்போது தான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா

    அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. புதிய தகவல் ஐயா! நிறைய தெரிந்துக் கொண்டோம்.

    அந்த காணொளி மனதை என்னவோ செய்தது. பாவம் குரங்கு. பொதுவாக விலங்குகள் தங்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைவாக இருந்தால் இப்படித்தான் ஓரிடத்தில் அமர்ந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும்...உணவும் உட்கொள்ளாது ....பாவமாக இருக்கின்றது...யாரேனும் அதற்கு வைத்தியம் பார்த்து அதன் கூட்டத்தோடு விட.வேண்டும் என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி..

      புதிய கோணத்தில் அணுகி இருக்கின்றீர்கள்.. இந்த விஷயம் அங்கிருப்பவர்களுக்குப் புரிய வேண்டுமே.. பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள ஓரிடத்தில் அமர்ந்ததே - பிரச்னையாகி விட்டது.. வாயில்லா ஜீவன் நலம் பெறட்டும்..

      இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..