நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீகாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீகாளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2015

நிசும்பசூதனி

இன்று ஆடித் திருவாதிரை..

அதற்கென்ன இப்போது!?..

இனி எப்போதும் செய்ய இயலாதபடிக்கு - மாபெரும் செயல்களைச் செய்து முடித்த பெருங்குலம் சோழர்களுடையது...

தமிழனின் புகழ்க் கொடி எனும் புலிக் கொடி - கடல் கடந்தும் பறந்ததற்குக் காரணம் - சோழர்களே!..

பெரும்புகழ் கொண்ட அவர்களுள் - தனித் தன்மையுடன் பொலிபவன் -
மாமன்னன் இராஜேந்திர சோழன்!..

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இன்று!..

மாமன்னன் இராஜேந்திர சோழனும் - இராஜேந்திரனைப் பெற்றெடுத்த புண்ணியனாகிய சக்ரவர்த்தி ராஜராஜ சோழனும்,

அவன் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் நின்று வணங்கிய திருக்கோயில் ஒன்று உண்டு!..

அப்படியா!.. எங்கே இருக்கின்றது அந்தத் திருக்கோயில்!?..

தஞ்சையம்பதியில்!.. வாருங்கள் - செல்வோம் அந்தத் திருக்கோயிலுக்கு!..


இந்தத் திருக்கோயிலில் குடிகொண்டிருப்பவள் -

ஸ்ரீநிசும்பசூதனி - ஸ்ரீ பத்ரகாளி!..

சோழப் பெருங்குலத்தினைக் காத்து அவர்களுக்குப் பேரும் பெருக்கும் அருளியவள் இவளே!..

இவளே - வடபத்ரகாளி எனவும் ராகுகால காளி எனவும் வழங்கப்படுகின்றாள்.. 

அசுரர்களாகிய சண்டனையும் முண்டனையும் சும்பனையும் நிசும்பனையும் தொலைத்துக் கட்டியவள்!..

அதனாலேயே - இவளுக்கு நிசும்பசூதனி எனும் திருப்பெயர்!..

இவளே சோழப் பேரரசை நிர்மாணித்த விஜயாலய சோழனின் இஷ்ட தெய்வம்..

தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தன் திருமேனியில் தாங்கியிருந்தவன் - விஜயாலய சோழன்..

கி.பி., 850ல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான்..

அதுவரையிலும் பழையாறையில் இருந்த சோழ மரபினர் - புதிய நகராகிய தஞ்சையில் குடியேறினர்..

தஞ்சை - சோழர்களின் புதிய தலைநகராயிற்று..

இது ஆதாரங்களுடன் கூடிய சோழ வம்சத்தின் வரலாறு..

தஞ்சையைக் கைப்பற்றியதும் விஜயாலய சோழன் - மாநகரைச் சுற்றி எட்டு திக்குகளிலும் ஸ்ரீ பத்ரகாளியைத் தொழுது வணங்கி நின்றான்..

எங்கும் எப்போதும் - தனக்கு வெற்றிகளையே அருளவேண்டும்!.. -  என்று..


விஜயாலய சோழனின் அன்புக்கு மனம் இரங்கிய அம்பிகை - அவன் முன் தோன்றி - அவ்வாறே வரமளித்தாள்..

அம்பிகையின் தரிசனத்தால் மனமகிழ்ந்த மன்னன் - அம்பிகையை அங்கேயே திருக்கோயில் கொள்ள வேண்டினான்..

மன்னனின் அன்புக்கு இணங்கி அம்பிகை கோயில் கொண்ட கோலம் தான் - நிசும்பசூதனி!.. 

அம்பிகை திருக்காட்சி தந்து அமர்ந்த கோயிலுடன் -
விஜயாலயன் - ஏழு கோயில்களை எழுப்பினான்.. 

ஆக, தஞ்சையைச் சுற்றி எட்டு காளி கோயில்கள் - விஜயாலயன் காலத்தில்!..

அடுத்த சில ஆண்டுகளில் - பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே - திருப்புறம்பியத்தில் நடைபெற்ற பெரும் போர் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு வித்திட்டது.

இதற்குக் காரணமானவன் - விஜயாலய சோழனின் மகன் - முதலாம் ஆதித்த சோழன்..

அந்த வெற்றிக்கெல்லாம் மூல காரணம் - ஸ்ரீநிசும்பசூதனியே!..


இன்றும் வடபத்ரகாளி கோயில் எனும் பெயருடன் தஞ்சையின் கீழ்த் திசையில் விளங்குகின்றது - நிசும்பசூதனியின் திருக்கோயில்..

சப்த கன்னியருள் ஏழாமவள் - சாமுண்டி.. ஸ்ரீ காளி!..

இவளுடைய முக லாவண்யம் - தெற்றுப் பற்கள்..

இவளே - தெற்றுப் பல் தெரிய புன்னகைத்து - சண்டமுண்ட சும்ப நிசும்பர்களை வதம் செய்தவள்..

சும்ப நிசும்பர்களை வதம் செய்ததாலேயே - நிசும்பசூதனி!..

நிசும்பசூதனி எனும் திருக்கோலமே - இன்றைய தரிசனம்..

ஆடி மாதத்தில் அம்பிகையின் தரிசன வேளையில் -

அம்பிகை தெற்றுப் பல்லுடன் திகழும் கோயில் எது?..

- எனக் கேட்டிருந்தேன்..

வடபத்ர காளியைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் - பாலமகி எனும் மகேஸ்வரி பாலசந்திரன்..

அவருக்கும் மற்ற அனைவருக்கும் அன்னையின் நல்லாசிகள்..

நிசும்பசூதனி - ஏழடி உயரங்கொண்டு விளங்குகின்றனள்.

நிகரற்ற வல்லமையுடன் எட்டுத் திருக்கரங்களுடன் உக்ர கோலங்கொண்டு இலங்குகின்றனள்..

அம்பிகையின் திருமுடிக் கற்றைகள் விரிந்து பரந்து கிடக்கின்றன..

தீட்சண்யமான பார்வை.. தெற்றுப் பற்கள் பளீரிடுகின்றன..

பரந்து விரிந்திருக்கும் கேசங்களை மறைத்து -
அக்னி கிரீடம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது..

தெற்றுப் பற்களின் மீது புல்லாக்கு ஒளிர்கின்றது..

சற்றே இடப்புறம் திருமுகத்தைச் சாய்த்திருக்கின்றாள்..

மிகவும் மெலிந்த திருமேனி..

வார்கொண்ட வனமுலைகள் - வனப்பின்றி விளங்குகின்றன..

அம்பிகையின் விலா எலும்புகளும் புடைத்துத் தெரிகின்றன..

அசுரனின் தலை மீதிருக்கும் திருவடியும் மெலிந்து விளங்குகின்றது..

வல்லமையுடன் விளங்கிய அசுர சைன்யத்தை அழிப்பதற்கென - விரதம் பூண்டு எம்பெருமானின் நல்லருளை வேண்டித் தவமிருந்ததாக ஐதீகம்..

அம்பிகை முண்டமாலை தரித்திருக்கின்றாள்..
திருமேனியில் பாம்பு ஒன்றும் இழைகின்றது..

ஏழு திருக்கரங்களிலும் - வாள், தனுசு, பாசம், மணி, திரிசூலம், மணி, கேடயம், கபாலம் ஆகியனவற்றுடன் திகழ்கின்றாள் - அம்பிகை.. ..

வலது மேல் திருக்கரத்தில் உள்ள திரிசூலம் அசுரனின் மேல் பாய்ந்த வண்ணமாக உள்ளது..

இடக் கரத்தினால் கீழே கிடக்கும் அசுரனைச் சுட்டிக் காட்டுகின்றாள்..

வலது திருவடி - அசுரனின் தலை மீது பதிந்திருக்கின்றது..

இடது காலை மடித்து - அசுரர்களின் மீது அமர்ந்த திருக்கோலம்.

தேவியின் திருவடியில் கிடப்பது சும்பனின் உடல் என்றும் முண்டமாகக் கிடக்கும் தலை நிசும்பனுடையது என்றும் ஆன்றோர்கள் கூறுவர்.


இத்திருமேனியை சிற்பிகள் வடித்தனர் என்பது பொதுவான வார்த்தை.

ஆனாலும் -

எவருடைய கற்பனைக்கும் எட்டாத வடிவம் இது..

தேவி புராணங்களில் நிசும்பசூதனியின் இலக்கணம் கூறப்பட்டிருந்தாலும் - அதையெல்லாம் மீறிய அருள் வடிவம் இது!..

அம்பிகையே - தன்னுடைய திருவடிவத்தினைக் காட்டினாலன்றி - 
அவளே மனமுவந்து இங்கு அமர்ந்தாலன்றி - அறிய இயலாத திருக்கோலம்.

இப்படிப்பட்ட திருக்கோலம் - இப்புவியில் எங்கேயும் இல்லை!..

ஸ்ரீ பரமேஸ்வரியாகிய அம்பிகை ஸ்ரீ நிசும்பசூதனி என - தன்னுருவங்காட்டி,
சுயம்புவாக இங்கு எழுந்தருளியிருக்கின்றாள் என்பது திண்ணம்!.. 

தஞ்சையில் கீழவாசல் ஸ்ரீவெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கு சற்று எதிரில் - வடக்கு தெற்காக - பழைய ராமேஸ்வரம் சாலை.

இந்த சாலையைத் தான் - கீழவாசல் மார்க்கெட் சாலை என்கின்றார்கள்..

இந்த சாலையைக் கடந்து பூமாலை ராவுத்தர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் சென்றால் ஐந்து நிமிடத்தில் வடபத்ர காளி எனும் நிசும்ப சூதனியின் ஆலயத்தை அடையலாம்.

பூமாலை ராவுத்தர் கோயில் எனப்படுவது -

ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்ய நாதர் திருக்கோயில்..

இந்த திருக்கோயில் சிறியது தான் என்றாலும் கீர்த்தி மிக்கது..

குதிரைச் சேவகன் போன்ற கோலத்தில் விளங்கும் திருமேனி ஒன்று உள்ளது.

அது - மாணிக்கவாசகருக்காக ஈசன் - குதிரை நடத்தி - பாண்டியனிடம் மாலை வாங்கிக் கொண்ட திருக்கோலம் என்கின்றனர். 

அதனாலேயே பூமாலை ராவுத்தர் கோயில் என்று பெயர்.

மாவுத்தன் எனில் யானையை நடத்துபவன்.. ராவுத்தன் எனில் குதிரையை நடத்துபவன்..

கந்தரலங்காரத்தின் முப்பத்தேழாம் பாடலில் - வெஞ்சூர் கொன்ற ராவுத்தனே!.. - என முருகனை விளிக்கின்றார் அருணகிரி நாதர்..

முருகனின் வாகனமாகிய மயிலை - குதிரை என்றே அருணகிரியார் வர்ணிப்பார்..

எனவே - மயிலாகிய குதிரையை நடத்தும் ராவுத்தனே!.. என்பது புகழ்ச்சி..

நிசும்பசூதனியின் உக்ரம் குறைய வேண்டி பின்னாளில் எழுந்ததே - இந்த சிவன் கோயில்!..

ஸ்ரீ வைத்ய நாதரின் மூலஸ்தானத்திற்குப் பின்புறம் தான் வடபத்ர காளியின் திருக்கோயில்.

ஏழடி உயரமுடைய அம்பிகைக்கு அபிஷேக அலங்காரங்கள் எல்லாம் - அருகிலுள்ள மேடையின் மீது நின்று தான்..

ஸ்ரீ வடபத்ரகாளியின் மூலஸ்தானம்

வடக்கு நோக்கிய சந்நிதி.

விஜயாலயன் எழுப்பிய கோயில் கால வெள்ளத்தில் கரைந்து போனது..

ஆயினும் - இப்போதுள்ள சந்நிதியும் முன்மண்டபமும் பழைமையானவை..

திருக்கோயிலுக்கு முன்பாக நீளவாக்கில் தகரங்கள் வேயப்பெற்ற மண்டபம்..

திருப்பணிக்குக் காத்திருக்கின்றது திருக்கோயில்..

கோர சௌந்தர்யம் எனினும் கருணைக் கடலாக அம்பிகை கொலுவிருக்கும் சந்நிதி..

மாபெரும் மன்னர்களும் மகத்தான வீரர்களும் நின்று வணங்கிய சந்நிதி!..

விஜயாலய சோழன் - தன் கண் கொண்டு அம்பிகையைக் கண்டு கைகூப்பி வணங்கிய சந்நிதி..

மாமன்னன் ராஜராஜ சோழப் பெருந்தகையும் அவனது தந்தை சுந்தர சோழனும் முந்தைப் பாட்டனும் பாட்டனுக்குப் பாட்டனும் என முன்னோர்கள் நின்று வணங்கிய சந்நிதி.

பின்னும், ராஜேந்திர சோழனும் அவனது மகன் ராஜாதி ராஜனும் அவன் சந்ததியரும் தொழுது வணங்கிய சந்நிதி!..

அன்னையின் திருமுகத்தைக் கண்டாலே - நம்முள் வீரமும் வைராக்கியமும் குடி கொள்வதை உணரலாம்..

சில வருடங்களுக்கு முன்னால் - 

ஒரு வெள்ளிக் கிழமையின் உபயதாரராக இருந்து அம்பிகையை சேவிக்கும் பெரும்பேறு கிடைத்தது..

அப்போது நானும் எனது குடும்பத்தினரும் அம்பிகையின் முன்னிருந்து பதினாறு வகையான மங்கல நீராட்டினைத் தரிசித்தோம்..

அதற்கு முன் கேள்விப்பட்டிருந்த - திருமேனி அழகினை -
அப்போது தான் கண்ணாரக் கண்டு இன்புற்றேன்..

எங்கிருந்த போதும் - எங்கள் சிந்தையில் இருப்பவள் - ஸ்ரீவடபத்ரகாளி..

தஞ்சை மக்களின் மனங்களிலெல்லாம் கோயில் கொண்டு உறைபவள் இவள்!..

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகள் எல்லாம் சிறப்பு தான்.. எனினும்

சித்ரா பௌர்ணமி நாளன்று சந்தனக்காப்பு அலங்காரம் கொள்கின்றாள்..

தை மாத வெள்ளிக் கிழமைகளில் பால்குட வைபவ கோலாகலம்..

ஆனாலும் -  விஜயாலயன் எழுப்பிய கோயில் இது அல்ல.. - என்ற கருத்தும் உண்டு..

அப்படி குறிக்கப்படும் கோயில் - இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கும் உக்ர காளியம்மன் கோயில்..

ஸ்ரீ உக்ர காளி
அது சிலகாலங்கள் முன்பு வரைக்கும் குயவர் தெருவை அடுத்திருந்த கருவேலங்காட்டிற்குள் இருந்ததால் - கருவக்காட்டு காளி என்றனர்..

மிகப்பெரிய கருவேலங்காடு - இன்றைக்கு அழிந்து போயிற்று..

கருவேலங்காட்டு கோயில்தான் நிசும்பசூதனி கோயில் என்றும் கூறுகின்றனர்.
ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேற்றுமைகள் உள்ளன..

ஆனால்,

கைகூப்பித் தொழுவோரிடத்தில் எவ்வித வேற்றுமையும் இல்லை..

ஸ்ரீநிசும்பசூதனி - வடபத்ரகாளி
சமயங்களைக் கடந்த மெய்ப்பொருளாக நிசும்பசூதனியும் உக்ரகாளியும் விளங்குகின்றனர்..

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் - வேற்று சமயத்தவரையும் காணலாம்..

சோழப் பேரரசை நிர்மாணிக்கப் புறப்பட்ட பெரும்படைகள் -
நிசும்பசூதனியை தொழுத பின்னரே - முதலடியை எடுத்து வைத்திருக்கின்றன.

அன்றைக்கு திருக்கோயில் எத்தனை பெரிதாக இருந்ததோ - நாமறியோம்..

இன்றைக்கு நாற்புறமும் இல்லங்கள் சூழ்ந்திருக்கின்றன..

மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் மங்கலங்களை அள்ளித் தருபவளாக வீற்றிருக்கின்றாள் - வடபத்ரகாளி எனும் நிசும்பசூதனி!..

குண்டலிபுர வாஸினி சண்டமுண்ட விநாஸினி
பண்டிதஸ்ய மனோன்மணி ஸ்ரீவராஹி நமோஸ்துதே..

- என்று ஸ்ரீ வராஹி அம்மனின் துதியிலும் குறிப்பிடப்படுபவள் - நிசும்பசூதனி!..

மாமன்னன் ஸ்ரீராஜேந்திர சோழனின் பிறந்த நாளாகிய இன்று - 
அவன் நின்று வணங்கிய நிசும்பசூதனியின் சந்நிதியை 
நினைவு கொள்வதில் மகிழ்வெய்துகின்றேன்..

வடபத்ர காளீ போற்றி!..
சும்பநிசும்ப சூதனீ போற்றி.. போற்றி!.. 
* * *  

செவ்வாய், ஜூலை 21, 2015

அம்பகரத்தூர்

மிக மிகத் தொன்மையானது -  அவளுடைய வழிபாடு..

அவளுக்கு எத்தனை எத்தனையோ திருப்பெயர்கள்.. இருப்பினும் -

ஸ்ரீ பத்ரகாளி எனும் போது உள்ளம் மகிழ்கின்றாள்..

அவள் கோர சௌந்தர்யங்கொண்டவள்..

கடைவாயின் இருபுறமும் சற்றே நீண்ட பற்கள் மட்டுமல்ல!..

மேல் வரிசையில் தெற்றுப் பல் அழகி - அவள்!..

தெற்றுப் பல் அழகுடன் திகழும் திருக்கோயில் எங்கே இருக்கின்றது!?..

உங்களுக்குத் தெரியுமா!..

தெரிந்தால் கூறுங்கள்.. அல்லது அடுத்து வரும் பதிவினில் காணுங்கள்!..

அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளி
இன்றைக்கு ஆடிச் செவ்வாய்!..

அன்னை கோபங்கொண்டு நின்ற -

ஸ்ரீ பத்ர காளி, ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி - எனும்  திருக்கோலங்களைத் தரிசிக்க ஏற்றதொரு நாள்..

அது வேண்டும்.. இது வேண்டும் எனக் கேளாமல் - அவளுடைய அன்பு ஒன்றையே யாசித்து அவளுடைய திருவடித் தாமரைகளைப் பூசித்தால்

சத்தியமாக - அவளைத் தரிசிக்கலாம்!..

இன்றைய தரிசனம் - அம்பகரத்தூர்!..

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அன்னை ஸ்ரீ காளிகாம்பாளின் திருக்கோயில்கள் திகழ்கின்றன..

அவள் தீமையை அழிக்க வந்தவள்..
அவளுடைய திருத்தோற்றம் அசுர சம்ஹாரத்திற்குத் தான்!..

கோபாவேசத்துடன் போரிடும் வீரர்களின் தோள்களில் வீற்றிருப்பவள்..

வனாந்திரங்கள், மலையிடுக்குகள், ஆற்றங்கரைகள் என எல்லா இடங்களிலும் அவள் திருக்கோயில்கள் இருக்கின்றன..

ஆனால் அவள் மயானத்தில் ஈசனுடன் நடனமாடுவதையே விரும்புகின்றாள்..

எனினும் தன் பக்தர்களுக்கு எவ்விதக் குறையினையும் வைத்ததில்லை..

அம்பகரத்தூருக்குச் செல்லும் முன் ஒரு செய்தி!..

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலை நாம் அறிந்திருக்கின்றோம்..

மேற்கு நோக்கிய அத்திருக்கோயிலின் - இரண்டாவது வடக்கு திருச்சுற்றில் கார்த்திகை மண்டபத்திற்கு அருகில் ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி உள்ளது.

அந்த சந்நிதியின் முன் கடந்த சில நாட்களாக (ஜூலை/13) ஒரு குரங்கு  உட்கார்ந்து இருக்கின்றது.

அதுவும் - அம்பிகையை நோக்கி கண்ணீர் வடித்துத் தொழுத வண்ணம்!...



சந்நிதி அடைத்த பின்னரும் அந்தக் குரங்கு - வேறு எங்கும் செல்லாமல் -  அங்கேயே இருக்கின்றது..

தகவல் அறிந்து கொண்டு பலரும் வந்து பார்க்கின்றனர்.

அதன் மீது பரிதாபம் கொண்டவர்கள் பால் பழம் முதலியனவற்றைக் கொடுத்தாலும் விரும்பி உண்பதில்லை..

அந்த ஜீவனின் நிலை கண்டு மனம் கலங்குகின்றது..

அதன் - மன உறுதி கண்டு நெஞ்சம் திகைக்கின்றது..

நேற்று கிடைத்த காணொளியைப் பாருங்கள்..


நமது புராணங்களில் - விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் ஈசனை வழிபட்ட நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன..

ஜடாயு , சம்பாதி ஆகிய கழுகுகள் வழிபட்டதிருத்தலம் இது!..
இந்தத் தலத்தின் திருப்பெயரே - புள்ளிருக்குவேளூர்!..

ஆனாலும், தற்போது குரங்கு சந்நிதியில் தவமிருப்பதன் அர்த்தம் என்ன!..

உபாசனாமூர்த்தி அருளும் திருவாக்கு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது..

நாம் அந்த நிலையை எப்போது எய்துவோம் என்றிருக்கின்றது..

இதனை - அவரவரும் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்..


இதோ அம்பகரத்தூர்...

காலமல்லாத காலத்தில் அரக்கி ஒருத்தியின் வயிற்றில் தோன்றியவர்கள் -

அம்பகரன், அம்பன்!..

வழக்கம் போலவே - குலகுருவாகிய சுக்ராச்சார்யாரிடம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டனர்..

நல்ல நிலைக்குச் செல்லும் வழியைக் காட்டினார் குரு..

ஆனால் - ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதால் - இவர்கள் சென்று நின்ற இடம் - மதுச்சாலை..

அல்லாதன செய்வோர்கள் அனைவரும் - அவர்களுக்கு அன்பர்களாகினர்..

அதன் பின் அவர்களுடைய ஆரவாரங்கள் ஆரம்பமாயின..

மதுவின் மயக்கம் அவர்களுக்கு நிரந்தரம் என்று பட்டது.. அதனால் -

பெருந்திரு எனப் புகழப்பட்ட பெண்களின் மேல் இவர்களின் கண் பட்டது..

கண்ணும் கருத்தும் கெட்டதனால் -
அம்பகரனும் அம்பனும் சென்ற வழித்தடத்தில் பெண்களின் வாழ்வு கெட்டது.

அபலைகளின் கூக்குரல் - தவமுனிவர்களின் மனதைத் தொட்டது.

தவமுனிவர்களின் வேண்டுதலால் - அசுரர்களுக்கு நாள் குறிக்கப்பட்டது..

அண்டம் நடுங்கிட ஆங்கார ரூபமாக காளி வந்தாள்!..

சங்கரி சாம்பவி - பஞ்சமி பைரவி - பத்ரகாளி என வந்தாள்!..

ஏந்திழையாள் தனது எட்டுத் திருக்கரங்களிலும் -
வெட்டிக் குத்திக் குடையும் கூரிய ஆயுதங்களை ஏந்தி வந்தாள்..

அவளைக் கண்டு ஆர்ப்பரித்து எழுந்த அம்பன் -

அம்பிகையின் - ஹூங்காரக் கூச்சலைக் கேட்டதுமே கீழே விழுந்து மாண்டு போனான்..


இதைக் கண்டு ஆத்திரத்துடன் போரிட முனைந்தான் அம்பகரன்..

மூளையற்ற அவனது ஆயுதங்கள் எல்லாம் முனை முறிந்து தொலைந்தன..

சரணடையத் திருப்பாதங்களைக் காட்டிய போதும் - கண்டு கொள்ளாத கசடன் - காட்டெருமை வடிவங் கொண்டு களத்திலிருந்து ஓடினான்..

உயிர் தப்பி ஓடிய அவனது எண்ணம் உலகை அழிப்பதாக இருந்தது..

அந்த எண்ணம் ஈடேறாதபடிக்கு அன்னை தன் திருவடியினால் மிதித்தாள்..
தன் திருக்கரத்தில் இருந்த வாளால் எருமையின் தலையை சேதித்தாள்..

சுய வடிவம் எய்திய அம்பகரனின் மார்பில் பாய்ந்தது - சூலியின் திரிசூலம்

தேவர்களும் முனிவர்களும் பூமாரி பெய்து தொழுது வணங்கினர்..

அவ்வண்ணமே திருக்கோலங்கொண்டு அமர்ந்தாள்..

இந்த நிகழ்வின் உட்பொருளை அறியாதவர்கள் ஒன்றாகக் கூடி -
பலகாலம் எருமைகளைப் பலியிட்டனர் அம்பகரத்தூரில்!..

இன்னமும் சில இடங்களில் காளி பூஜையில் பலியிடும் வழக்கம் உள்ளது. 

அது - நம்முள் மண்டிக் கிடக்கும் காம, குரோத, லோப, மோக, மதமாச்சர்யம் - எனும் குணங்களைப் பலியிடும் குறிப்பு என்பர் பெரியோர். 

நல்லோர்கள் முயற்சியினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் - உயிர்ப்பலி
நிறுத்தப்பட்டது - அம்பகரத்தூரில்.. அதற்குப் பதிலாக -

வைகாசி மாத இரண்டாம் செவ்வாய் அன்று மகிஷாசுர வதம் நடக்கின்றது.

இந்த நாளை அனுசரித்து சித்திரை மாதத்தில் அம்பகரத்தூரிலுள்ள மாரியம்மனுக்கு பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கும்.

அதன்பின் - காப்பு கட்டுதலுடன் - ஸ்ரீ பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள்வாள்..

ஒவ்வொரு நாளும் அலங்கார ரூபினியாக வீதி வலம் வந்தருள்வாள்..

வைகாசி இரண்டாம் செவ்வாய் அன்று நடுப்பகலில் மகிஷாசுர வதம்!..

அதற்கு முன்பெல்லாம் - பலியிடுதற்காக உள்ள எருமைகளில் ஒன்று மட்டும் கட்டறுத்துக் கொண்டு வந்து பலி பீடத்தில் நிற்குமாம்..

அந்தத் துன்பமெல்லாம் - இப்போது இல்லை..

மகிஷாசுர வதத்திற்குப் பின் - மறுநாள் - எல்லை ஓட்டமாக திக் விஜயம்.

அடுத்த நாள் வியாழன்று திருத்தேர்..

அன்னையைத் தேடிச் சென்று வணங்குகின்றனர் ஆயிரமாயிரமாக!..  அவர்களுள் எங்களையும் வைத்தனள் - என்பதே மகிழ்ச்சி!..

அன்னைக்கும் எமக்கும் உள்ள பந்தம் காலங்களைக் கடந்தது..

அதனால் தான் - அவளுக்கு அபிஷேக ஆராதனைகளை -
சந்நிதியில் நிகழ்த்தும் பெரும் பேற்றினைப் பெற்றிருக்கின்றேன்..

என் மனைவியும் பிள்ளைகளும் - வேளை கிடைக்கும் போது அம்பகரத்தூர் சென்று விடுவர்.


ஸ்ரீபத்ரகாளியம்மனைத் தரிசனம் செய்த பலன் விவரிக்க இயலாதது..

திருக்கோயிலில் ஸ்ரீ காளீஸ்வரர் என சிவசந்நிதியும் உள்ளது..

திருக்கோயிலில் ஸ்ரீ பெத்தண்ணர் சந்நிதியும் ஸ்ரீ பேச்சியம்மன் சந்நிதியும் விளங்குகின்றன.

ஆடி மற்றும் தை மாத கடைசி செவ்வாய் அன்று ஏக தின லட்சார்ச்சனை.

ஆடி மற்றும் தை மாத கடைசி வெள்ளி அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் திருநள்ளாற்றிலிருந்து பத்து கி.மீ தொலைவில் அம்பகரத்தூர் உள்ளது.

தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை - என அனைத்து நகரங்களில் இருந்தும் அம்பகரத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த ஒலிப்பேழையில் திருவிழா கோலாகலத்தைக் கேளுங்கள்....


அம்பகரத்தூரில் 
அஷ்ட புஜ மகா பத்ரகாளி..
அன்புடன் வீற்றிருக்கின்றாள்!..

அன்பர்களுக்கு அருள் புரிவதில் அவளுக்கு நிகர் அவளேதான்..
அவளைச் சரணடைந்தோர்க்கு அல்லல் என்பதே இல்லை..

ஓம் சக்தி ஓம்..  
* * *

ஞாயிறு, ஜூலை 27, 2014

ஸ்ரீவக்ர காளி

திருவக்கரை. 

ஸ்ரீகாளி உவந்து உறையும் திருத்தலங்களுள் ஒன்று. 

முன்னொரு காலத்தில்  - தாரகன் எனும் அரக்கன் விண்ணுக்கும் மண்ணுக்கும் பற்பல கொடுமைகளை அசுரர் குல வழக்கப்படி - செய்து கொண்டிருக்க, 

அஞ்சி நடுங்கிய உயிர்க் குலங்கள் எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைச் சரணடைந்தன.


ஒரு சமயம் - தட்சன் நடத்திய  யக்ஞத்தை அழிக்க வேண்டி பெருமானின் திருமேனியில் இருந்து ஸ்ரீ வீரபத்ரர் வெளிப்பட,

அம்பிகையின் கோபம் ஸ்ரீ பத்ர காளி என வெளிப்பட்டது. 

யாகம் அழிக்கப்பட்டதும் - ஸ்ரீ வீரபத்ரருடன் ஒடுங்கினாள்  ஸ்ரீ பத்ரகாளி. 
ஸ்ரீ வீரபத்ரர் - சிவபெருமானின் திருமேனியினுள் ஒடுங்கி சாந்தம் கொண்டார்.

அன்று தன்னுள் ஒடுங்கிய ஸ்ரீ பத்ரகாளியை - மீண்டும் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.

இந்த வைபவத்தினை அப்பர் பெருமானும் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும், மாணிக்க வாசகப் பெருமானும் திருமூலரும் - குறிப்பிடுகின்றனர்.

வல்லை வரு காளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ
கொல் என விடுத்தருள் புரிந்த சிவன்!..
(3/69)

என்று திருக்காளத்தித் திருப்பதிகத்திலும் ,

சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் 
துஞ்ச வெஞ்சினக் காளியைத் தருஞ்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் 
சித்தி பெற்றவரே!.. (3/110) 

என்று சீர்காழித் திருப்பதிகத்திலும் திருஞானசம்பந்தர் புகழ்கின்றார்.

ஸ்ரீ பத்ரகாளிதான் - ஐயனின் தாண்டவங்களுக்கு ஆதரவாக அமைகின்றனள். 

திருஆலங்காட்டிலும், தில்லை வனத்திலும் - ஐயன் காளியுடன் ஆடிய நடனத்தை அறியாதார் யார்!.. 

ஸ்ரீ பத்ரகாளி வழிபாடு மிகப் பழைமையானது.

தன் கணவன் - பழி சுமத்தப்பட்டு கொலைக்களத்தில் வீழ்த்தப்பட்டான் என்பதை அறிந்து கொதித்தெழுந்த கண்ணகி -

நீதி கேட்டு நெடுஞ்செழியனின் அவைக்கு வருகின்றனள். 

கண்ணகியின் வருகையை வாயிற்காவலன் - அரசனுக்கு அறிவிக்கும் போது,

தாருகன் பேருரங்கிழித்த பெண்ணும் அல்லள்!.. - என்று கூறுவதாக இளங்கோவடிகள்  இயம்புகின்றார்.

அத்தகைய ஸ்ரீ காளி பற்பல காலத்தும்  நன்மைகளைக் காத்து - தீமைகளைச் சாய்ப்பதற்குத் தோன்றியருள்வதாக புராணங்கள் பேசுகின்றன.  

அவ்விதமே - வக்ரன் எனும் அசுரனின் வன்கொடுமையை அழித்து ஒழித்த போது - ஸ்ரீவக்ரகாளி எனப் புகழப்பட்டாள்.

வக்ராசுரனை வதம் செய்தபின் அவள் அமர்ந்த திருத்தலம் - திருவக்கரை எனப்பட்டது.


பைதற் பிணக்குழைக் காளி - என அப்பர் பெருமான் வர்ணிக்கும் திருக் கோலம். 

வலது திருச்செவியில்  தெளிவாக விளங்குகின்றது சிசு . 
இது மகிஷாசுரனின் மனைவியின் கர்ப்பத்தில் தங்கிய மாய சிசு. 

இதனை ஸ்ரீ பேச்சியம்மன் தன் திருக்கரத்தினால் நீக்கி - அன்னை காளியிடம் கொடுக்க - அன்னை தன் காதணியாக அணிந்து கொண்டாள்.

குழற்கற்றைகள் அக்னி ஜூவாலைகளாக பரந்து விரிந்திருக்கின்றன. 
எட்டுத் திருக்கரங்களுடன் முண்டமாலை அணிந்த திருக்கோலம்.
ப்ரயோகச் சக்கரம். ஓங்கிய வாளும் ஊன்றிய சூலமும் அச்சம் தீர்க்கின்றன.
கபாலமும் மணிகள் பொருந்திய கேடயமும் வில்லும் ஏந்தியிருக்கின்றனள். 

நடராஜப் பெருமானின் குஞ்சித பாதம் குறிக்கும் பொருளாக - 
ஸ்ரீவக்ரகாளி - தன் இடது திருவடியினைச் சுட்டிக் காட்டுகின்றனள்.

பௌர்ணமி ஜோதி தரிசனம்
பௌர்ணமி நடுஇரவிலும் அமாவாசை நடுப்பகலிலும் ஜோதி தரிசனம்.  
சந்நதியின் முன்மண்டபத்தின் மேல் ஜோதி ஏற்றப்படுகின்றது. 
ஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். 
திருக்கோயிலின் அருகில் -  மயானம் ஒன்று அமைந்துள்ளது.

அன்னை அமர்ந்திருக்கும் திருவக்கரை -  தேவாரத் திருத்தலமாகும்.

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடியுள்ளார். அப்பர் சுவாமிகள் பல பதிகங்களிலும் திருவக்கரையைப் புகழ்கின்றார்.

இறைவன் - ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர்.
அம்பிகை - அமிர்தேஸ்வரி.
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.
தலவிருட்சம் - வில்வம்.

இறைவன் - சத்யோஜாதம், வாமதேவம், அகோரம் - எனும் மூன்று திருமுகங்களுடன் பொலிகின்றனன்.

உள்திருச்சுற்றில் குண்டலிமுனிவரின் ஜீவசமாதியுள்ளது. வக்ராசுரன் ஸ்தாபித்து வணங்கிய சிவலிங்கமும் இங்கே விளங்குகின்றது.

திருக்கோயிலினுள் ஸ்ரீ வரதராஜப்பெருமாளின் சந்நிதியும் விளங்குகின்றது பெருமாளின் திருக்கரத்தில் ப்ரயோக சக்கரம் திகழ்கின்றது.

ராகு கிரகத்தின் அதிபதி ஸ்ரீகாளி என்பதாலும், சனைச்சரன் இங்கே வக்ர சனி என  விளங்குவதாலும் அன்பர்கள் தேடி வந்து வழிபடுகின்றனர்.

வக்ரகாளியம்மனுக்கு விசேஷமாக சந்தனக் காப்பு அலங்காரம் நிகழ்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவக்ரகாளியம்மனை தரிசனம் செய்தபோது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தேன்.

அன்றைய தினம் அன்னை சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்தாள். பக்தர் நெருக்கடி இல்லாமல் ஏகாந்தமாக இருந்தது - அவள் சந்நிதி.  

சிறுபொழுது அமர்ந்து அவளது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

நிவேத்யம் செய்த பால் எனக் கொடுத்தார் - இளம் பெண் ஒருவர். அப்போது அவருடைய விழிகள் அஞ்ச வேண்டாம் என்றன. 

வக்ரகாளியிடம் நேரில் பேசியதைப் போல் - மனம் பரவசமானது.

எழுந்து - குருக்களிடம் சிறிது சந்தனம் கேட்டேன்.  வக்ர காளியின் திருமேனியிலிருந்து - எலுமிச்சம் பழம் அளவுக்கு - எடுத்துக் கொடுத்தார்.

விரைவில் ஒரு மாறுதல்!..

ஸ்ரீகாளி தந்த வரப்ரசாதம் தான் - இப்போதைய குவைத் வாழ்க்கை!..

யாதுமாகி நின்றாய் காளி!.. என்றார் மகாகவி பாரதியார்.

என்றும் அவளை மறப்பதற்கில்லை!.. 
சமயத்தில் -  அவளை நான் மறந்தாலும் 
அவள் என்னை மறப்பதேயில்லை!..

ஓம் சக்தி ஓம்!..
ஸ்ரீவக்ர காளி சரணம்!..
* * *