நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 08, 2015

பெண்மை வெல்க!..

அக்கா!..
.....

அக்கா!.. அக்கா!..

யாரது!.. காலையிலயே அக்கா குருவி மாதிரி!..

நாந்தான்.. தாமரை!..


நீதான்.. தாமரை..ன்னு எனக்கு அப்பவே தெரியும்.. வாம்மா.. வா!..

அப்பா.. அம்மா.. எல்லாம் எப்படி இருக்காங்க?.. நான் அந்தப் பக்கம் வந்து நாளாச்சு!..

எல்லாரும் நல்லா இருக்காங்க!..

இப்ப உங்க வீட்டுக்காரர் எங்கே இருக்கார்?.. எப்போ வர்றாராம்!..

துபாய்..ல!.. தீபாவளியோட வருவார்!.. அது சரி.. என்னக்கா செய்றீங்க.. நீங்க.. கம்ப்யூட்டரைப் போட்டு குடைஞ்சிக்கிட்டு?..

இன்றைக்கு மகளிர் தினம் அல்லவா.. அதான் நமக்குத் தெரிஞ்சவங்க வலைப் பூவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு..
  
ஆ.. மகளிர் தினமா.. அங்கே கூட வளையல் கடை.. ல சிறப்புத் தள்ளுபடி..ன்னு போட்டிருந்தான்.. மூனு சோப் வாங்கினா ஒன்னு கூடுதல்..ன்னான்..  இன்னும் ஒருத்தன் எக்ஸ்ட்ரா ரெண்டு கிராம் கிரீம் இலவசம்..ன்னு கத்திக்கிட்டு இருந்தான்!..

இந்த நாளுக்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாங்க.. அந்தக் காலத்துல!.. அது ரெண்டு கிராம் கிரீம் ஓசியில வாங்குறதுக்கு..ன்னு ஆகிப் போச்சே!..

என்னக்கா.. நீங்க.. ஆடல் பாடல் கொண்டாட்டம் தானே மகளிர் தினம்!..

இந்தக் காலத்து படிச்ச பொண்ணு நீ!.. தமிழை வாசித்தேன்.. சுவாசித்தேன்.. ன்னு வீட்டுக்குள்ள எழுதி வெச்சிருக்கிற... நீயே தடுமாறிட்டியே!.. 

அக்கா.. சொல்லுங்களேன்.. மகளிர் தினம் எப்படி வந்தது..ன்னு!.. சரி.. அத்தானை எங்கே காணோம்!..


அவங்க பள்ளிக் கூடத்தில மகளிர் தின கருத்தரங்கத்துக்குப் போயிருக்கிறார்..

நீங்களும் போயிருக்கலாமே!..

போயிருக்கலாம் தான்.. சமையல யார் பார்க்கிறது?.. இப்ப நீ வந்தாயே.. உன்னோடு பேசியிருக்க முடியுமா!..

ஏன் இன்னைக்கு ஒரு நாள் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதா!..

அரிசி பருப்பு காய்கறி மட்டும் சமையல் இல்லடா!.. அன்பு பாசம் பரிவு - இதெல்லாம் சேர்ந்தது தான் சமையல்!.. இதெல்லாம் ஹோட்டல் சாப்பாட்டுல கிடைக்குமா?.. நல்ல சமையலறை - பூஜையறைக்கு சமம்!..

எப்படிக்கா.. இதெல்லாம் உங்களால!.. எனக்குப் புல்லரிக்குது!..

நாளைக்கு நீயும் குத்து விளக்கு ஏற்றி வைக்கிறப்ப உனக்கும் புரியும்!.. இதோ இந்தா - பாதாம் அல்வா சாப்பிடு!..

நல்லா இருக்கே.. எப்படி செய்தீர்கள் அக்கா!..

நம்ம உமையாள் காயத்ரி அவங்க தளத்தில சொல்லியிருந்தாங்க..

மகளிர் தினத்தைப் பற்றி சொல்லலையே!..


மகளிர் தினம்.. அப்படின்னு உலகம் முழுதும் அனுசரிக்கப்பட்டாலும் - பொதுவா - இந்த நாளை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை உண்டாக்கும் நாள்.. ந்னு சொல்லலாம். ஏன்னா அவங்களுக்கு எதிரான வன்முறைகள் தான் உலகம் எங்கும் தலை விரித்து ஆடுகின்றது.

இந்த விஷயம் பாரிஸ்..ல தான் ஆரம்பமானது. 1789 ஜூன் மாதம் பதிநான்காம் தேதி. பிரெஞ்சுப் புரட்சி நடந்த சமயம் அது. ஆண்களுக்குச் சமமாக எங்களுக்கும் உரிமைகள் வேணும்..ன்னு ஆரம்பிச்சாங்க..

இது கூட - எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை - அப்படின்னு வேற பிரச்னைகளும் சேர்ந்து கொண்டன.

அப்போ ஆட்சியில இருந்தவன் பெயர் லூயிஸ் பிலிப்.. கொட்டும் மழையில கிளர்ச்சி செய்த பெண்களை அதட்டிப் பார்த்தான். மிரட்டிப் பார்த்தான். முடியவில்லை.

எந்த சமாதானத்தையும் பெண்கள் ஏற்கவில்லை. பதவியைப் போட்டு விட்டு ஓடியே விட்டான்...

இந்தச் செய்தி கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் இத்தாலி - என ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி உழைக்கும் பெண்கள் ஓரணியில் திரண்டார்கள்..

காலம் மாறியது. ஆனாலும் கனல் ஆறவில்லை. 1848 ஆம் வருடம் மார்ச் மாதம் எட்டாம் தேதி பிரான்ஸின் லூயிஸ் பிளாங்க் - அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் கொடுத்து வாக்குரிமை வழங்கவும் ஒப்புதல் அளித்தான்.
இந்த நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் என்று உலகம் முழுதும் அமைவதற்கு அடிப்படையாக அமைந்தது..

அக்கா.. நீங்க ஒரு தகவல் களஞ்சியம் அக்கா!..

நான் இல்லம்மா.. விக்கிபீடியா தான் தகவல் களஞ்சியம்.. இன்னும் கேளு!..

அப்ப போராட்டம் முடியலையா!?..

இதெல்லாம் நடந்தது பிரான்ஸில். அந்தப் பக்கம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நூற்பாலைகளில் பதினாறு மணி நேரம் உழைத்த பெண்களுக்கு சொற்ப கூலியே கொடுக்கப்பட்டது. அந்த ஊதியமும் அந்த முதலாளிகளின் வக்கிரத்துக்கு இரையான பின்னரே!..

அடப் பாவிகளா!..

1857ஆம் வருடம் பெண்கள் கொதித்தெழுந்தார்கள். போராட்டம் வெடித்தது. ஒன்றும் பயனில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை.

1908ஆம் வருடம் வாக்குரிமை கேட்டு பெண்கள் அமைப்புகள் தோன்றின.

நியூயார்க்கில் 15000 பெண்கள் ஒன்று கூடி ஊர்வலமாக வந்து போராடினர்.

கிளாரா ஜெட்கின் அம்மையார்
1910ஆம் வருடம் கிளாரா ஜெட்கின் என்பவர் தலைமையில் கோபன்ஹேகன் நகரில் சர்வதேச பெண்கள் மாநாடு நடந்தது. அப்போது உருவாக்கப்பட்ட அமைப்பு 1911 மார்ச் 19 ஆம் தேதி கூடியது. சர்வதேச பெண்கள் ஒன்றாகச் சேர்ந்தனர்.

பிரான்சில் 1848ல் லூயிஸ் பிளாங்க் வாக்குரிமை வழங்க ஒப்புதல் அளித்தான் அல்லவா அந்த நாளை வருடந்தோறும் சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர்.

அதன் பிறகு 1911ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நியூயார்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்று நாற்பது பெண்களுக்கும் மேலாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர்.

கொடுமையான விபத்தினைக் கண்டு பெண்கள் அமைப்புகள் போராடின.

இதன் பிறகே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்டது.

என்னக்கா.. இது!.. இவ்வளவு கொடுமையா இருக்கு!?..


அதுக்கு அப்புறம் பல நிலைகள். எல்லாவற்றையும் கடந்து 1913 ஆம் ஆண்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என அறிவிக்கப்பட்டது. உலகம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.


இதற்கு முழுமுதற் காரணம் - கிளாரா ஜெட்கின் அம்மையார் அவர்களே!..
இந்த நாள் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காகத் தான்!..

அக்கா.. நானும் தப்பாக புரிந்து கொண்டிருந்தேன்!.. நம்மை நாமே காத்துக் கொள்வதிலும் முனைப்பு வேண்டும் அல்லவா!..

ஆமாம் .. கண்டிப்பாக!.. ஒரு பெண் முதலில் தன்னை அறிய வேண்டும்.. கண்ணாடி மேல கல்லு விழுந்தாலும் கல்லு மேல கண்ணாடி விழுந்தாலும் சேதம் எதற்கு!.. சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்!..

நாம சந்திக்கிற பிரச்னைகள் தான் எத்தனை.. எத்தனை?. பிறக்கறதில இருந்து போய்ச் சேர்கிற வரைக்கும் பிரச்னைதான்!..

தாமரை.. சிசுவாக இருந்தாலும் பிரச்னை.. கிழவியா ஆனாலும் பிரச்னை ..ன்னா என்ன தான் செய்றது!?..

கண்டிப்பாக பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடும் தண்டனைகள நடைமுறைப்படுத்தணும். தப்பு செஞ்சவனுக்கு தண்டனைய நிறைவேற்றணும்..

நமக்கு முன்னால எத்தனையோ சம்பவங்கள்.. இதெல்லாம் அந்தக் காலத்து தாத்தா பாட்டி சொன்ன கதை இல்லை!.. தெருவுக்குத் தெரு.. ஊருக்கு ஊர் கண் முன்னால நடக்கின்றதைப் பார்க்கின்றோம்..

ஆனாலும் - திருந்தவில்லை என்றால் என்ன தான் செய்வது!..

எதையும் சாதித்துக் காட்டுவது தானே பெண்மை.. அதுதானே உண்மை!..


ஜான்சி ராணி
Dr. முத்துலட்சுமி ரெட்டி

நீங்க சொல்றது சரிதான் அக்கா!.. இன்னிக்கு உங்க தளத்தில என்ன செய்தி சொல்லப் போறீங்க!..

இதோ.. இன்றைய பதிவு!..

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து தற்போது வரலாற்றுத் துறைத் தலைவராக இருப்பவர் ராதாபாய்.,

ராதாபாய் அவர்கள்.
இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் ஆய்வுகளைச் சமர்ப்பித்து டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கின்றார்.

இவர் என்ன கூறுகின்றார் தெரியுமா!..

என்னைப் போன்றவர்கள் என்று இல்லை. எல்லாருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால் - நம்மிடம் இல்லாததை நினைத்துக் கவலைப் படுவதை விட இருப்பதை நினைத்துப் பெருமைப் படவேண்டும். நம்மிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். நாம் - நம்மை - எப்போதும் ஆக்க பூர்வமான - சமூகத்திற்கு பயன் தரக்கூடிய - மனதிற்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

எனது துறை மாணவிகள் என்றில்லாமல் - எல்லாத்துறை மாணவிகளிடமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதை முக்கியமாக செய்து வருகின்றேன். அதுவே பார்வை இல்லாத கிராமப்புற மாணவிகள் என்றால் அவர்களைத் தேடிச் சென்று உற்சாகப்படுத்தி படிக்க வைத்து வருகின்றேன்!..

இப்படிச் சொல்லும் ராதாபாய் அவர்கள் - மாற்றுத் திறன் உடையவர்.
பிறவியிலேயே பார்வை அற்றவர்!..

அக்கா!..

என்னம்மா அதிர்ந்து விட்டாய்!.. இன்னொன்றும் கேள்!..

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு முறை அல்ல.. இருமுறை பேசிய பெருமை உடையவர் சுவர்ண லக்ஷ்மி. சென்னை பெருங்களத்தூர் ரவி துரைக்கண்ணு லக்ஷ்மி தேவி தம்பதியினரின் அன்பு மகள்.

சுவர்ணலக்ஷ்மி
இவரும் பிறவியிலேயே பார்வை அற்றவர்.

சுவர்ண லக்ஷ்மி சொல்றாங்க -


அடிமட்டக் குரல் மேலோங்கி ஒலிக்கணும்!..

ஒரே நாதம்.. வேத கீதம் மாதிரி இருக்கின்றது அல்லவா!..

அக்கா என்ன சொல்றதுன்னே புரியல.!.. பெண்கள் மேல்நிலையை அடைய வேணும் அக்கா..

பெண்மை வெல்ல வேண்டும்!.. நாம் அதற்காகப் பாடுபடவேண்டும்!..

நெற்றியில் குங்குமத் திலகத்துடன் தாமரை விடை பெற்றுக் கொண்டாள்!..
* * *

இன்று சர்வதேச மகளிர் தினம்.

இப்பூவுலகில் காலங்கள் தோறும் 
போற்றி வணங்கப்பட வேண்டிய புனிதம் 
பெண்மை!..


எந்நேரமும் இயங்கிக் கொண்டேயிருப்பது - சக்தி!..

அது சூட்சுமம் !.. கண்களுக்குப் புலனாகாதது என்பர். 

கண்களுக்குப் புலனாக வேண்டுமெனில்  - எதிர் வந்து நிற்பது - 

பெண்மை!.. 
அதுவே வாய்மை!.. அதுவே தூய்மை!.. அதுவே தாய்மை!.. 

வீடு, அலுவலகம், பொது இடம்,  பள்ளி, கல்லூரி - என பல தளங்களில் பெண்களுக்கு உரிய நிலை குறித்து பேசப்படுகின்றது.

ஆனாலும், பெண்களை இடரும் இருளும் தான் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.  

விடிவு காலம் தான் எப்போது எனத் தெரியவில்லை!

எல்லாம் வல்ல இறை சக்தி  
இனியதொரு விடியலை நோக்கி 
நம்மை வழி நடத்துவதாக!..

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..

பெண்மையின் திருவடிகளில் 
தலை வைத்து வணங்குகின்றேன்!..
ஓம் சக்தி ஓம்!..
* * *

30 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள்...

    ராதாபாய் அவர்கள் சொன்னது மேலும் சிறப்பு...

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான தகவல்கள் தந்த பகிர்வு. பாராட்டுகள்.

    மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை + பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பெண்மை வெல்க வெல்க என்று போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பெண்மை வெல்க.. வாழ்க!..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. எங்கோ ஓரிருவர் முயற்சி செய்து மேன்மை அடைகிறார்கள்.பொதுவாக பெண்கள் தங்களால் முடியும் என்று எண்ணவேண்டும். வாழ்த்துக்கள். அரபு நாடுகளில் நிலைமை எப்படி ஐயா.?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தாங்கள் கூறுவது உண்மையே..
      நல்லதொரு பின்புலம் அமைய வேண்டியது அவசியம்.
      இங்கே குவைத் நாட்டைப் பொறுத்தவரை -
      பெண்கள் உயர் கல்வி கற்க வெளிநாடு செல்வதற்குக் கூட தடையேதும் இல்லை. பலதுறைகளிலும் அலுவலகங்களிலும் வெளிநாட்டுப் பெண்களுடன் இந்நாட்டுப் பெண்களும் பணிபுரிகின்றார்கள்..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன் நண்பரே மாணவி சுவர்ண லக்ஷ்மி பாராட்டுக்குறியவர் அவருடைய பேச்சை கேட்கும்போதே சிலிர்க்கின்றது.
    இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      சுவர்ணலக்ஷ்மியின் பேச்சு - எவ்வளவு துல்லியம் கவனித்தீர்களா!..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உங்களுடைய இந்த பதிவின் மூலம் பல தகவல்களை அறிய முடிந்தது.நன்றி ..

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் முதல் வருகை. வரவேற்கின்றேன்..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சுவர்ண லக்ஷ்மி பேச்சு அருமை. அவர்கனவு நனவாக வாழ்த்துக்கள்.
    இனியதொரு விடியலை அந்த இறைசக்தி கொடுக்கட்டும்.
    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. சிந்திக்க வேண்டிய நாளில்
    சிந்திக்க வைக்கும் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. சுவர்ண லஷ்மியின் பேச்சு மனதை கவர்ந்தது. எத்தனை அருமையான தவல்கள்.....அழகாய் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. பெண்கள்தின கட்டுரை அருமை, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பெண்மை போற்றுவோம்... நல்ல பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  12. மகளிர் தினத்துக்கு பெண்மையை போற்றும் வகையில் அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. பெண்கள் தினம் உருவான வரலாற்றை ஆதி காலந்தொட்டு விளக்கியிருப்பது மிகவும் நன்று. சுவர்ணலட்சுமி, குழந்தைகள் பாராளுமன்றம் ராதாபாய் பற்றிய செய்திகள் அனைத்துமே எனக்குப் புதிய செய்திகள்.
    சுவர்ணலட்சுமி உலகளவில் செக்ரட்டரி ஜெனரல் ஆக விரும்புவதை அறிந்து வியப்பு. உள்ளத்தனையது உயர்வு அல்லவா? கண்டிப்பாக அவர் கனவு நிறைவேறும். அவருக்கு என் வாழ்த்துக்கள்!
    பெண்கள் தினம் என்றால் ரெண்டு கிராம் கிரீம் ஓசியில் வாங்குவதல்ல, என்பதை உரையாடல் வாயிலாக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள்! அனைத்துப் பெண்டிர் சார்பாக நன்றியும் உங்களுக்கு உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் தளத்தில் பதிவு எதையும் காணவில்லையே என்று எண்ணியிருந்தேன்.. இனிய பதிவு ஒன்றை வெளியிட்டது சிறப்பாக உள்ளது.

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரை வழங்கி பாராட்டியதற்கு மிக்க நன்றி..

      நீக்கு
  14. ஒரே பதிவில் அதிகமாக, அதே சமயம் நிறைவாகச் செய்திகளை அழகான படங்களுடன் தந்துள்ளீர்கள். போட்டித்தேர்வுக்குச் செல்லும் மாணவர் முதல் அனைவருக்கும் பயன்படும் வகையிலும், புரியும் வகையிலும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஏதோ எனக்குத் தெரிந்ததை - எழுதுகின்றேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. மிக நல்ல தகவல்களை ராதாபாய் அவர்களின் மூலமும், சுவர்ணலஷ்மி மூலமும் பகிர்ந்தது சிறப்பு. பெண்கள் தங்களை முன்னிருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு ராதாபாய் அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டுவது பாராட்டிற்குரியது. ஏனென்றால் அதுதான் முக்கியம். தினமுமே பெண்கள் தினம்தானே ஐயா! இவ்வுலகமே சக்தியால் தானே இயங்குகின்றது!! அந்தச் சக்தி இல்லையேல் இந்தன் உலகமே இல்லையே!

    அருமையான ப்திவு. தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் பணிச் சுமைகளுக்கு இடையேயும் - நமது தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி..

      கருத்துள்ள கருத்தினைக் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..