நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 13, 2015

மார்கழிக் கோலம் 29

குறளமுதம்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)  

பொய் இல்லாத வாழ்க்கையே அறத்தின்பாற்பட்டது.
அவ்வாழ்க்கை வாழத் தலைப்பட்டோர் 
வேறு அறம் செய்யவில்லை ஆயினும்

பொய்யாமையே மிகச்சிறந்த அறம்.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 26


சிற்றம்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேள்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
திருக்கோளூர்



மூலவர் - வைத்த மாநிதிப் பெருமாள்
உற்சவர் - நிஷோபவித்தன்
தாயார் - கோளூர்வல்லி, குமுதவல்லி
தீர்த்தம் - தாமிரபரணி, குபேர தீர்த்தம். 
ப்ரத்யட்சம்- குபேரன்

ஸ்ரீஹர விமானத்தின் கீழ் புஜங்க சயனம்.
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்.

காசு கண்ணை மறைக்கின்றது என்பார்கள். 

நாளும் நாளும் அவதிப்படும் மானிடருக்கே இந்த நிலை என்றால் வற்றாத நிதியங்களைத் தன் பொறுப்பில் வைத்திருப்பவனுக்கு எப்படியிருக்கும்!.. 

ஒருநாள் இனிய மாலைப் பொழுது. 

திருக்கயிலை சென்று சிவதரிசனம் செய்ய விரும்பினான் அவன். 

அவன் - குபேரன். பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியரின் பேரன். வைஸ்ரவனின் மகன்.

குபேரனின் தாய் தைவ வர்ணினி. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவள். 

குபேரனின் தந்தை வைஸ்ரவன் சுமாலியின் மகளான கேகசி என்பவளை மணந்ததால் பிறந்தவர்களே இராவணன் கும்பகர்ணன் விபீஷணன் மற்றும் சூர்ப்பநகை.. 

குபேரனை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நவநிதிகளுக்கும் அதிபதி.

நிலைமை இப்படியிருக்க - சனைச்சரன் குபேரனைப் பின் தொடர்ந்திருந்த நேரம் அது.

சிவதரிசனம் வேண்டி - கயிலை மாமலைக்குச் சென்றபோது தான் -
காசு கண்ணை மறைத்தது.

தமிழில் காசு என்றால் - குற்றம் என்ற அர்த்தமும் உண்டு!..

அம்பிகை சர்வாலங்கார பூஷிதையாக வீற்றிருந்த கோலத்தைக் கண்டான். 

குபேரன் என்ன நினைத்தானோ - அதை அம்பிகையே அறிவாள்!..

அந்த நொடியே - ஆ!.. என அலறித் துடித்தான்.

அவனுடைய விழிகளில் ஒன்று தெறித்து விழுந்தது.

சீற்றத்துடன் அம்பிகை சாபம் கொடுத்தாள்..

ஒற்றைக் கண் கொண்டு உற்று நோக்கிய உனது பெருஞ்செல்வம் உன்னை விட்டுத் தொலையட்டும்.  நீ பெற்ற பேரும் புகழும் உன்னை விட்டு நீங்கட்டும்.
உன் உடம்பு காமாலை கண்டது போல் மஞ்சளாகட்டும்!..

கதறித் துடித்தான் குபேரன். 

நீ பெற்ற பேரும்புகழும் ஈஸ்வரன்அளித்தது. இத்தனைக்கும் உனக்கு சிவசகன் என்ற பட்டப் பெயர் வேறு!.. ஏதோ இந்த அளவில் தப்பித்தாய் என சந்தோஷம் கொள்!.. 

திருக்கயிலையில் கூடி நின்றவர்கள் சொல்லியதை விட அவனது மனமே அவனை இடித்தது.

கதறி அழுதான். கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பதைப் போல் - கண் கெட்ட பிறகு தான் குபேரனுக்குப் புத்தி வந்தது.

அங்குமிங்கும் அலைந்தும் அவனுக்கு ஆறுதல் கூற யாரும் முன்வரவில்லை.

அவனை விட்டு அகன்ற நவநிதியங்களும் கொள்வாரின்றிக் கிடந்தன. ஏதோ ஒரு நல்வினையால் ஸ்ரீஹரிபரந்தாமனை எண்ணித் தவம் செய்ய - பரந்தாமன் அவற்றை அரவணையில் தலைக்குக் கீழ் வைத்துக் கொண்டு துயின்றான்.

மீண்டும் சிவபெருமானைச் சரணடைந்து பலவாறாகத் துதித்து பொறுத்தருள வேண்டினான் குபேரன்.

பெருமானோ - அம்பிகையின் பக்கம் கையைக் காட்டி விட்டு -  தவத்தில் ஆழ்ந்தார்.

குபேரனைக் கண்டு மனமிரங்கிய அம்பிகை -
உடலின் நிறம் மாறிவிடும். ஆனாலும் ஒரு கண் போனது தான்!..  - என்றாள்.

அம்மா!.. அகத்துள் விழுந்த குழி அப்படியே இருந்தாலும் முகத்தில் விழுந்த குழியை மாற்றலாகாதா!.. - என அழுது நின்றான்.

சரி.. உன் முகத்தில் முன்னைப் போலவே இரண்டு கண்களும் விளங்கும். அவற்றுள் ஒரு கண்ணில் தான் பார்வை!..

ஆகட்டும் தாயே!.. - ஆனாலும் அங்கேயே தலையைக் குனிந்தவாறு நின்று கொண்டிருந்தான் - குபேரன்.. 

அவன் ஏன் இன்னும் இவ்வாறு நின்று கொண்டிருக்கின்றான் என்பதை அறியாதவாளா அம்பிகை!..  புன்னகைத்தாள். 

அதர்மம் தோற்றோடிய திருத்தலம் ஒன்று தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. அங்கே இருக்கின்றன உன் செல்வங்கள் அனைத்தும். அங்கே பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு எனது சகோதரன் துயில்கின்றான். சென்று வாங்கிக் கொள்!.. 

ஓட்டமும் நடையுமாக ஓடி வந்த குபேரன் - பெருமாளைக் கண்டு திகைத்து நின்றான்.

பொல்லாத நேரம் இன்னும் போய் விடவில்லை.  பெருமாளை எழுப்புதற்கு - நாம் முயற்சி செய்து வேறு ஏதாவது கோளாறு ஆகிவிட்டால்!?.. 

அதற்குள் - வைகுந்தவாசனே திருவாய் திறந்து பேசினான். 

வந்துவிட்டாயா!. அதோ இருக்கின்றதே ஒரு மூட்டை- அதை எடுத்துக்கொள்..

குபேரன் தயங்கினான்.. - சிறிய மூட்டையாக இருக்கின்றதே?..

எல்லாம் இது போதும்..  இதை வைத்துக் கொண்டு பரிபாலனம் செய்!..

ஸ்வாமி.. மன்னிக்க வேண்டும்.. மீதியெல்லாம்!?...

அதை எல்லாம் மஹாலக்ஷ்மி பார்த்துக் கொள்வாள்..செல்வம் அனைத்தும் திரண்டு ஓரிடத்தில் கிடக்காமல் எங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். கிடைத்ததைக் கொண்டு திருப்தி கொள்.. திருப்தியே மிகப்பெரிய செல்வம்!..

அங்கிருந்து விடைபெற்றுக் கொண்ட குபேரன் பின்னும் தவங்கள் செய்து தனது பிழைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டான்.

ஆனாலும் - கண்பார்வை போனதாகவே ஆயிற்று.

அழகிய முகத்தில் விளங்கும் இரு விழிகளில் ஒன்றில் மட்டுமே பார்வை என்பது வியப்பூட்டும் செய்தி மட்டுமல்ல படிப்பினை வழங்குவதும் கூட!..

பின்னாளில் - பிருகு முனிவரால் வைகுந்தத்தில் கலகம் ஏற்பட்டது.

மாலவனை விட்டு மஹாலக்ஷ்மி பிரிந்தாள்.

கல்யாண நேரத்தில் - குபேரன் தன்னிடம் இருந்த சிறிய அளவில் இருந்துதான் பெருமாளுக்குக் கடன் கொடுத்தான்.  

திருமலையில் - திருமணத்தின் போது வட்டிக்குக் கடன் கொடுத்து பத்திரம் எழுதி வாங்கியது கூட - ஒரு திருவிளையாடல் தான்!..

ஏனெனில் செல்வம் எங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கட்டும் என்ற நியதிக்குத் தானும் ஆட்பட்டவராக பெருமாள் நடத்தியதும் ஒரு லீலை தான்!..


இப்படி பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் துலங்கும் திருத்தலம் தான் - திருக்கோளூர்.

ஸ்ரீஹர விமானத்தின் கீழ் புஜங்க சயனத்தில் பொன்னளந்த மரக்காலைத் தலைக்கு வைத்துக்கொண்டு துயிலாமல் துயிலுகின்றான் வைத்த மாநிதிப் பெருமாள்.

இடது கையில் அஞ்சனம் இட்டு - பொருட்குவியல் எங்கெல்லாம் உள்ளது?.. - என்று பார்ப்பதாக பாவனை!..

தனித்தனி சந்நிதிகளில் கோளூர்வல்லி குமுதவல்லி என இரு நாச்சியார்கள். 

இத்தலத்தில் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி - காசு கண்ணை மறைத்த பாவத்திற்கு பிராயச் சித்தம் தேடிக் கொள்ளலாம்.

இருந்த பொருளை இழந்து நிற்பவர்கள் பெருமாளிடம் கையேந்தி நிற்கலாம்.
ஏதும் அற்றவராய் இருப்பவரும் வள்ளலிடம் வரம் கேட்டு நிற்கலாம்.

பிராயச்சித்தம் என்றால் - கிடைத்த பொருளைக் கொண்டு இயன்ற அளவுக்கு இல்லாதவர்க்கு உதவி செய்வதே!..

வறுமையால் இருண்ட வீட்டில் ஒரு விளக்கை ஏற்றி வைப்பதே!..

குபேரனுக்குப் பெருமாள் ஐஸ்வர்யத்தைக் கொடுத்த நாள் - மாசி மாத சுக்ல பட்ச துவாதசி.

அன்றைய நாளில் - குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்த மாநிதிப் பெருமாளை வணங்குபவர் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.


ஆவணியில் பெருந்திருவிழா நிகழ்கின்றது. நாளும் சேவை சாதிக்கும் பெருமாள் ஒன்பதாம் நாளன்று தேரோட்டம் காண்கின்றார்.

அன்று அதிகாலை ஐந்து மணிக்கு விஸ்வரூப தரிசனம்.
அதற்குப் பின் திருஆராதனையும் தீர்த்த விநியோகமும்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெறும்.

நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டு - அவரையே பாடிப் பரவி நற்கதி அடைந்த மதுரகவியாழ்வார் பிறந்தது திருக்கோளூரில்!.. 

நவதிருப்பதிகளுள் - திருக்கோளூர் - செவ்வாயின் இடர் தீர்க்கும் தலம்.

ஆழ்வார் திருநகரியில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது 

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம். எல்லாம் கண்ணனாக உருகுகின்றார் - ஆழ்வார்.

எல்லாமே கண்ணன் என்றாகி விட்டால் என்றுமே தொல்லைகள் இல்லை.

உண்ணுஞ் சோறுபருகுநீர் தின்னும்வெற் றிலையும்எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்க அவனூர் வினவி
திண்ணம் என்னிள மான்புகும்ஊர் திருக்கோளூரே!.. (3517)
நம்மாழ்வார் அருளிய திருப்பாசுரம். 
* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவாசகம் - பிடித்த பத்து


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே!.. (3) 

* * *

திருக்கோயில்
உவரி


இறைவன் - ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
அம்பிகை - ஸ்ரீ பிரம்ம சக்தி
தீர்த்தம் - நாழிக் கிணறு, அக்னி தீர்த்தம் (கடல்)
தலவிருட்சம் - கடம்ப மரம்

தலப்பெருமை
கடம்ப வனத்தில் முளைத்தெழுந்த சுயம்பு லிங்கம் 

தென் மாவட்டங்களில் பிரசித்த பெற்ற திருக்கோயில்களுள் உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலும் ஒன்று.

இங்கே - எங்கள் குல தெய்வம் வீற்றிருக்கின்றது என்பது எமக்குப் பெருமை!..


இத்திருக்கோயிலில் மார்கழி மாதம் முழுதும் சூர்ய பூஜை நிகழ்வது சிறப்பு.

அதிகாலை 6.55 மணியளவில் மூலவராகிய ஸ்ரீ சுயம்பு லிங்க ஸ்வாமியின் மீது சூரிய ஒளிக் கதிர்கள் படர்ந்தன.

திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


மற்ற திருக்கோயில்களில் சில தினங்கள் நிகழும் இந்த சூர்ய வழிபாடு - உவரியில் மாதம் முழுதும் நிகழ்வதே சிறப்பு.

மற்ற மாதங்களில் அதிகாலை நாலரை மணிக்கு சந்நிதி நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும்.

மார்கழியில் அதிகாலை மூன்றரை மணிக்கு நடை திறக்கப்படுகின்றது.

தொடர்ந்து - திருப்பள்ளி எழுச்சி.
ஸ்வாமிக்கு அபிஷேகம். உதய மார்த்தாண்ட பூஜை.

திருவாதிரை அன்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி. உதய மார்த்தாண்ட பூஜைக்குப் பின் மகாஅபிஷேகமும் ஆருத்ரா தரிசனமும் நடந்தது.

உற்சவர் ஸ்ரீசந்திர சேகரர் மனோன்மணி அம்பிகையுடன் வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி எழுந்தருளினார்.


வைகாசியில் மூன்று நாள் விசாகப் பெருந்திருவிழாவும்
தை மாதத்தில் தைப்பூச தேர்த் திருவிழாவும்
மாசியில் மகாசிவராத்திரி வழிபாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

ஆவணி இரண்டாம் செவ்வாய் அன்று பிரம்மசக்தி அம்பிகைக்கும் பேச்சியம்மனுக்கும் மாடஸ்வாமி ஐயனுக்கும் கொடைவிழா.

இந்த வைபவம் ஆவணி இரண்டாவது திங்கள், செவ்வாய், புதன் - என மூன்று நாட்கள் நிகழ்ந்தாலும் செவ்வாய்க் கிழமையே வெகு சிறப்பு!..


சுவாமி சந்நிதிக்கு இடப்புறம் முன்னோடியார் மற்றும் பரிவார தேவதைகள்
விளங்க - ஸ்ரீ காளியின் அம்சமாக - ஸ்ரீ பிரம்மசக்தி அம்பிகை.

சந்நிதியின் இருபுறமும் பிரம்மசக்தியின் வேறொரு அம்சமும் சிவனணைந்த பெருமாளும்!..

அருகில் உள்ள திரு மண்டபத்தில் ஸ்ரீ பேச்சியம்மனுடன் ஸ்ரீ மாடஸ்வாமியும் ஸ்ரீ இசக்கி அம்மனும் - தமது பரிவாரங்களுடன் விளங்குகின்றனர்.

கன்னி மூலை கணபதி தனியாக கோயில் கொண்டுள்ளார்.

திருக்கோயிலுக்குப் பின் புறம் மரங்கள் அடர்ந்த பகுதியில்
ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேதரராக ஸ்ரீ வன்னியடி சாஸ்தா

பழந்திருக்கோயில். ஆனாலும் திருப்பதிகங்கள் என்று ஏதும் இல்லை.

வங்கக் கடலோரத்தில் உள்ள திருக்கோயில்.

திருக்கோயிலின் எதிரில் தெப்பக்குளம் உள்ளது.
கடற்கரைக் கோயிலின் அருகில் கிணறுகள் உள்ளன.
அவற்றில் நல்லதண்ணீர் சுரப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் இருந்து 40 கி.மீ., .
நாகர்கோயில் செல்லும் கடற்கரைச் சாலையில் உள்ளது உவரி.

கடற்கரைக் கிராமமான உவரி இரண்டு பகுதிகளாக இருக்கின்றது.

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா கோயில்
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் மணப்பாடு வழியாகச் செல்லும் போது கூட்டப் பனை கிராமத்திற்கு அடுத்த - நாடார் உவரியில் தான் திருக்கோயில் உள்ளது.

இத்திருத்தலம் தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனக்கஷ்டம் பொருட்கஷ்டம் என எதுவானாலும் -
வந்தவர்க்கு மன நிறைவையும் பொருளாதார வளங்களையும்
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி அருள்கின்றார்.

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே!.. (5/100) 
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம். 
* * *

12 கருத்துகள்:

  1. அறியாத பல செய்திகள் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      கணினி சரியாகி விட்டதா!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  2. காசு = குற்றம் விளக்கம் உட்பட அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. சிறப்பான இரண்டு கோவில்கள் பற்றிய தகவல்கள் நன்று. குபேரனுக்கு ஒரு கண்ணில் தான் பார்வை எனும் விஷயம் இது வரை அறிந்திடாத ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. இரண்டு கோவில்கள் பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுக்கு நல்வரவு..
      அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  5. இரண்டு தலங்களின் விபரங்கள் அனைத்தும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. திருப்தியே பெரிய செல்வம் அருமை. போதுமென்ற மனமே நிறைமனம்.
    அழகாய் கதை சொல்கிறீர்கள்.
    ஆம, எல்லாமே கண்ணன் என்றால் ஏது துன்பம்?
    சிறுவயதில் நாகர்கோவிலில் இருந்து இருக்கிறேன். உவரி சுயம்புலிங்கம் கோவில் பார்த்தது இல்லை.
    அருமையான கோவில் படங்கள் வெட்டிவேர் சப்பரம் எல்லாம் அழகு.
    வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களை விட நான் என்ன பெரிதாக சொல்லி விட்டேன்?..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..