நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 08, 2014

வைகாசியில் திருவிழா

உத்ராயணத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி. இளவேனில் எனும் வசந்த காலம் இது.  

வைகாசி விசாக நட்சத்திரத்தில் தான் சரவணப் பொய்கையில்  திருமுருகன் உலகம் உய்வதற்கென உதித்தனன் - என்பது ஐதீகம்.

எனவே - முருகன் உறையும் திருச்செந்தூர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு  தலங்களிலும் விசாகத்தை அனுசரித்து திருவிழாக்கள் வெகு சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 


திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் திருக்கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு  ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்வார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெறும். 

விசேஷமாக வசந்த மண்டபத்தினை பதினோரு முறை வலம் வரும்போது - ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்திமத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவைகள் பாடப்பெற்று உபசாரங்கள் நிகழும். 

திருவிழாவில் - சுவாமி தங்க ரதத்தில் எழுந்து - கிரிவீதி வலம் வந்தருள்வார்.  

வைகாசி விசாகத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர்.


பழநியில் - தைப்பூசம், பங்குனி உத்திர விழாவை அடுத்து முக்கிய திருவிழாவாக நிகழ்வது -  வைகாசி விசாகம் ஆகும்.  
பழநியில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன்/5 முதல் 14 வரை நிகழ்கின்றது.

பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன்/5 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி - தங்கப்பல்லக்கு, தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், தங்க குதிரை - என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  அருள்பாலிக்கின்றார்.

விழாவின் இரண்டாம் நாளன்று (ஜூன்/6) - காலை தங்க பல்லக்கிலும், மாலை தங்க மயில் வாகனத்திலும்

மூன்றாம் நாளன்று - காலை தங்க பல்லக்கிலும் மாலை வெள்ளி காமதேனு வாகனத்திலும் - முருகன் திருஉலா எழுந்தருளினன்..

நான்காம் நாள்  கற்பக விருட்சத்தில் பவனி வந்தருளும் முருகன் - ஆறாம் நாள் (ஜூன்/10) திருமணக்கோலங்கொள்கின்றான்.


மாலை 6.30 மணிக்கு மேல் இரவு எட்டு மணிக்குள் தனுசு லக்னத்தில், வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருவிழாவின் ஏழாம் நாள் (ஜூன்11) வைகாசி விசாகம்.

பெரியநாயகியம்மன் கோயில் தேர் நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது.

பத்தாம் நாள் - ஜூன்/14 சனிக்கிழமை திருஞானசம்பந்தர் விழாவுடன் விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. 

வைகாசி மாதத்தில் மங்கலம் நிறைந்த நன்னாள்  விசாக நாள் ஆகும்.

திருமுருகன் தோன்றிய நாள் என்பதால் அறுபடை வீடுகளிலும் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும்,  விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும்.


சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு - தேவேந்திரன்  ஆற்றல் பெற்ற நாள் - வைகாசி விசாகம் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஜூன்/5 முதல் ஜூன்/13 வரை வசந்த உற்சவம் நடைபெறுகின்றது. முதல் நாளன்று மூலஸ்தானத்தில் இருந்து உபய நாச்சியார்களுடன் வசந்த மண்டபம் எழுந்தருளி - நீராழி மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.


ஜூன்/13 அன்று மாலை தங்கக்குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி எழுந்தருளல். இரவு சந்த்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி. வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம். அதன் பின் மூலஸ்தானம் சென்றடைதல் என வைபவங்கள் சிறப்பாக நிகழ்கின்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். 8.30 மணிக்கு நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. வசந்த உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உற்சவ நிறைவு நாளான 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைகிறார். வசந்த உற்சவத்தையொட்டி வசந்தமண்டபத்தை சுற்றியுள்ள நீரூற்றுகளில் அதிகளவில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது. - See more at: http://www.indiyantv.com/news_det.php?id=3803&cat=Spritual%20News#sthash.5BQGAaW4.dpuf

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் வைகாசி விசாகப் பெருவிழா - ஜூன்/2 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும்,

வைகாசியில் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கருட சேவை!..

தஞ்சை நீலமேகப்பெருமாள் கருடசேவை
வைகாசி  திருவோணத்தன்று, தஞ்சையில் புகழ்பெற்ற 23 கருட சேவை!.. 

திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள - தஞ்சை மாமணிக் கோயில் ஸ்ரீவீரநரசிம்மர், ஸ்ரீநீலமேகப் பெருமாள், ஸ்ரீமணிக்குன்றப் பெருமாள் ஆகியோருடன் ஏனைய  திருக்கோயில்களில் இருந்தும் கருடவாகனத்தில் மூர்த்திகள் எழுந்தருளி ராஜ வீதிகளில் சேவை சாதித்தனர்.

தஞ்சை மேலராஜவீதி  ஸ்ரீசீதாலக்ஷ்மி சமேத ஸ்ரீவிஜயராமர் திருக் கோயிலிலும் - திருக்கல்யாண வைபவத்துடன் வைகாசித் திருவிழா சிறப்பாக நடந்துள்ளது.

நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரில் ஒன்பது கருட சேவை நிகழ்வதும் வைகாசித் திருவிழாவின் போது தான்!..

எம்பெருமான் வேடனாக எழுந்தருளி - திருவேட்களத்தில் - அர்ச்சுனனுக்கு பாசுபதம் வழங்கிய நாள்  - வைகாசி விசாகம்.

திருமழபாடியில் - பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் செய்த தவத்திற்காக  ஈசன் திருநடனம் புரிந்தருளிய நாள் - வைகாசி விசாகம் . 

குடந்தை ஆதிகும்பேசுவரர் மங்களாம்பிகை திருக்கல்யாணம் வைகாசித் திருவிழாவில், ஜுன்/7 அன்று இரவு - அம்பாள் தவம் இருக்க -  ஐயன் ஆட்கொண்டு அருளினார். இன்று (ஜுன்/8) காலை திருக்கல்யாண வைபவம் மங்கலகரமாக நிகழ்ந்தது.

ஜூன்/12 அன்று தீர்த்தவாரி. மறுநாள் மஹாஅபிஷேகத்துடன் வைகாசி திருவிழா நிறைவடைகின்றது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரப் பெருமானின் விசாகப் பெருந் திருவிழா கடந்த ஜூன் மூன்றாம் நாள்  காலை  மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 ஜூன்/10 அன்று  பல்வேறு -  மண்டகப்படி கட்டளைகளை ஏற்றுக் கொண்டு -  இரவு 10 மணி அளவில் திருக்கைலாய வாகனத்தில் சுவாமி வீதி உலா எழுந்தருள்கின்றார். 

ஜூன்/11 - வைகாசி விசாகம். 
அதிகாலையில்  திருக்கல்யாண உற்சவம்.  
காலை 10 மணி அளவில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேருக்கு பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறார். 

இரவு 10 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம். வெள்ளி குதிரை வாகன திருக்காட்சி. 

ஜூன்/12 ஆதிகேசவப் பெருமாள் திருத்தேர்  எழுந்தருளல்.

காலை 11 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல். 

ஜூன்/13 மற்றும் 14 தேதிகளில் திருத்தேரோட்டம்.

திருநாவுக்கரசர் கரையேறிய தலமான - கடலூர், திருப்பாதிரிப்புலியூர்  பாடலீஸ்வரர் திருக்கோயிலில், வைகாசிப் பெருந்திருவிழா - ஜூன்/4 புதன் கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
பெருந்திருவிழாவுக்கு முன்னதாக - மே/25 அன்று  மாரியம்மன் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு மே/27 அன்று எல்லை கட்டுதல் நடைபெற்றது.

ஜூன்/7 -  சேஷ வாகனத்திலும்  கற்பக விருட்சத்திலும்  அம்பாள் எழுந்தருளிய பின் - இன்று ஜூன்/8 -  காலை அதிகார நந்தி கோபுர தரிசனம் நிகழ்ந்தது. இரவு மகாமேரு தரிசனம்.

நாளை, ஜூன்/9  வெள்ளி ரதமும் தங்கப்பல்லக்கும்.
ஜூன்/10- காலை திருக்கயிலாய கோபுர தரிசனம்.
இரவு, ஸ்வாமி திருக்கல்யாணம். வெள்ளி ரிஷப வாகனத்தில் பாரிவேட்டை.

ஜூன்/12 - திருத்தேரோட்டம்.
ஜூன்/13 - காலை நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி.  இரவு புஷ்ப பல்லக்கு.
ஜூன்/14 - காலை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஐதீகம்.
இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா.

ஜூன்/15 - இரவு சிவகங்கை குளத்தில் முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.
ஜூன்/16 - சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.
விசாகத்தை அனுசரித்து மூன்று நாள் விழாவாக  - மகரமீனுக்கு ஸ்வாமி காட்சி தரும் வைபவம் - உவரி ஸ்ரீசுயம்பு லிங்க ஸ்வாமி திருக்கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது.

கௌதம புத்தர் அவதரித்ததும் நிறைநிலை எய்தியதும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என இதனைக் கொண்டாடுவர்.

வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும் - துன்பம் நீங்கும் குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

விசாக நாளில் பக்தர்கள் பாதயாத்திரையாக முருகன் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இறைவனை வழிபடலாம். 

திருவிழா நாட்களில் தண்ணீர்ப்பந்தல் அமைத்து - குளிர்ந்த நீர், மோர், பானகம் வழங்குவதும், தயிர் சாதம், விசிறி - தானம் செய்வதும் சிறந்த அறச் செயல்களாகக் கருதப்படுகின்றன.

இயன்றவரை - ஏழை எளியவருக்கு உதவுவோம்.

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி.
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

12 கருத்துகள்:

  1. அருமை... ஒவ்வொரு நாளின் சிறப்புகளுக்கும் நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. வைகாசித் திருவிழா
    ஒவ்வொரு நாளும்
    ஒவ்வொரு சிறப்பு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  3. எத்தனை தகவல்கள் இங்கே... வைகாசி மாதத்தின் பல விழாக்களை, பல்வேறு கோவில்களில் நடக்கும் வைபவங்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வைகாசி விசாகம் பெருமைகளை தொகுத்து சொன்னீர்கள். உங்களின் இந்த பதிவில் எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றியும் படிக்கும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் சொந்த ஊரான திருமழபாடி -
      என்னை மிகவும் கவர்ந்த ஊர்களுள் ஒன்று..
      ஸ்ரீவஜ்ரஸ்தம்பேஸ்வரர் திருக்கோயிலின் முன் - கடல் என பரந்து விரிந்த கொள்ளிடம். நிழல் விரித்த ஆலமரங்கள்.. உபசரிக்கும் தன்மை உடைய மக்கள்.. மறக்க முடியுமா .. ஐயா!..
      தங்கள் வருகையும் தங்களின் சந்தோஷமும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. திருமழபாடியும், தில்லைஸ்தானமும் சற்றொப்ப ஒரே மாதிரி அமைந்த தலங்களாகும். கோயிலுக்கு முன்னே ஆறுகள் அழகாக ஓடுவதை இரு இடங்களிலும் காணலாம்.
    கௌதம புத்தர் அவதரித்ததும் நிறைநிலை எய்தியதும் மட்டுமன்றி பரிநிர்வாணம் அடைந்ததும் வைகாசி விசாகத்தில் தான். (நிறைநிலை என்பதை ஞானத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளீர்கள் என நினைக்கிறேன்). நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தில்லை ஸ்தானத்தை - இன்னும் தரிசித்ததில்லை..
      கடல், ஆறு, குளம், அருவி, சுனை - என நீர்நிலைகளின் ஓரத்தில் திருக்கோயில்களை அமைத்த - ஆன்றோர்களை என்னென்று போற்றுவது!..

      தங்களின் ஊகம் சரியே!..
      சித்தார்த்தர் - ஞான நிலையைக் குறிக்கவே நிறைநிலை எனும் சொல்லை பயன்படுத்தியுள்ளேன்.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ஐயா!..

      நீக்கு
  6. கோவில் கமிட்டிகூட சொல்லாத விசயங்களையெல்லாம் தெரிந்துகொள்ளலாம் போலவே தங்களின் திருப்பணிக்கு இறையருள் கிடைக்கட்டும் ஐயா.....
    Killergee

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருத்தலங்களில் நிகழும் திருவிழா பத்திரிக்கைகளைக் கொண்டு தான் தொகுத்து வழங்குகின்றேன்.

      இதற்கெல்லாம் - இறையருளும் தங்களைப் போன்ற நண்பர்கள் அளிக்கும் ஆதரவும் தான் காரணம்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..