நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

விசாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விசாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 23, 2024

கருந்திட்டைக்குடி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 10
வியாழக்கிழமை



தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாக  திகழ்வது கருந்திட்டைக்குடி.. 

தஞ்சை மாநகரின்  ஒருபகுதியாக  விளங்குவது..

தேவாரத்தில் கருந்திட்டைக்குடி என்று குறிக்கப்படுகின்ற இத்தலத்திற்கு வடபுறத்தில் ஆதி தஞ்சபுரி எனப்படும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்.. தென்புறத்தில் தஞ்சைத் தளிக்குளம்.. 

இப்படி இரண்டு தலங்களுக்கு நடுவில் விளங்குகின்ற இத்தலத்தில் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அருந்ததி அம்மையுடன் தங்கியிருந்து வழிபாடு செய்து நோய் நீங்கப் பெற்றிருக்கின்றார்.. 

எனவே ஸ்வாமிக்கு  ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் என்று திருப்பெயர்..

தைப் பூசத்தன்று ஸ்ரீ ஸ்வாமி அம்பாள், வசிஷ்டர் அருந்ததி திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகின்றது..


வருடாந்திர வசந்தோற்சவத்தில் விசாக நட்சத்திரத்தில்  ஸ்வாமி பெரும் பல்லக்கில் ஏழூர் உலா எழுந்தருள்கின்றார்..




வைகாசி 11 (24/5) வெள்ளிக்கிழமை - காலை ஐந்து மணியளவில் மகாதீப ஆராதனைக்குப் பின் -  

1. கரந்தையில் இருந்து புறப்பட்டு -
2. ஆதி தஞ்சபுரி (ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்)
3. தென்குடித் திட்டை (ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்)
4. திருக்கூடலூர் (ஸ்ரீ சுந்தரேஸ்வரர்)  
5. கடகடப்பை (ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்) 
6. புன்னை நல்லூர் (ஸ்ரீ கயிலாயநாதர்) 
7. தஞ்சை கீழவாசல் (ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர்) என, 

வலம் செய்து மறுநாள் திருக்கோயிலுக்கு வந்து சேர்கின்ற ஸ்வாமிக்கு மாலைப் பொழுதில் பூமாலை சூட்டும் வைபவம் நடைபெற உள்ளது..


காணொளி
 நன்றி தினமலர்


காணொளி
நீண்ட இடைவெளிக்குப் பின்
கடந்த வருடத்தில் நிகழ்ந்த
முதலாண்டு வைபவம்

அனைவரும் வருக்
இறையருள் பெறுக..

நற்கொடி மேல் விடை உயர்த்த நம்பன் 
செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே..  6/71/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

புதன், மே 22, 2024

விசாகம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 9
புதன்கிழமை
விசாகத்திருநாள்


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ... தனதான


நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ... அருள்தாராய்..


ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


முருகா சரணம்
சரணம் சரணம் 
முத்துக்குமரா
சரணம் சரணம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, மே 21, 2016

வைகாசி விசாகம்

வெங்காள கண்டர்கைச் சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்

விபுதர்பதிக் குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லாதெனக் கருதியே

சங்க்ராம நீசயித் தருளெனத் தேவரும்
சதுர்முக னும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியிலுருவியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி திரிபுரை பயிரவிஅமலை
கௌரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
திரயம்பகி அளித்த செல்வச்

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!..


அண்ட பகிரண்டமும் அதிர்ந்து தான் நின்றது!..

மாயையின் மகனை அழிக்க ஒண்ணாதோ?..

அஜமுகி எனும் தங்கையுடனும் தாரகன் மற்றும் சிங்க முகன் எனும் தம்பியரோடும் கிரவுஞ்சம் எனும் மாய மலையைக் கைக் கொண்டு அடாதன எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் சூர பத்மனை அழிக்கவே இயலாதோ!..

ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நூற்றெட்டு யுகங்களாகக் கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சூரனுக்கு முடிவு தான் எப்போது?..

காளம் எனும் விஷத்தைத் கண்டத்தில் கொண்டிருக்கும் காளகண்டரின் திரிசூலப் படை எங்கே?..

மாயனும் ஆயனும் ஆகிய ஸ்ரீ ஹரிபரந்தாமனின் சக்ராயுதம் தான் எங்கே?..

திக்கெட்டும் காக்கும் தேவேந்திரனின் வஜ்ராயுதமும் போய்ச் சேர்ந்தது எங்கே?..

சூரனையும் அவன் குலத்தையும் முற்றாக அழித்து ஒழிக்கத் தம்மால் ஆகாது!..

- எனக் கருதி, இவையெல்லாம் - தம்மைத் தாமே ஒளித்துக் கொண்டனவா!..

ஆயினும்,

சூரன் மாள்வதற்கு ஒரு மகன் எம்மிடமிருந்து உதிப்பான்!..

- என்று ஈசன் அருளிய வரத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டே!..  அடாதன எல்லாம் செய்து கொண்டிருக்கும் சூரனை ஜயித்து அருள வேண்டும்!.. அவனையும் அவனது கூட்டத்தாரையும் அழித்தருளவேண்டும்!..

தேவர்களும் நான்முகனும் கூடி நின்று வேண்டிக் கொண்ட வேளையில் -

கிரவுஞ்ச மலையையும் சூரர் தம் பெருங்கூட்டத்தையும் ஒரு நொடியில் ஊடுருவி அழித்து ஒழித்ததே - ஓங்கார வேல்!..

அது தனி ஆண்மை கொண்ட பெருவேல் அல்லவா!..

அந்த வேலாயுதமே அளப்பரிய பெருமை கொண்டதெனில் -

அதனை ஏந்தியிருக்கும் அறுமுகச் சிவபாலனின் பெருமை தான் என்னே!..


அவன் -

எல்லாம் வல்ல ஈசன் பிரளயம் எனும் பெருங்காலத்தில் ஊழித் தாண்டவம் இயற்றும் போது - ஈசனுக்கு இணையாக ஆடிக் களிக்கும் கங்காளியின் அன்பு மகனல்லவா!..

அவன் -

சாமுண்டி, வராஹி, இந்த்ராணி, கௌமாரி, நாரணி, குமரி, திரிபுரை, பயிரவி, அமலை, கௌரி,  - என்றெல்லாம் திருப்பெயர்களைக் கொண்டு - கமலாசனத்தில் வீற்றிருக்கும் நித்ய கன்னியின் திருமகனல்லவா!..

அவன் -

உலகேழையும் காத்தருளும் காமாட்சியின் மகனல்லவோ!..

அதனால் தானே - அசுரர்களிடமிருந்து அண்டங்களைக் காத்தருள - திருக்கையில் வேலேந்தி நின்றருளினான்!..

அவன் -

யாமளை, பவானி - என்றெல்லாம் புகழப்படும் சைவ சிங்காரியின் திருக்குமரன்!..

சைவ சிங்காரியாகிய கொற்றவை - போர்க்களங்களின் நாயகி!..

அதனால் தானே - போர் முகத்தில் தேவ சேனாதிபதியாகத் திருக்கோலம் கொண்டருளினான்!..

என்னாலோ - எனது சக்தியாலோ அன்றி உனக்கு வேறு எந்த விதத்திலும் வீழ்ச்சியில்லை!..

- என்பதே - ஈசன் சூரபத்மனுக்கு அளித்திருந்த வரம்..


அதன்படியன்றோ -

தானும் ஒருபாதியாகி ஈசனுடன் நின்ற தற்பரை -
தவப் புதல்வனைப் பெற்றெடுத்துப் பேருவகை கொண்டாள்..

அவள் உண்ணாமுலை நாயகி.. ஆயினும் -

தன் மகனுக்குப் பாலூட்டுதற்கு - என,
தானே - கார்த்திகைப் பெண்கள் எனும் வடிவம் தாங்கி வந்தாள்!..

ஈசன் மூன்று கண்களை உடையவன்..
அவ்வண்ணமே அம்பிகையும் மூன்று திருவிழிகளை உடையவள்..

திரயம்பகி எனும் திருப்பெயர் கொண்டவள்...
அம்பிகை அருளிய செல்வச் சிறுவன் - அறுமுகன்!..

அறுமுகனாகிய முருகப் பெருமான் ஞானமே வடிவாகியவன்!..

ஞான வடிவாகிய அவனால் தான் - அஞ்ஞானம் எனும் மாயையின் மக்களாகிய சூரபத்மனும் தாரகனும் சிங்கமுகனும் அஜமுகியும் அசுரப் பெருங் கூட்டத்தாரும் அடியோடு அழிந்தனர்...

திருமுருகன் தேவ சேனாதிபதியாக போர்க் கோலங்கொண்டு நின்ற போது அவனது திருக்கரத்தினில் திகழ்ந்த பெருமையை உடையது - வேல்!..

ஞானாசிரியன் எனவும் ஞானபண்டிதன் எனவும் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவன் முருகப்பெருமான்!..

அப்பெருமானின் திருக்கரத்தினில் இலங்கும் செம்பொன் வேலும் ஞானத்தின் வடிவம் தான்!..

அதுவே அஞ்ஞானத்தின் வேரறுக்க வல்லது!..


ஞானமே வடிவாகிய வயலூர் முருகனின் தனிப்பெருங் கருணையினாலே!..

- என்று, மொழிந்து தான் -

அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் - தமது இலக்கியப் பேருரைகளைத் தொடங்குவார்...

முருக பக்தர்கள் இதை எந்நாளும் நினைவில் கொண்டிருப்பர்..

இன்று மகத்தான விசாக நட்சத்திரம்..

வைகாசி விசாகத்தில் தான் திருமுருகன் உதித்தருளினன்..

திருமுருகனின் நட்சத்திரமாகி விசாகம் தனிப் பெருமை கொண்டது.. -

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் விசாகத் திருவிழா
தேவயானையுடன் திருமுருகன்
வயலூர் வள்ளல் பெருமான்
அருவமும் உருவமும்ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டு
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..

என்றுரைப்பார் - கச்சியப்ப சிவாச்சார்யார்..

இந்த நன்னாளில் 
எம்பெருமான் கந்தவேளின் 
கழலடிகளைக் கருத்தில் கொள்வோம்..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..

ஹரஹர சிவசிவ 
ஷண்முக சரணம்!..  
***

திங்கள், ஜூன் 01, 2015

விசாகத் திருநாள்

இன்று வைகாசி விசாகம்!..


அருவமும் உருவமுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
(கந்த புராணம்)

முருகப்பெருமானின் திருஅவதாரத்தினைக் காட்டும் திருப்பாடல் இது.

திருக்குமரன் - உலகம் உய்வடைவதற்கு உதித்தருளிய திருநாள் இன்று!..

எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளின் திருவடிவமே - திருமுருகன் என்பர் ஆன்றோர். 

சிவபெருமான் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் எனும் ஐந்து திருமுகங்களுடன் - அதோ முகம் கொள்ள - 

அத்திருமுகங்களில் பொலியும் நெற்றிக்கண்களில் தோன்றிய தீச்சுடர்களில் இருந்து - சரவணப் பொய்கையில் திருமுருகன் திருஅவதாரம் செய்தனன் - என்பது திருக்குறிப்பு.

ஆணவ கன்ம மாயா மலங்களை வேரறுக்கவே - திருமுருகன் தோன்றினன்.

ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்களுக்கு ஆளும் வரத்தினை சிவபெருமானிடமிருந்து பெற்றான் - மாயையின் மகனான - சூரபத்மன்.

அதன்பின் - தனது தம்பியர்களான -  தாரகன், சிங்கமுகன் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு விண்ணிற்கும் மண்ணிற்கும் கொடுமைகள் பல புரிந்தான்.

இவர்களுடன் சூரபத்மனின் தங்கையான அஜமுகியும் சேர்ந்து கொண்டாள்.

அசுரர்களின் முடிவே - சூர சம்ஹாரம்!..

படைக்கலங்களை இழந்து - நிராயுதன் ஆகிய அசுரன்,
வேத வேதாந்தங்களும் காண இயலாத வேலாயுதனை எதிர்த்து நின்றான். 

மாமரமாகி நின்று வீழ்ந்த பின்னும் - விழிப்புறாமல் 
வேலவனை வெற்றி கொள்ளத் துடித்தான்..

ஆயிரத்தெட்டு அண்டங்களில் ஆட்சி செய்த சூரபத்மன் - 
வேறெதுவும் செய்ய இயலாத வெறுங்கையனாகி -
பன்னிருகையனை வெல்லவேண்டும் என்ற வெறியுடன்,
எளிய சிற்றுயிர்களின் வடிவந்தாங்கி எதிர்த்து நின்றான்..

மயிலாகவும் சேவலாகவும் வடிவங்கொண்டு வந்தான் சூரபத்மன்.

ஆங்காரமான அகவலுடன் எதிர்த்து வந்தது மயில்!..

கொடூரமான கொக்கரிப்புடன் பகைத்து வந்தது சேவல்!..

அசுரர் தலைவனின் நிலை கண்டு - அறுமுகச் செவ்வேள் இரங்கினான்..

ஓங்காரத் திருவடிவினனாகிய திருக்குமரன் புன்னகைத்தான்!..

ஓடி வந்த மயிலைத் திருவடியினால் தீண்டியருளிய திருமுருகன் -

கொக்கரித்த கோழியைத் திருக்கரத்தினால் பற்றிக் கொண்டான்.

அதுவே - அசுரனுக்குத் தீட்க்ஷையானது.

அந்த அளவில் - அடியவன் ஆகி நின்றான் - கொடியவன்..

திருவடியின் கீழ்ப்பட்ட மயிலைத் தனது வாகனமாக்கிக் கொண்ட வடிவேலன் -
சேவற்கோழியைத் தன் திருக்கொடியாகக் கொண்டான்!..

வெற்றி வேற்குமரனை சர்வலோகமும் போற்றித் துதித்து மகிழ்ந்தது.


தேவேந்திரனின் திருமகளான தெய்வானையும் 
நம்பிராஜனின் திருமகளான வள்ளியம்மையும் -
மனை மங்கலமாகி - திருக்குமரனின் வலமும் இடமும் பொலிந்து நின்றனர்..

சித்திரத் திருவேலும் செஞ்சேவற்கொடியும் வண்ண மயிற்தோகையும்
வழிபடும் பொருளாகவும் வரந்தரும் திருவாகவும் ஆகின. 

முருகனே தமிழ்!.. தமிழே முருகன்!..
செந்தமிழ்க் குடியிற் பிறந்த ஒவ்வொருவருக்கும்!..

ஆதிகாலந்தொட்டே முருகவழிபாடு தமிழ்கூறும் நல்லுலகில் தழைத்தோங்கி நிலைத்திருக்கின்றது.

தாம் வாழும் நிலந்தோறும் - நன்றி மறவாமல் - திருமுருகன் தோன்றிய விசாகத் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் - தமிழர்கள்...

தமிழகத்தின் திருக்கோயில்கள் தோறும் திருவிழாக்கள் நிகழ்கின்றன. 

வயலூர்
அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் வல்லமை பெற்ற திருத்தலம் வயலூர்!..

வயலூர் முருகன் திருக்கோயிலில், நேற்று (31/5 - ஞாயிறு) வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் சிறப்பாக நிகழ்ந்தது.

வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் -வைகாசி விசாகத் திருவிழாவிற்கான திருக்கொடியேற்றம் 23/5 அன்று நிகழ்ந்தது.

திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மேஷ வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம் - என வள்ளி தேவயானையுடன் திருக்குமரன் - திருவீதி எழுந்தருளினன்.

30/5 அன்று அதவத்தூர் தைப்பூச மண்டபத்தில் வீற்றிருந்து திருக்காட்சி நல்கிய பின் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த திருக்குமரன் வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் கண்டருளினன்.

நன்றி - செந்தில்குமார்
நேற்று (31/5)  மாலை 3.30 மணிக்கு - வள்ளி தேவயானையுடன் கல்யாணத் திருக்கோலங்கொண்டு திருத்தேரில் எழுந்தளுளினன்.

ஆயிரக்கணக்கான அன்பர்கள் வடம் பிடித்துத் தேரிழுத்து மகிழ்ந்தனர்.

இன்று (1/6) நடராஜர் தரிசனம். தீர்த்தவாரி, பால் காவடி, அபிஷேகம் நடக்கிறது.

இரவு எட்டு மணிக்கு - வெள்ளிக் கவசம் பூண்டு வள்ளி, தேவயானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா.

பின் - திருக்கொடி இறக்கம்.

நாளை (2/6) மாலை 4.30 மணிக்கு சங்காபிஷேகம்.
இரவு எட்டு மணிக்கு தெப்ப உற்வசம்.
நாளை மறுநாள் (3/6) இரவு ஒன்பது மணிக்கு ஆடும் பல்லக்கு உற்சவம். 


சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான் -  செல்வக்குமரன்!..

அலைவாயில் எனும் திருச்செந்தூரிலும் வைகாசித் திருவிழா சிறப்புடன் நிகழ்கின்றது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் திருநடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நிகழ்ந்தன.

மாலையில் சிறப்பு அபிஷேகம். மகா தீபாராதனைக்குப் பின் - வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ ஜயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள கிரிவீதிகளில் திருவீதியுலா நிகழ்கின்றது.


கௌதம புத்தர் பிறந்ததும் ஞானம் எய்தியதும் ஜோதி நிலை அடைந்ததும் வைகாசி விசாகம்.


ஆழ்வார் திருநகரியில் - நம்மாழ்வார் பெருமான் அவதரித்ததும் வைகாசி விசாகம்.


பரமனுக்கு குருவாகி முருகன் ஓங்காரப் பொருள் உரைத்த தலம் சுவாமிமலை.

பரமன் குருவாகி முருகனுக்கு ஓங்காரப் பொருள் உரைத்த தலம் தென்சேரிகிரி.

தகப்பனுக்கு உபதேசித்த தனயன் - தகப்பனிடம் இருந்து மந்திர உபதேசம் பெற்றதால் மந்திரகிரி எனவும் திருப்பெயர்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம்..

வேலாயுத ஸ்வாமி - செஞ்சேரிமலை
இத்திருத்தலத்தில் தான் - திருமுருகன் பன்னிரு திருக்கரங்களுடன் சேவலைப் பற்றியிருக்கும் திருக்கோலத்தில் திகழ்கின்றனன்.

இன்று செஞ்சேரி மலை என்றழைக்கப்படுகின்றது. 
திருப்பூர் - பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது.


காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் - எனும் அறுபகைகளை வெல்லுவதே முருக வழிபாடு!..

நமது உடலில் ஆறு ஆதாரங்கள் விளங்குகின்றன.

அவற்றை அறுமுகச்செவ்வேளின் அறுபடை வீடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுவர் ஆன்றோர்.

மூலாதாரம் - திருப்பரங்குன்றம்.
சுவாதிஷ்டானம் - திருச்செந்தூர்.
மணிபூரகம் - தென்பழனி.
அநாகதம் - திருவேரகம் எனும் சுவாமிமலை.
விசுக்தி - திருத்தணிகை.
ஆக்ஞா - குன்று தோறாடல் எனும் பழமுதிர்சோலை.

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத் 
தஞ்சத் தருள் சண்முகன்..

என்பார் - கந்தரனுபூதியில் - அருணகிரியார்.

அருணகிரியாரின் மனம் - கன கல் என்ற நிலையில் இளகி நிற்கின்றது எனில்,
நம்முடைய மனமோ பெருங்குன்று என இறுகி நிற்கின்றது..

அறுமுகப் பெருமான் - ஆடும்பரி வேல் அணி சேவலுடன் -
நம்முள் நிலையாகக் கிடக்கும் ஆறு குன்றுகளில் எழுந்தருள வேண்டும்!..

அதுவே குன்று தோறாடல் எனும் உயரிய நிலை!..

அந்நிலையை ஆறுமுகப்பெருமான் அனைவருக்கும் அருளிடல் வேண்டும்!..

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!..
கந்தரனுபூதி..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர் வேலவனே சரணம்.. சரணம்..
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!..
* * *

புதன், ஜூன் 11, 2014

விசாகத் திருநாள்

இன்று வைகாசி விசாகம். முருகப்பெருமான் தோன்றிய திருநாள்.

இந்த இனிய நாளில் - திருமுருக தரிசனம்!..


தேவர்களும் முனிவர்களும் கூடி நின்று - மாயையின் மைந்தர்களாகிய - தாரகன் , சிங்கமுகன், சூரபத்மன் எனும் மூவரிடமிருந்தும் தம்மைக் காத்தருள வேண்டும் -  எனத் தொழுது நின்றபோது - 

கருணையே வடிவாகிய பரமேஸ்வரன் சதாசிவ திருக்கோலம் கொண்டார்.  

கீழ்த்திசை நோக்கிய தத்புருஷம், தென்திசை நோக்கிய அகோரம், மேல்திசை நோக்கிய சத்யோஜாதம், வடதிசை நோக்கிய வாமதேவம்,  நடுவில் திகழும் ஈசானம் - எனும் ஐந்து திருமுகங்களுடன் ஆறாவதாக பாதாளம் நோக்கிய அதோ முகம் கொண்டு விளங்கினார் - எம்பெருமான். 

அந்த ஆறு திருமுகங்களின் நெற்றிக் கண்களில் இருந்தும் ஜோதிப் பிழம்புகள் தோன்றின.


அவற்றை வாயுவும் அக்னியும் கங்கையில் சேர்ப்பித்தனர். கங்கா தேவி அந்த சுடர்களை நாணல்கள் சூழ்ந்து விளங்கிய பொய்கையில் இருந்த தாமரையில் சேர்த்தாள். 

தாமரை மலர்களைச் சேர்ந்த சுடர்களில் இருந்து ஆறு  குழந்தைகள் உதித்து எழுந்தனர். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். 

இப்படி தீச்சுடர்களில் இருந்து திருமுருகன் உதித்தெழுந்த நாள் வைகாசி விசாகம். 

இதனால் - முருகனுக்கு விசாகன் எனும் திருப்பெயர்.  அக்னியில் தோன்றியதால் - அக்னிகர்ப்பன், கங்கை தாங்கியதால்  - காங்கேயன்,  சரம்  என்ற நாணல் புதர்கள் அடர்ந்த பொய்கையில் அவதரித்ததால் - சரவணன்,  

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் - கார்த்திகேயன் ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம்.

முருகனை விசாகன் என -  திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.


யோக நிலையில் இருந்த சிவபிரானின் தவத்தைக் கலைக்க முயன்று - பெருமானின் நெற்றிக் கண் நெருப்பினால் மன்மதன் எரிந்தது மாசி மகத்தில்!.. 

பின்னர் உயிர்ப்பித்ததும் . அதன் பின்னர், சிவ - பார்வதி திருக்கல்யாணம்  நிகழ மன்மதனும் அனங்கனாக உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த வைபவம் நிகழ்வது - பங்குனி உத்திரத்தில் அல்லது  சித்திரையில்!..  

அதன் பின்னர் திருக்குமரன் உதயம் - வைகாசி - விசாகத்தில்!... 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து, சிவமே - முருகன் எனும் ஜோதியாகத் தோன்றி - அசுரர்களை அழித்து  உலகைக் காக்கின்றது என்பதே தாத்பர்யம்.

அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

முருகனுக்குரிய எல்லாத் திருத்தலங்களிலும், குறிப்பாக திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

மாமயிலோனாகிய திருமுருகனின் திருவடிகள் என் தலைமேல் பட்டதனால் - பிரம்மன் - தன் கைப்பட,  என் தலையில் எழுதிய எழுத்து அழிந்து விட்டது!.. - என்று அருணகிரியார் கூறுகிறார்.

சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே!..
கந்தரலங்காரம்

சூரனின் சேனைகளை அழிக்க வந்த திருக்குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் வீரபாகு முதலான வீரர்களுடன் பூத சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான். 

திருச்செந்தூர்
முனிவர்கள் அனைவரும் அறுமுக வள்ளலை  வாழ்த்திய வண்ணம் அங்கு கூடியிருக்கின்றனர். அனைத்தும் அறிந்த ஆறுமுகப்பெருமான் - சூரனுடைய வரலாற்றினை உரைக்குமாறு கேட்க - 

தேவகுரு ஆகிய பிரகஸ்பதி - முருகனை வாழ்த்தி வணங்கிய பின் -  காசிப முனிவருக்கும் மாயைக்கும் அசுர புத்திரர்கள் தோன்றிய விதத்தை விவரிக்கின்றார்.

எனவே, திருச்செந்தூர் - குரு வணங்கிய தலம் ஆகின்றது.

சுவாமிமலை
வேதங்களின் பொருள் அறியாத நான்முகனின் தலையில் குட்டி - சிறையில் அடைத்த பின், முருகனே சகல ஜீவராசிகளையும் படைத்தருள்கின்றார்.

அப்போது, சிவபெருமான் - தன் மகனின்  செயலால் மகிழ்ந்தவராகி - பிரம்மன் அறியாத பிரணவத்தின் பொருளை நீ அறிவாயோ - என்று கேட்க, பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உணர்த்துகின்றான் - தனயன்.

எனவே, திருஏரகம் - பரமனுக்குக் குரு என ஆகிய தலம் ஆகின்றது.

பழனி
 பரமனின் மகன் என்று ஆன போதிலும், அண்டப் பிரபஞ்சம் அதிர படை நடத்தி அசுரர் தம் பகை வென்ற  வேலன் - வெற்றி வேலன் - என்று ஆன போதிலும்,

தவம் மேற்கொண்டு - தனி மலையில் தனித்து நின்று -  பற்றற்று பரமயோகி என கோவணத்துடன் தண்டு கொண்டு நின்றதனால் - 

அதிசயம் அனேகம் உற்ற பழனி - அவனிக்கு ஞானம் நல்கும் ஞான குரு தலம் என்றானது.

திருப்பரங்குன்றம்
இங்கு நான் பெற்ற வாழ்வும் வளமும் உன்னால் அன்றோ!.. - என தேவேந்திரன் - தான் வளர்த்த அன்பு மகள் - தெய்வானையை முருகனின் திருக்கரத்தினில் தாரை வார்த்துக் கொடுத்த திருப்பரங்குன்றமும், 

திருத்தணிகை
 வள்ளிக் கிழங்கினைக் கிள்ளி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்து - வேடர் குலத் தலைவன் நம்பி ராஜனால் வளர்க்கப்பட்ட வள்ளி நாயகியின் அன்பு மனம் வேண்டி வேடனாகத் திரிந்தும் வேங்கை மரமாக விளைந்தும் விருத்தனாக நடந்தும் - ஆகும் வழி ஒன்றும் ஆகாததனால் - ஐங்கரத்துப் பிள்ளை ஆனையாக வந்து நிற்க - குறவர் குலக்கொடியைக் குறுஞ்சிரிப்புடன் அணைந்த திருத்தணிகையும், 

சோலைமலை
 குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் எனக் கும்பிட்டுத் தொழுவார் தம் - முறைகளைக் கேட்டுக் குறைகளைத் தீர்க்க என்று - அங்கிங்கெனாதபடி எங்கும் என்பதாக - கோயில் கொண்டு நின்ற சோலைமலை எனும் பழமுதிர்சோலையும்,

திருக்கல்யாண திருத்தலங்கள் ஆகின.

இவை மட்டுமா!.. எங்கள் திருக்குமரனின் திருத்தலங்கள்!?..

இன்னும் எத்தனை எத்தனையோ - திருத்தலங்கள்!..

உச்சி மலைகளிலும் ஓடும் ஆற்றின் ஓரங்களிலும், 
செந்நெற் கழனிகளிலும் செங்கதலி வனங்களிலும்,
அலைதவழ் கரைகளிலும் அடர்மலைக் காடுகளிலும், 
அருஞ்சுனைக் கரைகளிலும் அதிரும் அருவி சாரல்களிலும் - 

சிவபெருமான் வழங்கிட - அகத்திய மாமுனிவர் கட்டிக் காத்த செஞ்சொல் தமிழ் மொழியினிலும்  - அமுத மயமாக - அருள் மயமாக,

ஐயன் - அறுமுகவேள் விளங்குகின்றனன். அதுமட்டுமா!..

மனமே முருகனின் மயில் வாகனம்!.. எப்போது?..

ஆணவ, மாயா, கன்மம் - எனும் மும்மலங்கள் அகன்ற போது!..

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் - எனும் அறு பகைவர்கள் அழிந்தொழிதலே - முருகனின் அறுபடைத் தத்துவம்.


அறுமுகனைச் சரண் அடைபவர்க்கு அவனே அனைத்தும் ஆகின்றான்.
அந்நிலையில் - அவனால் - ஆறு கொடுங்குணங்களும் அழிகின்றன.

மனம்  - ஞானம் எனும் மயிலாகின்றது.

வள்ளியுடனும்  தேவகுஞ்சரியுடனும், வடிவேல் தாங்கி  வந்து அமர்கின்றான்.

அந்நிலையை அனைவரும் எய்துதற்கு ஐயன் அருள் மழை பொழிக!..

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!..
கந்தரலங்காரம்
* * *

ஞாயிறு, ஜூன் 08, 2014

வைகாசியில் திருவிழா

உத்ராயணத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி. இளவேனில் எனும் வசந்த காலம் இது.  

வைகாசி விசாக நட்சத்திரத்தில் தான் சரவணப் பொய்கையில்  திருமுருகன் உலகம் உய்வதற்கென உதித்தனன் - என்பது ஐதீகம்.

எனவே - முருகன் உறையும் திருச்செந்தூர் பழனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு  தலங்களிலும் விசாகத்தை அனுசரித்து திருவிழாக்கள் வெகு சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 


திருச்செந்தூரில் வைகாசி விசாகம் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

விழா நாட்களில் தினமும் திருக்கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு  ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்வார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெறும். 

விசேஷமாக வசந்த மண்டபத்தினை பதினோரு முறை வலம் வரும்போது - ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்திமத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவைகள் பாடப்பெற்று உபசாரங்கள் நிகழும். 

திருவிழாவில் - சுவாமி தங்க ரதத்தில் எழுந்து - கிரிவீதி வலம் வந்தருள்வார்.  

வைகாசி விசாகத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர்.


பழநியில் - தைப்பூசம், பங்குனி உத்திர விழாவை அடுத்து முக்கிய திருவிழாவாக நிகழ்வது -  வைகாசி விசாகம் ஆகும்.  
பழநியில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன்/5 முதல் 14 வரை நிகழ்கின்றது.

பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன்/5 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி - தங்கப்பல்லக்கு, தங்கமயில், வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம், தங்க குதிரை - என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  அருள்பாலிக்கின்றார்.

விழாவின் இரண்டாம் நாளன்று (ஜூன்/6) - காலை தங்க பல்லக்கிலும், மாலை தங்க மயில் வாகனத்திலும்

மூன்றாம் நாளன்று - காலை தங்க பல்லக்கிலும் மாலை வெள்ளி காமதேனு வாகனத்திலும் - முருகன் திருஉலா எழுந்தருளினன்..

நான்காம் நாள்  கற்பக விருட்சத்தில் பவனி வந்தருளும் முருகன் - ஆறாம் நாள் (ஜூன்/10) திருமணக்கோலங்கொள்கின்றான்.


மாலை 6.30 மணிக்கு மேல் இரவு எட்டு மணிக்குள் தனுசு லக்னத்தில், வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருவிழாவின் ஏழாம் நாள் (ஜூன்11) வைகாசி விசாகம்.

பெரியநாயகியம்மன் கோயில் தேர் நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது.

பத்தாம் நாள் - ஜூன்/14 சனிக்கிழமை திருஞானசம்பந்தர் விழாவுடன் விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது. 

வைகாசி மாதத்தில் மங்கலம் நிறைந்த நன்னாள்  விசாக நாள் ஆகும்.

திருமுருகன் தோன்றிய நாள் என்பதால் அறுபடை வீடுகளிலும் திருமுருகன் வீற்றிருக்கின்ற கோயில்களிலும்,  விசாக வழிபாடு சிறப்பாக நடைபெறும்.


சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு - தேவேந்திரன்  ஆற்றல் பெற்ற நாள் - வைகாசி விசாகம் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் ஜூன்/5 முதல் ஜூன்/13 வரை வசந்த உற்சவம் நடைபெறுகின்றது. முதல் நாளன்று மூலஸ்தானத்தில் இருந்து உபய நாச்சியார்களுடன் வசந்த மண்டபம் எழுந்தருளி - நீராழி மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.


ஜூன்/13 அன்று மாலை தங்கக்குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி எழுந்தருளல். இரவு சந்த்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி. வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம். அதன் பின் மூலஸ்தானம் சென்றடைதல் என வைபவங்கள் சிறப்பாக நிகழ்கின்றன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். 8.30 மணிக்கு நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. வசந்த உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். உற்சவ நிறைவு நாளான 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைகிறார். வசந்த உற்சவத்தையொட்டி வசந்தமண்டபத்தை சுற்றியுள்ள நீரூற்றுகளில் அதிகளவில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது. - See more at: http://www.indiyantv.com/news_det.php?id=3803&cat=Spritual%20News#sthash.5BQGAaW4.dpuf

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் வைகாசி விசாகப் பெருவிழா - ஜூன்/2 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும்,

வைகாசியில் காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கருட சேவை!..

தஞ்சை நீலமேகப்பெருமாள் கருடசேவை
வைகாசி  திருவோணத்தன்று, தஞ்சையில் புகழ்பெற்ற 23 கருட சேவை!.. 

திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள - தஞ்சை மாமணிக் கோயில் ஸ்ரீவீரநரசிம்மர், ஸ்ரீநீலமேகப் பெருமாள், ஸ்ரீமணிக்குன்றப் பெருமாள் ஆகியோருடன் ஏனைய  திருக்கோயில்களில் இருந்தும் கருடவாகனத்தில் மூர்த்திகள் எழுந்தருளி ராஜ வீதிகளில் சேவை சாதித்தனர்.

தஞ்சை மேலராஜவீதி  ஸ்ரீசீதாலக்ஷ்மி சமேத ஸ்ரீவிஜயராமர் திருக் கோயிலிலும் - திருக்கல்யாண வைபவத்துடன் வைகாசித் திருவிழா சிறப்பாக நடந்துள்ளது.

நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரில் ஒன்பது கருட சேவை நிகழ்வதும் வைகாசித் திருவிழாவின் போது தான்!..

எம்பெருமான் வேடனாக எழுந்தருளி - திருவேட்களத்தில் - அர்ச்சுனனுக்கு பாசுபதம் வழங்கிய நாள்  - வைகாசி விசாகம்.

திருமழபாடியில் - பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் செய்த தவத்திற்காக  ஈசன் திருநடனம் புரிந்தருளிய நாள் - வைகாசி விசாகம் . 

குடந்தை ஆதிகும்பேசுவரர் மங்களாம்பிகை திருக்கல்யாணம் வைகாசித் திருவிழாவில், ஜுன்/7 அன்று இரவு - அம்பாள் தவம் இருக்க -  ஐயன் ஆட்கொண்டு அருளினார். இன்று (ஜுன்/8) காலை திருக்கல்யாண வைபவம் மங்கலகரமாக நிகழ்ந்தது.

ஜூன்/12 அன்று தீர்த்தவாரி. மறுநாள் மஹாஅபிஷேகத்துடன் வைகாசி திருவிழா நிறைவடைகின்றது.


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரப் பெருமானின் விசாகப் பெருந் திருவிழா கடந்த ஜூன் மூன்றாம் நாள்  காலை  மலைக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 ஜூன்/10 அன்று  பல்வேறு -  மண்டகப்படி கட்டளைகளை ஏற்றுக் கொண்டு -  இரவு 10 மணி அளவில் திருக்கைலாய வாகனத்தில் சுவாமி வீதி உலா எழுந்தருள்கின்றார். 

ஜூன்/11 - வைகாசி விசாகம். 
அதிகாலையில்  திருக்கல்யாண உற்சவம்.  
காலை 10 மணி அளவில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேருக்கு பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறார். 

இரவு 10 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம். வெள்ளி குதிரை வாகன திருக்காட்சி. 

ஜூன்/12 ஆதிகேசவப் பெருமாள் திருத்தேர்  எழுந்தருளல்.

காலை 11 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல். 

ஜூன்/13 மற்றும் 14 தேதிகளில் திருத்தேரோட்டம்.

திருநாவுக்கரசர் கரையேறிய தலமான - கடலூர், திருப்பாதிரிப்புலியூர்  பாடலீஸ்வரர் திருக்கோயிலில், வைகாசிப் பெருந்திருவிழா - ஜூன்/4 புதன் கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
பெருந்திருவிழாவுக்கு முன்னதாக - மே/25 அன்று  மாரியம்மன் கோயிலில் பூஜைகள் நடத்தப்பட்டு மே/27 அன்று எல்லை கட்டுதல் நடைபெற்றது.

ஜூன்/7 -  சேஷ வாகனத்திலும்  கற்பக விருட்சத்திலும்  அம்பாள் எழுந்தருளிய பின் - இன்று ஜூன்/8 -  காலை அதிகார நந்தி கோபுர தரிசனம் நிகழ்ந்தது. இரவு மகாமேரு தரிசனம்.

நாளை, ஜூன்/9  வெள்ளி ரதமும் தங்கப்பல்லக்கும்.
ஜூன்/10- காலை திருக்கயிலாய கோபுர தரிசனம்.
இரவு, ஸ்வாமி திருக்கல்யாணம். வெள்ளி ரிஷப வாகனத்தில் பாரிவேட்டை.

ஜூன்/12 - திருத்தேரோட்டம்.
ஜூன்/13 - காலை நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி.  இரவு புஷ்ப பல்லக்கு.
ஜூன்/14 - காலை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஐதீகம்.
இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா.

ஜூன்/15 - இரவு சிவகங்கை குளத்தில் முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.
ஜூன்/16 - சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது.
விசாகத்தை அனுசரித்து மூன்று நாள் விழாவாக  - மகரமீனுக்கு ஸ்வாமி காட்சி தரும் வைபவம் - உவரி ஸ்ரீசுயம்பு லிங்க ஸ்வாமி திருக்கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது.

கௌதம புத்தர் அவதரித்ததும் நிறைநிலை எய்தியதும் வைகாசி விசாகத்தில் தான். புத்த பூர்ணிமா என இதனைக் கொண்டாடுவர்.

வைகாசி விசாகத்தன்று முருகனைத் தொழுதால் பகை விலகும் - துன்பம் நீங்கும் குலம் தழைத்து ஓங்கும் என்பது நம்பிக்கை.

விசாக நாளில் பக்தர்கள் பாதயாத்திரையாக முருகன் ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அன்றைய தினம் திருத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே இறைவனை வழிபடலாம். 

திருவிழா நாட்களில் தண்ணீர்ப்பந்தல் அமைத்து - குளிர்ந்த நீர், மோர், பானகம் வழங்குவதும், தயிர் சாதம், விசிறி - தானம் செய்வதும் சிறந்த அறச் செயல்களாகக் கருதப்படுகின்றன.

இயன்றவரை - ஏழை எளியவருக்கு உதவுவோம்.

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி.
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *