நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 08, 2014

நந்தி திருக்கல்யாணம் - 1

ஸ்ரீ நந்திகேஸ்வரர்  - ஸ்ரீ சுயம்பிரகாக்ஷினி தேவி திருக்கல்யாணம்.

நிகழும் திருத்தலம் - திருமழபாடி.
சுப முகூர்த்தம் - பங்குனி வளர்பிறை - நவமி திதியும் புனர்பூசமும் கூடிய நன்னாள், செவ்வாய்க்கிழமை. (ஏப்ரல்/8) முன்னிரவு 7.30 மணியளவில்!..

அனைவரும் வருக!..
- - -

நாம் சிவாலயங்களுக்குச் செல்லும் போது சில விஷயங்களைக் கவனிக்கலாம். முதல் வணக்கம்  - விநாயகப் பெருமானுக்கு!.. அதுவும் சில திருக்கோயில்களில் - வெளியே தீர்த்தக் கரை விநாயகராக இருப்பார். அல்லது ஸ்தல விநாயகராக மூலஸ்தானத்தில் விளங்கும் சிவபெருமானை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார். அல்லது ஆலயத்தின் தலைவாயிலில் - ராஜகோபுர கணபதியாக கிழக்கு முகமாக காட்சி தருவார்.

 

பெரும்பாலும் நாம் ராஜகோபுரத்தைக் கடந்தபின் கண்டு வணங்குவது அதிகார நந்தி எனும் ஐயன் நந்தியம் பெருமானைத்தான்!.. இவருடைய அனுமதியுடன் தான் நாம் சிவதரிசனம் செய்கின்றோம் என்பது மரபு. அத்தனை பெருமை இவருக்கு!..

இன்னும் சொல்லப்போனால் - நமக்கு சிவதரிசனம் செய்விப்பதே - ஸ்ரீ நந்தியம் பெருமான் தான்!.. அதனால் தானே - எல்லாம் வல்ல எம்பெருமானே - முன் நின்று இவரது திருமணத்தை நடத்தி வைத்தார்!..

திருக்கயிலை மாமலை!.. அந்தி மயங்கும் மாலை நேரம்!..

பொன்னாக ஒளிர்ந்து கொண்டிருந்த மாமலையை  கதிரவன் தன் திருக்கதிர்களால் ஆராதனை செய்ய - அமரர்களும் மகரிஷிகளும் கூடி வந்து எம்பெருமானையும் அம்பிகையையும்  தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பொற்பிரம்புடன் சேவை செய்து கொண்டிருந்த நந்தியம் பெருமானுக்கு, ''..தாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன!..'' - என்று ஒரு ஆவல் தோன்றியது.

அருகிருக்கும் நந்தியின் ஆவலை உள்ளுணர்ந்த ஈசனும் அம்பிகையும் - ''..அவ்வாறே ஆகுக!..''  - என்று அருள் புரிந்தனர்.

அப்போது நந்தி, ''..ஐயனே!. சர்வசதாகாலமும் தங்கள் திருவடித் தாமரைகளின் அருகிலேயே காத்துக் கிடக்கும் அடியேன் மனதில் இப்படியான எண்ணம் எப்படித் தோன்றியது!.. ஏன் தோன்றியது?.. பூவுலகில் எனக்கு யாரைத் தெரியும்?.. தங்களைப் பிரிந்து நான் எப்படிச் செல்வேன்?.. எங்கு செல்வேன்?.. என்னைப் பொறுத்தருளுங்கள்!..'' - என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்.

அதைக் கண்டு உளம் நெகிழ்ந்த அம்மையும் அப்பனும் - ''..அஞ்சற்க!.. நீ தர்மத்தின் மறு வடிவம் அல்லவோ!.. தர்மத்தைப் புத்திரனாகப் பெற வேண்டி -  கங்கையினும் மேலான காவிரிக் கரையில் தவம் இயற்றும் சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் வந்து ஆட்கொள்வோம்!..'' - என்று திருவாய் மலர்ந்தருளினர்.

திருஐயாறு
இதன்படி, திருஐயாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர் செய்த தவம் நிறைவேறும் புண்ணிய வேளையும் வந்தது.

''.. சிலாத முனிவரே!.. நீர் இதுகாறும் செய்த தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!..'' - என அறிவிக்கப்பட்டவுடன், பெருமகிழ்ச்சியடைந்த சிலாத முனிவர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாக பூமியை உழுதிட - பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது.

ஆவலுடன் முனிவர் பெட்டகத்தைத் திறந்திட - அதனுள், ரிஷப திருமுகமும் நெற்றிக் கண்ணும் நான்கு திருக்கரங்களும் கொண்டவராக - கோடி சூர்ய ப்ரகாசம் என நந்தீசன்  தோன்றினார்.

அப்போது பூமி எங்கும் சுகந்த மணம் வீசியது. பன்னீர் மழையாகப் பெய்தது. தேவ துந்துபிகள் முழங்கின. ஒருகணம் முனிவர் மருண்டார்.  மறுகணம் அவரது மருட்சி மாறிட, மழலையாகத் தவழ்ந்து - பாலகனாக - முனிவரின் திருமகனாக எழுந்தார் - நந்தீசன்.

சிலாதரின் மருட்சி அகலும் வண்ணம் - மறைபொருளாக தேவ ரகஸ்யங்களை ஐயாறப்பர் அசரீரியாக உணர்த்தி அருளினார்.


நந்தீசனின் திரு நட்சத்திரம் பங்குனி - திருவாதிரை. அன்றே நந்தீசனுக்குச் சிவாகமச் செல்வனாக அபிஷேகம் செய்து வைத்தார்  - ஐயாறப்பர்.

இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட சிலாதர் மனம் கலங்கினார். காரணம் - இறைவன் ஆணைப்படி நந்தீசனின் ஆயுள் பதினாறு வருடங்கள் தான்!..

மனம் கலங்கி வருந்திய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்த நந்தீசன், தவத்தைச் செய்து சிவத்தை அடைய விரும்பினார். தந்தையான சிலாதரிடம் அனுமதி பெற்று கடும் விரதங்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டார்.

திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்றபடி எண்ணாயிரங் கோடி முறை சிவ பஞ்சாட்சர மகா மந்திரத்தை உச்சரித்து, சிவசக்தி தரிசனம் பெற்றதுடன் ஜபேசன் எனத் திருப்பெயரும் சூட்டப்பட்டார்.

அப்போது - மந்திர ஜபம் செய்த போது கழுத்தளவு நீரில் நின்றிருந்ததால் - மீன்களால் அரிக்கப் பட்டு, எலும்புக்கூடாக இருந்த நந்தீசனின் மேனியைக் கண்டு உமையம்மை உளம் உருகினாள். அன்னையின் மனம் கசிந்தது.

அதனால் - அம்பிகையில் திருத்தனபாரங்களில் இருந்து வெள்ளமெனப் பால் பொங்கிப் பிரவாகித்து - நந்தீசனின் உடலை நனைக்க - நந்தீசன் முன்னை விட பேரழகுப் பிரகாசமான திருமேனியைப் பெற்றனர்.

எம்பெருமான்  - நந்தீசனை - சிவகணங்களின் தலைவன் என பட்டாபிஷேகம் செய்து வைத்தார். சகல தேவர்களும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்.

அம்மையப்பனுடன் நந்தீசன்
பொற்பிரம்பினையும் மான் மழுவையும் சந்திர கலையையும் வழங்கினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும்  - அதிகார நந்தி எனும் பெரும் பதவியினையும் அருளி, நந்தீசன் மீது பொன் மாரி பொழிந்தார்.

அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார் - நந்தீசன்.

இந்த வேளையில் சிலாத முனிவர் - சிவபெருமானைப் பணிந்து - ''..ஐயனே!.. என்மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன். அருள் புரிக.. ஸ்வாமி!..'' - என்று தன் ஆவலை வெளியிட்டார்.

உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது. பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!..

''..எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்!..'' - என்று சிவபெருமானுக்கும் மகிழ்ச்சி!..

''.. காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் - என் அன்பன் வியாக்ரபாதனின் மகள் சுயம்பிரகாஷினியை மணம் பேசுக!.. யாம் ஐயாற்றிலிருந்து வந்து மணவிழாவினை நிகழ்த்துவோம்!..'' 

- என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அம்பிகைக்கு ஆனந்தம். வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ இருக்கின்றது என்று!..

அப்புறம் என்ன!.. 

திருமழபாடி
திருமழபாடி முழுதும் கோலாகலம் தான்!.. கொண்டாட்டம் தான்!..

அதன்படி, இன்று - பங்குனி புனர்பூசம்.

திருஐயாற்றிலிருந்து, அம்பிகையும் ஐயாறப்பரும் பொற்பல்லக்கில் எழுந்தருள -


நந்தீசன் - கிரீடமும் பொற்பிரம்பும் தாங்கியவராக வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து உடன் வர, சிலாத முனிவருடன் மற்ற முனிவர்களும் வேத மந்த்ர கோஷங்களுடனும்  சீர்வரிசைப் பொருட்களுடனும் -

இதோ புறப்பட்டு விட்டனர்- திருமழபாடியினை நோக்கி!..


திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன் பேட்டை - வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி வடகரை - திருமழபாடிக்கு வந்து சேரும் அனைவரையும் அன்புடனும் ஆதுரத்துடனும் வரவேற்க -

ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானும்  - ஊர்மக்களும் திரண்டு வந்து காத்திருக்கின்றனர்.

இன்று - முன்னிரவு 7.30 மணியளவில் திருமாங்கல்யதாரணம்!..

அனைவரும் வருக!.. அருளமுதம் பெறுக!..
வளம் பல பெருக - வருக!.. வருக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

12 கருத்துகள்:

  1. பொற்பிரம்பினையும் மான் மழுவையும் சந்திரக் கலையையும் வழங்கினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும் - அதிகார நந்தி எனும் பெரும் பதவியினையும் அருளி, நந்தீசன் மீது பொன் மாரி பொழிந்தார்./

    நந்திக்கல்யாணம் கண்டால்
    முந்திக்கல்யாணம் என்பது சொல்வழக்கு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. நன்தீசன் திருமணம் பற்றிய செய்திகள் படிக்க வெகு சுவாரஸ்யம். நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி..

      நீக்கு
  4. எங்களுடைய சொந்த ஊர் திருமழபாடி. நந்தீஸ்வரன் கல்யாணத்தை சிறுவயதில் பார்த்தது. அப்புறம் படிப்பு, பரீட்சை, வேலை என்று செல்ல இயலாமல் போய் விட்டது. எங்கள் ஊர் திருவிழா பற்றி சிறப்பாக எழுதியமைக்கு நன்றி. நமது ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் கூட இதைப்பற்றி எழுதியதாக நினைவு. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருமழபாடி இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஊர்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. சில அறியாத தகவல்களுடன் பகிர்வு மிகவும் சிறப்பு ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. நந்தி பகவானின் திருக்கல்யாணம்..... எங்களுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. நல்ல படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நாளை திருக் கல்யாண காட்சியினைக் காணத் தவறாதீர்கள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..